என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN GOVT"

    • இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
    • சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து விட்டது. பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள்வது, பயணிகளை வருகையை சமாளிப்பது, புதிய வழித்தடங்கள் மற்றும் விமான நிறுவனங்களை வரவேற்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சென்னை மாநகர் படிப்படியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.

    இதுபோன்ற காரணங்களால் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதையொட்டி பரந்தூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 5,747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இந்த திட்டத்திற்குத் தேவையான மொத்த நிலத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

     

    ஆனால் இதற்கு ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தங்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும் என வேதனை தெரிவிக்கின்றனர். இதை சுட்டிக் காட்டி பல மாதங்களாக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்ற வழக்குகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு என பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்ந்து இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது.

    இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2029 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2030 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத் திட்டமும் நான்கு கட்டங்களாக, 2046 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.29,150 கோடி ஆகும்.

     

    இந்த விமான நிலையம் தனது முழுத் திறனை எட்டும்போது ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.

    தற்போதுள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த புதிய இடம், வரவிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. மேலும், சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரூ.29,150 கோடி செலவில் புதிய விமான நிலையம் தேவை தானா அதுவும் விளைநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் தேவை என்ன என்பவை முடிவில்லா முகவரியாகுமோ என்ற அச்சம் கலந்த கேள்வியை கேட்க தவறவில்லை!

    • போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
    • திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருக்கும் இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், 

    "திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் உள்ள பகுதிகளில், நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறக்குறைய 700 முதல் 800 டன் அளவுள்ள குப்பைகளை கொட்டும் முயற்சியை அரசு செய்து வருகின்றது. திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு மாறாக, குப்பைகளைத் தரம்பிரிக்காமல் பொதுவெளியில் கொட்டியதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றால் ஏறக்குறைய 3.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியதாகும்.

    முதலிபாளையம், காளாம்பாளையம், சிறுபூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் ஆகிய பகுதியில் கைவிடப்பட்ட கல் குவாரியில் கொட்டிய குப்பையை அகற்றாமல்  தற்போது இடுவாயில் புதிய குப்பைக் கிடங்கு அமைத்து மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிரிக்கப்படாதக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது துளியும் பொறுப்பின்றி செயல்படும் ஆட்சிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குப்பையைத் தொடக்கத்திலேயே பிரிக்காமல், அறிவியல் அடிப்படையில் அகற்றாமல் கிராமங்களைக் குப்பைத் தொட்டியாக மாற்றும் பணியைத் திமுக அரசு செய்து வருகிறது .

    அரசின் இந்த செயலால் திருப்பூர் மாநகராட்சியின் முதன்மைச் சாலைகளான அனுப்புர்பாளையம் சாலை, காந்தி நகர், வேலம்பாளையம், அங்கேரிபாளையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அனைத்தும் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு மிகவும் துர்நாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் திருப்பூர் நகரின் முதன்மைப் பகுதியான நொய்யல் ஆற்றங்கரையோரம் அனைத்துக் குப்பைகளையும் கொட்டி, அதனைத் தீயிட்டுக் கொளுத்திக் காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாட்டினை அரசே ஏற்படுத்தி வருகின்றது.

    இடுவாய் கிராமத்தில் குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் மற்றும் சுற்றியுள்ள 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இடுவாய் சின்ன காளிபாளையத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை காவல் துறை தனது அடக்குமுறையால் பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கைது செய்து அடைத்துவைத்து குப்பையை மக்களுக்கு தெரியாமல் கொட்டும் செயலை செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை காலையில் கைது செய்து பின்னர் இரவு நேரங்களில் விடுவித்து, பிறகு மீண்டும் கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.

    எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் பின்பற்றாமல், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறியாமல் அவர்களின் உடல் நலன் மீது துளியும் அக்கறையின்றி செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சி உடனடியாகத் தனது தவறுகளை சரி செய்து கழிவு மேலாண்மை விதிகளை முழுவதுமாக செயல்படுத்திட வேண்டும். இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார்.
    • பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    சென்னை:

    சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார். பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

     

    அதனை தொடர்ந்து, பெரியார் நகரில் அமைய உள்ள அமுதம் அங்காடி கட்டும் பணிக்கும், ரூ.17.47 கோடி செலவில் கட்டப்பட உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும்.
    • இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சென்னை:

    சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க 'சைபர்' கிரைம் போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    ஆனாலும், திரை மறைவில் கொள்ளையர்கள் இருந்துகொண்டு செல்போனுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அந்த லிங்கை தொட்ட சில கணங்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் முற்றிலும் துடைத்து எடுக்கப்படுகிறது.

    இந்த நிலையில், "மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, உதவிதொகை பெற விண்ணப்பிக்குமாறு தங்கள் குடும்பத்தினரையும் வற்புறுத்துகிறார்கள். இது தூண்டில் போட்டு மீனை பிடிப்பதுபோல, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக எடுக்க கையாளப்படும் முயற்சியாகும் என சிலர் லிங்கை தொடுவதை தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
    • ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.

    தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.

    2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார். 

    • எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை
    • உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு?

    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைகள் கிளம்பி, தற்போது அவர்மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கையும் தொடரப்பட்டுள்ளது.

    இதனிடையே நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதனையும் அவரே விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் டிசம்பர் 17-ந் தேதி ( இன்று) தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் காணொலி மூலம் மதுரை ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் வந்தது. அப்போது தலைமை செயலாளர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆஜராகினர்.

    தலைமை செயலாளர் கூறுகையில், எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் படிதான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் போன்றவற்றை கருத்தில்கொண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. தீபமேற்ற உத்தரவிட்டபிறகு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும். உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு? உரிய பதிலை விரிவான மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன் எனக்கூறினார்.

    மேலும், நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
    • புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நெல்லை மேற்கு ஆவுடையப்பன், மத்தி அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு கிரகாம்பெல் மற்றும் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதில் 2-வது நாளான 21-ந்தேதி பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து அரசு சார்பில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு தலைமையில், கலெக்டர் சுகுமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என். நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அன்று இரவு வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மறுநாள் 21-ந்தேதி காலை ரெட்டியார்பட்டியில் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    அங்கு புதிய அரசு பஸ் வழித்தடங்களை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்குகிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.181.89 கோடியில் முடிவடைந்த 31 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.356.59 கோடி மதிப்பில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இவ்வாறாக மொத்தம் ரூ.538.48 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    மேலும் ரூ.100 கோடியே 95 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மொத்தம் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிக்கிறார் என்றார்.

    தொடர்ந்து பொருநை அருங்காட்சியகத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ள தரிசன பூமி மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும்.
    • கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ம் தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ம் தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு இடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கும், இது தொடர்பான அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை ஆஜராகும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    கடந்தமுறை விசாரணையின் போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சார்பிலும் ஆஜரான அரசு வக்கீல்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரும் கல் தீபத்தூண் அல்ல நில அளவைகல் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை தனி நீதிபதி பொதுநல வழக்கை போல விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்கள்.

    அதற்கு நீதிபதிகள் மனுதாரர்கள் கூறும் பகுதியில் ஏன் தீபம் ஏற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வக்கீல் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. கோவிலின் பராமரிப்பு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தான் உள்ளது. கடைசியாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது.

    இந்த நடைமுறையை பாரம்பரிய நடை மற்றும் வழக்கமான நடைமுறையாகும். தனி நீதிபதி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நிறைவேற்றும் போது பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ளவில்லை. அர்ச்சனை மற்றும் பூஜையின் போது தனிநபர் தலையீடு இருக்கக்கூடாது அதுபோல தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகள் பொருந்தும் என்று வாதாடினார்கள்.

    அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வக்கீல் ஆஜராகி கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.

    பின்னர் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகசுவாமி எழுதிய புத்தகத்தை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர்.

    அந்தப் புத்தகத்தில் கார்த்திகை தீபம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். நாயக்கர் கால தீபத்தூண் அந்த தீபத்தூன் அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனின் தலை மீது உள்ள தூண் என அதை மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என கூறப்படுவதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த தூண் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் தூண் தான் என்றும் அறநிலையத்துறை வக்கீல்கள் வாதாடினர்.

    • கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
    • குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    மெட்ரோ ரெயிலால் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிவதால் மெட்ரோ ரெயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    இதனை தொடர்ந்து, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த திட்ட அறிக்கையில் மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ. 10,740 கோடியிலும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

    ஆனால் மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை மறுத்த மத்திய அரசு அதனை ஆய்வு செய்வதாகவும், கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது. இதனால் இவ்விவகாரம் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

     

    20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!

    அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இதனை தொடர்ந்து, கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கிடைக்காததற்கு தி.மு.க. அரசுதான் காரணம். திட்ட அறிக்கை முறையாக தயாரிக்கப்படாததால் மத்திய அரசு நிராகரித்ததாகவும், 2026ல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோவைக்கு மெட்ரோ நிச்சயம் கொண்டுவரப்படும் என்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மக்கள் நலத் திட்டங்களை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க. முடக்கி வைப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் வானதி கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    வானதி சீனிவாசன் கூறியதுபோல் 2026-ல் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் அதற்கு கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிரந்தரமாக மத்திய அரசு அனுமதி மறுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே.

    • மூன்று பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துவருகிறார் இந்திராணி
    • கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.

    கேரம் விளையாட்டில் உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற காசிமேடு பகுதியை சேர்ந்த கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா, 2025ஆம் ஆண்டிற்கான 7ஆவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் மகளிர் ஒற்றையர். இரட்டையர். அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்று உலக சாம்பியனாகி, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

    வடசென்னையை வாழ்விடமாகக் கொண்டுள்ள லோகநாதன் - இந்திராணி ஆகியோரின் மகள் கீர்த்தனா. குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு, இளம்வயதிலேயே பணிக்குப் போகும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டவர். 2019 ஆம் ஆண்டு லோகநாதன் மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். மூன்று பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துவருகிறார் இந்திராணி.

    இந்தப் பின்னணியில் இருந்து வந்த கீர்த்தனா, ஆறு வயதிலிருந்தே கேரம் விளையாட்டில் ஆர்வத்தோடும், அபாரத் திறமையோடும் விளங்கியதை அறிந்த அப்பகுதி மக்கள், அவரை மீண்டும் விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தியதின் விளைவாக, விளையாட்டில் முழு கவனம் செலுத்தி 2025ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் வென்றிருக்கிறார்.

    அதன் பலனாய் உலகக் கோப்பை விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். 21 வயது நிரம்பிய கீர்த்தனா, சிறு வயதில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து, அதன்பின் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு இன்று உலக சாம்பியனாகத் தன் பகுதி மக்களுக்குப் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல், இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கிறார். 

    கீர்த்தனாவின் இந்தச் சாதனையைப் பாராட்டுவதும், அவரது திறமையையும் வாழ்நிலையையும் மேம்படுத்துவதும் அரசினுடைய கடமை. இது கீர்த்தனாவைப் போன்ற இன்னும் பல இளம் திறமையாளர்கள் வெளிவர உத்வேகமாகவும் அமையும் என்கிற காரணத்தினால், நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசிடம் முன்வைக்கிறது.

    உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.

    இதை ஊக்கப்படுத்த வேண்டியது இச்சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இம்மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படிநீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்!
    • தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை!

    * பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.

    * கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி!

    * 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி!

    * நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்!

    * தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!

    * 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி! என்று கூறியுள்ளார். 

    • ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.
    • பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதுபற்றி கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

    இதற்கு எதிராகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். அதேபோல் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியும் கரூர் சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் சென்னை ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 'அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நோக்கம் என்ன? சென்னை ஐகோர்ட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ரிட் மனுவை விசாரித்ததில் சில தவறுகள் உள்ளன. சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம்.

    மதுரை அமர்வு விசாரித்து வந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு பிரதான அமர்வு விசாரித்தது எப்படி? மதுரை கிளை விசாரித்து இருக்க வேண்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் பதில் அளித்துள்ளார். அது ஏன்' என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

    அதற்கு தமிழக அரசு சார்பில், 'அருணா ஜெகதீசன் ஆணையத்தை தொடர அனுமதிக்க வேண்டும். அதற்கான தடையை நீக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகளை ஒருநபர் ஆணையம் வழங்கும். எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணை நடக்கும் நிலையில் சென்னை ஐகோர்ட்டு வழக்கை எப்படி எடுத்தது என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தர உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.

    பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    ×