என் மலர்
நீங்கள் தேடியது "TN Govt"
- பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.
- குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பரிமாற்றப்பதிவு, திருமணப்பதிவு, கடன் ஆவணங்கள் பதிவு, உயில், குடும்ப ஏற்பாடு (செட்டில்மென்ட்) உள்ளிட்ட பல ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பொதுவாக இதுபோன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பதிவு செய்த ஆவணங்களை பெற காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படும்.
இதனை தவிர்க்க பதிவுத்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பதிவுத்துறை தலைவர் (ஐ.ஜி.) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மக்கள் எளிதாக பத்திரப்பதிவு செய்வதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தும் வகையில், இப்போது பதிவுத்துறை அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு சீர்திருத்தமாக 'ஸ்டார் 3.0' என்ற திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பதிவுத்துறை உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கான பத்திரப்பதிவு சேவைகள் விரைவாகவும், இருந்த இடத்திலேயே கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
இதன்மூலமாக புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், மனைப்பிரிவுகளை வாங்கவும், விற்கவும் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்.
அதற்கான புதிய மென்பொருள் மூலம் சொத்துகளை வாங்குபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், விற்பவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், சொத்துகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்தால் போதும். மென்பொருளே தானாக பத்திரங்களை உருவாக்கிவிடும்.
பின்னர் ஆதார் எண்ணை அதில் பதிவு செய்தால், 'ஓ.டி.பி.' எண் கேட்கும். அதனையும் அதில் குறிப்பிட்டால், தொடர்ந்து விரல் ரேகைப்பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகைப் பதிவு செய்வதற்கான எந்திரங்கள் இப்போது கடைகளில் ரூ.1,500-க்கு கிடைக்கிறது. அதனை வாங்கி அதில் விரல் ரேகையை பதிவு செய்தால்போதும். அனைத்து பணிகளையும் இருந்த இடத்திலேயே செய்து முடித்துவிடலாம்.
இதற்காக செலவிடும் மொத்த நேரம் அதிகபட்சமாக 10 நிமிடம்தான். அதற்குள் நம்முடைய கையில் பத்திரப் பதிவு செய்ததற்கான ஆவணங்களும் கிடைத்துவிடும். இதன் மூலம் இனி அலைய வேண்டிய நிலையும், காத்திருக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கு நிச்சயம் இருக்காது.
இதுமட்டுமா? ஆவணங்களின் நகல் பெறுவதற்கு இப்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் காத்துக்கிடக்கும் நிலைமை இனி இல்லாத சூழ்நிலையை பதிவுத்துறை மேற்கொள்ள இருக்கிறது.
தற்போது ஆன்லைன் மூலமாக ஆவணங்களின் நகல் பெற பதிவு செய்யும்போது, சார் பதிவாளர் 'லாக்கினு'க்கு அந்த அனுமதிப்பதிவு சென்று, அதனை அவர் பார்த்து ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.
அவ்வாறான நகலை பெறுவதற்கு குறைந்தது 2 நாட்களோ அல்லது ஒரு வாரமோ காலம் எடுக்கும். அதனையும் தவிர்க்கும் நோக்கில், ''சிஸ்டம் ஜெனரேட்டர் சிக்னேச்சர்'' என்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது. இந்த சங்கங்களை பதிவு செய்ய இப்போது நேரடியாக அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. அதற்கும் தீர்வு காணப்பட்டு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே அதற்கான பதிவுகளை மேற்கொண்டு, ஒப்புதல் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வாங்குபவர்கள் அதனை பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலேயே பதிவுசெய்து கையில் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு சேவைகளை பதிவுத் துறை 'ஸ்டார் 3.0' என்ற திட்டத்தின் கீழ் இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க இருக்கிறார்.
- கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது.
- சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.
சென்னை:
கரூரில் த.வெ.க கட்சியின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இவ்விவகாரம் தொடர்பாக த.வெ.க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை சரியான திசையில்தான் சென்று கொண்டிருந்தது. எந்த வகையிலும் பாரபட்சமின்றி விசாரணை என்பது நடத்தப்பட்டு வந்தது. சென்னை ஐகோர்ட்டுதான் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. அதுவும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது.
மேலும் அந்த விசாரணையை கோர்ட்டு கண்காணிப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதேவேளையில் மாநில அரசானது தன்னுடைய சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்காக அமைத்திருந்தது. அந்த ஆணைய விசாரணை முழு சுதந்திரமாகவும் தொடங்கி நடைபெற்று வந்திருந்தது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது. சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.
எனவே நீதியை நிலைநாட்டும் வகையில் நடுநிலையான ஒரு உத்தரவை கோர்ட்டு இந்த விவகாரத்தில் பிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் சி.பி.ஐ விசாரணை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.
- அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு பேரணியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சையில் எப்போதெல்லாம் மழையால் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக ஓடிவந்து ஆய்வு செய்து நிவாரணம் அளிப்பதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த அடை மழை காலத்தில் துணை முதலமைச்சர் விரைந்து வந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தினால் தான் கொள்முதல் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.
அந்தக் குழுவினரும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். ஆனால் ஈரப்பதம் தளர்வு செய்ய முடியாது என மத்திய அரசு கூறியது. இதிலிருந்தே மத்திய பா.ஜ.க அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவது தெளிவாக தெரிகிறது.
தற்போது பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே மழை சேதம் இருக்கிறது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும். அதன் அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த பிறகு அவர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்றார்.
- இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.
இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.
மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.
எனவே டிசம்பர் மாதத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
- பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
- மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கியது.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ்.
சாலை வரி பிரச்சனை தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெற்றுள்ளதாக ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
- தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.
- 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைக்கொள்கிறேன்.
* தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை.
* தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.
* ஜவுளி, மஞ்சள், கைத்தறி ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஈரோடு.
* டிசம்பர் 10-ந்தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும்.
* ஈரோடு மண்டலத்தில் 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
* மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும்.
* ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
* கோடிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.
* புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும்.
* சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்ழுடும்.
* ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும்.
* தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
* பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.
- தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு.
- நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் தெருநாய்களுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நிவேதா பெத்துராஜ், "நாய் கடித்தால் அதை பெரிய விசயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு. நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல. நாய்களை காப்பகங்களில் அடிப்பதை விட தடுப்பூசி போடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. " என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
- தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது, 4 மாவட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வந்துள்ளதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
- அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!
- மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது.
சென்னை:
மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்!
* சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!
குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது. சொல்லப் போனால்,
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.
* அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!
* சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை.
* மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம்.
-என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, "நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.
*காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம்,
*சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்சநீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம்.
அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்! என்று கூறியுள்ளார்.
- ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
- பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது.
சென்னை:
ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம். அதேபோல இப்போது பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது.
தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அவரது பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா? இந்த சொத்தின் மீது என்னென்ன பறிமாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பதை பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டாவில், பத்திரப்பதிவுத்துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல் அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தமிழக அரசு, அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது''பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், அந்த நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள், பெயர் எப்போது மாற்றப்பட்டது, எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடைபெற்றது, பட்டா எந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
இந்த பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சோதனை முறை வெற்றி பெற்றுவிட்டால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். மேலும் தற்போதைய நிலையில் இந்த பட்டா வரலாறு 2014-ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு எடுக்க முடியும்.
- தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற திட்டம்
- களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்!
தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.






