என் மலர்
நீங்கள் தேடியது "TN Govt"
- போக்குவரத்துத் தொழிலாளர் நலன் இனி பேணி காக்கப்படாது.
- போக்குவரத்துத் துறையில் 8 மணி நேர வேலை கடைபிடிக்க முடியாது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம் என்று அறிவிக்கப்பட்டு, குறைந்த அளவு பழைய, பழுதடையக்கூடிய நிலையில் உள்ள பேருந்துகளையே இயக்குவதால் நகரப் பகுதிகளில் மகளிர் தங்களது தினசரி வேலைக்குச் செல்லும் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே துவங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
30.9.2023 அன்றைய தேதி வரை, கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள வாரிசுகளின் எண்ணிக்கை சுமார் 1,087. மேலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இதன்மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க முயலும் தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கெனவே, கடந்த ஜூலை மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் ஊழியர்களை அமர்த்த முயற்சித்த தி.மு.க. அரசை எதிர்த்து அனைத்து போக்குவரத்து சங்கங்களும் ஆர்ப்பாட்டம் செய்தன. நானும், இந்த தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, நேரடியாகத் தொழிலாளர்களை நியமிக்க வலியுறுத்தினேன்.
ஆனால், தொழிலாளர் துரோக தி.மு.க. அரசு, அனைவரது எதிர்ப்பையும் மீறி சுமார் 538 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இந்த விஷயத்தில், தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி மவுனம் காக்கின்றன.
ஏற்கெனவே, கடந்த ஜூலையில் 538 தொழிலாளர்களை ஒப்பந்த அடைப்படையில் நியமித்துவிட்டோம். எனவே, தைரியமாக இனி அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கலாம் என்று இரண்டாம் கட்டமாக 30.9.2023 அன்று 117 ஓட்டுநர்களையும், 117 நடத்துனர்களையும் தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது இந்தத் தொழிலாளர் விரோத தி.மு.க. அரசு.
இதன்படி, போக்குவரத்துத் துறைக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால்:-
போக்குவரத்துத் தொழிலாளர் நலன் இனி பேணி காக்கப்படாது.
போக்குவரத்துத் துறையில் 8 மணி நேர வேலை கடைபிடிக்க முடியாது.
தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறை, வார ஓய்வு கிடைக்காது.
இனி தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியும், வருடாந்திர ஊதிய உயர்வும் கிடைக்கா நிலை ஏற்படும்.
அரசு போக்குவரத்துத் துறையில் இனி தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் என்பதே பெயரளவில் மட்டுமே இருக்கும். தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பல பலன்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.
எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் தி.மு.க. அரசு, உடனடியாக 30.9.2023 அன்று வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என்றும்; பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும்; போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து, 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள சுமார் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்மையான முறையில் தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
- கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, அம்மாவின் அரசு 22.2.2021 அன்று, 9,613 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கியது.
இதைத்தொடர்ந்து 5,237 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலுக்கான விதிகள் அமலுக்கு வந்ததால், அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், அம்மா அரசால் கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 நபர்கள், தங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டி அமைதியான முறையில் பல போராட்டங் களை நடத்தி தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்த்து வந்தனர்.
இன்றுவரை தங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படாத தால், தங்களது கோரிக்கையினை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில், கடந்த 20ந்தேதி கொளத்தூரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அப்போது காவல்துறை அவர்களைக் கைது செய்தது.
மேலும், போராடிய அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு அமைதியான வழியில் போராடிய தங்களுக்கு காவல்துறை சம்மன் வழங்கினால், தங்களது எதிர்காலமே பாழாகிவிடும் என்றும், அரசு வேலை மற்றும் வெளிநாடுகளுக்குச் செல் லும் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் தி.மு.க. அரசின் காவல்துறை,
அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க, தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ஒவ்வொரு திட்டத்தின் பயன்பாடு என்பதும் மிகமிக அதிகம்.
- ஒவ்வொரு மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்களில் வரும் செய்திகள் மூலமாக அறிகிறேன்.
சென்னை:
முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவின் 4-வது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள், தயாரிக்கப்பட்டு வரும் கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான மகளிருக்கான இலவச நகர பேருந்து பயணத் திட்டமான விடியல் பயணம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் ஆகியவற்றின் பயன்கள் மகளிர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்தும் விளக்கப்பட்டன.
மேலும், மாநிலத் திட்டக் குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், நடப்பில் உள்ள ஆய்வுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டன.
மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் 3-வது திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மாநிலத் திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விவரித்தார்.
இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா? என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சனுக்கும், திட்டக்குழுவின் முழு நேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களுக்கும், என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிலும் குறிப்பாக ஜெயரஞ்சன், அரசின் வழிகாட்டிகளில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார். முக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு முனைப்புடன் வழிகாட்டுதல் வழங்குகிறீர்கள். முக்கியத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த துணை நிற்கிறீர்கள். அரசுக்கும்-மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடாமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கு திட்டக்குழு சீர்மிகு பணியாற்றி வருகிறது என திட்டக்குழுவின் தலைவர் என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
நான் மிக முக்கியமாகக் கருதுவது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக நீங்கள் தரும் ஆய்வறிக்கைகள் தான்.
மகளிருக்கு இலவச விடியல் பயணத் திட்டத்தை நாம் நிறைவேற்றினோம். இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள், உயர்வுகள் என்னென்ன என்பதை திட்டக்குழு அறிக்கையாகக் கொடுத்த பிறகு தான் அந்த திட்டத்தின் விரிந்த பொருள் அனைவரையும் சென்றடைந்தது. மாதம் தோறும் 800 ரூபாய் முதல் 1200 வரை சேமிக்கிறார்கள் என்பதை விட-பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. சமூகத்தில் அவர்களது பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது. வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக சமூக உற்பத்தியும்-உழைப்பும் உற்பத்திக் கருவிகளும் அதிகமாகி இருக்கிறது.
'விடியல் பயணம் திட்டம்', 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' ஆகியவை சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தியது என நீங்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
அதேபோல, 'நான் முதல்வன்' திட்டத்தின் தாக்கம் குறித்தும் நீங்கள் அறிக்கை வழங்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தின் பயன்பாடு என்பதும் மிகமிக அதிகம். செலவினத்தின் அடிப்படையில் எந்தவொரு திட்டத்தையும் அளவிடாமல், பயன்பாட்டின் அடிப்படையில் அளவிட வேண்டும் என்பதை திட்டக்குழு வழிகாட்டி வருகிறது. இது அரசு அதிகாரிகளுக்கும் மிகச்சிறந்த சிந்தனைத் திறப்பாக உள்ளது.
இப்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்களில் வரும் செய்திகள் மூலமாக அறிகிறேன். அனைத்து ஊடகங்களும் பெண்களிடம் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். பேட்டி அளிக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் தான் பேட்டி தருகிறார்கள்.
முகநூலில் ஒருவர் எழுதி இருக்கிறார். "எங்கள் கிராமத்தில் 300 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. அப்படியானால் எங்கள் கிராமத்திற்குள் 3 லட்சம் ரூபாய் வந்துள்ளது. 3 லட்சம் ரூபாய் எங்கள் கிராமத்திற்குள் வந்திருப்பதன் மூலமாக எங்கள் கிராமத்தில் பணப் புழக்கம் அதிகமாகி இருக்கிறது. எங்கள் கிராமத்து வளர்ச்சிக்காக 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் எழுதி இருக்கிறார்.
கிராமப்புற ஆய்வில் ஆர்வம் கொண்ட துணைத் தலைவர் நம்முடைய ஜெயரஞ்சன் இப்படி, பல கோணங்களிலும் ஆராய்ந்து 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் கொடுக்கலாம்.
மேலும், மிக முக்கியமான 2 வேண்டுகோள்களை உங்களிடம் வைக்க விரும்புகிறேன்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இருக்கிறது. மதிப்பீடு மற்றும் ஆய்வுத்துறை இருக்கிறது. இவற்றையும் இணைத்துக் கொண்டு மாநில திட்டக்குழு செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம்.
பல்வேறு ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இவற்றை அரசுத் துறைகள் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறதா, பின்பற்றுகிறதா என்ற ஆய்வையும் நீங்கள் செய்ய வேண்டும். புள்ளி விவரங்களாக மட்டுமல்ல கள ஆய்வுகளின் மூலமாகவும் செய்ய வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனையில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இஸ்தான்புல் நகரிலிருந்து மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடந்த 7.9.2023 அன்று தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக்கொண்டிருந்து போது நடுவானில் அவரது இரண்டு வயது பெண் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.
அங்கு "இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனை"-யில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர மற்றும் தீவிர சிகிச்சையின் பொருட்டு அவர்களின் மொத்த கையிருப்பு பணமும் செலவழிந்த நிலையில் மேல்சிகிச்சை செய்திட தமிழ்நாடு கொண்டு வர மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்ட நிலையில் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான சுவாச பிரச்சனை இருப்பதால், மருத்துவ குழுவின் கண்காணிப்பில், சுவாச கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இஸ்தான்புல் நகரிலிருந்து மேற்காணும் மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையினை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்தியாவினை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூபாய் 10 லட்சம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அயலகத் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சென்னை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
சென்னை:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
1.06 கோடி மகளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18-ந்தேதி முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விண்ணப்பதாரர்கள் பலர் பதற்றம் அடைந்தனர். தங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்று நினைத்தனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் குவியத் தொடங்கி உள்ளனர்.
அங்கு அமைக்கப்பட்டு உள்ள உதவி மையங்களில் விண்ணப்பத்தின் நிலை பற்றி விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது சர்வர் பிரச்சனை எழுவதால் அனைவருக்கும் விண்ணப்ப நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்ள தனி இணைய தளம் (https://kmut.tn.gov.in) தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டால் ஒரு முறை பயன்படுத்தும் கடவு எண் கைப்பேசிக்கு வரும். இதைக் கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கி உள்ளது. இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள், இணைய சேவை மையங்களை நாடினாலும் மேல்முறையீடு செய்ய முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து இணைய சேவை மையத்தினர் கூறுகையில், "மேல்முறையீட்டுக்கான வசதி இணைய சேவை மையங்களில் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. விண்ணப்பத்தின் நிலையை மட்டுமே இலவசமாக பார்த்து விண்ணப்பதாரர்களுக்கு கூறி வருகிறோம்" என்றனர்.
விண்ணப்பங்களின் நிலையை அறிய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மகளிர் குவிந்திருக்க, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள்.
எனவே இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
- உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் வழங்கினார்.
- ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வுபெறும் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் இதுவரை ரூ.3000 ஆகும்.
"கோவில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும், "ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ரூ.1500 குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாநிலத்தில் புத்தொழில் முனைவு மற்றும் முதலீட்டுப் பண்பாட்டினை பரவலாக்கும் விதமாக “ஸ்டார்ட் அப் தமிழா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கப்படும்.
- புத்தொழில் முனைவில் ஈடுபடும் பெண்களின் பிரத்யேக தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஒரு தொழில் வளர் மையம் அமைக்கப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய "தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023"னை வெளியிட்டார்.
மேலும், தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 லட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.
இப்புதிய புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையானது, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும், அந்நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு மற்றும் சமூக மூலதனம் இரண்டிலும் அவற்றின் பங்களிப்புகளை அதிகரிப்பதற்கும் உந்து சக்தியாக இருக்கும்.
தற்போது "புத்தொழில்" என்பதற்கான வரையறை அம்சங்களுடன், பட்டியலினத்தவர், பழங்குடியின சமூகத்தினர், பிற துறைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள புதுமையான மாதிரிகளை பயன்படுத்தி தாங்கள் சார்ந்த சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒரு நிறுவனத்தினை உருவாக்கினால், அந்த நிறுவனமும் புத்தொழில் என்று மாநில அரசால் அங்கீகரிக்கப்படும்.
பிற துணிகர முதலீட்டு நிறுவனங்களின் வழியாக முதலீடு செய்யும் பெரு நிதியம் ஒன்று ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும். இந்த பெரு நிதியமானது வட்டார அளவில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சிறப்புரிமை அளிக்கும்.
மாநிலத்தில் புத்தொழில் முனைவு மற்றும் முதலீட்டுப் பண்பாட்டினை பரவலாக்கும் விதமாக "ஸ்டார்ட் அப் தமிழா" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கப்படும்.
ஸ்மார்ட் கார்டு: தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நியாயமான விலையில் பெறக்கூடிய வகையில் அத்தகைய தொகுப்பு அடங்கிய ஸ்டார்ட் அப் ஸ்மார்ட் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை அளிக்கும் சமூக நீதி தொழில் வளர் மையம் நிறுவப்படும்.
பெண்களுக்கான சிறப்பு தொழில் வளர் மையம்: புத்தொழில் முனைவில் ஈடுபடும் பெண்களின் பிரத்யேக தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஒரு தொழில் வளர் மையம் அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான திட்டங்கள்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களால் உருவாக்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் மானியம், டான்சீட் திட்டத்தில் சிறப்புரிமை மற்றும் இலவச தொழில்வளர் காப்பான் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் (பொறுப்பு) அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பணம் கிடைக்காத தகுதி உடையவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
- விண்ணப்பம் நிராகரிப்பு குறித்த எஸ்.எம்.எஸ். வந்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் முதல் கட்டமாக பயன் அடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த சிறிது நேரத்தில் அவரவர் வங்கி கணக்கிற்கு பணம் சென்றதால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் 55 லட்சம் பெண்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. என்ன காரணத்திற்காக அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. தகுதி இருந்தும் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.
இது குறித்து இத்திட்டத்தின் செயலாக்க அதிகாரி இளம்பகவத் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பணம் கிடைக்காத தகுதி உடையவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விண்ணப்பம் நிராகரிப்பு குறித்த எஸ்.எம்.எஸ். வந்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதனை அதிகாரிகள் கள ஆய்வு செய்து இத்திட்டத்தில் சேர்ப்பார்கள்.
இது தவிர தகுதி இருந்தும் முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும். மேலும் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அனைவருக்கும் படிப்படியாக இவை வழங்கப்படும். ஏற்கனவே வங்கி ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களுக்கும் கூடுதலாக இந்த கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது.
- தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நதிநீர் பிரச்சினையில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு சராசரி ஆண்டில் பில்லிகுண்டுலுவில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்டவணை, உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார (pro rata sharing) அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதன்படி இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. இது 65.1 டி.எம்.சி குறைவு ஆகும்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தின் 69.25 டி.எம்.சி. நீர் இருப்பு, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (IMD) இயல்பான மழைப்பொழிவு அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் பெறப்பட வேண்டிய நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக, 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி கூட விடுவிக்காததாலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றால் இதற்குத் தீர்வு காண முடியாததாலும், தமிழ்நாடு அரசு 14.08.2023 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகபடுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சருக்கு 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இத்தகைய உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை (Memorandum), மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்க உள்ளார்கள்.
தற்போது, 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு, கர்நாடக காவிரிப் பகுதியில் சராசரி இயல்பான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) அறிக்கையின் அடிப்படையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRA) கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட வேண்டும் என மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், CWMA/CWRC அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.