என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி வருகிறார்
- குமரி மாவட்டத்தில் முடிவற்ற பல்வேறு திட்டங்களையும் திறந்து வைக்கிறார்.
- நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை (24-ந் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர், காலை 10 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக பகல் 11 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவருக்கு கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை 'ரோடுஷோ' மூலம் பொதுமக்களை சந்திக்கிறார்.
அதன் பிறகு பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ரூ.1 கோடியே 46 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு புத்தளம் அருகே உள்ள கல்லடி விளை வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். அதன் பிறகு மாலை 6.30 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா வருகிறார். அங்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் இரவில் நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (25-ந் தேதி) காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் முடிவற்ற பல்வேறு திட்டங்களையும் திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அவரது வருகையை அடுத்து முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் வந்து செல்ல வசதியாக தனி பாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நலத்திட்ட உதவிகள் வாங்க வரும் பயனாளிகள் வாகனங்களை நிறுத்த வசதியாக பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை அடுத்து நாகர்கோவில் நகரில் 2 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகை தந்துள்ளனர். கண்கார்டியா பள்ளி மைதானம் மற்றும் கல்லடி விளை, கன்னியாகுமரி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






