என் மலர்
கன்னியாகுமரி
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர்.
பாராளுமன்ற வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற குழு பொருளாளரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
- பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
- நாளை முகூர்த்த நாள் என்பதால் தோவாளை சந்தையில் பூக்கள் வாங்க இன்று ஏராளமானோர் குவிந்தனர்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு, ஆவரைகுளம் பகுதிகளில் இருந்து பிச்சிப் பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன.
பெங்களூரூ, ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், சேலத்து அரளி போன்ற பூக்களும், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, அம்பை, தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி, மரிக்கொழுந்து போன்ற பூக்களும் விற்பனைக்கு வருகின்றன.
மேலும் ஆரல்வாய் மொழி, செண்பகராமன் புதூர், தோவாளை, ராமநாயக்கன் புதூர், தோப்பூர், குமாரபுரம் பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இந்த சந்தையில் பண்டிகை மற்றும் முகூர்த்த நேரங்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அதன்படி நாளை (30-ந் தேதி) முகூர்த்த நாள் என்பதால், தோவாளை சந்தையில் பூக்கள் வாங்க இன்று ஏராளமானோர் குவிந்தனர். இதன் காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை இன்று அதிகரித்து காணப்பட்டது.
ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.5 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அரளி பூ ரூ.200, சம்பங்கி ரூ.400, மஞ்சள் கிரேந்தி ரூ.80, சிகப்பு கிரேந்தி ரூ.90, பட்டர் ரோஸ் ரூ.240, ரோஜா ஒரு பாக்கெட் ரூ.40-க்கு விற்கப்பட்டது.
கனகாம்பரம் கிலோ ரூ.400, முல்லைப்பூ ரூ.1500, தாமரை ரூ.20, கோழிக்கொண்டை ரூ.80, துளசி ரூ.40, பச்சை ரூ.10, மரிக்கொழுந்து ரூ.140.
- 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
- சுஜிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் ஆன 18-வது நாளில் (நவம்பர் 21) மாலையில் புதுப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். மேலும் புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் தனது கணவருக்கு, வாட்ஸ் ஆப்பில் அப்பெண் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் நான் உங்களை திருமணம் செய்துகொண்டேன்... 7 சவரன் தாலியை வீட்டில் கழற்றி வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது
- கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகளும் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
தென் கடலோர மாவட்டங்களை வடகிழக்கு பருவமழை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமடையும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக உள்ளது. முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி பகுதி வெள்ளப்பெருக்காக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீடுகளில் இருந்து கடை மற்றும் பல்வேறு பணிகளுக்கு வெளியில் வந்தவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். பகலில் பெய்த மழை இரவிலும் நீடித்தது. விடிய விடிய சாரல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தின் மலையோர பகுதிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. பேச்சிப்பாறையில் 37.6 மில்லி மீட்டரும், சிற்றாறு-1 அணை பகுதியில் 32.6 மில்லி மீட்டரும் பாலமோரில் 31.6 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயன்படுத்தும் இந்த சப்பாத்து பாலத்தின் இரண்டு புறங்களிலும் தடுப்பு வேலி அமைத்து பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அது போன்று ஆற்றின் கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகளும் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பெரும்பாலானவர்கள் வெளியில் எங்கும் செல்லாமல் விடுதி அறைகளிலேயே முடங்கினர்.
இந்த சூழலில் இன்று காலையும் மாவட்டத்தில் மழையின் தாக்கம் இருந்தது. காலை 8 மணியில் இருந்து பல பகுதிகளில் சாரல் மழையும் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் ஓட்டமும் நடையுமாக வீதிகளில் சென்றனர். மழை காரணமாக பல்வேறு மாவட்டங்க ளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் விடுமுறை எதுவும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கொட்டாரம் 17, மயிலாடி 14.2, நாகர்கோவில் 10.2, கன்னிமார் 10.6, ஆரல்வாய்மொழி 16.2, பூதப்பாண்டி 18.2, முக்கடல் அணை 13.2, பாலமோர் 31.6, தக்கலை 7.8, குளச்சல் 3.6, இரணியல் 6, அடையாமடை 15.4, குருந்தங்கோடு 11.6, கோழிப்போர்விளை 16.2, மாம்பழத்துறையாறு 18.2, ஆணைக்கிடங்கு 17.8, சிற்றாறு 1-32.6, சிற்றாறு 2- 26.2, களியல் 25.2, குழித்துறை 10.2, பேச்சிப்பாறை 37.6, பெருஞ்சாணி 16.8, புத்தன்அணை 15.6, சுருளகோடு 15.4, திற்பரப்பு 18, முள்ளங்கினாவிளை 12.8.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.51 அடி யாக இருந்தது. அணைக்கு 1404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 240 கன அடி நீர் மதகுகள் வழியாகவும், 1008 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.15 அடியாக இருந்தது. அணைக்கு 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
சிற்றார்1அணை நீர்மட்டம் 11.02 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 11.12 அடியாகவும், நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.2 அடியாகவும் உள்ளது.
- கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த ஏ.ஜே. ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீனவர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஏ. ஜே. ஸ்டாலின் இன்று நாகர்கோவில் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகம் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசும்போது போது, தமிழகம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் சென்று மீனவ நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மீனவ நல வாரிய திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்பதை மக்களிடம் எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீனவர் நல வாரியம் கொண்டு வந்ததால் தான் இந்த பதவி தனக்கு கிடைத்ததாகவும், தனக்கு இந்தப் பதவியை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகரச் செயலாளர் ஆனந்த், அயழக அணி மாநிலத் துணைச் செயலாளர் பாபு விதி பிரைட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- இருசக்கர வாகனத்தின் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது.
- விசாரணையில் இசக்கியப்பன், தினேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தின் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் தேரேக்கால்புதூர் பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், தினேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
- எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள்.
- சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை, கோவை தான் என மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. பாலியல் குற்றத்திற்கு உள்ளாக கூடிய பெண்கள் தி.மு.க. ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன் வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள். ஆளுங்கட்சியை குறை கூற வாய்ப்பு கிடைக்காதா? என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மீது புகார் கூறும் பழைய நிலைமை மாறி இருக்கிறது. பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும். சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
- திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சுசீந்திரம், சாமிதோப்பு, மயிலாடி பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மயிலாடியில் அதிகபட்சமாக 126.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொட்டாரம், கன்னிமார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, முக்கடல், இரணியல், கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.47 அடியாக இருந்தது. அணைக்கு 266 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது. அணைக்கு 268 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.05 அடியாக உள்ளது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் பஸ்கள் காலை 7.30 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
- அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- திற்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் ஓரளவு நிரம்பி உள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் தண்ணீர் அதிக அளவு உள்ளதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் பயிர் நடவு பணி நடந்து வருகிறது.
அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. காலை 9 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. தக்கலை, இரணியல், குலசேகரம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை நீடித்தது.
திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.96 அடி யாக இருந்தது. அணைக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.30 அடியாக உள்ளது. அணைக்கு 307 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- தெக்கூர், தெக்குறிச்சி, காக்காத்தோப்பு, பழவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வடசேரி, வல்லன்குமாரவிளை துணை மின்நிலையங்களில் நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), தெங்கம்புதூர், ராஜாக்க மங்கலம் உபமின் நிலையங்களில் 5-ந்தேதியும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாகர்கோவில், பெரு விளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். ரோடு, கல்லூரி சாலை, கே.பி. ரோடு, கோர்ட்டு ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், தடிக்காரன்கோணம், தேரேக்கால்புதூர், கோதைகிராமம், அப்டா, திரவியம் ஆஸ்பத்தரி பகுதி, சடையன்குளம், நாவல்காடு, எறும்புகாடு, தம்மத்துக்கோணம், இருளப்பபுரம், அனந்தநாடார்குடி, பட்டகசாலியன்விளை, கலை நகர், பொன்னப்ப நாடார் காலனி, குருசடி, என்.ஜி.ஓ. காலனி, குஞ்சன்விளை மற்றும் புன்னைநகர் ஆகிய பகுதிகளிலும்,
5-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையர்புரம், புத்தளம், அளத்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காத்தோப்பு, பழவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது.
- சுப்பிரமணிய சாமி மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சாமி (முருகன்) மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சாமிக்கு கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
- பேச்சிப்பாறை அணையிலில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
- அருவியில் குளிப்பதற்கு இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியிடப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்த நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. தக்கலை, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, சுருளோடு பகுதியிலும் மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 35.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையிலில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேசிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.85 அடியாக இருந்தது. அணைக்கு 1,243 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 2,049 கனஅடி தண்ணீர் உபரி நீராகும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.20 அடியாக உள்ளது. அணைக்கு 871 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,050 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழைக்கு நேற்று ஒரே நாளில் 8 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் மழைக்கு இந்த மாதத்தில் இதுவரை 55 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 18 வீடுகளும், கல்குளம் தாலுகாவிலும் 9 வீடுகளும், விளவங்கோடு தாலுக்காவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 11 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 3 வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் 15 மின்கம்பங்களும் சேதமடைந்தன. அவை அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டது.






