என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.
    • புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. அதனை மாற்றி புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கஞ்சிக்குழியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் பொன் சாலமன் தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடீஸ் அகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அனைவரும் இனிப்புகள் வழங்கினார்.

    முன்னதாக அவருக்கு பொன்னாடை போர்த்தி காங்கிரஸ் கட்சினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிளாட்சன் விபின், துணை தலைவர் குமாரி, வார்டு உறுப்பினர்கள் பாலம்மான், சுபியான், சுஜின் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், மணிகண்டன், ஜெபா, வின்சென்ட், பகவத்சிங் உட்பட கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கினார்.

    தமிழக அரசு சார்பில் "உலகம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இன்று இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உறுப்பினர் ரத்னகுமார், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் மாணவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டார்.

    • பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாடு முழுவதும் இன்று 77-வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசியகொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டது.

    அந்த வகையில், நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் செல்வராஜ், அசோக்ராஜ், தங்கம் நடேசன், பால்துரை, மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், மயிலாடி நகர தலைவர் நடேசன், காங்கிரஸ் அமைப்பு சாரா துறை மாவட்ட ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் செல்வன், சிவபிரபு, மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.
    • அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து அன்று முதல் இன்று வரை 2 மணி நேரம் முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. அதேபோல மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.

    தொடர் விடுமுறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை 56 ஆயிரத்து 609 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். போகிப்பண்டிகையான 14-ந்தேதி 9 ஆயிரத்து 593 பேரும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 737 பேரும், காணும் பொங்கல் தினமான நேற்று 15 ஆயிரத்து 715 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

    • கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.
    • தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் அதலாபாத் பகுதியை சேர்ந்தவர் பாலகுருதி சத்யநாராயணா (வயது62). இவரது மனைவி ரமா (வயது 60). இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 50 ஐயப்ப பக்தர்களும் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.

    இவர்கள் வந்த பஸ் கன்னியாகுமரி நான்கு வழி சாலை பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். இதில் கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக தண்ணீர் கேன் ஏற்றி வந்த டெம்போ இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் இருவரின் உடலும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
    • எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று மும்பை தெட்சணமாற நாடார் சங்கம் கிளை சேர்மன் காசிலிங்கம் தலைமையில் பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ஜஸ்டின், ஆல்பர்ட் உட்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

     

    கடந்த 2 நாட்களாக தாராவி பகுதியில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி. விஜய்வசந்த் நேற்று வார்டு 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

    சாலிமார் வாடு பகுதியில் 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலுவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். நிறைவாக எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

     

    இந்த பொதுக்கூட்டத்தில் ஹோலிவாட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மறந்துவிட்டு, மதுரையில் அண்ணா பெயரில் உள்ள பூங்கா பெயரை மாற்றவுள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தி.மு.க.வுக்கு 5 முழக்கம் இருக்கிறது. அதில் 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற முழக்கமும் ஒன்று.

    அண்ணா எதை கற்றுத்தந்தாரோ, எதை முன் வைத்தாரோ, அதை இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. முன்வைத்து வருகிறது. 'ஆதிக்கமற்ற சமுதாயம் படைத்தே தீருவோம்' என்பது அண்ணாவின் 2-வது முழக்கம். அதனால் தான் ஒரு ஆதிக்க சமூகத்தை கட்டமைக்க நினைக்கின்ற பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

    அதே போன்று 'இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கும் நம்முடைய கொள்கையில் கடுகளவு கூட விட்டுக்கொடுக்காமல் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். அதேபோன்று 'வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் கொண்டு வருகிற அளவுக்கு அந்த முழக்கத்தை நிறைவேற்றி உள்ளோம்.

    அதேபோன்று 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற தத்துவத்திலும் உறுதியாக இந்த இயக்கம் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அந்த தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக செயல்படும், மாநில சுயாட்சிகளை, மாநில உரிமைகளை, மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களை தராமல் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அவர்களின் இசைக்கெல்லாம் ஆடுகின்ற ஒரு கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. சொந்தக் கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை, பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு டெல்லியில் போய் அமித்ஷாவிடம் முழங்காலிடுகிறார்கள். இந்த கூத்தையெல்லாம் செய்பவர்கள் இந்தியை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை.

    தி.மு.க. என்றைக்கும் தன்னுடைய முதல் முழக்கமான 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற தத்துவத்திலிருந்து கடுகளவும் வழிதவறாது. 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ளார். அவரது வருகையால் தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் இருக்காது. அவர் இந்த முறையும் 100 சதவீதம் வெறுங்கையோடு தான் வரப்போகிறார்.

    தமிழ்நாட்டு மக்களுக்குத் தர வேண்டிய நிதியை அவர் தரப்போவதில்லை. அதை அவர் முடிவோடு வைத்திருக்கிறார். கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களையோ, நமக்கு சேர வேண்டிய நிதியையோ அவர் கொண்டு வரப்போவதில்லை.

    வெறும் வார்த்தை ஜாலங்களோடு வரப்போகிறார். எப்படியாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்று சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த குட்டை குழம்பாது, மீன் பிடிக்கவும் அவர்களால் முடியாது. பா.ஜ.க.வின் முகத்திரை வெகு விரைவில் கிளிய இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது பராசக்தி படத்தின் விமர்சனம் எப்படி இருக்கிறது? என்று கேட்டபோது, நான் சினிமா பார்க்கவில்லை என கூறினார்.

    • தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
    • கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    கண்ணாடி பாலம் அமைப்பதற்கு முன்பே, கடல் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து வருவார்கள். இந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டபிறகு, படகில் பயணம் செய்ய அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று, பின்பு அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையிலேயே தற்போது இருக்கிறது. இதனால் தற்போது திருவள்ளுவர் சிலைக்கு நேராக படகுகள் இயக்கப்படவில்லை.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக படகுகளை இயக்கப்படுகிறது.

    இந்தநிலையில் போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை படகில் சென்று பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதனை கருத்தில் கொண்டு வருகிற 15-ந் தேதி முதல் 17-ந்தேதி வரையிலான 3 நாட்களும் படகு போக்குவரத்து 3 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.

    அதன்படி வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கக்கூடிய படகு போக்குவரத்து, இந்த 3 நாட்களும் 2 மணி நேரத்துக்கு முன்னதாக காலை 6 மணிக்கே தொடங்கப்படுகிறது. அதேபோல் மாலையில் வழக்கமாக 4 மணியுடன் நிறுத்தப்படும் படகு போக்குவரத்து, கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில்:

    தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரப்பர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது கூட்டத்தில் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற 17-ந்தேதி மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும்.

    அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கவால் குரங்குகள் மலைப்பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது.

    வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த முறை தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எனவே எதிர்காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும்.

    கேரளாவில் தனியார் காடுகள் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பணிகள் செய்ய கெடுபிடி காட்டுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள சட்ட திட்டங்களுக்கும், தமிழகத்தில் உள்ள சட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. கேரளாவில் அதிக மலைகள் உள்ளன. இங்கு மலைகள் குறைவு. நமது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அழகுமீனா, வன அலுவலர் அன்பு, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.

    குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி- ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர். 

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் கண்டன குரல் எழுப்பினார்கள்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல் பகுதிகளும் பயங்கர சீற்றமாக இருந்தது.
    • கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று 4-வது நாளாக அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும், பயங்கர சீற்றத்துடனும் காணப்படுகிறது.

    இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல் பகுதிகளும் பயங்கர சீற்றமாக இருந்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

    கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர். சூறாவளி காற்றுடன் கூடிய பயங்கர கடல் சீற்றம் காரணமாக இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று படகு போக்குவரத்து இயக்க வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு கடல் சார் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் இன்று அதிகாலையில் பல மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் ஆகியவற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இதேபோல சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன.
    • கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருந்தது. இருப்பினும் காலை 8 மணிக்கு வழக்கம்போல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்ததால் கடல் பயங்கர கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. சில நேரங்களில் எழுந்து வந்து ராட்சத அலைகள் கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

    கரையை நோக்கி வந்த ராட்சத அலைகளை கண்டு கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    அவ்வப்போது நிகழ்ந்த கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். சில நேரங்களில் தடையை மீறி கடலில் இறங்கி குளித்த சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் அங்கு இருந்து வெளியேற்றினர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர்.

    இந்த கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 9 மணிக்கு "திடீர்"என்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு துறையில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகிய வற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதேபோல சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    ×