என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரி மாணவியை ஆபாச வீடியோ காட்டி மிரட்டிய உத்தரப் பிரதேச வாலிபர் கைது
- குமரி மாவட்ட இளைஞர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார்.
- மாணவியின் தாயிடம் செல்போனில் பேசி 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவிக்கு, சமூகவலைதளம் மூலமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபர் அறிமுகமானார்.
அந்த மாணவியிடம், வாலிபர் அஜய் செல்போனில் அடிக்கடி பேசியபடி இருந்துள்ளார்.
மேலும் மாணவியின் செல்போனுக்கு ஆபாச படங்களை தொடர்ந்து அனுப்பி உள்ளார்.
அதுமட்டுமின்றி ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி, மாணவியிடமிருந்து அவரது அந்தரங்க வீடியோக்களை பெற்றுக் கொண்டார்.
அந்த வீடியோக்களை தனது செல்போனில் சேமித்து வைத்துக்கொண்டு, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தனக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் குமரி மாவட்ட இளைஞர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார்.
அது மட்டுமின்றி மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி, அதில் மாணவியின் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு மிரட்டி வந்துள்ளார்.
இதனால் பயந்த மாணவி, அது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் வாலிபர் அஜய், மாணவியின் தாயிடம் செல்போனில் பேசி 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
பணத்தை தரவில்லை என்றால் மாணவியின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அது மட்டுமுன்றி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை அவரது உறவினருக்கு அனுப்பியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து வாலிபர் அஜய் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை போலீசார் உத்தரபிரதேசத்துக்கு சென்று வாலிபர் அஜயை கைது செய்தனர். பின்பு அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு அழைத்து வந்தனர்.
கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை மிரட்டிய விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி, அதிலிருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.






