என் மலர்
நீங்கள் தேடியது "கன்னியாகுமரி"
- சுற்றுப்பயணத்தின் போது மக்களின் வரவேற்பை ஏற்று அவர்களின் குறைகளை கேட்டிருந்தோம்.
- மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் நேற்றும், இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
குறும்பனை முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கண்டறியவும், தேவைகளை கண்டறியவும் மற்றும் அளித்த வெற்றிக்கு நன்றி கூறவும் பிரச்சார பயணம் இன்று நடைபெற்றது.

இன்றைய சுற்றுப்பயணத்தின் போது மக்களின் வரவேற்பை ஏற்று அவர்களின் குறைகளை கேட்டிருந்தோம். மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.

மயிலாடி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.

புதூர் அருள்மிகு தேவி ஸ்ரீ ஈஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக மற்றும் கொடை விழா நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.

நேற்று கடற்கையோர கிராமங்களின் சுற்று பயணத்தின் போது ஊர் ஆலயங்களில் உள்ள பங்கு தந்தையரை சந்தித்து ஊர் மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று கொண்டோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
- தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈரானில் தங்கி மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருவதால் ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரான் கிஷ் தீவில் வசித்து வரும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுவரை எந்த தூதரக அதிகாரிகளும் நேரில் வந்து தமிழக மீனவர்களை சந்திக்கவில்லை என அங்கிருக்கும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

உடனடியாக தங்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.
இந்தநிலையில், ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி உள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என்று புதுடெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளரை காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
- ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சார்பாக 'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சார்பாக 'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்தார்.
- காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல இடங்களில் கனமழை கொட்டியது.
நாகர்கோவிலில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. பின்பு அவ்வப்போது கனமழை கொட்டியபடி இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலை, அசம்பு ரோடுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் மழை பெய்தது.
சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 60.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
ஏற்கனவே அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது. அணைக்கு 1,285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 753 கன அடி தண்ணீரும், உபரிநீராக 131 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 69.45 அடியாக இருந்தது. அணைக்கு 900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருக்கின்றன.
மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மலையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரங்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 40.6, பெருச்சாணி 19.8, சிற்றாறு1-60.4, சிற்றார்2-24.2, மயிலாடி 3.6, நாகர்கோவில் 3.4, கன்னிமார் 33.6, ஆரல்வாய்மொழி 10.4, பூதப்பாண்டி 16.4, முக்கடல் 20.2, பாலமோர் 31.6, தக்கலை 2.4, குளச்சல் 4, இரணியல் 6, அடையாமடை 22.2, மாம்பழத் துறையாறு 12, ஆணைக்கிடங்கு 11.6, களியல் 18, குழித்துறை 2.4, புத்தன்அணை 19.6, சுருளோடு 22.6, திற்பரப்பு மற்றும் முள்ளங்கினாவிளை 10.8.
- மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 20.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தக்கலை, குளச்சல், களியல், சுருளோடு, முள்ளங்கினாவிளை, கன்னிமார் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.22 அடியாக இருந்தது. அணைக்கு 279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 699 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது. அணைக்கு 279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.77 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 9.87 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 15.40 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.06 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 2.5 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதுடன் பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் ஏற்கனவே வயல்களில் நடவு பணி நிறைவு பெற்ற நிலையில் உரமிடுதல் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் சானல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன.
மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
- தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
- படகு கட்டண உயர்வினால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.75 வீதமும், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக சென்று படகில் பயணம் செய்வதற்கான சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.300 வீதமும், மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.30 வீதமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் படகு கட்டணத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் திடீரென்று உயர்த்தியது. இந்த படகு கட்டண உயர்வு இன்று (5-ந்தேதி) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ..75-ல் இருந்து ரூ.100 ஆகவும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம் அதே ரூ. 300 ஆக நீடிக்கிறது.
இந்த படகு கட்டண உயர்வினால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கட்டணம் உயர்வுக்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
- தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.
இந்த தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
- குழித்துறை தடுப்பணையில் 2 சிறுவர்கள் தவறி விழுந்தனர்.
- பீட்டர் ஜான்சன் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றினார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோத்தில் உள்ள குழித்துறை தடுப்பணையில் மனோ (17) அகிலேஸ் (12) ஆகிய 2 சிறுவர்கள் தவறி விழுந்தனர்.
அதை பார்த்த பீட்டர் ஜான்சன் என்பவர் தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி இரண்டு மாணவர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், பீட்டர் ஜான்சனின் இறப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களை, அவ்வழியே சென்ற பீட்டர் என்பவர் தன் உயிரை துச்சமென எண்ணி, மாணவர்களைக் காப்பாற்றி, தன் இன்னுயிரை நீத்துள்ளார்.
தத்தளிக்கும் மாணவர்களை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காத்திட்ட பீட்டர் அவர்கள், தமிழக மக்களின் உயரிய மானுடவிய விழுமியத்தின் உதாரணம்.
இறந்தாலும் அனைத்தையும் கொடுக்கும் வாழை போல், தன் உயிரைத் தியாகம் செய்திடினும், அவர் காத்திட்ட இரு மாணவர்களின் வழியே பீட்டர் அவர்கள் நிச்சயம் வாழ்வார்!" என்று பதிவிட்டுள்ளார்.
- மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.84 அடியாக இருந்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று காலையிலிருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இரவு சூறைக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
குழித்துறை, திக்குறிச்சி, சுருளோடு, கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, ஆணைக்கிடங்கு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 38.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சூறைக்காற்றுடன் மழை பெய்ததையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. திருவட்டார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில் பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது.
மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் நேற்று இரவு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.
இன்று காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆறுகாணி, பத்துகாணி, திருவட்டாறு, திக்குறிச்சி, குழித்துறை மற்றும் மலையோர கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் சூறைக்காற்று வீசியது. விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை நீடித்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.84 அடியாக இருந்தது. அணைக்கு 671 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது. அணைக்கு 371 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 36.4, பெருஞ்சாணி 38.6, சிற்றாறு 1-35.4, சிற்றார் 2-18, கொட்டாரம் 17.2, மயிலாடி 6.2, நாகர்கோவில் 19, கன்னிமார் 30.2, பூதப்பாண்டி 22.6, முக்கடல் 12, பாலமோர் 29.4, தக்கலை 17, குளச்சல் 18.2, இரணியல் 10.4, அடையாமடை 17, குந்தன்கோடு 24.6, கோழிப்போர்விளை 30.8, மாம்பழத்துறையாறு 24, ஆணைக்கிடங்கு 25.4, களியல் 22.4, குழித்துறை 32.4, புத்தன் அணை 37.2, சுருளோடு 27.2, திற்பரப்பு 32.8, முள்ளங்கினாவிளை 18.4.
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு இருந்தனர். தற்போது பெய்த மழையின் காரணமாக வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரம் காட்டி உள்ளனர். கன்னி பூ சாகுபடிக்காக வருகிற 1-ந்தேதி அணைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- தற்போது 5 படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது.
- சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் மற்றும் கோடை விடுமுறை சீசன் காலம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகையை இருமடங்காக உயர்த்தி உள்ளது.
இதனையடுத்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவையில் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை பொதிகை, குகன் மற்றும் விவேகானந்தா ஆகிய 3 படகுகள் மட்டுமே இந்த சேவையில் பயன்பட்டு வந்தன. ஆனால் தற்போது, விவேகானந்தா படகு பழுது பார்க்கும் பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கரையேற்றப்பட்டுள்ளதால், சில வாரங்களாக 2 படகுகள் மட்டுமே சேவையில் இருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு படகுகளான 'திருவள்ளுவர்' மற்றும் 'தாமிரபரணி' ஆகிய 2 படகுகளை வட்டக்கோட்டைக்கு இயக்குவதற்கு பதிலாக விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கி வருகிறது.
மேலும் விவேகானந்த கேந்திரத்துக்கு சொந்தமான 'ஏகநாத்' படகும் ஒப்பந்த அடிப்படையில் கூட்டம் நெரிசலை பொறுத்து அவ்வப்போது விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது மொத்தம் 5 படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்பு சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இப்போது சற்றே விரைவாக படகுகளில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இணைந்து சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேற்கொண்ட இந்த ஏற்பாடு சுற்றுலா துறையில் ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
- படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோடை விடுமுறை சீசன் காரணமாக தற்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.
தொடர்ந்து இன்று வரை கடந்த 11 நாட்களில் 1¼ லட்சம் சுற்றுலா பயணிகள் படகுமூலம் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.
இன்றும் காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
- விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர்.
- திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.
கன்னியாகுமரி:
கோடை விடுமுறையையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகுதுறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன், திருப்பதி வெங்கடாஜலபதி, கொட்டாரம் ராமர், சுசீந்திரம் தாணுமாலயசாமி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா, ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.
மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர்காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.