search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி"

    • கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது.
    • நைவேத்தியம் தயாரிக்க தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனிதமான தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் மேல் சாந்தி அல்லது கீழ் சாந்தி குடத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கோவில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகத் தான் கோவில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து வருவதற்கான வழி உள்ளது.

    மின்விளக்கு வசதி இல்லாத இருள் சூழ்ந்து கிடக்கும் இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கிணற்றில் இருந்து குடத்தில் மேல்சாந்திகள் எடுத்து வருவார்கள். மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் காலையில் நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அரவணை பாயாசம், பால் பாயாசம், பொங்கல் போன்றவைகளை தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதேபோல இரவு அம்மனுக்கு நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் அப்பம், வடை போன்ற பதார்த்தங்கள் தயாரிப்பதற்கும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெளியூர்களில் உள்ள கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா, கொடை விழா மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் குடங்களில் புனித நீர் எடுத்து பகவதி அம்மனின் காலடியில் வைத்து பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த தீர்த்த கிணறு குப்பை கூழங்கள் விழுந்து மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வலைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்த கிணற்றில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் பணம், காசு மற்றும் தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக காசி, ராமேசுவரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வரும் வடமாநில பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றில் அதிக அளவில் பணம் காசுகளை காணிக்கையாக கொண்டு வந்து கொட்டி வணங்கி செல்கிறார்கள்.

    பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம் மற்றும் காசுகள் இந்த தீர்க்கக் கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்தத் தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம், காசுகள் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படவில்லை.

    இந்த நிலையில் கோவிலில் ஆய்வு செய்ய வந்த கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இந்த தீர்த்த கிணற்றை பார்வையிட்டார். அப்போது தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் திறந்து எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து.

    தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி கடல்பகுதி விளங்குகிறது. இங்கு தினமும் பல நாடுகள், இந்தியாவின் மற்ற மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து செல்கின்றனர்.

    அந்த வகையில், கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அங்கு தியானம் செய்யும் இடம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவைகளையும் கண்டுகளிக்கின்றனர்.

    இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கடலின் நீர்மட்ட தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்த அரிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.

    • கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
    • மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்கு செல்லும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கேந்திர நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இரவு அங்கு தங்குகிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் விவேகானந்த கேந்திர பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவரை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மோகன் பகவத் இரவு விவேகானந்த கேந்திராவில் தங்குகிறார். 24-ந் தேதி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
    • ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இதமான குளிர் காற்று வீசியது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

    திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.82 அடியாக உள்ளது. அணைக்கு 1061 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 256 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.15 அடியாக உள்ளது. அணைக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.43 அடியாக உள்ளது. அணைக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியதால் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பரித விப்பிற்கு ஆளானார்கள்.

    • அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை.
    • வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    மேலும் குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து மழை பெய்த தால் அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.

    கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, சுருளோடு, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பாலமோரில் அதிகபட்சமாக 28.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.76 அடியாக இருந்தது.

    அணைக்கு 475 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 481 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.22 அடியாக உள்ளது. அணைக்கு 401 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.35 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 47.82 அடியாகவும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.20 அடியாக உள்ளது.

    • சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர்.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. பகல் 10.30 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து சுமார் 2½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
    • ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிபில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

     அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

     

    இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, வணங்கான் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    • 121-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • இன்று காலை அன்ன பூஜை நடந்தது.

    கன்னியாகுமரி:

    "வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் இன்று காலை அன்ன பூஜை நடந்தது.

    இதையொட்டி காலை 10 மணிக்கு நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், அன்னை சாரதா தேவி, மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இவர்களது உருவப்படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்பட்டது. இந்த அன்ன பூஜை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    இந்த அன்ன பூஜைக்காக நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து 21 டன் அரிசி சேகரிக்கப்பட்டது.

    • வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.

    இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.

    அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.

    அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.8,

    பெருஞ்சாணி 32.4,

    சிற்றார் 1-16.4,

    சிற்றார் 2-18.2,

    கன்னிமார் 6.2,

    கொட்டாரம் 3,

    மயிலாடி 4.8,

    நாகர்கோவில் 5.4,

    பூதப்பாண்டி 12.4,

    முக்கடல் 10.4,

    பாலமோர் 52.4,

    தக்கலை 10,

    குளச்சல் 5,

    இரணியல் 6,

    அடையாமடை 21,

    குருந்தன்கோடு 3.8,

    கோழிப்போர்விளை 12.4,

    மாம்பழத்துறையாறு 6.4,

    களியல் 18.6,

    குழித்துறை 12.4,

    புத்தன் அணை 29.2,

    சுருளோடு 6.2,

    ஆணைக்கிடங்கு 5,

    திற்பரப்பு 14.8,

    முள்ளங்கினாவிளை 14.8.

    • நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
    • சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இன்னும் பலர், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் மெத்தன போக்கே காரணம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் நாளை நடைபெறும் போராட்டத்திற்காக நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அறிந்த போலீசார் தடுத்தனர்.

    மேலும் சுவரொட்டி ஒட்டிய 2 பேரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

    இது பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாநில நிர்வாகிகள் ராஜன், சந்துரு, ராணி பகுதி செயலாளர்கள் முருகேஸ்வரன், ஜெய கோபால், அணி செயலாளர்கள் ரபீக், ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சுவரொட்டிகளை ஒப்படைக்க வேண்டும். பிடிபட்ட நபர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட வர்களை போலீசார் சமரசம் செய்தனர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுவரொட்டிகள் ஓட்டியதாக பிடித்து வந்த 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர்.

    • ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
    • அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது.

    7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, அசம்புரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    காலை முதலே மழை பெய்து வந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதற்கு சுணக்கம் காட்டினார்கள். பெற்றோர் அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு வந்தனர். குடை பிடித்தவாறு வந்தாலும் ஒரு சில மாணவிகள் மழையின் வேகத்தினால் நனைந்தனர். சீருடைகள் நனைந்ததால் மாணவிகள் அவதிப்பட்டனர்.

    பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    இடலாக்குடி பகுதியில் சாலையில் உள்ள பள்ளம் எங்கு கிடக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.

    சுசீந்திரம், கன்னியாகுமரி, கொட்டாரம், அஞ்சுகிராமம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தக்கலை, குருந்தன்கோடு, சுருளோடு, மயிலாடி, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை கொட்டியது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    கோழிப்போர் விளை பகுதியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மட்டுமின்றி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 637 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 16.14 அடியாகவும்,பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 40.76 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் 17.90 அடியாகவும் உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கன்னிமார் 17.2, கொட்டாரம் 27.8, மயிலாடி 15.2, நாகர்கோவில் 32.4, ஆரல்வாய்மொழி 13, பூதப்பாண்டி 25.2, பாலமோர் 34.4, தக்கலை 49.6, குளச்சல் 40, இரணியல் 14.4, அடையாமடை 23, குருந்தன்கோடு 28.2, கோழிப்போர்விளை 62.2, மாம்பாழத்துறையாறு 29, சிற்றாறு 1-10.2, சிற்றாறு 2-28.4, களியல் 14.2, பேச்சிப்பாறை 32.8, பெருஞ்சாணி 44.6, புத்தன் அணை 39.8, சுருளகோடு 31.2, ஆணைக்கிடங்கு 28.4, திற்பரப்பு 13, முள்ளங்கினாவிளை 43.8.

    ×