என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ்"

    • புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
    • காலி சரக்கு ரெயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும்.

    புதிய ரெயில்கள், ரெயில் நிறுத்தங்கள், ரெயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார்.

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை வலியுறுத்திய விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார்.

    புதிய ரெயில்கள்

    நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி வாரந்திர ரெயில், கன்னியாகுமரி – ஐதராபாத் தினசரி விரைவு ரெயில் ஆகிய புதிய ரெயில்களின் தேவையை முன் வைத்தார்

    ரெயில்கள் நீட்டிப்பு

    புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், புனலூர் - மதுரை ரெயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், மங்களூரு – திருவனந்தபுரம் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், ஹவுரா – திருச்சி ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டித்தல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்காக திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரெயில்களை நீட்டிக்க வேண்டும் எனவும், தாம்பரம் – நாகர்கோவில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரெயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    ரெயில் நிறுத்தங்கள்

    காந்திதாம் விரைவு ரெயில் மற்றும் ஜாம்நகர் ரெயில்கள் குழித்துறை ரெயில் நிலையத்திலும், புனலூர்-மதுரை ரெயில் பள்ளியாடி ரெயில் நிலையத்திலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (intercity) ரெயில் இரணியல் ரெயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என கோரினார்.

    உட்கட்டமைப்பு வசதிகள்

    ரெயில் இரட்டிப்பு பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக மந்தமான நிலையில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி அதனை துரிதபடுத்த ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட் (electric loco shed), நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு செல்ல இரண்டாவது நுழைவு வாயில், நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், மோசமான நிலையில் காணப்படும் குழித்துறை ரெயில் நிலையம் செல்லும் சாலையை செப்பனிடுதல், மழை காலங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள், பயணிகள் வசதி கருதி ரெயில் நிலையங்களின் மேம்பாடு ஆகியவற்றை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்தார்.

    தொலைநோக்கு திட்டங்கள்:

    ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரெயில் பாதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். அதுபோன்று அறிவிக்கப்பட்டுள்ள அங்கமாலி-எருமேலி-விழிஞ்சம் ரெயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது போன்று காலி சரக்கு ரெயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    • வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும்.
    • மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கூட்டணி அரசால் 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பா.ஜ.க. ஆட்சியில் இதற்கான நிதியை விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டின.

    இதற்கிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை விரிவுபடுத்தி பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் 125 நாள் வேலைத்திட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும். குறிப்பாக, மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும். இதனால் மாநிலங்களுக்கு நிதி சுமை ஏற்படும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    • பீகார் மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டமாக நடைபெற்றது.
    • கருத்துக்கணிப்புகளில் பெற்ற இடங்களைவிட அதிக இடங்களில் என்.டி.ஏ. கூட்டணி வென்றது.

    பாட்னா:

    காலை நேரத்தில் கூட்டம் அதிகம் காணப்படும் மார்க்கெட். காய்கறிகள் அப்போதுதான் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அங்கு காய்கறி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தான் மணி.

    அப்போது அங்கு வந்த முருகன், என்னடா மணி, SIR படிவம் எல்லாம் நிரப்பிக் கொடுத்துட்டியா என கேட்டான்.

    ஆமாம்னே கொடுத்துட்டேன். எலக்ஷன் கமிஷனுக்கு ஏண்ணே இந்த தேவையில்லாத வேலை. ஒழுங்கா பழையபடி இருந்தா என்ன கெட்டுப் போச்சி என அங்கலாய்த்தான்.

    அப்படி இல்லைடா மணி. இந்த மாதிரி சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டால் தான் போலி வாக்காளர்களை நீக்க முடியும். அப்படி செய்தால் தேர்தலில் கூடுதலாக வாக்கு சதவீதம் பதிவாகவும் வாய்ப்பு இருக்கு. அதனாலதான் எலக்ஷன் கமிஷன் இதுபோன்ற பணிகளை செய்து வருது. சமீபத்தில் பீகார் மாநிலத்திலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டதால் வாக்கு சதவீதம் இதுவரை இல்லாத அளவு அதிகரிச்சிருக்கு என்றான் முருகன்.

    அப்படியா, பீகாரில் அப்படி என்ன நடந்தது சொல்லு கேட்போம் என கேட்டான் மணி.


    கடந்த மாதம் நடந்த பீகார் சட்டசபை தேர்தல் குறித்து முருகன் கூறியதன் சுருக்கம் வருமாறு:

    பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டங்களாக நடைபெற்றது.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி 29 இடங்களிலும், சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்த ராஷ்டிரீய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஏனைய 39 தொகுதிகளில் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன.

    பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தன.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது.

    ஆரம்பத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே முன்னிலை வித்தியாசம் குறைவாகவே இருந்தது. நேரம் செல்லச் செல்ல முன்னிலை இடைவெளி அதிகரித்தது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னிலை நிலவரம் ஏறுமுகமாகவும், இந்தியா கூட்டணியின் முன்னிலை நிலவரம் இறங்குமுகமாகவே இருந்தது.


    இறுதியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளையும்விட தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் கிடைத்தன.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்களில் வெற்றி கிடைத்தன. அந்தக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

    மொத்தத்தில் 2025-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஏற்றத்தையும், காங்கிரஸ் கட்சி கடும் சறுக்கலையும் சந்தித்தது.

    ஆனால் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையால் தோற்றோம் என காரணம் கூறியது.

    பீகார் தேர்தலில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்களுக்கும் பயன்படுமா என்பதை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் என முடித்தான் முருகன்.

    என்னவோ நீ சொல்ற, SIR நடவடிக்கை இங்க எல்லாம் எந்த விளைவை ஏற்படுத்துமோ தெரியலை என்றபடியே லாரியில் இருந்து இறக்கிய மூட்டைகளுக்கான பணம் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டான் மணி.

    • முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆயுஷ் மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹஜாபை முதலமைச்சர் நிதிஷ்குமார் பிடித்து இழுத்து கழற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆயுஷ் மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பணி நியமன ஆணை பேரானந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை நிதிஷ்குமார் பிடித்து இழுத்துகழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    முஸ்லிம் பெண் மருத்துவரை அவமதித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. நிதிஷ்குமாரின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் விமர்சித்தது.

    • மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.
    • காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் அமர்வு இன்று தொடங்கியது.

    டெல்லியில் நேற்று வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். அதோடு அவருக்கு அச்சுறுத்தல்களையும் விடுத்தனர்.

    இந்த விவகாரத்தை ஆளும் பா.ஜ.ஜக உறுப்பினர்கள் எழுப்பினார்கள். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து பா.ஜ.கா எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான பிரச்சினையை கிளப்பினார்கள்.

    இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த அமளியால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினை கிளப்பியதால் 2 மணி வரை அைவ ஒத்தி வைக்கப்பட்டது.

    இதே பிரச்சினையை மேல்சபையிலும் பா.ஜ.க உறுப்பினர்கள் கிளப்பினார்கள். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இது காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும், மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    காங்கிரஸ் அரசியல் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது. இது கற்பனை செய்ய முடியாதது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜனதா எம்.பி.க்களின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.
    • பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர்கள் கிரிஸ்சோடங்கர், சூரஜ் ஹெக்டே, ஆலுவா ஆகியோர் இன்று கூடி ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்துள்ளார்கள். அப்போது 40 தொகுதிகள் கேட்டு வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் முன் தயாரிப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதித்தோம். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதே எங்கள் இலக்கு.

    டெல்லியில் நாளை (செவ்வாய்)யும் தொடர்ந்து ஆலோசிக்க இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்றார்.

    பேட்டியின்போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

    • டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
    • இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' எனும் தலைப்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    வாக்கு திருட்டு குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்தார்.

    அவர் ஏன் நடுங்கினார் என சொல்லட்டுமா?. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே தைரியமாக இருக்கிறார்கள்.

    தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இந்த மேடையிலிருந்து உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், உண்மையை நிலைநிறுத்தி, உண்மைக்குப் பின்னால் நின்று, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என தெரிவித்தார்.

    • இந்தத் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, அது மாற்றப்படும்போது, ​​மீண்டும் அரசாங்க வளங்கள் வீணாகின்றன.
    • ஒரு காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று வர்ணித்த பிரதமர், இப்போது அந்தப் புரட்சிகரமான திட்டத்திற்குப் பெருமை தேடிக்கொள்ளும் நோக்கில் அதன் பெயரை மாற்றுகிறார்.

    2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியை பாஜக விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாநிலங்கள் குற்றம்சாட்டின.

    இந்நிலையில் 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' என்பதை விரிவுபடுத்தி 'புஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    நேருவை தொடர்நது காந்தி மீது பாஜக வெறுப்பை உமிழ்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.

    காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "இதற்குப் பின்னால் உள்ள மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    இதற்குப் பின்னால் உள்ள மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    முதலாவதாக, இந்தத் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, அது மாற்றப்படும்போது, மீண்டும் அரசாங்க வளங்கள் வீணாகின்றன.

    அலுவலகங்கள் முதல் எழுதுபொருள் வரை அனைத்தையும் மறுபெயரிட வேண்டும், இது ஒரு பெரிய மற்றும் விலையுயர்ந்த செயல்முறையாகும். அப்படியானால் இதை தேவையில்லாமல் செய்வதன் பயன் என்ன? எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரு காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று வர்ணித்த பிரதமர், இப்போது அந்தப் புரட்சிகரமான திட்டத்திற்குப் பெருமை தேடிக்கொள்ளும் நோக்கில் அதன் பெயரை மாற்றுகிறார்.

    இது மகாத்மா காந்தியை நமது தேசிய மனசாட்சியிலிருந்தும், குறிப்பாக இந்தியாவின் ஆன்மா குடியிருப்பதாக அவர் கூறிய கிராமங்களிலிருந்தும் அழிப்பதற்கான மற்றொரு வழியாகும்.

    இந்தத் திட்டத்திற்கு வேண்டுமென்றே இழைக்கப்படும் புறக்கணிப்பை மூடிமறைப்பதற்காக செய்யப்படும் ஒரு மேலோட்டமான மாற்றத்தைத் தவிர இந்த நடவடிக்கை வேறொன்றுமில்லை.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கோரி வருகின்றனர், ஆனால் மத்திய அரசு ஆண்டுதோறும் இந்தத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது.

    நிலுவைத் தொகைகள் குவிந்து கொண்டே செல்கின்றன, இது இந்தத் திட்டத்திற்கு மெதுவான மரணத்தை ஏற்படுத்துவதற்காக கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு உத்தியாகத் தெரிகிறது.

    உண்மையில், இந்த அரசாங்கத்திற்கு நலத்திட்டங்களை வழங்குவதில் எந்த நோக்கமும் இல்லை. யோசனைகள் தீர்ந்துவிட்ட நிலையில், அது வெறும் பாசாங்கு செய்கிறது.

    மோடி அவர்களே, நீங்கள் விரும்பியபடி அதன் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள், இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தை இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு வந்தவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் திருமதி சோனியா காந்தி அவர்களும்தான் என்பதை மக்கள் அறிவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.   

    • சமீப காலமாக சசி தரூர் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார்.
    • இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.

    இதற்கிடையே, மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.

    இந்நிலையில், நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். சசி தரூர் 3வது முறையாக ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த மாதம் எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திட்டம் வாயிலாக இந்தியாவின் ஊரக பொருளாதாரம் மேம்பட்டதுடன் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
    • மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான கோடிகள் வழங்கப்படாததால் , கிராமப்புற மேம்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்காமல் தடுத்து வைத்துள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் நிதிகளை உடனே வழங்க வேண்டும் என இன்று மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்போது 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது.

    இந்த திட்டம் வாயிலாக இந்தியாவின் ஊரக பொருளாதாரம் மேம்பட்டதுடன் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பாஜக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியினை படிப்படியாக நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மக்களவையில் இது குறித்து விவாதிக்க ஒத்துவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.

    மத்திய அரசின் தாமதமான நிதி வெளியீடு காரணமாக ஏராளமான கிராமப்புற குடும்பங்களும் ஊராட்சிகளும் கடுமையான நெருக்கடியை எதிர் கொள்கின்றன. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான கோடிகள் வழங்கப்படாததால் , கிராமப்புற மேம்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    தொழிலாளர்கள் பல மாதங்களாக கூலி பெறாமல் தவிக்கின்றனர். ஊராட்சிகள் செயலிழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாநிலங்களுடன் ஒத்துழைக்கும் நிலைக்கு பதிலாக மத்திய அரசின் அழுத்தங்கள் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுதலாக அமைந்துள்ளது.

    மேலும் கிராமப்புற தொழிலாளர்கள் சுயமரியாதை இழந்து நிற்கின்றனர். இதன் காரணமாக பல மாநிலங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலைமையை கருத்தில் கொண்டு, வழக்கமான அவைச் செயல்பாடுகளை நிறுத்தி உடனடியாக விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், மத்திய அரசு உடனடியாக நிலுவையில் உள்ள நிதிகளை முழுமையாக வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தடையின்றி அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • போலி மருந்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
    • மருந்தகங்களில் சோதனை நடத்தி போலிகளை கண்டறிந்து களைய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை நடத்த உதவிய அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.

    சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் நேருவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    போலி மருந்து விவகாரத்தில் முக்கிய நபரான ராஜா சபாநாயகருக்கு நெருக்கமாக இருந்துள்ளார். பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் பரிவர்த்தனை நடந்துள்ளது. ராஜா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட டைரியில் அரசியல்வாதிகள் பணம் பெற்ற தகவல் உள்ளது. 22 கார்களை அரசியல்வாதிகளுக்கு கொடுத்துள்ளார்.

    போலி மருந்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மருந்தகங்களில் சோதனை நடத்தி போலிகளை கண்டறிந்து களைய வேண்டும்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், போலி மருந்து தொழிற்சாலைக்கு நான் அனுமதி வழங்கியதாக கூறியுள்ளார். நான் சி.பி.ஐ. உட்பட எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். இதில் எனக்கு பங்கு இருந்தால், அரசியலை விட்டே விலகுகிறேன். என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யட்டும்.

    நான் ஆட்சியில் இருந்தபோது அனுமதி கொடுத்ததாக கூறும் நமச்சிவாயம், அரசில் 2-வது அமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.

    அப்போதே இதை சொல்லி ஆட்சியிலிருந்து வெளியேறி இருக்க வேண்டியதுதானே? உங்கள் சொத்து தொடர்பான விசாரணைக்கு தயாரா?

    போலி மருந்து தொழிற்சாலையை ராஜா 2021-ல் சபாநாயகர் தொகுதியில் ஆரம்பித்துள்ளார். அதற்கான ஆதாரம் உள்ளது. அவர் நடத்திய தொழிற்சாலை சபாநாயகர் ஆசீர்வாதத்தோடும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசியல்வாதிகளின் ஆசியோடும் நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடிக்கு மாத்திரை விநியோகம் செய்துள்ளனர். போலி மருந்து விவகாரத்தில் முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
    • தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்தல் கூட்டணி ஜனவரி மாத இறுதியில்தான் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க புதிது, புதிதாக அரசியல் கட்சிகள் களம் இறங்கி வருகிறது. இந்த புதிய அரசியல் கட்சிகளில் தொகுதிதோறும் பிரபலமாக உள்ள வேட்பாளர் பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.

    இதில் காங்கிரசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் மாதத்தில்தான் தேர்தல் நடைபெறும்.

    தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் முன்பாகவே காங்கிரஸ் 30 தொகுதிக்கும் விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது.

    இதன்மூலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்த தொகுதி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனது யுக்தி மூலம் தங்களிடம் உள்ள வேட்பாளர் பிரமுகர்களை தக்க வைக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

    புதுச்சேரியை பொறுத்தவரை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் துறை அறிவிக்கும் வரை கட்சி தாவல்கள் சகஜமாகவே இருக்கும். இதனால் காங்கிரசின் புதிய யுக்தி கைகொடுக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.

    ×