என் மலர்
நீங்கள் தேடியது "Christmas festival"
- தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது.
- நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.
ஏற்காடு:
அரையாண்டுத் தேர்வு முடிந்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் நேற்று மாலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.

இதனால் நேற்று மாலை மற்றும் இன்று காலை முதல் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது. இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேலும் அவர்கள் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் காட்சி முனை, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிபார்த்தனர். மேலும் படகு சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் படகுகள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்தது. படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஏற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.
இன்று முதல் புத்தாண்டு வரை ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளது. கூட்டம் அதிகரித்து வருவதால் மலைப்பாதையில் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.
- 28-ந்தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
- ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கு தினமும் 3 முறை மலை ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவித்தது.
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து இன்று, வருகிற 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை, 28, 30 மற்றும் வரும் ஜனவரி 1-ந் தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வருகிற 28-ந் தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வருகிற 28-ந் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு சிறப்பு மலைரெயில் ஊட்டி நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ரெயிலில் ஏறி உற்சாகத்துடன் பயணித்தனர். சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
- திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகப்பட்டினம்:
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
அதன்படி, கீழை நாடுகளின் 'லூர்து' என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பலியின் முடிவில் பக்தர் ஆரோக்கியம் உள்பட அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு திருப்பலியில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்டிருந்த குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்துமஸை யொட்டி ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு திரண்டதால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நேற்று முன்தினம் அருமனையில் தொடங்கியது. 2-வது நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு நெடிய சாலை சந்திப்பிலிருந்து மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு, பேண்ட் வாத்தியம், சிங்காரி மேளம், நாசிக் டோல், சிங்கார காவடி, பூக்காவடி, மேஜிக் ஷோ, ஜோக்கர், சிலம்பாட்டம், ஆதிவாசி நிறுத்தம், உலக்கை ஆட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், தம்போல, பெல்லி டான்ஸ், பஞ்சாபி டான்ஸ் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நெடுங்குளம் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து பார்வையிட்டார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.
முழுக்கோடு சேகர ஆயர் ஜான்பெண்டிங் தொடக்க ஜெபம் செய்தார். டாக்டர் பிரியா சாலமன் வரவேற்று பேசினார். கல்வியாளர் ரவி பச்சமுத்து, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னாள் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆசி உரை வழங்கினார். இயக்க செயலாளர் ஸ்டீபன் நினைவு பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி 'கேக்' வெட்டியும், குழு பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கிற நற்செய்தி என்னவென்றால் அன்பு, மதச்சார்பற்ற பண்பு, மனித குலத்திற்கு சேவை செய்கின்ற பண்பு என்பதாகும். காங்கிரஸ் கட்சியும் அந்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது.
நமது விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் இந்த மதிப்பீடுகளை தான் போதித்தார்கள். இன்று சில சக்திகள் இந்திய மக்களிடையே இருக்கின்ற அன்பை சிதைக்க பார்க்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் இத்தகைய தீய சக்திகளை எதிர்க்கிறார். அதனால் தான் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை இந்த குமரி மண்ணில் இருந்து தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரள மாநிலங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் இந்த பாசிச சக்திகளை அனுமதிக்கவில்லை. தெலுங்கானா மக்களும் கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை பின்பற்றி வாழ விரும்புகிறார்கள்.
நாங்கள் ஏழை, எளிய மக்களுக்கு நன்மைகள் செய்கின்றோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் நாங்கள்சோனியா காந்தியையும், மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையையும் போற்றுகின்றவர்களாக இருக்கின்றோம். இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி வரப் போகிறார்.
மதச்சார்பற்ற அவருடைய சிந்தனையின் கீழ் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகிறது. சீனா போன்ற நாடுகளுக்கு இணையான நாடாக அவருடைய தலைமையின் கீழ் இந்தநாடு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண் டனர்.முடிவில் இயக்க தலைவர் திலீப் சிங் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை இயக்கநிர்வாகிகள் ஜோஸ் செல்வன், கென்னத், பிரதாப் சிங், டென்னிஸ், கிளாடிஸ் பிரபு ஜான் கிறிஸ்டோபர், சிங், பிஜின் சிங், சேம் ஜெகன், ஆரோன், புஷ்பராஜ், செல்வகாந்த், அருள், ஜஸ்டின் ஜேம்ஸ் ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
- நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன்.
கோவை:
கோவை காந்திபுரம் அருகே உள்ள பெத்தேல் கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஒட்டுமொத்த உலகமே மகிழ்ச்சியாக இருக்க கூடிய விழா என்றால் அது கிறிஸ்துமஸ் தான். கிறிஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகையில் பங்கேற்று நானும் ஒரு கிறிஸ்தவன் என்றேன். உடனே அது பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது.
நான் இப்போது மீண்டும் உங்களிடம் சொல்கிறேன். நானும் ஒரு கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன். முஸ்லிம் என்று நினைத்தால் முஸ்லிம். இந்து என்று நினைத்தால் இந்து. நான் எல்லோருக்கும் பொதுவானவன். நான் எப்போதுமே அப்படி தான் இருப்பேன்.
எல்லா மதங்களின் அடிப்படை அன்பு தான். அதை தான் எல்லா மதங்களும் சொல்லிக் கொடுக்கின்றன. ஆனால் அதே மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புவார்கள். அவர்கள் உண்மையை பேசமாட்டார்கள்.
மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் தான் வெறுப்பை பரப்புவார்கள் என்று நாம் நினைத்தோம். ஆனால் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களை பேசினார்.
அந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தில் கடந்த 13-ந் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவாக கையெழுத்து போட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்து போடவில்லை.
அந்த தீர்மானத்தை ஆதரிக்கும் துணிச்சல் கூட அ.தி.மு.க.வுக்கு இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது.
இப்படிப்பட்ட அ.தி.மு.க.வை சில சிறுபான்மை அமைப்புகள் நம்புகிறார்கள். பாம்பு நிழலில் நிற்கும் தவளை போன்று தான் மக்கள் அ.தி.மு.க.வை பார்க்கிறார்கள்.
தி.மு.க.வை நீங்கள் நம்புவது தாய் மான் நிழலில் குட்டி இளைப்பாறுவது போன்றது. இது அன்பால் செய்கிற உதவி. தி.மு.க இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு இருக்கும். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கோவை தனியார் மண்டபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என கூறி வந்தனர். ஆனால் அது தி.மு.க.வின் கோட்டை என்பதை நடந்து முடிந்த தேர்தல் மூலம் நீங்கள் காட்டி உள்ளீர்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க தான் முதலில் தொடங்கியுள்ளது. அனைவரும் பூத்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
தி.மு.க.வின் திட்டங்கள் சென்று அடையாத வீடுகளே இல்லை. எனவே வாக்காளர்களை நேரில் சந்தித்து திட்டங்கள் குறித்து எடுத்துக் கூற வேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளை இப்போதே மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கோவி.செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.
- குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர்.
திருப்பூர் :
உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.
நள்ளிரவு 12 மணிக்கு மாட்டுத் தொழுவத்தின் தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட குடில் அலங்காரத்தில், குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தப்பட்டது. திருப்பூரில் புனித கேத்தரீன் சர்ச், புனித பவுல், ஏ.ஜி., ஆலயம், கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயம், அவிநாசி புனித தோமையார், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம்,பல்லடம் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சி.எஸ்.ஐ., புனித ஜான் ஆலயம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் அந்த ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டன.
மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, காங்கயம், வெள்ளக்கோவிலில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.உடுமலை நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சிஎஸ்ஐ. இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு இரண்டாம் ஆராதனை நடந்தது. இதேபோல பிற தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.மேலும் கிறிஸ்தவா்களின் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காங்கயம் நகரம் கரூா் சாலையில் உள்ள குறைகள் தீா்க்கும் குழந்தை மாதா அருள்தலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடந்தது. தொடா்ந்து குழந்தை இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் குழந்தை இயேசுவை குடிலில் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் கூட்டுத் திருப்பலி , சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா். நாட்டில் அமைதியும், அன்பும் நிலவ வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதேபோல காங்கயம் களிமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் வழிபாடு நடந்தது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் நண்பர்கள், உறவினர்கள், ஏழைகளுக்கு கேக் மற்றும் உணவுகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர்.
+2
- இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
- திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
இயேசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அற்புதராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேரலாயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
சரியாக 12 மணி வந்த உடன் கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார். பின்னர் தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றபட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.
கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
இன்றும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- நெல்லை மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்கள், சபைகள் உள்ளிட்டவை அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது.
- கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை ஜெபமானது காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
நெல்லை:
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.
இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக நாளை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அதன்படி நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்கள், சபைகள் உள்ளிட்டவை பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும், நாளை காலை மற்றும் மாலை சிறப்பு பிரார்த்தனையும் நடக்க இருக்கிறது. பாளை தெற்கு பஜார் சவேரியார் ஆலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு குறித்த குடில்கள் மற்றும் சொரூபங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
முருகன் குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை ஜெபமானது காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். பண்டிகையை ஒட்டி நெல்லை மாநகரப் பகுதியில் இன்று இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது
- வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது
சாயர்புரம்:
சாயர்புரத்தில் ஜி.யு. போப் சபை மன்றத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா போட்டிகள் சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது. இதில் சாயர்புரம் ஜி.யு.போப் சபை மன்றத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் ஆலய குழுக்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளை சாயர்புரம் சேகர குரு இஸ்ரேல் ராஜா துரை சிங் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார் .
குடில் போட்டியில் முதலிடம் பிடித்த இடையர் காடு குட் ஷெப்பர்ட் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் நர்சரி பள்ளிக்கு ரூ.7,500 ரொக்கப் பரிசும், 3-ம் இடம் பிடித்த சாயர்புரம் ஜி.யு போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும், மற்றும் 3 அணிகளுக்கும் பரிசு கோப்பைகளும் வழங்கபட்டது.
அதேபோல் கிறிஸ்தவ பாடல் போட்டியில் முதலிடம் பிடித்த ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் சபை பாடல் குழுவினர் அணிக்கு ரூ.7,500 ரொக்கம், 3-வது இடம் பிடித்த சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் பணமும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு லே செயலர் நீகர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். உப தலைவர் தமிழ் செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மோகன் ராஜ் அருமை நாயகம்,போப் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் பிரேம் குமார் ராஜா சிங்,போப் சபை மன்ற தலைவர் அகஸ்டின் கோயில் ராஜ், ரட்சன்யபுரம் சேகர தலைவர் பாக்கியராஜ், சாயர்புரம் சபை ஊழியர் சாமுவேல் பொன்சிங்,விழா குழு உறுப்பினர்கள் ராஜேஷ் ரவி சந்தர், அலெக்சாண்டர், அபிஷேகம், ராஜதுரை ஏசுவடியான்,ஆன்ட்ரு அதிசயராஜ், ஜான்சன் பொன்சிங் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவி கள், சபை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.
- 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
கொடைக்கானல்:
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் மதுபான வகைகளை கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம்.
அதனடிப்படையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கிறிஸ்துமஸ் பழம், அத்திப்பழம் உள்ளிட்ட 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இந்த கலவை 30 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மேலும் சில மாவு சேர்த்து 80 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர். இந்த கேக்குகள் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக பாடல்கள் பாடி உற்சாகம் அடைந்தனர்.
கேக் தயாரிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு வகை உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் காட்சிபடுத்தப்பட்டு அவை ஒவ்வொன்றின் தனித்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சமையல் கலைஞர்கள் மட்டுமின்றி இதில் பங்கேற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் இதேபோன்ற கேக்கை தயாரிக்க முடியும் என்றும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “கிறிஸ்துமஸ்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
இரக்கத்தின் மறுஉருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்த இயேசு பிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, ‘‘உங்கள் பகைவர்களை நேசியுங்கள்’’, ‘‘உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்”, ‘‘உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, ‘‘உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்”, போன்ற அருளுரைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும்.

இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Christmas #EdappadiPalaniswami