என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர்.
    • அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந்த பல வருடங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இதனால் இப்பகுதியில் திருவிழாக்கள் நடத்த 10 வருடங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திருவிழாக்கள் நடத்தப்பட்டன.

    இந்நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர்கள் இங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு மண்டு கோவில் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி கேட்டு இருந்தனர். அதன்படி இன்று கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது. பொதுவான இந்த இடத்தில் வழிபாடு நடத்தினால் பின்னர் இந்த இடம் அவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விடும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் வரவே ஏ.டி.எஸ்.பி. தெய்வம், ரூரல் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. மேலும் ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதனால் கோர்ட்டு அனுமதித்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்றும், யாரும் இப்பகுதியில் அமைதியை குலைக்கும் வகையில் பிரச்சனை செய்யக்கூடாது என தெரிவித்து 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்படுவதாக தாசில்தார் முத்துமுருகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    2 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அது வரை அமைதி காக்க வேண்டும் எனவும் தாசில்தார் முத்துமுருகன் தெரிவித்துள்ளார்.

    • காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
    • பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது.

    கொடைக்கானலில் கடும் குளிருடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நேற்று வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான தூண்பாறை, மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்ற போதும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி இன்று 2-வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

    மற்ற சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி ஆகியவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சக்கம்பட்டியை சேர்ந்த மணி (வயது60) என்பவர் நடந்து சென்றபோது தவறி கால்வாயில் விழுந்து பலியானார். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதே போல் வருசநாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் அனுமதிக்கப்பட்ட போதும் குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

    • புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
    • டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

    SIR பணிகளுக்கு காலக்கெடுவை தேர்தல் ஆணையம் நீடிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர் கூறியதாவது:-

    SIR பணிகளுக்கு தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை.

    புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.

    அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக அணிகள் இணைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

    டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

    அரசியலில் இருந்து தன்னை யாரும் தனிமைப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
    • சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாரல் மழை தொடங்கியுள்ள நிலையில் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பழனி மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாலை 4.30 மணி முதல் சுடச்சுட சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடும் குளிருடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் சுக்கு காபி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காபி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு சேர்த்து சுக்கு காபி தயாரிக்கப்படுகிறது.

    சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    • திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
    • பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    பழனி:

    தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் கட்டுப்பாட்டின் கீழ் 49 உப கோவில்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவில் ஆகும். 3-ம் படை வீடாக அறியப்படும் இந்த கோவிலில்தான் பங்குனிஉத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களுக்கு கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பழனி மலைக்கோவிலுக்கு வரும் ஏராளமான கேரள பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலுக்கு வந்தபின்னரே மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.

    மேலும் உள்ளூர் பக்தர்களும் அதிக அளவு இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். இங்கு மூலவராக குழந்தை வேலாயுத சுவாமி உள்ளார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.

    இங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனால் சுவாமி சிலைகள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு பக்தர்களால் கொண்டு வரப்படும் பால் உணவு பாதுகாப்புத்துறையின் தரச்சான்றான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரக்குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் திருஆவினன்குடி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    • மது போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் சேரில் அமர்ந்தபடியும் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருந்தார்.
    • பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று நடைபெற்ற அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று மாலை கொடைரோடு வழியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து தரைவழி மார்க்கமாக வாடிப்பட்டி வழியே கொடைரோடு பயணியர் விடுதிக்கு வந்தடைந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் சரவணன் மற்றும் எஸ்.பி. பிரதீப் ஆகியோர் கவர்னர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதன் பின் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் சென்றார். இந்நிலையில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பாதுகாப்பு பணியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நிலக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட விளாம்பட்டியைச் சேர்ந்த அபிமன்யு என்ற போலீஸ்காரர் சீருடையில் மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

    பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை கவனித்த அருகில் இருந்த மற்ற போலீசார் அவரை கைத் தாங்கலாக அழைத்து சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு வாகனத்தின் மறைவில் சேர் போட்டு அமர வைத்தனர். மது போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் சேரில் அமர்ந்தபடியும் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருந்தார். இதனை அந்த வழியில் சென்ற பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    கவர்னர் வருகையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் காலை முதலே மது போதையில் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள்.
    • யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 54-ம் ஆண்டு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    4½ ஆண்டுகள் மக்களைப்பற்றி கவலைப்படாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என மனுக்களைப் பெற்று வருகிறார். தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து விட்டு மக்களை ஏமாற்றினர். ரூ.1000 கொடுத்து விட்டு ரூ.5000 வரை மக்களிடம் இருந்து பறிக்கின்றனர். டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர்கள் வெளியே சென்று விட்டதால் அ.தி.மு.க. அழிந்து விட்டதாக பேசுகின்றனர். அ.தி.மு.க.வை அழிக்க யாராலும் இயலாது. தன்னை வளர்த்த இயக்கத்தை மறந்து விட்டு செங்கோட்டையன் எதிர் முகாமிற்கு சென்றுள்ளார்.

    தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் அவர் சிக்கிக்கொண்டார். முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள். யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சகிகலா உதவியாளராக இருந்தார். டி.டி.வி.தினகரன் போன்ற அவரது குடும்பத்தினர் ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தனர். அந்த சொத்துக்களை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதனை மத்திய அரசு கண்டு பிடித்துள்ளது. விரைவில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதியப்படுவது உறுதி.

    சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் யாரை ஒருங்கிணைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் சரண் அடைந்து விட்டனர். இவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி ஊரை ஏமாற்றுகின்றனர். இவர்கள் 4 பேருடன் வேறு யாராவது ஒன்று இரண்டு பேர் இருந்தால் அவர்களும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுவார்கள்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் அ.தி.மு.க.பற்றி தவறான கருத்துகளை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பரப்பி வருகின்றனர். தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் சேரும். வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் என்று பேசினார். 

    • வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் போலி மருத்துவர்கள் நடமாடி வருகின்றனர்.
    • கிராமப்புறத்தை சேர்ந்த மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 24ம் தேதி உடல் நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும், உள்ளூரிலேயே கருக்கலைப்பு செய்ய முயன்றதும், அதனால் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மாணவிக்கு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அதனால் கர்ப்பமடைந்ததாகவும், இதனை அவர் வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் மறைக்க முடியாது என்பதால் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் மாணவிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் போலி மருத்துவர்கள் நடமாடி வருகின்றனர். இவர்கள் இதுபோன்ற கருக்கலைப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறத்தை சேர்ந்த மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எனவே மாணவிக்கு கருக்கலைப்பு செய்த நபர்கள் யார் என்பது குறித்தும், இதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மற்றும் அவருடன் பழகிய வாலிபர் குறித்தும் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை.
    • லெட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு,

    திண்டுக்கல்:

    லெட்சுமணம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (22ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை லெட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
    • அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, உகார்த்தேநகர், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், கவிதியாகராஜர் சாலை, பஸ் நிலையம், லாஸ்காட் சாலை, கல்லுக்குழி உள்ளிட்ட பகுதிகள், வத்தலக்குண்டு-பழனி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் பகலா, இரவா என்று தெரியாத அளவுக்கு சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.

    பல இடங்களில் எதிரே வருபவர்கள்கூட தெரியாத நிலை காணப்படுவதால் கடைகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகளை எரியவிட்டு வருகின்றனர். அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரமின்றி கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் இன்றும் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் மாணவ-மாணவிகள் சென்றனர்.

    தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின் கம்பங்கள், வயர்கள் சாய்ந்து விழுவதும் நடந்து வருகிறது. இதனால் வாகன தடை ஏற்பட்டுள்ளதுடன் மின் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத்து றையினர் பார்வையிட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை பொதுமக்களே அகற்றி வருகின்றனர். மழை இன்னும் தீவிரமடையாத நிலையில் தற்போதே கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    • முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
    • போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கரூரில் கடந்த கடந்த மாதம் இறுதியில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் குறித்து சில கருத்துக்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டியை சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளரான நிர்மல்குமார் (வயது 35). இவர், முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது.

    இதைத்தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் கடந்த 12ஆம் தேதி (நேற்றுமுன்தினம்) வழக்குப்பதிவு செய்து, நிர்மல்குமாரை கைது செய்தனர். த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டு பல மணி நேரமாகியும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருவதாக அக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என த.வெ.க.வினர் கோஷமிட்டனர். காவல்துறையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட த.வெ.க.வினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து ஜே3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட திண்டுக்கல் தெற்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல்குமாருக்கு வரும் 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கியது.

    • இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் மருமகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார்.

    இவர் பால் கறக்கும் தொழிலுக்கு செல்லும் போது வீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் சேர்ந்த சந்திரன் (49) என்பவரின் மகளான ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆர்த்தி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர்கள் காதல் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    குறிப்பாக ஆர்த்தியின் தந்தை சந்திரன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என அச்சமடைந்த காதலர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் குடும்பத்தினர் சம்மத்துடன் காதல் தம்பதி ராமநாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகு ஆர்த்தியின் குடும்பத்தினர் அவ்வப்போது ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் பேசி வந்த போதிலும் மாமனார் சந்திரன் பேசாமல் இருந்து வந்தார். மேலும் மாப்பிள்ளை வீட்டாருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனிடையே திருமணம் முடிந்து தலைதீபாவளியை கொண்டாட காதல் தம்பதியினர் தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ராமச்சந்திரன் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிப்பட்டிக்கு பால் கறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக ராமச்சந்திரன் வந்தபோது அங்கு ஏற்கனவே நின்று கொண்டு இருந்த மாமனார் சந்திரன் அவரை வழிமறித்து தகராறு செய்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டினார். இதனை எதிர்பார்க்காத ராமச்சந்திரன் பைக்கை விட்டு இறங்கி ஓட முயன்றார். இருந்தபோது துரத்திச் சென்று வெட்டியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பின்னர் சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சந்திரனை வலை வீசி தேடிய நிலையில் அவர் உறவினர் வீட்டில் இருந்தது தெரிய வரவே அங்கு சென்று கைது செய்தனர்.

    வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததால் மருமகனையே மாமனார் வெட்டிக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தலை தீபாவளியை கொண்டாட ஆவலுடன் காத்திருந்த ஆர்த்தி தனது காதல் கணவர் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×