search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • ஆத்திரமடைந்த அங்குச்சாமி குடிபோதையில் அகரமுத்துவை குத்தி கொலை செய்தார்.
    • அகரமுத்து உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே உள்ள கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அகரமுத்து (வயது 38). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொறுப்பாளரான இவர் பழனி சாலையில் உள்ள மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் அங்குச்சாமி (35). கார் டிரைவரான இவருக்கும், அகரமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் இவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அங்குச்சாமி குடிபோதையில் அகரமுத்துவை குத்தி கொலை செய்தார். இதை தடுக்க வந்த அவரது அண்ணன் ஜெய்கணேசுக்கும் காயம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அகரமுத்து உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை தொடர்பாக அங்குச்சாமி மற்றும் முத்தழகுபட்டியை சேர்ந்த செல்வம் மகன் ஷியாம் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற போலீசார் அங்குச்சாமியை அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரின் பிடியிலிருந்து தப்ப முயன்றதால் அங்குச்சாமி தவறி விழுந்தார். இதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மாவுக்கட்டுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ஒருவழியாக தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் முத்துராஜ் (வயது 50) என்பவர் இரும்பு பீரோ, கட்டில் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி பீரோ கம்பெனிக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பீரோ கம்பெனியில் இன்று காலை பெயிண்ட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து கரும்புகை வெளி வந்தது. இதனை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. பொதுமக்கள் கம்பெனியில் தீப்பற்றி எரிவதை பார்த்து தங்கள் வீடுகளுக்கும் தீ பரவி விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிந்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ஒருவழியாக தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    இருந்த போதும் கம்பெனியில் இருந்த பெயிண்ட், பீரோ, கட்டில், தளவாட பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பொங்கல் தொடர் விடுமுறையை கொண்டாட கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வழக்கமாக வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருவார்கள். தமிழகம் முழுதும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இதமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. பகலில் மேகமூட்டமும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த இதமான சூழலையும் குளிர்ந்த சீதோஷ்ணத்தையும் ரசித்தபடி வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர்.

    பழனி சாலையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் பழனி அடிவாரப் பகுதியில் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசல் குறைந்துள்ளது. எனவே இதே நடைமுறையை தொடர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பஸ்கள் அனுமதிக்கப்படாத நிலையிலும் வாகன நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது ஓட்டல் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதும், கூடுதல் விலை வசூலிக்கப்படுவதும் நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா வரும் பலர் அவ்வப்போது பாதிக்கப்பட்டு செல்கின்றனர். எனவே இதனையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • குறிஞ்சி மலர்களில் 255-க்கும் மேற்பட்டவை உலகம் முழுவதும் உள்ளது.
    • நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி பூக்கள் பூக்கும். மேலும் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறுகுறிஞ்சி என 20-க்கும் மேற்பட்ட குறிஞ்சி இனங்கள் உள்ளன. இந்த குறிஞ்சியின் பெயரில் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலும் உள்ளது. இதில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த குறிஞ்சி மலர்கள் கடல் மட்டத்தில் இருந்து 1200 முதல் 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரும் தன்மை உடையவை.

    இந்நிலையில் ஆண்டுதோறும் பூக்கும் ஸ்ட்ரோ பிலாந்தஸ் கார்டி போலீயோ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பூக்கும் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களிலான குறிஞ்சி மலர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது. இந்த அபூர்வ மலர் பூத்திருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    குறிஞ்சி மலர்களில் 255-க்கும் மேற்பட்டவை உலகம் முழுவதும் உள்ளது. அதில் தற்போது வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் மலைப்பகுதி முழுவதும் பூத்துக் குலுங்குகின்றன. நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர். ஆனால் நீல குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். தற்போது பூத்துள்ள மலர்கள் அந்த வகையை சேர்ந்தது இல்லை என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    மதுரை மீனாட்சிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த அழகர் மகன் கேசவன் (17), வடிவேலன் தெருவைச் சேர்ந்த அடைக்கலராஜா (27) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூர் அருகே அவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழைய கன்னிவாடி கரிசல்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (21) என்பவர் தனது அத்தை மகளான துர்கா என்பவருக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை காரில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டு இருந்தார்.

    திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அடைக்கலராஜா மற்றும் கேசவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வரவே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான கேசவனின் தந்தை அழகரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சபாத் என்னும் சிறப்பு வழிபாடு வார வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.
    • காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்பநிலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இங்குள்ள வட்டகானல் பகுதியில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இஸ்ரேலிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருவார்கள்.

    இங்கு நிலவும் இதமான கால நிலையை ரசிக்கவும், ஓய்வெடுக்கவும் வருகை புரியும் இவர்கள் மொத்தமாக கூடி சபாத் என்னும் சிறப்பு வழிபாடு வார வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.

    இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கு வார வழிபாட்டில் கூடும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளை தாக்க திட்டமிட்டிருந்ததும், மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் இருந்தாலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாக இஸ்ரேலில் போர் நடைபெற்றதால் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. தற்போது கொடைக்கானல் வட்ட கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    ஆனால் வழக்கமாக இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

    இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு போலீசார் சோதனைச் சாவடி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர்.
    • தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.

    இதனால் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி பழனி கோவில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டது.

    இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவி மின் பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    நேரடியாகவும், தபால் மூலமாகவும் கோவில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி ஜனவரி 8-ந் தேதி என அறிவிக்கப்பட்டது.

    இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். நேற்று மாலை வரை சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் இந்த பணியிடங்களுக்காக வரப்பட்டதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் அரசு வேலை கனவில் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் அளித்தனர்.

    விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு எந்த தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட உள்ளது. வெளிப்படையான முறையில் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.

    திண்டுக்கல்:

    மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மதுரை-திண்டுக்கல் வழியாக தினசரி இயக்கப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை, குருவாயூர்-சென்னை, கோவை-நாகர்கோவில், நாகர்கோவில்-கோவை, நாகர்கோவில்-மும்பை தாதர், நாகர்கோவில்-திருப்பதி ஆகிய ரெயில்கள் மதுரைக்கு வராமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.

    இதேபோல் நாளை கன்னியாகுமரி-ஹவுரா, கன்னியாகுமரி-கச்சக்குடா, சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் ஆகியவையும் நாளை மறுநாள் திருச்செந்தூர்-மணியாட்சி மற்றும் நாகர்கோவில்-எக்மோர் ரெயில்களும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.
    • சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த மாதம் முதல் கடுமையான பனி நிலவி வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் 7 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை சென்றதால் பல்வேறு இடங்களில் உறைபனி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு 62-வது மலர் கண்காட்சிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதற்கட்ட மலர் செடிகள் நடவு நடைபெற்றது.

    தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் சால்வியா, பிங்க் ஆஸ்டர், ஒயிட் ஆஸ்டர், டெல்பினியம், லில்லியம் உள்ளிட்ட 10 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

    கடந்த சில நாட்களாக மனிதர்களை மட்டுமின்றி மலர் செடிகளையும் பனி கடுமையாக பாதித்து வருகிறது. மதியம் 3 மணிக்கு மேல் தொடங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 10 மணிவரை நீடிக்கிறது.

    இதனால் மலர் நாற்றுகள் கருகுவதை தவிர்க்க பூங்கா நிர்வாகம் சார்பில் செடிகளுக்கு நிழல்வலை அமைப்பு கொண்ட பனிப்போர்வை போர்த்தப்பட்டுள்ளது. பனிக்காலம் முடியும் வரை இந்த போர்வை இருக்கும் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடுமையான பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் கொடைக்கானலில் வார நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.

    • தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.
    • கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது.

    கூடலூர்:

    கூடலூர் அருகே ஒரு வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்குட்டு வேலவன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு வீட்டில் இருந்து அதிக நபர்கள் வந்த வண்ணம் இருந்ததால் 2வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது 55) என்பவரது வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது ராஜா தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜாவை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக குடத்தில் வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடலூர் அருகில் உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    தற்போது மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது. இதனிடையே சாராயம் விற்பனையும் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அடிவாரம், பஸ்நிலையம், கிரிவீதி, மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் கூடினர்.
    • மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இங்கு குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி கோவிலுக்கும் வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அடிவாரம், பஸ்நிலையம், கிரிவீதி, மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் கூடினர்.

    மேலும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்கள் வருகையால் அடிவார பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, காரைக்குடி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தற்போது பாதயாத்திரையாக பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். அவர்கள் கிரி வீதியில் உற்சாகமாக ஆடிப்பாடி காவடி எடுத்து மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இனி வரும் காலங்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலைகளில் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    • ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கொடைக்கானல்:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜஸ்வந்த்குமார் (வயது28). இவர் சகோதரி ஜெஸி (27), இவரது கணவர் திலிப் (29), இவர்களது உறவினர் மாலன் (22) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

    மூஞ்சிக்கல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டனர். அந்த உணவு பொருட்களில் துர்நாற்றம் வீசியதால் வேறு உணவு மாற்றி கொடுக்கும்படி ஜஸ்வந்த்குமார் தெரிவித்தார். ஆனால் கடை ஊழியர்கள் அதனை மாற்றித்தர மறுத்ததுடன் அவர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து உணவு பொருட்களை ஜஸ்வந்த்குமார் தனது செல்போனில் வீடியோவாக படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.

    படம் எடுத்த செல்போன்களை வாங்கி உடைத்ததுடன் சுற்றுலா பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயன்றபோது வழிவிடாமல் காரையும் அடித்து நொறுக்கினர். ஒரு வழியாக அவர்கள் 4 பேரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

    பின்னர் தங்களுக்கு நேர்ந்த விஷயம் குறித்து அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எவ்வாறு மதிப்பார்கள்? எனவே போலீசார் இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முயன்றபோது அங்கும் தங்களை தாக்க ஓட்டல் ஊழியர்கள் வந்ததால் நாங்கள் மதுரைக்கு செல்வதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் ஓட்டலில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஊழியர்களே சுற்றுலா பயணிகளை தாக்கியது உறுதியானது. மேலும் பெண் என்றும் பாராமல் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கியது தெரியவந்ததால் ஓட்டல் ஊழியர்களான முகமதுஅலி (32), தர்வீஸ் முகைதீன் (35), அர்சத் (27), அரவிந்த் (27), சர்தார் (34), ஆஷிப்ரகுமான் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    புகாருக்கு உள்ளான ஓட்டல் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. கேரள சுற்றுலா பயணிகளை இதேபோல் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக புகார் உள்ளது. மேலும் தரமற்ற உணவுகள் வழங்கி வருவதால் மற்ற ஓட்டல் நிறுவனங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால் இதன்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×