என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees"

    • இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.
    • சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.

     

    கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில், புனித நீராடிவிட்டு கடற்கரை மண்ணில் சிவலிங்கம் போன்று வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர்.

    பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள சாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வட மாநில பக்தர்கள் காசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை அபிஷேகத்திற்கு வழங்குவதற்காக தலையில் சுமந்து கொண்டு வந்தனர். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.

    சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும். 

    • நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.
    • சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக கடந்த 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது முதல் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் பெற்று வருகின்றனர்.

    13-ந்தேதி பொதுவேலை நிறுத்தம் காரணமாக கேரளாவில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.

    நேற்று சபரிமலையில் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டார் மகேஷ் மோகன் தலைமையில் படி பூஜையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். சபரிமலை வந்த பக்தர்களை பாதுகாப்பு போலீசார் ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்ய அனுப்பினர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். வருகிற 17-ந் தேதி வரை நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    • கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.
    • யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    கேரள மாநிலத்தில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும் யானைகளுக்கு மதம் பிடித்துவிடுவதால், சில நேரங்களில் பிரச்சனை ஆகி விடுகிறது.

    இதனால் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளின் படியே, கேரளாவில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கொச்சி அருகே கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, திடீரென பாகனை தள்ளிவிட்டு அதிவேகமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள திரிபுனித்து ராவில் பூர்ணத்ரயீசர் கோவில் இருக்கிறது. கேளர மாநிலத்தில் உள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு விஷ்ணு அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் உற்சவங்கள் மற்றும் பண்டிகைகள் மிகவும் பிரபலமானவை ஆகும். இதனால் அவற்றில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பூர்ணத்ரயீசர் யானைகளை விரும்பும் கடவுளாக கருதப்படுவதால், இந்த கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.

    இந்தநிலையில் பூர்ணத்ர யீசர் கோவில் திருவிழாவிற்காக கோட்டயத்தில் இருந்து சாமப்புழா உன்னி கிருஷ்ணன் என்ற யானை கொண்டு வரப்பட்டிருந்தது. கோவிலின் கருவறைக்கு முன்னால் உள்ள அத்தாழ சீவேலிக்கான கோபுர நுழைவு வாயிலின் அருகே அழைத்துவரப்பட்ட போது, அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்தது.

    இதையடுத்து அந்த யானை, தன் மீது அமர்ந்திருந்த இரண்டாவது பாகனை கீழே விழச்செய்துவிட்டு ஆக்ரோஷத்துடன் வேகமாக ஓடியது. அந்த யானை கோவில் வளாகத்தை சுற்றி வேகமாக ஓடியபடி இருந்தது. இதனை கோவிலில் இருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் கோவில் வளாகத்தில் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அந்த யானை கோவிலின் மேடைக்கு அருகே நின்றது. ஆனால் ஆக்ரோஷம் தனியாமல் தலையை வேகமாக அசைத்த படி நின்றது.

    இதையடுத்து கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கோவில் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    பல்லுருடடி அழகிய காவு கோவிலில் இருந்து யானை படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பிறகு யானையை சாந்தப்படுத்தி அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர். பின்பு அந்த யானை கோவிலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகே கோவிலில் ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    தை மாதம் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆங்காங்கே இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    • நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், வழிபாடு செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலை வாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. நாளை தைப்பூச திருவிழாவில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே, கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வருபம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலாவும் நடக்கிறது.

    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் அதிகரித்து காணப்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் நாளை நடைபெறும் மினி பிரமோற்சவம் எனும் ரத சப்தமியில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.

    காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் தரிசனத்திற்காக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் கடும் குளிர் வீசுவதால் வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 69,726 பேர் தரிசனம் செய்தனர். 27,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொங்கல் பண்டிகை, சங்கராந்தி தொடர் விடுமுறையால் கடந்த சில நாட்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

    அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 78,733 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,146 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான டீ , காபி, பால், உணவு, தண்ணீர் ஆகியவை தன்னார்வல்கள் மூலம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

    • நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவு அனைத்து நாட்களுக்கும் முடிந்துவிட்டதால், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மாலையணிந்து விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

    அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் போலீசாரும், கேரள தேவசம்போர்டும் இருப்பதால் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலையும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.

    அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்தே, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி, மலைப்பாதையான அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 978 பக்தர்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் ஸ்பாட் புக்கிங் மூலமாக 2,122 பக்தர்கள் வந்துள்ளனர்.

    நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    அதன்பிறகு மலைப் பாதைகளில் ஏறி சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தபடி இருக்கின்றனர்.

    • பக்தர்கள் வருகையால் வாகன நெருக்கடியால் சாலை இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் நகரத்திற்குள் இருந்து கோவிலுக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது.
    • தெருக்களில் பக்தர்கள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தியதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு வெளியே வர சிரமப்பட்டனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் மற்றும் ரெயில் மூலம் வந்து கோவிலில் குவிந்தனர்.

    தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதாலும், மார்கழி மாதம் என்பதாலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு காலசந்தி, 7.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.

    இன்று பிரதோஷம் என்பதால் மதியம் 2.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7.30 மணிக்கு ஏகாந்தம், 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கிறது.

    பக்தர்கள் வருகையால் வாகன நெருக்கடியால் சாலை இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் நகரத்திற்குள் இருந்து கோவிலுக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது.

    தெருக்களில் பக்தர்கள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தியதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு வெளியே வர சிரமப்பட்டனர்.

    பொதுவாக முக்கிய நாட்களில் பக்தர்கள் வாகனங்களை நகரப் பகுதியில் வராமல் ஊருக்கு வெளியே தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிற்க ஏற்பாடுகள் செய்து உள்ளூர் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
    • மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்காக இருக்கும். அதன்படி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அரையாண்டு விடுமுறை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனிக்கு வந்தனர். பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும் பழனி அடிவார பகுதியில் கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    கூட்டம் காரணமாக அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவில் செல்லவும், தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் படிப்பாதை வழியாக வரவும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதோடு கூட்டம் அலைகடலென இருந்ததால் பக்தர்கள் பகுதி, பகுதியாக அனுப்பப்பட்டனர்.

    மேலும் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி மட்டுமின்றி திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவிலிலும் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    புத்தாண்டை முன்னிட்டு பழனியில் தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், குளத்துரோடு, கிரிவீதிகள், சன்னதிவீதி, பூங்காரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பஸ் நிலையம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. அதேபோல் பழனியில் தரிசனம் முடித்த பின்பு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்நிலையத்தில் குவிந்ததால் அங்கும் கூட்டம் இருந்தது.

    • தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

    தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் மார்கழி மாதம் என்பதால் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து பாத யாத்திரையாக ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் இல்லாமல் ஆங்காங்கே சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், நகர் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. 

    • 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
    • கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு முருகனை வழிபடக் கூடிய உகந்த நாளான வளர்பிறை சஷ்டி மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 1 மணி முதல் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராட சுமார் 500 மீட்டர் தூரம் வரை காத்திருந்து புனித நீராடி வருகின்றனர்.

    மேலும் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த தரிசன வரிசையானது கோவில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மூத்த குடிமக்கள் வரிசையில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்து வருகின்றனர்.

    கோவில் வளாகத்தின் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்து வருகிறது. கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா போல காட்சியளித்தது. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும் புதிய வாகன நிற்கும் இடங்கள் இல்லாமல் ஆங்காங்கே சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், நகர் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ×