search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Temple"

    • பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
    • ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    பழனி:

    முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. 27ந் தேதியுடன் பங்குனிஉத்திர திருவிழா நிறைவு பெற்றது.

    திருவிழா நிறைவடைந்த நிலையிலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாக பங்குனி மாதம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள். தற்போது தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் பறவைக்கா வடியாக வந்தனர். வழக்கமாக இதுபோன்ற பறவை காவடியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே வரும் நிலையில் தற்போது பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கிரி வீதியை சுற்றி மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணியை சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலில் சாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. கடும் வெயிலை யும் பொருட்படுத்தாது பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரிப்பால் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    • ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
    • குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.

    கிரி வீதி வரை நடந்து பின்னர் பேட்டரி கார் மூலம் ரோப்கார் மையம் சென்றார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தங்க ரதம் இழுக்க பெயர் பதிவு செய்தார். அதில் வரிசை எண் 102ல் அவரது பெயரிலும், வரிசை எண் 103ல் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் தங்க ரதம் இழுக்க பணம் கட்டினார்.

    தங்க ரத நிலை 1-ல் இருந்து 2 வரை அவர் தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தார். அதன் பின்பு மூலவர் தண்டாயுதபாணியை மனமுருகி வழிபட்டார். மீண்டும் பாரத பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் தனது குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முன்னதாக நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், மதியம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.

    பழனி:

    பழனி கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது, கோவிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மார்ச் 8ம் தேதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன்படி பழனி கிரிவலப்பாதைக்கு வரும் 9 இணைப்புச்சாலைகளில் 8 சாலைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பாதையில் மட்டும் அடைப்பு ஏற்படுத்தாமல் தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கிரிவலப்பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. கோர்ட்டு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. கிரிவலப்பாதை வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சொடி காணப்பட்டது. 

    • கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களை குறிவைத்து அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் இருந்தன.

    இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக திருவிழா காலங்களில் பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களும், அலகு குத்திவரும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர். குறிப்பாக 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்ததால் அதனை அகற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கோவிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கிரிவலப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரிவலப்பாதையில் உள்ள 9 சந்திப்புகளில் 7 இடங்களில் தனியார் வாகனங்கள் நுழைவதை தடுக்க தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டது. கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கோர்ட்டு உத்தரவின் படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்காமல் கிரிவலப்பாதையை அடைக்கும் முயற்சியில் உறுதியாக இருந்தனர்.

    இதனால் இன்று அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில்,

    பக்தர்களின் வருகையால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. தற்போது பாதையை அடைத்து விட்டதால் எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய போதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நிலை குறித்து எடுத்தரைத்தும் அதனை பரிசீலனை செய்யவில்லை. இதனால் கருப்புக்கொடியுடன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

    எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை கண்டிப்பாக தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். இது தவிர ஆன்லைன் மூலமும் பணம் கட்டினால் வீடுகளுக்கே பஞ்சாமிர்தம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதலாக பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

    இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தம் தேக்கமடைந்தது. குறிப்பிட்ட நாளுக்கு மேல் பஞ்சாமிர்தத்தை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் தைப்பூசத் திருவிழாவுக்காக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தத்தை அழிக்க உணவு பாதுகாப்புத்துறையினர் உத்தரவிட்டனர்.

    அதன்படி ரூ.40க்கு விற்பனைக்காக வைத்திருந்த பஞ்சாமிர்த டின்கள் 55 ஆயிரம் டப்பாக்கள் கொட்டி அழிக்க முடிவு செய்யப்பட்டது. கள்ளிமந்தயத்தில் பழனி கோவிலுக்கு உட்பட்ட கோசாலை செயல்பட்டு வருகிறது.

    அந்த கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன. கடந்த வாரம் கோவில் பிரசாதம் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரசாத மாதிரிகள் மற்றும் பஞ்சாமிர்தத்தை ஆய்வுக்கு எடுத்துச் சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    • பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
    • பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி:

    மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் கோவையில் 105வது பட்டாலியனில் அதிவிரைவுப்படையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த படையினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    பழனி போலீசாரிடம் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து பழனி சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்ற அதி விரைவுப்படையினர் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்தும் அதில் கைதான குற்றவாளிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    வழக்கமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிவிரைவுப்படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
    • பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலம், எடப்பாடி, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதராஜகுல காவடிக்குழுவைச் சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தருவார்கள்.

    தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர் வருகை தரும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி இருந்து தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். இவர்களில் அன்னதானக்குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் உள்ளனர்.

    இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்வதற்கு 1 நாள் முன்னதாகவே பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.


    இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக அவர்கள் பழனி சண்முக நதி பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது சண்முக நதியில் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுடன் பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.

    அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரிச்சம்பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவைகளை கொண்டு ராட்சத அண்டாக்களில் கலந்து சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்த பின்னர் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அதனை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்து பின்னர் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்து செல்வார்கள். மலைக்கோவிலில் மலர்களால் கோலமிடும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    • இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.
    • இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் பழனியில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின்படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.

    தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது.

    இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது.

    எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உபகோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் ஏற்கனவே நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி விரிவான வாதம் செய்தனர். பின்னர் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோவிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்றும், இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும்,

    மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும் என்றும், அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாதம் "உறுதிமொழி" எழுதிக்கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, இந்து அறநிலையத்துறை ஆணையர் கோவிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

    • கூடுதல் நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரெயிலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
    • பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாமிர்த டின்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக 3 மின் இழுவை ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த மின் இழுவை ரெயிலின் பயணம் நேரம் 8 நிமிடம் ஆகும்.

    இந்த மின் இழுவை ரெயிலில் பயணிக்க சிறப்புக் கட்டணம் ரூ.25ம், ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஒருமுறைக்கு தற்போது 32 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் பக்தர்கள் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் கூடுதல் நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரெயிலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் புதிய மின் இழுவை ரெயிலில் நன்கொடையாளர் மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் டி.வி, குளிர்சாதன வசதிகளுடன் 72 பேர் பயணிக்கக் கூடிய வகையிலான நவீனமயமாக்கப்பட்ட மின் இழுவை ரெயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து புதிய மின் இழுவை ரெயில் செல்வதற்கு வசதியாக நிலைய நடைமேடைகளில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இழுக்கும் எந்திரத்தில் அதிக திறன் வாய்ந்த ஷாப்ட் எந்திரம் பொருத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாமிர்த டின்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    2 முறை ஐ.ஐ.டி. குழுவினர் இந்த சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்தனர். இக்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. புதிய நவீன மின் இழுவை ரெயிலை அமைச்சர் அர.சக்கரபாணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், சுப்ரமணி, மணிமாறன், ராஜசேகரன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு 3வது மின் இழுவை ரெயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும்.
    • தைப்பூசத்திருவிழா களைகட்டி வரும் நிலையில் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

    இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து முருகபெருமானை தரிசனம் செய்வதுதான். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புன்னியாகவாஜனம், முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    அதன்பின் காலை 7.30 மணிக்கு கொடிபூஜை, வாத்தியபூஜை நடைபெற்றது. கொடி படம் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் உட்பிரகாரத்தில் கொண்டுவரப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.

    திருவிழாவில் இன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் உள்ள விநாயகர், மூலவர், சண்முகர், உச்சவர், துவார பாலகர்கள் மற்றும் வாகனங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும். மேலும் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டு கிடா, காமதேனு, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24ந் தேதியும், தேரோட்டம் 25ந் தேதியும் நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் சார்பில் சிறப்பாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்திருவிழா களைகட்டி வரும் நிலையில் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.
    • பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மூலம் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பழனி கோவிலில் நாள் தோறும் அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், பாயாசம் ஆகியவற்றுடன் வழங்கப்படும் அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.

    பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கியூ.ஆர்.கோடு வசதி உள்ள நிலையில் பழனி கோவிலிலும் இது போன்ற வசதி தொடங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


    ஏனெனில் ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்றவற்றில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் குறைந்து கியூ.ஆர். கோடு வசதி மூலமே பணம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் குறைந்த அளவு பணம் கொண்டு வரும் சமயத்தில் அன்னதானம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்கொடை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழனி மலைக்கோவிலில் கியூ.ஆர்.கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலின் பல்வேறு இடங்களில் இது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் ரோப் கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கியூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான மக்கள் இறைவழிபாட்டுடன் புத்தாண்டை தொடங்குவது வழக்கம். அதன்படி அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

    புத்தாண்டை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கால சந்தி, சிறுகாலசந்தி, விழா பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப் பெருமான் அருள்பாலித்தார்.

    புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். அவர்கள் அதிகாலையில் படிப்பாதை, யானைப்பாதை வழியாக கொட்டும் பனியிலும் நடந்து சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    கடந்த சில நாட்களாகவே பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாட்டு பாடியும் குழுவாக வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவில், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமியம்மன், வெள்ளை விநாயகர், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

    ×