search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Temple"

    • அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
    • நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அதில் தடுப்புகள் ஊன்றப்பட்டு வாகனங்கள் வர முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சன்னதி வீதி, அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

    சாலையோர கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அகற்றப்பட்டதால் தங்களுக்கு வருவாய் குறைந்து விட்டது. கிரி வீதி வழியாக வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் அதன் முலம் கிடைக்கும் வருவாயும் நின்று விட்டது என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக தெரிவித்தனர்.

    தேவஸ்தான நிர்வாகம் நேரடியாக நகராட்சி உரிமைகளில் தலையிடுவதால் அதனை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தேவஸ்தான அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

    மேலும் நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல் தேவதஸ்தானம் செயல்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோவில் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்தர்கள் வருகையால் அடிவாரம், மலைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது.
    • அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளி நாடுகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இன்று விடுமுறை தினம் மற்றும் வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால் பழனியில் கூட்டம் அலைமோதியது.

    அடிவாரம் பகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் விஷேசங்கள் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். முகூர்த்த நாட்கள் மற்றும் விஷேச தினங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். தாராபுரம் மணக்கடவு வீரக்குமார் சுவாமி கோவில் காளையை அலங்கரித்து கிரிவீதியில் வலம் வர செய்தனர். பக்தர்கள் வருகையால் அடிவாரம், மலைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது. மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று பழனியில் கனமழை பெய்த நிலையில் இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்த போதும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வேல், சேவல், மயில் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. அப்போது வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர்.


    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி ரத வீதிகளில் தங்க மயில், தந்த பல்லக்கு, காமதேனு, ஆட்டுக்கிடா, சப்பரம், வெள்ளியானை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் வருகிற 21ந் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது. அன்று காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் தேரேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

    10 நாட்களும் பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நடனம், கிராமிய பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

    • படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவையாகும்.

    இதில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால் அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

    மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலில் மேட் விரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்ததால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எளிதாக இருந்தது. மேலும் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    • பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் மே 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மறு நாள் 22-ந் தேதி வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதனிடையே பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அக்னி நட்சத்திரக்கழு சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களுமு கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்கள் பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர கழு வருகிற 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கிரிவலம் வரும் இந்நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
    • ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    பழனி:

    முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. 27ந் தேதியுடன் பங்குனிஉத்திர திருவிழா நிறைவு பெற்றது.

    திருவிழா நிறைவடைந்த நிலையிலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாக பங்குனி மாதம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள். தற்போது தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் பறவைக்கா வடியாக வந்தனர். வழக்கமாக இதுபோன்ற பறவை காவடியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே வரும் நிலையில் தற்போது பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கிரி வீதியை சுற்றி மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணியை சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலில் சாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. கடும் வெயிலை யும் பொருட்படுத்தாது பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரிப்பால் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    • ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
    • குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.

    கிரி வீதி வரை நடந்து பின்னர் பேட்டரி கார் மூலம் ரோப்கார் மையம் சென்றார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தங்க ரதம் இழுக்க பெயர் பதிவு செய்தார். அதில் வரிசை எண் 102ல் அவரது பெயரிலும், வரிசை எண் 103ல் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் தங்க ரதம் இழுக்க பணம் கட்டினார்.

    தங்க ரத நிலை 1-ல் இருந்து 2 வரை அவர் தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தார். அதன் பின்பு மூலவர் தண்டாயுதபாணியை மனமுருகி வழிபட்டார். மீண்டும் பாரத பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் தனது குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முன்னதாக நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், மதியம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.

    பழனி:

    பழனி கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது, கோவிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மார்ச் 8ம் தேதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன்படி பழனி கிரிவலப்பாதைக்கு வரும் 9 இணைப்புச்சாலைகளில் 8 சாலைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பாதையில் மட்டும் அடைப்பு ஏற்படுத்தாமல் தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கிரிவலப்பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. கோர்ட்டு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. கிரிவலப்பாதை வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சொடி காணப்பட்டது. 

    • கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களை குறிவைத்து அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் இருந்தன.

    இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக திருவிழா காலங்களில் பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களும், அலகு குத்திவரும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர். குறிப்பாக 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்ததால் அதனை அகற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கோவிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கிரிவலப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரிவலப்பாதையில் உள்ள 9 சந்திப்புகளில் 7 இடங்களில் தனியார் வாகனங்கள் நுழைவதை தடுக்க தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டது. கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கோர்ட்டு உத்தரவின் படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்காமல் கிரிவலப்பாதையை அடைக்கும் முயற்சியில் உறுதியாக இருந்தனர்.

    இதனால் இன்று அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில்,

    பக்தர்களின் வருகையால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. தற்போது பாதையை அடைத்து விட்டதால் எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய போதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நிலை குறித்து எடுத்தரைத்தும் அதனை பரிசீலனை செய்யவில்லை. இதனால் கருப்புக்கொடியுடன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

    எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை கண்டிப்பாக தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். இது தவிர ஆன்லைன் மூலமும் பணம் கட்டினால் வீடுகளுக்கே பஞ்சாமிர்தம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதலாக பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

    இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தம் தேக்கமடைந்தது. குறிப்பிட்ட நாளுக்கு மேல் பஞ்சாமிர்தத்தை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் தைப்பூசத் திருவிழாவுக்காக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தத்தை அழிக்க உணவு பாதுகாப்புத்துறையினர் உத்தரவிட்டனர்.

    அதன்படி ரூ.40க்கு விற்பனைக்காக வைத்திருந்த பஞ்சாமிர்த டின்கள் 55 ஆயிரம் டப்பாக்கள் கொட்டி அழிக்க முடிவு செய்யப்பட்டது. கள்ளிமந்தயத்தில் பழனி கோவிலுக்கு உட்பட்ட கோசாலை செயல்பட்டு வருகிறது.

    அந்த கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன. கடந்த வாரம் கோவில் பிரசாதம் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரசாத மாதிரிகள் மற்றும் பஞ்சாமிர்தத்தை ஆய்வுக்கு எடுத்துச் சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    • பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
    • பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி:

    மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் கோவையில் 105வது பட்டாலியனில் அதிவிரைவுப்படையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த படையினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    பழனி போலீசாரிடம் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து பழனி சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்ற அதி விரைவுப்படையினர் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்தும் அதில் கைதான குற்றவாளிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    வழக்கமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிவிரைவுப்படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
    • பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலம், எடப்பாடி, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதராஜகுல காவடிக்குழுவைச் சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தருவார்கள்.

    தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர் வருகை தரும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி இருந்து தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். இவர்களில் அன்னதானக்குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் உள்ளனர்.

    இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்வதற்கு 1 நாள் முன்னதாகவே பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.


    இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக அவர்கள் பழனி சண்முக நதி பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது சண்முக நதியில் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுடன் பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.

    அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரிச்சம்பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவைகளை கொண்டு ராட்சத அண்டாக்களில் கலந்து சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்த பின்னர் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அதனை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்து பின்னர் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்து செல்வார்கள். மலைக்கோவிலில் மலர்களால் கோலமிடும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ×