search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lunar eclipse"

    • 2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது.
    • செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது.

    இந்தூர்:

    சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகணங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை எதையும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

    நடப்பு ஆண்டு கிரகணங்கள் நிகழ்வு குறித்து உஜ்ஜைன் நகரில் உள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது:-

    2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.

    அதனை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க இயலாது.

    அதேபோல் செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணமும் இந்தியாவில் காணப்படாது.

    அக்டோபர் 2 மற்றும் 3-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் புலப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் 2.23 மணி வரை நீடித்தது. இதையொட்டி பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் நேற்று இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெற்றது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் தென்பட்டது.

    மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜை செய்யப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதேபோல் அபிராமி அம்மன் கோவில், தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களும் பரிகார பூஜைக்குப் பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    • பகுதி நேர சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது.
    • இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்.

    புதுடெல்லி:

    சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 14-ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது இந்தியாவில் தெரியவில்லை. பொதுவாக சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணம் ஏற்படுவதுண்டு.

    இந்நிலையில், இன்று பகுதி நேர சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.24 மணி வரை ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடித்தது.

    இந்த கிரகணம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தென்பட்டது. இந்தியாவைத் தவிர ஆசியாவின் பிற பகுதிகள், ரஷியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளிலும் கிரகணம் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்குமுன் கடந்த மே 5-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

    இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை நிகழ்கிறது.
    • நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சந்திர கிரகணத்தை காண அதிநவீன தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    2023-ம் ஆண்டிற்கான பகுதி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை நிகழ்கிறது. அந்த நிகழ்வை காண்பதற்காக நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அதிநவீன தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம். குமார் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய கல்வி அதிகாரி மாரி லெனின் செய்திருந்தார். நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவி கள் அழைத்து வரப்பட்டு பார்வையிட்டனர். ராயகிரி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாணவர்கள் வந்து தொலைநோக்கியை பார்வையிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தெரியும்.
    • சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து.

    சந்திர கிரகணம் நாளை (28-ந்தேதி) இரவு நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தெரியும். இந்த சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து இருப்பதாக ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    சந்திர கிரகணம் நாளை (சனிக்கிழமை) இரவு 1.05 மணிக்கு தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின் மத்திய காலம் இரவு 1.44 மணி ஆகும். இரவு 2.23 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 1 மணி 18 நிமிடங்கள் நீடிக்கிறது.

    இந்த சந்திர கிரகணத்துக்கான தோஷ கிழமை சனி ஆகும். எனவே சனிக்கிழமை பிறந்தவர்கள் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கிரகணத்தால் அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோஷம் உள்ளது.

    மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஆபத்து ஏற்படும். இவர்கள் தோஷ நிவர்த்திக்காக பரிகாரம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம் நிகழும் போது இவர்கள் தோஷ நிவர்த்தி மந்திரத்தை உச்சரிக்கலாம்.

    `இந்த்ரோ அநலோ யமோ ரிக்ஷோ வருணோ

    வாயு ரேவச குபேர ஈசோக்நந்து இந்து

    உபராக உத்தவ்யதாம் மம றீறீ '

    கிரகணம் முடிந்த பிறகு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் மற்றும் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குளித்து அவரவர் சம்பிரதாயப்படி பரிகார பூஜை செய்ய வேண்டும்.

    வீட்டில் பரிகார பூஜை செய்பவர்கள் வீட்டை கழுவி சுத்தப்படுத்திய பிறகு குளித்து விட்டு விநாயகர், குலதெய்வம், இஷ்ட தெய்வங்களுக்கு வெல்லத்தால் செய்த பலகாரங்களை படைத்து பரிகார பூஜை செய்யலாம். அதாவது அதிரசம், இனிப்பு முருக்கு, எள் உருண்டை, கொழுக்கட்டை ஆகியவற்றை படைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்களும் பரிகார பூஜை செய்ய வேண்டும்.

    மேலும் பூஜை செய்யும் முன்பு குளிக்கும் போது அதே மந்திரத்தை செப்பு தகடு அல்லது காகிதத்தில் எழுதி கையில் கட்டிக்கொண்டு குளிக்கலாம். குளித்ததும் அதை அப்படியே தண்ணீரில் விட்டு விட வேண்டும்.

    மேலும் இந்த சந்திர கிரகணத்தால் பல்வேறு பொதுவான பலன்களும் ஏற்படும். செல்வந்தர்களுக்கு மிகுந்த கெடுதல்கள் உண்டாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை, வடமாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகரிக்கும். குப்பைகள் மூலம் நோய் பரவும். விவசாயம் செழிப்பாக இருக்கும்.

    அதே நேரத்தில் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கும். விலைவாசி உயர்வு உச்சத்தை தொடும். கரும்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கும்.

    தமிழ்நாட்டில் சில இடங்களில் சுமாரான மழை பெய்யும். எதிர்காலத்தில் கடுமையான மழை பொழியும். புயல் சின்னம் உருவாகும். சூறாவளி காற்றும் வீசும். விவசாயம் 2 போகம் விளையும். தென் மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு அதிகமாக இருக்கும். உஷ்ணம் அதிகரிக்கும். வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும்.

    பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவார்கள். சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும். வெளி மாநில திருடர்கள் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள். சாதி பாகுபாடு முற்றிலும் அகலும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் விபத்துக்களும் அதிகரிக்கும்.

    சந்திர கிரகணம் நிகழும் அன்று இரவு 10 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். கர்ப்பிணிகள் இரவு 1 மணி முதல் 2.30 மணி வரை சந்திரனை பார்க்கக்கூடாது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.
    • அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    வாஷிங்டன்:

    சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கும். பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.

    இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்கிறது.

    இந்திய நேரப்படி இரவு 8.34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது.

    இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் என்றும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிலவு பூமியில் இருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. இது சூரியனை முழுமையாக மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய நெருப்பு வளையம் போல் தெரியும்.

    அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் ஏற்படுவதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருகிற 28-ந்தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28- ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள் 29- ந்தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. இதன் காரணமாக சந்திர கிரகணத்தை இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மரபுகளை கேலி செய்வதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர்.
    • ராமர் மற்றும் லட்சுமணனுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    பூரி:

    சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நிகழ்வின் போது ஓடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் பிரியாணி விருந்துக்கு இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவை தாக்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்து கடவுள்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி, பூரி ஜெகநாதர் கோவில் பணியாளர்கள் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது நூற்றாண்டு பழமையான மரபுகளை கேலி செய்வதன் மூலம் பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் என்று அந்தக் கடிதத்தில், 36 வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கிய சேவகர்கள் அமைப்பான சத்திஷா நிஜோக் குற்றம் சாட்டி உள்ளது. 


    இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு எதிராக தொலைக்காட்சி சேனல்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், ஜெகநாதருக்கு கோழி உணவை பிரசாதமாக வழங்கலாம் என்று கூட அவர்கள் கூறி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய செயல்களில் ஈடுபடும் இந்துமத எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினையால் ஒடிசா மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டால் அதற்கு மாநில அரசுதான் பொறுப்பு என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்தனர்.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான ேகாவில்களின் நடை சாத்தப்பட்டது. மதியம் 2.39 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம் மாலை 6.19 மணி வரை நடந்தது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பே புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பல்வேறு கோவில்களின் நடை சாத்தப்பட்டு இருந்தது. சந்திரகிரகணம் முடிந்த பின்னர் மாலை 7 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன.

    இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நடை சந்திர கிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன.

    சந்திர கிரகணத்திலும் இக்கோவில் நடை திறந்து இருப்பதற்கு இக்கோவில் மூலவராக தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிப்பதே காரணமாகும். தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக தர்பாரண்யேஸ்வரர் உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். இதனால் சந்திரகிரகணத்திலும் வழக்கமான பூஜைகள் நடந்தன.

    இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சந்திரகிரகணம் முடிந்த, பின்னர் கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்த குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. மூலவர் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரருக்கு கிரகண கால அபிஷேகமும் நடந்தன.

    • ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடை சாத்தப்பட்டது. ஆனால் சிவ ஷேத்திரமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மட்டும் சந்திர கிரகண சமயத்தில் நடை சாத்தப்படாமல் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணிவரை சந்திர கிரகணம் இருந்தது. இந்த கிரகண நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அலங்கரிக்கப்படுவதால் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மீது கிரகண கால சமயத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்ற காரணத்தினால் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடத்துவதாக கோவில் வேதப்பண்டிதர்கள் தெரிவித்தனர்.

    மேலும் சந்திரகிரகண சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தால் அனைத்து விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பதால் சந்திரகிரகணமான நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சந்திர கிரகண சமயத்தில் பரணி போன்ற நட்சத்திரம் கொண்டவர்கள் சந்திர கிரகண சமயத்தில் சந்திரனை பார்க்க கூடாது என்றும், இதனால் தீயவை நிகழும் என்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்றும், தோஷம் நீங்கும் என்றும் கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரி சுவாமி தெரிவித்தார்.

    • இந்தியாவின் பிற பகுதிகளில் சந்திர கிரகணம் தென்பட்டது.
    • அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அடுத்த சந்திர கிரகணம் நிகழும்.

    இந்தியாவில் முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. இந்த கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை காண முடிந்தது. 


    சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரியும் என கணிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட மாவட்டங்களில் உள்ள அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழகத்தில் சந்திர கிரகணம் தென்படவில்லை. சந்திர கிரகண நிறைவு நேரத்தில் வானத்தில் முழு நிலவு தென் பட்டதுடன் மேகம் அதை மறைப்பதை காண முடிந்தது.


    இது தொடர்பாக சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் செளந்திரராஜா பெருமாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இன்று நடைபெற்றது முழு சந்திரகிரகணம். இது ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் காணப்பட்டது. மழை காரணமாக முன்பே கணித்தபடி சென்னையில் தென்படவில்லை. எனினும், உலகின் பல பகுதியிலும், இந்தியாவின் பிற பகுதியிலும் கிரகணம் தென்பட்டது என்பதை காண்பித்தோம். அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ந் தேதி நிகழும். இந்த கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்திய நேரப்படி பிற்பகல் 3.46 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது.
    • கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு சந்திரன் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி நேர சந்திர கிரகணமும் ஏற்படும்.

    அதன்படி இன்று முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. இந்த கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகணம் இந்தியாவில் 5 மணி 12 நிமிடங்களுக்கு தெரியும் என கூறப்பட்டது. அதன்படி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை காண முடிந்தது.

    சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரியும் என கணிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட  அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டது.
    • 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மதுரை

    சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணி வரை ஏற்படும் என்பதால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆகம விதிப்படி கோவில் நடைகள் சாத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று சந்திர கிரகணம் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி- சாயரட்சை பூஜைகள் முடிந்த பிறகு கோவில் நடை இன்று காலை 9.30 மணிக்கு சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரகண நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.

    சந்திர கிரகணம் முடிந்து இன்று இரவு 7.30 மணிக்கு பிறகு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி 22 உப கோவில்களின் நடைகளும் இன்று சாத்தப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து மத்திம காலத்தில் சுவாமிகளுக்கு மாலை 4.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பிறகு சந்திரசேகரர் புறப்பாடு நடக்கும். இரவு 7 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கும். 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன் பிறகு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×