search icon
என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுறது . முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த பயணத்தில் காலை நேரத்தில் பொது மக்கள் மத்தியில் பேசுகிறார். மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாமியார், மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர்.
    • மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், யாதகிரி குட்டா அடுத்த கொல்ல குடிசேவையை சேர்ந்தவர் பாரதம்மா (வயது 65). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இளைய மகனின் மனைவி மங்கம்மா (26). மாமியார் மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர். நேற்று அதிகாலை பாரதம்மாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

    மாமியாரின் உடலைப் பார்த்து மருமகள் மங்கம்மா கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் மங்கம்மாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே மங்கம்மா பரிதாபமாக இறந்தார்.

    மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வழக்கமாக மாமியார், மருமகள் சண்டையிட்டு அடித்துக் கொள்வது தான் வழக்கம். ஆனால் இந்த சம்பவம் மாமியார் மருமகள் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
    • ராக்கெட்டில் ‘திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார்' உள்ளது.

    ஆந்திரா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட் இதுவாகும்.

    ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் பல்வேறு முதன்மை சிறப்புகளை கொண்டது. இந்த ராக்கெட் உலகின் முதல் '3டி பிரிண்டட்' வகையை சேர்ந்ததாகும். இந்தியாவின் முதல் அரை 'கிரையோஜெனிக்' எந்திரத்தை கொண்டுள்ளது. 18 மீட்டர் உயரமும், 1.3 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ராக்கெட் 100 கிலோ எடையுள்ள செயற்கைகோள்களை 700 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

    செங்குத்தாக செல்லும் வகையை சேர்ந்த இந்த ராக்கெட் 10 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்த பிறகு ராக்கெட் அதன் இறங்குதலைத் தொடங்குகிறது. அது தொடங்கிய இடத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வங்காள விரிகுடாவில் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராக்கெட்டில் 'திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார்' உள்ளது.

    அதாவது அதன் முனை வெவ்வேறு கோணங்களுக்கு நகர்த்தப்படலாம். இதனால் உந்துதல் பறக்கும் திசையில் மாறுபடும் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்டு பல கோணங்களில் சுழலும்.

    இந்த காரணிகள் தரை நிலையத்தில் இருந்து ராக்கெட்டை 'ஸ்டீரிங்' மூலம் வேண்டிய திசைக்கு திருப்ப உதவி செய்ய உதவுகின்றன.

    மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    இதற்கிடையே செலவை குறைக்கவும், சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காகவும் பெங்களூருவில் மறுபயன்பாட்டு ராக்கெட் தரையிறங்கும் பரிசோதனையை இந்த வாரம் சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் பிராஜகளம் பொதுக்கூட்டம் இன்று மாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பால்நாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க., ஜன சேனா கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த பொதுக் கூட்டத்தில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, பொதுக் கூட்டத்தை பார்க்க வந்த தொண்டர்களில் சிலர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர். இதை பார்த்ததும் பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

     


    ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையின் போது தொண்டர்கள் மின்கம்பத்தில் ஏறுவதை பார்த்த பிரதமர் மோடி, உடனே குறுக்கிட்டு பவன் கல்யாணிடம் உரையை நிறுத்துமாறு கூறினார். தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அவர்களை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்க வலியுறுத்தினார்.

    "அங்கு மின் வயர்கள் உள்ளன. அங்கு என்ன செய்கின்றீர்கள்? உங்களது உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது. தயவு செய்து கீழே இறங்குங்கள். ஊடகத்தினர் உங்களது புகைப்படங்களை எடுத்துள்ளனர். இப்போது கீழே வாருங்கள். அங்கிருக்கும் காவலர்கள், தயவு செய்து மக்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எங்களுக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்திவிடும்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பிறகு, ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனது உரையை முடித்தார்.

    • வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.
    • கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் செவி ரொட்டி மோகித் ரெட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் திவிர பிரசாரம் செய்து வருகிறார். மோகித் ரெட்டி அவரது தாயார் செவி ரெட்டி லட்சுமி ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.

    சந்திரகிரி அடுத்த கல்ரோடு பள்ளிகிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான செவிய ரெட்டி பாஸ்கர் ரெட்டி தன்னார்வலர்கள் மூலம் ஒலி பெருக்கிகளை இலவசமாக கொடுக்க கொண்டு வந்தனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் எங்கள் கோவிலுக்கு எதுவும் தேவை இல்லை என திருப்பி அனுப்பினர்.

    இதனை வீடியோ எடுத்து பரவ விட்டு உள்ளனர். ஓட்டுக்காக கிராம மக்களை கவர கோவிலுக்கு அன்பளிப்பு வழங்கப்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து செவி ரெட்டி லட்சுமி கூறுகையில், கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்ப தற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார். 

    • வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று முன்தினம் காலை கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மதியம் 12.30 மணியளவில் கோவிலில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரே கொடிமரத்தில் கொடியிறக்கம், இரவு சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து 12-வது நாளான நேற்று இரவு 10 மணியளவில் பல்லக்கு சேவை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    13-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே உள்ள பள்ளியறையில் சாமி-அம்பாளுக்கு ஏகாந்த சேவை நடத்தப்படுகிறது.

    • தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
    • மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி-பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    தற்போது ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.

    இந்நிலையில் பல்நாடு மாவட்டம், நரச ராவ் பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சதல வாடா அரவிந்த் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அப்போது 2 கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 கட்சியினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    மேலும் காயமடைந்தவர்களை மீட்டு நரசராவ் பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோவிலின் கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்காக அறங்காவலர் குழு தலைவர், முதன்மை செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று 67,832 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு முன்பாக உள்ள ஜெய விஜயா கதவுகளுக்கு தங்கத் தகடுகள் பதிக்கப்படும் என அறிவித்து இருந்தனர். தங்க தகடுகள் பதிக்கும் பணி தள்ளி போய்க்கொண்டே உள்ளது.

    இந்த நிலையில் கோவிலின் கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்காக அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகரன் ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கதவுகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்கு எவ்வளவு தங்கம் தேவைப்படுகிறது. இதற்கான தங்கத்தை தேவஸ்தானத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தில் பதிப்பதா அல்லது பக்தர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் நன்கொடை பெறுவதா? என ஆலோசனை நடத்தினர்.

    திருப்பதியில் நேற்று 67,832 பேர் தரிசனம் செய்தனர். 25,636 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன.
    • பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என தேர்தல் பிரசார வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார்.

    அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன. பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் வழங்கப்படுவதால் பரிசு பொருட்கள் குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் பிரகாசம் மாவட்டம், கனிகிரி நகராட்சி மண்டலத்தில் தன்னார்வலராக 500 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று தன்னார்வலர்கள் 500 பேரையும் பொது இடத்திற்கு வரவழைத்தனர்.

    தன்னார்வலர்களுக்கு பரிசு பை ஒன்று வழங்கினர். ஜெகன்மோகன் ரெட்டி உருவபடம் பொறிக்கப்பட்ட அந்த பையில் ரூ.5 ஆயிரம் பணம், ஹாட் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் மற்றும் டின்னர் செட் உள்ளிட்டவை இருந்தன.

    திடீர் அதிர்ஷ்டமாக பணத்துடன் பரிசு பொருட்கள் கிடைத்ததால் தன்னார்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பையை பெற்றுச் சென்றனர்.

    இதே போல் மற்ற கட்சியினரும் வேட்பாளர்களை வெகுவாக கவரும் வகையில் என்னென்ன பரிசு பொருட்களை வழங்கலாம் என ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆந்திராவில் உள்ள வாக்காளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • பல்வேறு காரணங்களால் கவுண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
    • ஒரு பக்தர் ரூ.10 ஆயிரத்து 500 கட்டணத்தில், ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி விமான நிலையம் வந்து ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், தாங்கள் விமானத்தில் வந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை மற்றும் ரூ. 500 கட்டணம் செலுத்தி, 'விஐபி பிரேக்' தரிசன டிக்கெட் பெற்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இதன் மூலம், ஒரு பக்தர் ரூ.10 ஆயிரத்து 500 கட்டணத்தில், ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கவுண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

    இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்டர், இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    • தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.
    • பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.

    இதில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், பா.ஜ.க தேசிய துணை தலைவர் பைஜயந்த், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    பவன்கல்யாண் கட்சி 2 பாராளுமன்ற தொகுதி 21 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

    தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதால் வேட்பாளர்கள் தேர்வில் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி மிகவும் வலிமையானது. ஆந்திர மாநிலத்தை மீட்டெடுக்க மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் சிலக்கலுரி பேட்டையில் வருகிற 17 அல்லது 18-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.அப்போது பா.ஜ.க. வேட்பாளர்களை பொதுக்கூட்ட மேடையில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    • பல மாவட்டங்களில் குடிநீருக்கும் கடும் பஞ்சம் நிலவி வருகிறது.
    • இலந்த குண்டா அடுத்த பெத்தலிங்கப்பூரில் பயிரிடப்பட்ட நெற்யிர்களை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    கடும் வறட்சி நிலவிய போதும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்ப டவில்லை. அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் குடிநீருக்கும் கடும் பஞ்சம் நிலவி வருகிறது.

    வறட்சி காரணமாக பல 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் கருகியது. இதனைக் கண்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

    இலந்த குண்டா அடுத்த பெத்தலிங்கப்பூரில் பயிரிடப்பட்ட நெற்யிர்களை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர்.

    விவசாயிகள் நெற்பயிர்களை தீயிட்டு கொளுத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×