என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 4 வீடுகளில் மலை பாம்பு புகுந்ததாக ரங்காவுக்கு தகவல் தெரிவித்தனர்.
- விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பாம்புகளை பிடித்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரங்கா. இவர் எந்த வகை பாம்பாக இருந்தாலும் திறமையாக பிடிப்பதில் வல்லவர்.
விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பாம்புகளை பிடித்துள்ளார். ரங்கா சிறிய வகை பாம்புகள் முதல் பெரிய வகை பாம்புகளை பிடித்துச் சென்று நடுக்காட்டில் விடுவது வழக்கம்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் மலை பாம்பு புகுந்ததாக ரங்காவுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ரங்கா வீட்டில் இருந்த 4 மலை பாம்புகளை பிடித்தார்.
பின்னர் பிடிக்கப்பட்ட பாம்புகளை கையில் சுற்றிக்கொண்டு சாகசம் செய்தார். இதனை வேடிக்கை பார்த்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.
செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பதிவிட்டனர்.
தற்போது ரங்கா பாம்புகளை வைத்து சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பக்தர்களுக்கு தேவஸ்தான சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது.
கருட சேவையை காண நேற்று நாடு முழுவதிலும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்தனர்.
இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். அங்கு குவிந்திருந்த பக்தர்கள் கற்பூரம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
மேலும் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோஷமிட்டனர்.
இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா மற்றும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 72,650 பேர் தரிசனம் செய்தனர். 27,410 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமானது.
பக்தர்களுக்கு தேவஸ்தான சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
- சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
- விசாரணை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் சார்பில் வாதம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் சிஐடி காவலில் வைக்க லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
விசாரணை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் விசாரணையின்போது ஒன்று அல்லது 2 வழக்கறிஞர்களை அனுமதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
- ரத்து செய்யக்கோரிய மனு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கல்ப விருட்ச வாகன வீதிஉலா.
- பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. இன்று கருடசேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை 'கல்ப விருட்ச' வாகன வீதிஉலா நடந்தது.
கல்ப விருட்சம் என்பது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வீக மரம். விஸ்வாகராமரால் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கல்ப விருட்ச வாகனத்தில் 'ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி, தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவேன் என்பதை உணர்த்தவே கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.
வீதிஉலாவின் போது நான்கு மாட வீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்த நாமங்களை முழங்கி சாமி தரிசனம் செய்தது விண்ணில் எதிரொலித்தது.
வாகன வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், யானைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. ஆண், பெண் பக்தர்கள் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பத்மாவதி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட வேடமிட்டு ஆடி, பாடி சென்றனர். பல்வேறு கலைஞர்கள் நடனம், கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
வாகன வீதிஉலாவில் திருமலை மடாதிபதிகள், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை 'சர்வ பூபால' வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா நடக்கிறது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 7 மணியளவில் 'சிகர' நிகழ்ச்சியாக கருட சேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) தொடங்கி நடக்கிறது.
- இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
திருப்பதி:
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் நேற்று திருமலைக்கு வந்தன. அந்த மாலைகளுக்கு பெரிய ஜீயர் மடத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கருடசேவை நடக்கிறது.
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் வெங்கடாசலபதிக்கும் அணிவிப்பதற்காக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கோதாதேவி 'சூடிக்கொடுத்த மாலைகள்' மற்றும் கிளிகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் நேற்று திருமலைக்கு வந்தன.
முதலில் திருமலை பேடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் உள்ள பெரியஜீயர் மடத்துக்கு ஆண்டாள் சூடிய மாலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதன் பிறகு பெரிய ஜீயர் மடத்தில் இருந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கோதாதேவியின் மாலைகளை ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மூலவர் சன்னதிக்குள் கொண்டு சென்றனர்.
அப்போது திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருமலைக்கு கோதாதேவி மாலைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோதாதேவி மாலைகள் திருமலைக்கு வந்தன. கருடசேவையின்போது புனித மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவித்து அலங்கரிக்கப்படும், என்றார். மாலைகள் ஊர்வலத்தில் டெல்லி தகவல் மைய உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் வேமிரெட்டிபிரசாந்தி, திருமலை கோவில் துணை அதிகாரி லோகநாதம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அதிகாரிகள் ரங்கராஜன், சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
- 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி மீசையை முறுக்கி சந்திரபாபு நாயுடுவை சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாக பேசினார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சட்டசபைக்கு வந்த அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நீங்கள் 23 பேர் மட்டுமே. நாங்கள் 151 பேர். எங்களை சட்டப் பேரவையில் மதிக்கவில்லை என்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் சட்டசபை, சபாநாயகர் மற்றும் சட்டங்களை மதிக்கிறோம்.
தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததற்கான உறுதியான ஆதாரங்களை சி.ஐ.டி. கண்டுபிடித்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம். 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை. பெண்களை இழிவாக பேசுவது அவரது வழக்கம்.
மைத்துனர் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற சட்டமன்றத்தில் சத்தமாக கூச்சலிட்டபடி அழுகிறார். சந்திரபாபு நாயுடுவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக சித்தரிக்க பார்க்கின்றனர்.
சந்திரபாபு நாயுடு மீது சட்ட விரோத வழக்கு இருந்தால் விவாதம் நடத்த வேண்டும்.
சட்டசபையில் முறைபடி விவாதம் நடத்தப்பட வேண்டும். அதை விடுத்து சைக்கோக்கள் போல் கத்தி சபாநாயகர் மீது பாட்டில் வீசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்திரபாபு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிரபல நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் எம்.எல்.ஏ.வுமான நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி மீசையை முறுக்கியபடி ஆவேசமாக பேசினார்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர சட்டசபை இன்று கூடியபோது சட்டசபைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை அருகில் சென்று பேப்பர்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சபாநாயகர் மீது வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபல நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி மீசையை முறுக்கியபடி ஆவேசமாக பேசினார்.
ஆதாரம் இன்றி சந்திரபாபு நாயுடுவை கைது செய்து இருக்கிறீர்கள்.
முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபைக்கு வந்து இதற்கு பதில் அளிக்க வேண்டும் என பேசினார்.
இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எதிர் கோஷமிட்டனர்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது நீர்வளத்துறை அமைச்சர் அம்பாதி ராம் பாபு எழுந்து இதுபோன்ற செயல்களை சினிமா நடிப்பதில் வைத்துக்கொள்ளுங்கள்.
சட்டசபைக்குள் இது போன்று நடந்து கொள்ளக்கூடாது என தெரிவித்தார்.
இதற்கு நடிகர் பாலகிருஷ்ணா தில் இருந்தால் இந்த பக்கம் வா என ஆவேசமாக கத்தினார். அதற்கு அம்பதி ராம்பாபு உனக்கு தில் இருந்தால் இந்த பக்கம் வா என மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- உற்சவர் மலையப்பசாமி ‘யோக நரசிம்மர்’ அலங்காரத்தில் பவனி.
- விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், காளைகள், குதிரைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம், கர்நாடகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர். விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை பாடல்களை பாடினர். கோலாட்டமும் ஆடினர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'காளிங்க நர்த்தன' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
- மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பதி:
பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வசேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.
திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.