search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra Govt"

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AndhraGovt #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார்.

    இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    தற்போது இந்த போராட்டத்துக்கு மொத்தம் எவ்வளவு தொகை செலவானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

    ஆந்திர அரசு செலவில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சந்திரபாபு நாயுடு தன் மாநிலத்திலிருந்து பொதுமக்களை டெல்லிக்கு அழைத்துசென்றார். இதற்காக 2 ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டது. ஆந்திர அரசே மத்திய ரெயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரெயில்களை முன்பதிவு செய்து ரெயில்களுக்கு வாடகையாக ரூ.1.12 கோடி அளித்தது.

    முக்கிய வி.ஐ.பிக்களுக்கு சொகுசு அறைகள், பொது மக்களுக்கு தனியாக அறைகள் என மொத்தம் 1100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதற்காக கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

    உணவு, இதர செலவு என மொத்தம் ரூ.10 கோடி செலவாகி உள்ளது. இதற்கான தொகையை 6-ந்தேதியே ஒதுக்கீடு செய்து ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 12 மணி நேர போராட்டத்துக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் நடந்த போராட்டத்திலேயே இந்தச் செலவுகள் குறித்து சந்திரபாபு நாயுடு பேசி இருந்தார். அதில், ‘இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திர அரசின் பணத்தில்தான் நடத்தப்படுகிறது.

    இது மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். ஆந்திர அரசு இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. என் மக்களின் சுதந்திரத்துக்காகவே இது நடத்தப்படுகிறதே தவிர, ஒரு தனிப்பட்ட கட்சியின் போராட்டம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். #AndhraGovt  #ChandrababuNaidu

    ×