என் மலர்
இந்தியா

கலப்பட பால் குடித்து பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
- சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் கனக ரத்தினம் உள்ளிட்ட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
- 12 பேரில் 8 பேரின் சிறுநீரகம் செயலிழந்து அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரம் அடுத்த கொடுகொண்டா, நரசாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். பால் வியாபாரி. இவர் அதே பகுதியில் பால் சேகரிப்பு மையம் அமைத்து பல்வேறு ஊர்களுக்கு பால் விற்பனை செய்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரிடம் பால் வாங்கி குடித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் கனக ரத்தினம் உள்ளிட்ட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
ராஜ மகேந்திரபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ண மூர்த்தி (வயது 74). ஷேசகிரி ராவ் (22 ), ரமணி (58) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலப்பட பால் விற்பனை செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த சிகிச்சை செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளார்.
அதிகாரிகள் கணேஷ் நடத்தி வந்த பால் சேகரிப்பு மையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பாலை குளிரூட்டுவதற்காக எத்திலீன் கிளைகோள் என்ற ரசாயனம் பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த ரசாயனம் கலந்த பாலை குடித்தவர்களுக்கு சிறுநீரகம் செயலிழந்து இறந்து விட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பால் வியாபாரி கணேசை போலீசார் நேற்று கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள 12 பேரில் 8 பேரின் சிறுநீரகம் செயலிழந்து அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் ரத்தம், சிறுநீர், கலப்பட பால் ஆகியவை மத்திய தடவிய ஆய்வகம், விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியின் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.






