என் மலர்
நீங்கள் தேடியது "ED"
- நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.
- குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க வினியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பகிரங்க குற்றம் சாட்டினார். இதனால் உலகம் முழுவதும் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்துக்கு வினியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறினார்.
இவ்விவகாரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.
இதுதொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
இந்நிலையில், அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக திரட்டிய பணம் குறித்தும் விசாரிக்க இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த விசாரணைக்காக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கு, ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹவாலா பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
- சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை உயர்கல்வி கற்ற டாக்டர்கள் பலர் குழுவாக சேர்ந்து அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
இதனால் அந்த பல்கலைக்கழகம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் மீதான நிதி மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். ஆதாரங்களின் அடிப்படையில் அல்பலா பல்கலைக்கழக அறக்கட்டளை தலைவர் சித்திக் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தின் 54 ஏக்கர் நிலம், கட்டிடங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.140 கோடி ஆகும்.
சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சித்திக் மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அல்பலா அறக்கட்டளை ரூ.110 கோடிக்கும் அதிகமான சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
- கடந்த வாரம் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், விசாரணை முகமைக்கு மேற்கு வங்க காவல்துறையின் மூத்த அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றும், அவர்கள் தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையின் நடுவே மம்தா பானர்ஜி வந்து, விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிறரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அங்கு உடனடி நிவாரணம் கிடைக்காததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
கடந்த வாரம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அறையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும்.
ஐ-பேக் (I-PAC) மீது நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்பாக, தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று கோரி மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
- கடந்த மாதம் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான சிசோடியாவிடம் அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரித்தனர்.
- மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதம் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக தனது வீட்டில் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காததால் தனது உதவியாளரை தேதேந்திர சர்மாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளது. தேர்தலைப் பார்த்து அக்கட்சி பயப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
- அப்பாஸ் அன்சாரியிடம் பிரயாக்ராஜில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது.
- முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த மாதம் முடக்கியிருந்தது.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்து அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள இவருக்கு எதிராக சுமார் 50 குற்றவழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
மேலும் அவரது மகனும், மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வுமான அப்பாஸ் அன்சாரி (வயது 30) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் அப்பாஸ் அன்சாரியிடம் பிரயாக்ராஜில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில் நேற்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த வழக்குகள் தொடர்பாக முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த மாதம் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.
- ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநில உணவு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையொட்டி ஐதராபாத், கரீம் நகர் ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர் 20 குழுக்களாக ஒரே நேரத்தில் அமைச்சருக்கு சொந்தமான வீடுகள், குடியிருப்பு பகுதிகள், குவாரிகள், கிரானைட் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.
மேலும் அவருக்கு நெருக்கமாக உள்ள பல கிரானைட் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
- பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது.
மும்பை :
மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்ததாக கோர்ட்டு அதன் உத்தரவில் கூறியது.
இந்தநிலையில் மராட்டிய மாநிலம் நாந்தெட்டில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு மூலம் மத்திய புலனாய்வு முகமை அரசியல் எதிரிகளை பயமுறுத்த, அச்சுறுத்த பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. சஞ்சய் ராவத் ஜாமீன் உத்தரவு மூலம் அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு இல்லை என்பது தெரிகிறது. அது எதிர்க்கட்சிகளை குறிவைக்க மோடி, அமித்ஷாவின் கையில் இருக்கும் அவர்களின் அரசியல் ஆயுதம். சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. பல்வேறு பிரச்சினைகளில் அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பேசுவார் என நம்புகிறோம்.
பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது. இதன் காரணமாக கூட்டுறவு துறையில் பலமாக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு துறைக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால் அது மோடி ஆட்சியில் மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.
- தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
மும்பை :
நிழல் உலக தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மந்திரி பதவி வகித்த நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதம் சிறப்பு கோர்ட்டில் நவாப் மாலிக் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதில், தன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேநேரம் அவரது ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாகத்துறை, "முன்னாள் மந்திரி நவாப் மாலிக் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அசீனா பார்க்கர் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் நிரபராதி என்ற கேள்விக்கே இடமில்லை" என தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. எனவே அன்று ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையில், முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தனது வக்கீல் மூலமாக பி.யி.டி- சி.டி. ஸ்கேன் எடுக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஸ்கேன் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாட்டை கண்டறிய உதவும் சோதனை ஆகும். இதற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா.
- இவரை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திராமணி குழுமத்தைச் சேர்ந்த சுனில் அகர்வால் மற்றும் லட்சுமிகாந்த் திவாரி ஆகிய 3 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அவரிடம் கடந்த இரு மாதங்களில் வருமான வரித்துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் சௌமியா சௌராசியாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறையினர் பதிவு செய்த பணமோசடி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
- 2004-2007 காலகட்டத்தில் ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாக தகவல்.
- 45 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக முடக்கியது மத்திய அமலாக்கத்துறை.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் 2004-2007 காலகட்டத்தில் மத்திய மந்திரியாக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
- ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள் சிங் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருந்தது.
- மேற்கு வங்காளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள் சிங். இவர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 9 மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
- அமலாக்கத்துறையினர் இன்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
- ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த தகவலின்படி பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷாரிக் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஷாரிக்கின் குடும்பத்தாரிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிம்மனே ரத்னாகர் ரூ.10 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். இந்த குத்தகை காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
இது தொடர்பான தகவல்களின்படி அமலாக்கத்துறையினர் இன்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகம் குத்தகை தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை சரி பார்த்ததாக தெரிகிறது.
இதனிடையே ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






