என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"

    • கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
    • அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா?

    ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

    ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டைப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி அதில் தைரியமாக பங்கேற்கிறார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக எக்ஸ் இல் பதிவிட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "அடுத்த ஜி-20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறும், அந்த நேரத்தில், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.

    ஆனால், கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

    அடுத்த 12 மாதங்களில் அவர் இன்னும் எத்தனை முறை அதை மீண்டும் மீண்டும் சொல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

    அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார். 

    • இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • நேற்று கூட சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை சந்திக்கும்போது இதை கருத்தை தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவியது. இருநாட்டு ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நான்தான் தலையிட்டு நிறுத்தினேன் எனத் தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால், டிரம்ப் தலையிடவில்லை என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

    ஆனால், உலகத் தலைவர்களை சந்திக்கும்போதெல்லாம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்து வருகிறது.

    அமெரிக்க நேரப்படி நேற்று சவுதி பட்டத்து இளவரசரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் "இந்த கூற்று நிறுத்தப்பட்டுள்ள என நினைத்தால் உலகிற்கு மீண்டும் நினைவூட்டுகிறார். இதற்கு முன்னதாக சவுதி அரேபியா, கத்தார், எகிப்பு, பிரிடடன், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் பல்வேறு இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதை தெரிவித்தார். தற்போது 60-வது முறையாக கூறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    சவுதி பட்டத்து இளவரசர் உடனான சந்திப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    நான் உண்மையில் 8 போர்களை நிறுத்தி விட்டேன். மற்றொரு போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. புதினை பார்த்து எனக்கு சற்று ஆச்சர்யமாக உள்ளது. நான் நினைத்ததை விட சற்று நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினோம். பட்டியலை நான் வெளியிட முடியும். அந்த பட்டியலில் என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
    • பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

    பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியது நான்தான் என 52-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் பிரதமரை 2 முறையும், ராணுவ தளபதியை 2 முறையும் டிரம்ப் சந்தித்த பிறகும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.

    ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    உலக விவகாரங்களைப் பேசும் மோடி, இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்?

    பீகாரில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க. ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றும், நிதிஷ்குமார் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.

    • பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
    • பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.

    மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் அவரது தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவில் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பது குறித்து ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

    மில்லியன் கணக்கான இந்தியர்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடும் அதே வேளையில், நாட்டின் பாதி செல்வத்தை வெறும் 1,687 பேர் மட்டுமே வைத்துள்ளனர்.

    மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் இயக்கப்படும் இந்த மிகப்பெரிய செல்வக் குவிப்பு, நம் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்குகிறது.

    இந்த சமத்துவமின்மை பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்குகிறது.

    மற்ற நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள், இதே தீவிர பொருளாதார சமத்துவமின்மையும், முடக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளும் அரசியல் குழப்பத்திற்கு ஊக்கியாக மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.

    இந்த அரசாங்கம் இந்தியாவை அதே பாதையில் தள்ளுகிறது. அதிகார உறவு காரணமாக ஒரு சில தொழிலதிபர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். பிரதமரின் கொள்கைகள் அவரது சில தொழிலதிபர் நண்பர்களின் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

    இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.

    இந்த அழுத்தம் உள்நாட்டுக் கொள்கைகள் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கை தோல்விகளின் விளைவாகும்.

    சாதாரண மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்து, வேலை செய்பவர்கள் கூட சேமிப்பிற்குப் பதிலாக கடனில் அதிகளவில் சுமையாக உள்ளனர்.

    கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன, மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவீனமடைந்து வருகின்றன.

    மில்லியன் கணக்கான மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு வலையை வழங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற வெற்றிகரமான திட்டங்கள் இப்போது ஊதிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கூட கிடைப்பதில்லை.

    செல்வத்தின் இத்தகைய தீவிர மையப்படுத்தல் பொருளாதாரத்திற்கு ஒரு பிரச்சனை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீதான நேரடித் தாக்குதலாகும். பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.

    இது வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான குடிமக்கள் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் செயல்முறையிலிருந்து படிப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.    

    • இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

    கடந்த புதன்கிழமை லடாக் தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது லடாக் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டககாரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    "6 வருடங்களுக்கு முன்பு லடாக் யூனியன் பிரதேசம் உருவான போது அம்மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்கொண்டது என்னவோ பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே!.

    தற்போது, லடாக் மக்களின் நிலமும், வேலைவாய்ப்பு உரிமையும் மிகுந்த ஆபத்தில் உள்ளது. அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம், துணை நிலை ஆளுநர் மற்றும் அதிகாரத்தால் கைப்பற்றப்பட்டது.

    மாநில அந்தஸ்து, அரசியலமைப்பு 6வது பட்டியலில் சேர்க்கப்படுவது, தேர்தல் நடத்தபடுவது ஆகியவை குறித்து லடாக் மக்களின் கோரிக்கைள் குறித்து மீட்டிங் மேல் மீட்டிங் மட்டுமே நடக்கிறதே அன்றி எந்த முன்னேற்றமும் இல்லை.

    லடாக்கில் ஏற்கனவே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தங்கள் படைகளை இந்தியா அருகே நிலைநிறுத்தி சீனா ஒருதலைபட்சமாக மீறியதும் அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    லடாக் இந்தியாவுக்கு அதன் கலாச்சாரம், சூழலியல் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. தாங்கள் இந்தியர்கள் என்பதில் லடாக் மக்கள் எப்போதும் பெருமை கொண்டிருந்தனர்.

    அவர்களின் கோபமும், துன்பமும் இந்திய அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். மேலும் வெறும் மீட்டிங் பேச்சுக்களை மட்டுமே மேற்கொள்வதை விட்டு விட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முழு வீச்சில் முடிந்த அளவு விரைவாக நிறைவேற்றிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜூன் 19, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றினார்.

    அந்தக் கூட்டத்தில், "நமது எல்லைக்குள் யாரும் வரவில்லை, நமது ராணுவப் paguthigalaiயாரும் கைப்பற்றவில்லை" என்று பிரதமர் மோடி கூறினார். இதையே பிரதமரின் பூசி மெழுகல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

    • 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்தது.
    • இப்போது, ​​நீங்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றிப் பேசுகிறீர்கள்.

    ஜிஎஸ்டி 12%, 28% சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை இன்று(செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வருகிறது.

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செப்டம்பர் 22 ஆம் தேதி சூரிய உதயத்தில் ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்கும் என்று தெரிவித்தார்.

    மோடியின் உரையை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "காங்கிரஸ் கட்சியின் எளிமையான மற்றும் திறமையான GST-க்கு பதிலாக, உங்கள் அரசாங்கம் ஒன்பது தனித்தனி அடுக்குகளைக் கொண்ட "கப்பர் சிங் வரி"யை விதித்தது, 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்தது.

    இப்போது, நீங்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றிப் பேசுகிறீர்கள். பொதுமக்களுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்திய பிறகு ஒரு எளிய பேண்ட்-ஏய்டைப் போடுகிறீர்கள்!

    பருப்பு வகைகள், அரிசி, தானியங்கள், பென்சில்கள், புத்தகங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் விவசாயிகளின் டிராக்டர்கள் என அனைத்திற்கும் நீங்கள் GST விதித்ததை பொதுமக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    உங்கள் அரசாங்கம் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!" என்று தெரிவித்தார். 

     எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசியலமைப்பு அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலால் ஜிஎஸ்டி அமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு பிரதமர் முழு உரிமை கோரினார். 

    ஜூலை 2017 முதல் நாங்கள் ஜிஎஸ்டி 2.0 ஐ கோரி வருகிறோம். 2024 மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் இது ஒரு முக்கிய வாக்குறுதியாகும்.   

    தற்போதைய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல. வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) கவலைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

    ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை.

    மின்சாரம், மதுபானம், பெட்ரோலியம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

    மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வணிகங்கள் அச்சத்தினாலும், ஒருசிலரின் ஆதிக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்கள் தாமதமான இந்த ஜி.எஸ்.டி. மாற்றங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உண்மையில் உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.   

    • பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.
    • யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது.

    7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பிரதமர் மோடி சீனா சென்றார். ஷாங்காய் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அவர் இரு நாட்டு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து அதிபர் ஜி ஜிங் பிங் உடன் விவாதித்தார்.

    இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியா-சீனாவின் நெருக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த இணக்கம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.

    ஜூன் 2020 இல், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு தாக்குதல் நமது துணிச்சலான ஜவான்களில் 20 பேரின் உயிரை பறித்தது.

    இருப்பினும், சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு பதிலாக, ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். லடாக்கில் சீனாவுடனான எல்லையில் தற்போதைய நிலையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என ராணுவத் தலைவர் கோரினார்.

    ஆனால் அதை மீட்டெடுப்பதற்கு பதிலாக சீனா தனது ஆக்கிரமிப்பை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு எதுவாக மோடி அதை சட்டபூர்வமாக்கினார்.

    ஜூலை 4, 2025 அன்று, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுடனான சீனாவின் கூட்டணி குறித்து வலுவாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.

    இதற்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அந்த கூட்டணியை அமைதியாக ஏற்றுக்கொண்டு, இப்போது அரசு முறை பயணங்கள் மூலம் சீனாவின் நன்மைக்கு பணியாற்றி வருகிறது.

    யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது நமது வடகிழக்கு பகுதிக்கு மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் மோடி அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    சீனாவிலிருந்து கட்டுப்பாடற்ற வகையில் குப்பை போல இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், நமது சிறுகுறு தொழில்களை (MSME-களை) தொடர்ந்து அழித்து வருகிறது.

    மற்ற நாடுகளைப் போலல்லாமல், சீன இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்பாடற்ற சுந்திரத்தை நாம் வழங்கி வருகிறோம்,

    சீன ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம், நமது அரசாங்கத்தின் முதுகெலும்பற்ற தன்மை ஆகியவற்றால் நமது 'புதிய இயல்பு' வரையறுக்கப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

    • தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.
    • தேர்தல் ஆணையம் முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியது.

    இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

    அதாவது, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியமைப்பை அவமானப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தலின் போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சட்டடுவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் ஞானேஷ் குமார் கொடுத்த விளக்கத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், பீகார் SIR இன் போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    தேர்தல் ஆணையத்தின் கடுமையான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், இந்த 65 லட்சம் வாக்காளர்களின் அனைத்து விவரங்களுடனும் தேடக்கூடிய வடிவத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வாக்காளர் அடையாளச் சான்றாக ஆதார் ஐடிகளைப் பயன்படுத்துவதையும் அது அனுமதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல்கள் ஒவ்வொன்றையும் தேர்தல் ஆணையம் எதிர்த்தது.

    தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை என்று கூறுகின்றனர்.

    மலையளவு ஆதாரங்கள் இருந்தபோதிலும், மிகவும் லேசாக அவர்கள் இதை சொல்வது நகைப்புக்குரியது. குறிப்பாகராகுல் காந்தி எழுப்பிய கூர்மையான கேள்விகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை.

    இப்போது முக்கியமானது இதுதான். பீகார் SIR செயல்முறை குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆணையம் நிறைவேற்றுமா? அது அரசியலமைப்பு ரீதியாக அவ்வாறு செய்யக் கடமைப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையத்தின் சொந்த தரவுகளால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளை வெறுமனே கூறியதுதான் தேர்தல் ஆணையருக்கு அச்சுறுத்தலாக தெரிகிறது. தேர்தல் ஆணையம் திறமையின்மையோடு மட்டும் இல்லாமல் அப்பட்டமான பாகுபாட்டுடன் செயல்படுவதும் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், தேர்தலின்போது ஏன் சுட்டிக்காட்டவில்லை என்ற ஆணையத்தின் கருத்தை குறிப்பிட்டு ராகுலின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

    • தெலுங்கானாவிற்கு வர வேண்டிய 3 ஆலைகள் குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் ஒப்பந்தம்.
    • தமிழ்நாட்டுக்க வர வேண்டிய ஒரு ஆலையும் குஜராத்திற்கு மாற்ற கட்டாயப்படுத்தப்பட்டு ஒப்பந்தம்.

    காங்கிரஸ் தலைவர் செமி கண்டக்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு நாட்டில் 4 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.

    விரிவான செயல் திட்டத்திற்குப் பிறகு ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலுங்கானாவில் ஒரு திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. இது ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகரிக்கப்பட்டது.

    வெகு காலத்திற்கு முன்பே இதேபோன்ற இடமாற்றம் கட்டாயப்படுத்தப்பட்டது. 2 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்கள் அவற்றின் முன்மொழியப்பட்ட இடத்தை தெலுங்கானாவிலிருந்து குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதேபோல், தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு தொழிற்சாலை குஜராத்திற்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் பெற்றது.

    இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா? மாநிலங்களுக்கு இடையிலான போட்டி இந்தியாவை வலிமையாக்கும் என பிரதமர் பேசுகிறார். ஆனால் நடுவர் மிகவும் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக இருந்தால், போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர்.
    • 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல்' என்ற கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகிறது.

    "எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது. அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகி விட்டனர்" என்று 2022 பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தி பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், "ஒரு உண்மையான இந்தியர் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார்" என்று தெரிவித்தது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்,  ஜூன் 15, 2020இல் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக மோடி அரசு உண்மையை மறைத்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒவ்வொரு தேசபக்த இந்தியரும் பல கேள்விகளை எழுப்பியுள்ள போதிலும், 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல்' என்ற கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகிறது.

    2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் நாட்டிற்காக வீரதீரமாகப் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் பின்னர் பேசிய பிரதமர், சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று கூறினார்.

    பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க மோடி அரசு எந்த சூழ்நிலையையும் உருவாக்கும். ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு அளித்த போதிலும் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.
    • மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு காலக்கெடு நிர்ணயித்தார். காலக்கெடுவுக்குள் இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று 25 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடிக்கு இடையிலான நட்பை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதம் விதித்துள்ளார். பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் இடையிலான நட்புக்கு அர்த்தம் இல்லை.

    அமெரிக்க அதிபர் அவமானம் செய்தபோது, அமைதியாக இருந்தால் சலுகைகள் கிடைக்கும் என பிரதமர் மோடி நினைத்தார். ஆனால் அது நடவக்கவில்லை என்பது தெளிவாகிறது. பிரதமர் மோடி இந்திரா காந்தியிடமிருந்து உத்வேகம் பெற்று அமெரிக்க அதிபரை எதிர்த்து நிற்க வேண்டும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவின் அற்புதமான கூட்டாளி என பாகிஸ்தானுக்கு பாராட்டு.
    • பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு டொனால்டு டிரம்ப் விருந்து.

    பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியா எடுத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக பாராட்டுகிறது.

    இது இந்தியாவின் ராஜாங்க ரீதியிலான தோல்வி என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், நான்கு முக்கிய விசயங்களை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான பிரதமர் மோடியின் நட்பு ஒன்றுமில்லாத வெற்றுத்தனம் என விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் இந்திய ராஜதந்திரத்தின் மோசமான தோல்வி, நான்கு உண்மைகளால் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. இவை பிரதமரும், அவரது தம்பட்டம் அடிப்பவர்களும் கூறும் கூற்றுகளை அம்பலப்படுத்துகின்றன.

    மே 10ஆம் தேதியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போரை நிறுத்தவில்லை என்றால், அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்த முக்கிய காரணமாக இருந்துள்ளேன் என 25 முறை தெரிவித்துள்ளார்.

    ஜூன் 10ஆம் தேதி, அமெரிக்காவின் மத்திய காமாண்டோ ராணுவத் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவின் அற்புதமான கூட்டாளி என பாகிஸ்தானை பாராட்டியுள்ளார்.

    ஜூன் 18ஆம் தேதி இதுவரை இல்லாத நடைமுறையாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார்.

    நேற்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதிலும் பாகிஸ்தானின் கூட்டாண்மைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    ×