என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக ஒப்பந்தம்"

    • ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இருவரும் பேசினர்.
    • குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.

    ரஷிய எண்ணெயை இந்தியா வாங்காது என அமெரிக்கா கூறி வந்தாலும், இந்தியா தரப்பில் தெளிவான பதில் இல்லை.

    இதற்கிடையே ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "ரஷியாவின் எண்ணெய் மீது அமெரிக்கா கூடுதல் தடைகளை விதித்துள்ளது.

    இந்தியாவுடனான எங்கள் பேச்சுவார்த்தையில், கூடுதலாக ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்" என்றார்.

    தொடர்ந்து இதே மாநாட்டில் மற்றொரு அமர்வில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரூபியோவின் கூற்றை நேரடியாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

    ஜெய்சங்கர் கூறியதாவது, "இந்தியாவின் முடிவுகள் எப்போதும் அதன் மூலோபாயத் தன்னாட்சி அடிப்படையிலேயே இருக்கும். இது இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஆழமான கொள்கை.

    உலகளாவிய எரிசக்தி சந்தை தற்போது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. எண்ணெய் கொள்முதல் என்பது அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் அமையாது.

    இந்திய எண்ணெய் நிறுவனங்கள், ஐரோப்பிய நிறுவனங்களைப் போலவே, கிடைக்கும் தன்மை, விலை மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.

    அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா என்ற நேரடி கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதையே செய்வார்கள்" என்று முடித்தார். 

    இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 25% இருந்து 18% ஆக குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்கா மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.
    • பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதை சுட்டிக்காட்டி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் தர்மேந்திரா யாதவ், ஜெயா பச்சன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வின் சுதாம பிரசாத் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்திய நலனில் மத்திய அரசு சரண் அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக எழுதப்பட்ட வாசகத்தை வைத்து இருந்தனர். மேலும், பிரதமர் மோடி சரண் அடைந்துவிட்டார் என்ற வாசகத்தையும் அவர்கள் கையில் வைத்து இருந்தனர்.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.

    • அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்தும் விதமாக ஒப்பந்தம் அமைந்துள்ளது.
    • இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தும் என்றும் டிரம்ப் பேச்சு.

    இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு சமீபத்தில் எட்டப்பட்டது. இதுதொடர்பாக இருநாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டன. மேலும், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராக அமெரிக்கா உள்ளது. நாம் ஒரு பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறி வருகிறோம். கடந்த சில மாதங்களில் நமது நிலக்கரி ஏற்றுமதியை வியத்தகு முறையில் அதிகரிக்க இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம்.

    நமது நிலக்கரியின் தரம் உலகில் எங்கும் சிறந்ததாக இருக்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்துவதற்கான ஒரு பகுதியாக இந்தியாவுடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது.

    இந்த ஒப்பந்தங்கள் வெளிநாடுகளில் நிலக்கரி ஏற்றுமதியை கூர்மையாக அதிகரிக்கவும் அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் மாற்றம் விரைவானது மற்றும் தீர்க்கமானது. அது இனி உள்நாட்டு விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை.

    உலகளாவிய ஏற்றுமதியில் கவனம் செலுத்தி அதை அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    • உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது.
    • இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது.

    கடந்த வாரம் அமெரிக்கா - இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வத் தகவலறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. இதில் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை அமெரிக்கா செய்துள்ளது.

    முந்தைய அறிக்கையில், குறிப்பிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா இறக்குமதி வரியைக் குறைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் இந்தப் பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

    இந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது. தற்போது திருத்தப்பட்ட அறிக்கை மூலம் அந்த அச்சம் விலகி உள்ளது.

    முந்தைய அறிக்கையில் விவசாயப் பொருட்கள் என்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு, தொழில்துறை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று மாற்றப்பட்டுள்ளன.

    இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளது என்று முதலில் கூறப்பட்டிருந்தது. தற்போது அது இந்தியா வாங்க விரும்புகிறது அல்லது உத்தேசித்துள்ளது என மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மீதான கட்டாயத்தை ஓரளவு குறைக்கிறது.

    இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் அந்த உறுதிமொழி நீக்கப்பட்டு, டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

    இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பருப்பு வகைகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் இந்தியா ஒப்புக்கொண்டது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.    

    • அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
    • அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.  

    அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.

    சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம். 

    ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.

    அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.

    அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும். 

    மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் டிஜிட்டல் வர்த்தக விதிகள் இந்தியாவின் 21-ஆம் நூற்றாண்டு எதிர்காலத்தை அடகு வைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் வர்த்தக விதிகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா இழந்துவிட்டது.

    இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் தடையின்றி அமெரிக்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் மக்களின் தரவுகள் தான். அமெரிக்காவின் டாலரை பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.

    ஒரு வேலை இந்தியா கூட்டணி அமெரிக்காவுடன் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்திருப்போம்:

    டிரம்ப் அவர்களே, உங்கள் டாலரைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் டாலரைப் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய சொத்து இந்திய மக்களிடம் உள்ள தரவுகள்.

    எங்கள் மக்களின் தரவுகளை நீங்கள் பெற விரும்பினால், எங்களைச் சமமானவர்களாகக் கருதிப் பேசுங்கள். எங்களை உங்களது வேலையாட்களைப் போல நடத்தாதீர்கள்.

    எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    உங்களுக்கு உங்கள் நாட்டு விவசயிகளின் வாக்குகள் வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதைப் போலவே, எங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு.

    இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் எங்களை ஒருபோதும் பாகிஸ்தானுடன் சமமாக வைத்துப் பார்க்காதீர்கள். நாங்கள் ஒரு தன்னாட்சி கொண்ட வல்லரசு என்பதை அங்கீகரித்து சமமாகப் பேசுங்கள் என்று கூறியிருப்போம். 

    ஆனால் மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம், இந்தியர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது. 

    சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதம் நமது மக்களின் தரவுகள் தான். அதை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தைச் சரணடையச் செய்துள்ளார்" என்று தெரிவித்தார். 

    • வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு
    • அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்

    இதையடுத்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

    இடைக்கால ஒப்பந்த அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.

    அதில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைக்கப்படும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், வங்கதேசத்துடன் அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு மீதான வரியை 19% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.

    அதன்படி அமெரிக்காவின் பருத்தி மற்றும் நூற்பு இழைகள் மூலம் வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்குப் பதிலாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
    • ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

    கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியிடன் முடிவடைகிறது.

    இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (பிப்ரவரி 9) உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 3 அன்று, அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7 அன்று அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அம்சங்களை விளக்கினார்.

    பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.

    ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல் என்றும், இது அவையின் உரிமை மீறல் ஆகும் என்றும் திருச்சி சிவா தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

    மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஏற்கனவே அவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸை பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

    சபாநாயகர் பதிலால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். 

    • பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல்
    • இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது

    அமெரிக்கா - இந்தியா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

    இது இந்திய விவசயிகளை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. பருத்தி, பாதாம், வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும் இதனால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

    ஆனால் இந்த ஒப்பந்தம் இந்திய விவசயிகளை நிச்சயம் பாதிக்கும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சம்யுக்த கிசான் மோர்ச்சா, அகில இந்திய கிசான் சபா, பாரதிய கிசான் யூனியன்

    உள்ளிட்ட முக்கிய விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா சாடியுள்ளது.

    அமெரிக்காவிலிருந்து மலிவான சோயாபீன் எண்ணெய், உலர்ந்த தானியங்கள் (DDGS) மற்றும் கால்நடை தீவனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்திய விவசாயிகளின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    அமெரிக்காவின் அனைத்துத் தொழில் துறை மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் அதே வேளையில், இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது

    விவசாயிகளின் நலன்களைக் காப்போம் என்று கூறிவிட்டு, அதற்கு மாறாகச் செயல்படுவதாகக் கூறி, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விவாய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.

    பஞ்சாபை சேர்ந்த மூத்த விவசாய அமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், பால் வளம் மற்றும் விவசாயத் துறைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று அமைச்சர் கூறினாலும், அமெரிக்க உணவுப் பொருட்களின் தடைகளை நீக்க ஒப்புக்கொண்டது பின்வாசல் வழியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வரும் பிப்ரவரி 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். அன்று கிராமங்கள் தோறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும் என்று விவசாயத் அமைப்புகள் அறிவித்துள்ளன.  

    • ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. .
    • மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.

    இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

    ஒப்பந்தப்படி, அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.

    அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும். அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.

    இந்திய விவசாயிகளின் கண்ணோட்டத்தில் இந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை வர்த்தக அமைச்சர் தற்காத்துப் பேசுவது, மிகத் தந்திரமாக உண்மையை மறைக்கும் செயலாகும்.

    முதலாவதாக, இந்த அறிக்கையில் "கூடுதல் பொருட்கள்" என்று ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை எவை என்று விளக்கப்படவில்லை.இது மிகவும் வெளிப்படைத்தன்மை இன்றி, ஏதோ ஒன்று மறைக்கப்படுவதையே இது காட்டுகிறது.

    இரண்டாவதாக,மெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops) மற்றும் பால் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது என்று இதற்குப் பொருள் கொள்ளாமல் வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

    மூன்றாவதாக, அமெரிக்காவிலிருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் DDGS (Distillers Dried Grains with Solubles) இந்தியாவிற்குப் பயனளிக்கும் என்று பெரிதாகப் பேசப்படுகிறது.

    ஆனால், இந்த DDGS என்பது மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இது மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.

    நான்காவதாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சோயாபீன் விவசாயிகள், இந்த DDGS மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.  

    • இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
    • அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.

    இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

    இது ஒரு இடைக்கால ஒப்பந்தம் கூட கிடையாது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework மட்டுமே.

    அறிக்கையின் 2-வது பத்தி மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்கியுள்ளன.

    ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வரைவு ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகச் சாய்ந்துள்ளது மற்றும் இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.

    உதாரணமாக, அனைத்து அமெரிக்கத் தொழில் துறைப் பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.

    ஆனால், இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் மீது அமெரிக்கா 18 சதவீத சுங்க வரியை விதிக்கும். இந்தப் பொருட்களில் ஜவுளி, தோல் பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கும். இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே அமெரிக்கா இந்தச் சுங்க வரியை நீக்கும்.

    குறிப்பிட்ட சில விமானங்கள் மற்றும் விமானப் பாகங்களைத் தவிர, எஃகு , தாமிரம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் மீதான அமெரிக்கச் சுங்க வரிகள் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிகிறது.

    நிலைமை இப்படி இருக்க, இந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework எப்படிக் கொண்டாட்டத்திற்குரிய விஷயமாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

    • அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு.
    • விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கும்.

    அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் உருவாகும் புதிய வாய்ப்புகளால் மேக் இன் இந்தியா வலுப்பெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு நல்ல செய்தி!

    நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு ஜனாதிபதி டிரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    இந்த கட்டமைப்பு நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், MSMEகள், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் இது 'மேக் இன் இந்தியா'வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்.

    இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த கட்டமைப்பு நமக்கு இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும்.

    இந்த கட்டமைப்பு நெகிழ்ச்சியான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். ஒரு விக்ஸித் பாரத்தை உருவாக்குவதை நோக்கி இந்தியா முன்னேறும்போது, எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட, நமது மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கு பங்களிக்கும் உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை இந்தியா காத்திருக்க தயார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஆண்டு பேச்சு வார்த்தைக்கு பிறகு சமீபத்தில் எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மீது பரஸ்பரவரியை விதித்த டிரம்ப், பின்னர் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் அந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

    இதனால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், வர்த்தக பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை உண்டானது.

    இதனால் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் டிரம்ப் பேசி வந்தார். ஆனால், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்தநிலையில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவை டிரம்ப் மிரட்ட முடியாது என்று அமெரிக்க அமைச்சரிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். மேலும் இந்தியாவுக்கு மிரட்டல்களை தொடர்ந்து விடுத்தார். அந்த சமயத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    இரு நாடுகள் இடையே அதிகரித்துள்ள பதற்றத்தை தணிக்க இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை அஜித்தோவல் சந்தித்து பேசினார்.

    அப்போது, வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அல்லது அவரது மூத்த உதவியாளர்கள் இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் கடந்த காலத்தில் கடினமான அமெரிக்க நிர்வாகங்களை இந்தியா கையாண்டிருக்கிறது என்றும் மார்கோ ரூபியோவிடம் அஜித்தோவல் தெரிவித்தார்.

    மேலும், தேவைப்பட்டால் வர்த்தக ஒப்பந்தத்திற்காக டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை இந்தியா காத்திருக்க தயாராக இருப்பதாகவும் அஜித்தோவல் தெரிவித்தார்.

    அதன்பிறகு செப்டம்பர் 16-ந்தேதி பிரதமர் மோடியிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×