என் மலர்
நீங்கள் தேடியது "வர்த்தக ஒப்பந்தம்"
- இந்தியா தனது தேவையில் 40% எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
- எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும்.
மத்திய கிழக்கில் போர் நடப்பதால் உலகம் முழுவதிலும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது தேவையில் 40% எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், இந்தியாவிற்கு மாற்று வழி அவசியமாகிறது.
இந்தியாவுக்கு கூடுதல் எண்ணெய் வழங்குவதாக ரஷியா முன்வந்தது. ஏற்கனவே கப்பலில் ஏற்றப்பட்டு கடலில் தயார் நிலையில் உள்ள ரஷிய எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்பதில் ரஷியா முனைப்பு காட்டும் சூழலில் இந்தியா தயக்கம் காட்டியது.
ரஷிய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என்று அண்மையில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா வாக்குறுதி அளித்தது. இதனால் ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா கணிசமாக குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் அவசர கால அடிப்படையில் அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அனுமதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"இந்த 30 நாள் சலுகை ஏற்கனவே நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் ரஷ்யாவிற்குப் பெரிய நிதி ஆதாயம் கிடைக்காது" என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும் என்று வாஷிங்டன் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை உடனடியாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏற்கனவே சுமார் 2 கோடி பீப்பாய்கள் ரஷிய எண்ணெயை இந்திய நிறுவனங்கள் வர்த்தகர்களிடமிருந்து வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ரஷிய எண்ணெயை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
- அமெரிக்காவுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்த பொறியில் விழ அவசரப்பட்டது ஏன்?
- பல அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய வரிகள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறி பல்வேரு நாடுகள் மீது விதித்தவரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் அவசர கதியில் அமெரிக்காவுடன் இந்தியா ஏன் ஒப்பந்தம் செய்தது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திறனற்ற வெளியுறவு கொள்கையா அல்லது சரணடைதலா? மோடி அரசு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரிகள் தொடர்பான தீர்ப்புக்காக காத்திருக்காமல், அமெரிக்காவுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்த பொறியில் விழ அவசரப்பட்டது ஏன்?
இந்தியாவிற்கான பல அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய வரிகள், கிட்டத்தட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் விவசாயத்தைத் திறந்து விடுதல், 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டம், நமது எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாடு மற்றும் டிஜிட்டல் துறையில் பல வரிச் சலுகைகள் பற்றி அமெரிக்க - இந்திய வர்த்த ஒப்பந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி ஜி இந்தியர்கள் முன் நின்று உண்மையைச் சொல்ல வேண்டும். இந்தியாவின் தேசிய நலன் மற்றும் சுயாட்சியை சமரசம் செய்ய உங்களுக்கு என்ன அல்லது யார் அழுத்தம் கொடுத்தார்கள்? அது எப்ஸ்டீன் கோப்புகளா?
மத்திய அரசு, அதன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து 140 கோடி இந்தியர்களின் சுயமரியாதையையும் நமது விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகங்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனையும் பாதுகாக்கும் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை வழங்குமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை.
- வர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.
இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் அரசு விதித்த கூடுதல் இறக்குதி வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் இந்தியா - அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் சிக்கலை சந்தித்துள்ளது.
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் அடங்கிய அமர்வு, வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபரால் மீற முடியாது.
1974ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் கீழ் அவசர சூழலை பயன்படுத்தி இந்த வரிகளை விதிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று தெரிவித்தது.
மேலும், வரி விதிப்பானது தேசிய பாதுகாப்பு தொடர்பான அவசர நடவடிக்கை என்ற டிரம்ப் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்தார்.
டிரம்ப் பேசியதாவது, நாட்டிற்கு நன்மையான முடிவை எடுக்க துணிச்சல் இல்லாத இந்த நீதிபதிகள் ஒரு அவமானம். அவர்கள் தங்களின் குடும்பத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர்.
தீர்ப்பளித்த நீதிபதிகள் பெயரளிவில் தான் குடியரசுவாதிகள், ஆனால் தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரின் வளர்ப்பு நாய்களாக மாறிவிட்டனர். அவர்களுக்கு தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை.
நான் கோடிக்கணக்கான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன். ஆனால் இந்த நீதிபதிகள் முட்டாள்கள். அவர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.
அதேநேரம் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் எனது கொள்கைக்கு ஆதரவாக நின்ற நீதிபதிகள் தாமஸ், அலிட்டோ மற்றும் கவனோ ஆகியோரை வலிமையும் துணிச்சலும் மிக்கவர்கள்" என்று தெரிவித்தார்.
தீர்ப்பளித்த நீதிபதிகள் பலர் முன்னர் டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டிருந்ததும் அவர்கள் தற்போது டிரம்ப்புக்கு எதிராக தீர்பளித்துள்ளதே டிரம்ப் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும், தான் விதித்த வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று டிரம்ப் பிடிவாதமாகக் கூறியுள்ளார்.
அதேநேரம் அனைத்து நாடுகளுக்கும் தாற்காலிகளமாக 10 சதவீத கூடுதல் வரியையும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- ரஷியாவில் இருந்து இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2.86 பில்லியன் டாலராக இருந்தது.
- இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளன.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் எட்டப்பட்டது. இதில் இந்தியா மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.
இதில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் அபராத வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீதத்தை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்தது.
இந்தியாவுக்கு அமெரிக்கா, வெனிசுலா கச்சா எண்ணெயை விற்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியாவில் ரஷியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் ரஷியாவில் இருந்து இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2.86 பில்லியன் டாலராக இருந்தது.
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது 40.48 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு ஜனவரியில் ரஷியாவின் பொருட்கள் இறக்குமதி 4.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ரஷியாவில் இருந்து இந்தியாவின் மொத்த பொருட்கள் இறக்குமதியில் கச்சா எண்ணை இறக்குமதி 80 சதவீதம் ஆகும். தற்போது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளன.
இதன் காரணமாக ரஷிய இறக்குமதி சரிவை சந்தித்து உள்ளது. ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு வரும் மாதங்களில் கடுமையாக குறையும் என்றும் , இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயுடன் ஒப்பிடும்போது மலிவான வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க விரும்பும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
வெனிசுலா மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு இந்தியா வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்குபவர்களில் முக்கிய நாடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இருவரும் பேசினர்.
- குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.
ரஷிய எண்ணெயை இந்தியா வாங்காது என அமெரிக்கா கூறி வந்தாலும், இந்தியா தரப்பில் தெளிவான பதில் இல்லை.
இதற்கிடையே ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "ரஷியாவின் எண்ணெய் மீது அமெரிக்கா கூடுதல் தடைகளை விதித்துள்ளது.
இந்தியாவுடனான எங்கள் பேச்சுவார்த்தையில், கூடுதலாக ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து இதே மாநாட்டில் மற்றொரு அமர்வில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரூபியோவின் கூற்றை நேரடியாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
ஜெய்சங்கர் கூறியதாவது, "இந்தியாவின் முடிவுகள் எப்போதும் அதன் மூலோபாயத் தன்னாட்சி அடிப்படையிலேயே இருக்கும். இது இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஆழமான கொள்கை.
உலகளாவிய எரிசக்தி சந்தை தற்போது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. எண்ணெய் கொள்முதல் என்பது அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் அமையாது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள், ஐரோப்பிய நிறுவனங்களைப் போலவே, கிடைக்கும் தன்மை, விலை மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா என்ற நேரடி கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதையே செய்வார்கள்" என்று முடித்தார்.
இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 25% இருந்து 18% ஆக குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்கா மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.
- பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.
இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதை சுட்டிக்காட்டி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் தர்மேந்திரா யாதவ், ஜெயா பச்சன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வின் சுதாம பிரசாத் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்திய நலனில் மத்திய அரசு சரண் அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக எழுதப்பட்ட வாசகத்தை வைத்து இருந்தனர். மேலும், பிரதமர் மோடி சரண் அடைந்துவிட்டார் என்ற வாசகத்தையும் அவர்கள் கையில் வைத்து இருந்தனர்.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.
- அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்தும் விதமாக ஒப்பந்தம் அமைந்துள்ளது.
- இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தும் என்றும் டிரம்ப் பேச்சு.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு சமீபத்தில் எட்டப்பட்டது. இதுதொடர்பாக இருநாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டன. மேலும், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:-
உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராக அமெரிக்கா உள்ளது. நாம் ஒரு பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறி வருகிறோம். கடந்த சில மாதங்களில் நமது நிலக்கரி ஏற்றுமதியை வியத்தகு முறையில் அதிகரிக்க இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம்.
நமது நிலக்கரியின் தரம் உலகில் எங்கும் சிறந்ததாக இருக்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்துவதற்கான ஒரு பகுதியாக இந்தியாவுடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் வெளிநாடுகளில் நிலக்கரி ஏற்றுமதியை கூர்மையாக அதிகரிக்கவும் அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் மாற்றம் விரைவானது மற்றும் தீர்க்கமானது. அது இனி உள்நாட்டு விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை.
உலகளாவிய ஏற்றுமதியில் கவனம் செலுத்தி அதை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
- உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது.
- இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது.
கடந்த வாரம் அமெரிக்கா - இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வத் தகவலறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. இதில் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை அமெரிக்கா செய்துள்ளது.
முந்தைய அறிக்கையில், குறிப்பிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா இறக்குமதி வரியைக் குறைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் இந்தப் பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது. தற்போது திருத்தப்பட்ட அறிக்கை மூலம் அந்த அச்சம் விலகி உள்ளது.
முந்தைய அறிக்கையில் விவசாயப் பொருட்கள் என்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு, தொழில்துறை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று மாற்றப்பட்டுள்ளன.
இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளது என்று முதலில் கூறப்பட்டிருந்தது. தற்போது அது இந்தியா வாங்க விரும்புகிறது அல்லது உத்தேசித்துள்ளது என மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மீதான கட்டாயத்தை ஓரளவு குறைக்கிறது.
இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் அந்த உறுதிமொழி நீக்கப்பட்டு, டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பருப்பு வகைகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் இந்தியா ஒப்புக்கொண்டது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.
- அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
- அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.
அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.
அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்.
மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் டிஜிட்டல் வர்த்தக விதிகள் இந்தியாவின் 21-ஆம் நூற்றாண்டு எதிர்காலத்தை அடகு வைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் வர்த்தக விதிகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா இழந்துவிட்டது.
இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் தடையின்றி அமெரிக்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் மக்களின் தரவுகள் தான். அமெரிக்காவின் டாலரை பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.
ஒரு வேலை இந்தியா கூட்டணி அமெரிக்காவுடன் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்திருப்போம்:
டிரம்ப் அவர்களே, உங்கள் டாலரைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் டாலரைப் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய சொத்து இந்திய மக்களிடம் உள்ள தரவுகள்.
எங்கள் மக்களின் தரவுகளை நீங்கள் பெற விரும்பினால், எங்களைச் சமமானவர்களாகக் கருதிப் பேசுங்கள். எங்களை உங்களது வேலையாட்களைப் போல நடத்தாதீர்கள்.
எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
உங்களுக்கு உங்கள் நாட்டு விவசயிகளின் வாக்குகள் வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதைப் போலவே, எங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் எங்களை ஒருபோதும் பாகிஸ்தானுடன் சமமாக வைத்துப் பார்க்காதீர்கள். நாங்கள் ஒரு தன்னாட்சி கொண்ட வல்லரசு என்பதை அங்கீகரித்து சமமாகப் பேசுங்கள் என்று கூறியிருப்போம்.
ஆனால் மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம், இந்தியர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது.
சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதம் நமது மக்களின் தரவுகள் தான். அதை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தைச் சரணடையச் செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.
- வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு
- அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.
இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்
இதையடுத்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.
இடைக்கால ஒப்பந்த அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைக்கப்படும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வங்கதேசத்துடன் அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு மீதான வரியை 19% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
அதன்படி அமெரிக்காவின் பருத்தி மற்றும் நூற்பு இழைகள் மூலம் வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்குப் பதிலாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
- ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியிடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (பிப்ரவரி 9) உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 3 அன்று, அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7 அன்று அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அம்சங்களை விளக்கினார்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல் என்றும், இது அவையின் உரிமை மீறல் ஆகும் என்றும் திருச்சி சிவா தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஏற்கனவே அவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸை பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
சபாநாயகர் பதிலால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
- பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல்
- இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது
அமெரிக்கா - இந்தியா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இது இந்திய விவசயிகளை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. பருத்தி, பாதாம், வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும் இதனால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
ஆனால் இந்த ஒப்பந்தம் இந்திய விவசயிகளை நிச்சயம் பாதிக்கும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சம்யுக்த கிசான் மோர்ச்சா, அகில இந்திய கிசான் சபா, பாரதிய கிசான் யூனியன்
உள்ளிட்ட முக்கிய விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா சாடியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து மலிவான சோயாபீன் எண்ணெய், உலர்ந்த தானியங்கள் (DDGS) மற்றும் கால்நடை தீவனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்திய விவசாயிகளின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
அமெரிக்காவின் அனைத்துத் தொழில் துறை மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் அதே வேளையில், இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது
விவசாயிகளின் நலன்களைக் காப்போம் என்று கூறிவிட்டு, அதற்கு மாறாகச் செயல்படுவதாகக் கூறி, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விவாய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.
பஞ்சாபை சேர்ந்த மூத்த விவசாய அமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், பால் வளம் மற்றும் விவசாயத் துறைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று அமைச்சர் கூறினாலும், அமெரிக்க உணவுப் பொருட்களின் தடைகளை நீக்க ஒப்புக்கொண்டது பின்வாசல் வழியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வரும் பிப்ரவரி 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். அன்று கிராமங்கள் தோறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும் என்று விவசாயத் அமைப்புகள் அறிவித்துள்ளன.






