என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்த அமெரிக்கா.. என்னென்ன தெரியுமா?
    X

    இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்த அமெரிக்கா.. என்னென்ன தெரியுமா?

    • உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது.
    • இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது.

    கடந்த வாரம் அமெரிக்கா - இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வத் தகவலறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. இதில் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை அமெரிக்கா செய்துள்ளது.

    முந்தைய அறிக்கையில், குறிப்பிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா இறக்குமதி வரியைக் குறைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் இந்தப் பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

    இந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது. தற்போது திருத்தப்பட்ட அறிக்கை மூலம் அந்த அச்சம் விலகி உள்ளது.

    முந்தைய அறிக்கையில் விவசாயப் பொருட்கள் என்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு, தொழில்துறை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று மாற்றப்பட்டுள்ளன.

    இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளது என்று முதலில் கூறப்பட்டிருந்தது. தற்போது அது இந்தியா வாங்க விரும்புகிறது அல்லது உத்தேசித்துள்ளது என மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மீதான கட்டாயத்தை ஓரளவு குறைக்கிறது.

    இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் அந்த உறுதிமொழி நீக்கப்பட்டு, டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

    இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பருப்பு வகைகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் இந்தியா ஒப்புக்கொண்டது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.

    Next Story
    ×