என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trade Agreement"

    • வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?.
    • அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது.

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவசரம் காட்டியதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தனது பலவீனமான பிம்பத்தைப் பாதுகாக்க விரக்தியை வெளிப்படுத்தாமல், இன்னும் 18 நாட்கள் மட்டுமே காத்திருந்திருந்தால் இந்திய விவசாயிகள் தங்கள் வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். மேலும் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்பட்டிருக்கும்.

    நேற்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தனது வரிக் கொள்கையை ரத்து செய்த பிறகு, ஜனாதிபதி டிரம்ப் (i) மோடி தனது சிறந்த நண்பர் (ii) இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும் (iii) இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை (ஆபரேசன் சிந்தூர்) நிறுத்தாவிட்டால் அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை அதிகரிப்பதாக மிரட்டி மே 10, 2025 அன்று அவர் தனிப்பட்ட முறையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை நிறுத்தினேன் என அறிவித்துள்ளார்.

    பிப்ரவரி 2 ஆம்தேதி இரவு இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?. அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது. மோடி இவ்வளவு விரக்தியடைந்து, வெள்ளை மாளிகையில் உள்ள தனது நல்ல நண்பரை அணுகி ஒரு திசைதிருப்பலை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது எது?. இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உண்மையில் பிரதமரின் விரக்தி மற்றும் சரணடைதலால் இந்தியா சோதனைக்குள்ளாகியுள்ளது

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    • உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது.
    • இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது.

    கடந்த வாரம் அமெரிக்கா - இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வத் தகவலறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. இதில் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை அமெரிக்கா செய்துள்ளது.

    முந்தைய அறிக்கையில், குறிப்பிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா இறக்குமதி வரியைக் குறைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் இந்தப் பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

    இந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது. தற்போது திருத்தப்பட்ட அறிக்கை மூலம் அந்த அச்சம் விலகி உள்ளது.

    முந்தைய அறிக்கையில் விவசாயப் பொருட்கள் என்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு, தொழில்துறை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று மாற்றப்பட்டுள்ளன.

    இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளது என்று முதலில் கூறப்பட்டிருந்தது. தற்போது அது இந்தியா வாங்க விரும்புகிறது அல்லது உத்தேசித்துள்ளது என மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மீதான கட்டாயத்தை ஓரளவு குறைக்கிறது.

    இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் அந்த உறுதிமொழி நீக்கப்பட்டு, டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

    இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பருப்பு வகைகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் இந்தியா ஒப்புக்கொண்டது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.    

    • வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு
    • அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்

    இதையடுத்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

    இடைக்கால ஒப்பந்த அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.

    அதில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைக்கப்படும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், வங்கதேசத்துடன் அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு மீதான வரியை 19% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.

    அதன்படி அமெரிக்காவின் பருத்தி மற்றும் நூற்பு இழைகள் மூலம் வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்குப் பதிலாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
    • ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

    கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியிடன் முடிவடைகிறது.

    இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (பிப்ரவரி 9) உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 3 அன்று, அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7 அன்று அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அம்சங்களை விளக்கினார்.

    பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.

    ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல் என்றும், இது அவையின் உரிமை மீறல் ஆகும் என்றும் திருச்சி சிவா தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

    மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஏற்கனவே அவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸை பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

    சபாநாயகர் பதிலால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். 

    • பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல்
    • இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது

    அமெரிக்கா - இந்தியா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

    இது இந்திய விவசயிகளை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. பருத்தி, பாதாம், வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும் இதனால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

    ஆனால் இந்த ஒப்பந்தம் இந்திய விவசயிகளை நிச்சயம் பாதிக்கும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சம்யுக்த கிசான் மோர்ச்சா, அகில இந்திய கிசான் சபா, பாரதிய கிசான் யூனியன்

    உள்ளிட்ட முக்கிய விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா சாடியுள்ளது.

    அமெரிக்காவிலிருந்து மலிவான சோயாபீன் எண்ணெய், உலர்ந்த தானியங்கள் (DDGS) மற்றும் கால்நடை தீவனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்திய விவசாயிகளின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    அமெரிக்காவின் அனைத்துத் தொழில் துறை மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் அதே வேளையில், இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது

    விவசாயிகளின் நலன்களைக் காப்போம் என்று கூறிவிட்டு, அதற்கு மாறாகச் செயல்படுவதாகக் கூறி, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விவாய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.

    பஞ்சாபை சேர்ந்த மூத்த விவசாய அமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், பால் வளம் மற்றும் விவசாயத் துறைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று அமைச்சர் கூறினாலும், அமெரிக்க உணவுப் பொருட்களின் தடைகளை நீக்க ஒப்புக்கொண்டது பின்வாசல் வழியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வரும் பிப்ரவரி 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். அன்று கிராமங்கள் தோறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும் என்று விவசாயத் அமைப்புகள் அறிவித்துள்ளன.  

    • ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. .
    • மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.

    இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

    ஒப்பந்தப்படி, அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.

    அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும். அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.

    இந்திய விவசாயிகளின் கண்ணோட்டத்தில் இந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை வர்த்தக அமைச்சர் தற்காத்துப் பேசுவது, மிகத் தந்திரமாக உண்மையை மறைக்கும் செயலாகும்.

    முதலாவதாக, இந்த அறிக்கையில் "கூடுதல் பொருட்கள்" என்று ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை எவை என்று விளக்கப்படவில்லை.இது மிகவும் வெளிப்படைத்தன்மை இன்றி, ஏதோ ஒன்று மறைக்கப்படுவதையே இது காட்டுகிறது.

    இரண்டாவதாக,மெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops) மற்றும் பால் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது என்று இதற்குப் பொருள் கொள்ளாமல் வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

    மூன்றாவதாக, அமெரிக்காவிலிருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் DDGS (Distillers Dried Grains with Solubles) இந்தியாவிற்குப் பயனளிக்கும் என்று பெரிதாகப் பேசப்படுகிறது.

    ஆனால், இந்த DDGS என்பது மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இது மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.

    நான்காவதாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சோயாபீன் விவசாயிகள், இந்த DDGS மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.  

    • இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
    • அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.

    இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

    இது ஒரு இடைக்கால ஒப்பந்தம் கூட கிடையாது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework மட்டுமே.

    அறிக்கையின் 2-வது பத்தி மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்கியுள்ளன.

    ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வரைவு ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகச் சாய்ந்துள்ளது மற்றும் இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.

    உதாரணமாக, அனைத்து அமெரிக்கத் தொழில் துறைப் பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.

    ஆனால், இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் மீது அமெரிக்கா 18 சதவீத சுங்க வரியை விதிக்கும். இந்தப் பொருட்களில் ஜவுளி, தோல் பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கும். இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே அமெரிக்கா இந்தச் சுங்க வரியை நீக்கும்.

    குறிப்பிட்ட சில விமானங்கள் மற்றும் விமானப் பாகங்களைத் தவிர, எஃகு , தாமிரம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் மீதான அமெரிக்கச் சுங்க வரிகள் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிகிறது.

    நிலைமை இப்படி இருக்க, இந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework எப்படிக் கொண்டாட்டத்திற்குரிய விஷயமாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

    • இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
    • 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.

    அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய  பொருட்களை  இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   

    • அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.
    • சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைப்பதாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா மீதான 50 சதவீதம் வரி விதிப்பை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை இந்திய அரசுதானே முதலில் அறிவிக்க வேண்டும். டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    இதற்கு பியூஷ் கோயல் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-

    இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்தேன். அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால் அது நீக்கப்பட்டதை அவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.

    பல தடைகள் மற்றும் பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.

    போட்டி பொருளாதாரத்திற்கான குறைந்த வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகளை விட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவானதாகும்.

    நெருக்கடியின் கீழ் பிரதமர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறார். அவர் மக்களை தவறாக வழி நடத்த விரும்புகிறார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் கவலைப்படவில்லை. ராகுல் காந்தியின் பிரச்சனைதான் என்ன?. எதிர்மறையான மனநிலையால் அவர் சாதிக்க விரும்புவது என்ன? என்பதை மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.

    • பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.
    • மோடிக்கும் டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளோம்.

    இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-

    * நமது போட்டியாளர்களை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை நாம் பெற்றுள்ளோம்:

    * இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கிய விரும்பத்தகாத காட்சிகளால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

    * இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள்.

    * பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.

    * ஒட்டுமொத்த தேசமும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது

    * பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

    * கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களை பிரதமர் மோடி கருத்தில் கொண்டுள்ளார்.

    * அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா, முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களைப் பாதுகாத்துள்ளது

    * வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சகுனம்

    இவ்வாறு பியஷ் கோயல் தெரிவித்தார்.

    • இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50 சதவீதம் கூடுதல் வரி விதித்திருந்தார்.
    • தற்போது அதை 18 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா விதித்த காலக்கெடுவிற்குள் இந்தியா ஒப்பந்தத்திற்கு முன்வரவில்லை.

    இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தார். பின்னர், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார். அதை மீறி வாங்கினால் இதற்கென்று தனியாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார்.

    இருந்தபோதிலும் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இதனால் மொத்தமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்.

    இந்த நிலையில்தான் நேற்றிரவு டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கிறேன் என டிரம்ப் அறிவித்தார்.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை பாஜக-வினர் பாராட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் "அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவது மிக சிறந்த செய்தி. இந்தியாவின் ஏற்றுமதி இனிமேல் அதிகரிக்கும்" என்றார்.

    • இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
    • நாட்டு நலன்கள் பேரம் பேசப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்றிரவு டெலிபோன் மூலம் பேசினார். பின்னர் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

    மத்திய அரசு சார்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் ஒப்பந்தம் குறித்து பதிவிட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

    Zoro Hour முடிந்த பின்னர் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்த தகவல் வாஷிங்டனில் இருந்து பெறப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

    இதற்கு ஆளுங்கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சிகளின் விரக்தி வெளிப்படுகிறது. நல்ல விசயங்களை கூட தவறானதாக பார்க்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டினார்.

    மேலும், இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்பதை இந்த அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் தானாக முன்வந்து ஒரு அறிக்கையை வெளியிடும் என்றார்.

    இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாட்டின் நலன்கள் பேரம் பேசப்பட்டுள்ளன என குரல் எழுப்பினர். அதற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அரசு அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கும்போது, அதை கேட்க வேண்டும் என்றார். மேலும், விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறது. எனினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றார்.

    தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

    ×