என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Protest"

    • பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல்
    • இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது

    அமெரிக்கா - இந்தியா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

    இது இந்திய விவசயிகளை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. பருத்தி, பாதாம், வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும் இதனால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

    ஆனால் இந்த ஒப்பந்தம் இந்திய விவசயிகளை நிச்சயம் பாதிக்கும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சம்யுக்த கிசான் மோர்ச்சா, அகில இந்திய கிசான் சபா, பாரதிய கிசான் யூனியன்

    உள்ளிட்ட முக்கிய விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா சாடியுள்ளது.

    அமெரிக்காவிலிருந்து மலிவான சோயாபீன் எண்ணெய், உலர்ந்த தானியங்கள் (DDGS) மற்றும் கால்நடை தீவனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்திய விவசாயிகளின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    அமெரிக்காவின் அனைத்துத் தொழில் துறை மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் அதே வேளையில், இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது

    விவசாயிகளின் நலன்களைக் காப்போம் என்று கூறிவிட்டு, அதற்கு மாறாகச் செயல்படுவதாகக் கூறி, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விவாய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.

    பஞ்சாபை சேர்ந்த மூத்த விவசாய அமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், பால் வளம் மற்றும் விவசாயத் துறைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று அமைச்சர் கூறினாலும், அமெரிக்க உணவுப் பொருட்களின் தடைகளை நீக்க ஒப்புக்கொண்டது பின்வாசல் வழியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வரும் பிப்ரவரி 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். அன்று கிராமங்கள் தோறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும் என்று விவசாயத் அமைப்புகள் அறிவித்துள்ளன.  

    • மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
    • வண்ணாரப்பேட்டை பகுதியில் திருவையாறு புறவழிச்சாலையில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் திரண்டனர்.

    தஞ்சாவூா்:

    டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி மூடப்பட்டது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டு சம்பா, தாளடி சாகுபடி காலதாமதமாக நடவு செய்யப்பட்டது.

    இதனால் நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதால் மேட்டூர் அணையில் இருந்து இந்த மாதம் இறுதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் விவசாயிகள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் 15 தினங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் திருவையாறு புறவழிச்சாலையில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் திரண்டனர்.

    பின்னர் டிராக்டரை சாலையில் மறித்து வைத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீரை திறந்து பயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகள், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்தோம். தற்போது தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளோம். உடனடியாக தண்ணீர் திறந்தால் மட்டுமே இந்த பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் சாகுபடியை காப்பாற்ற முடியும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் .

    இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கறிக்கோழி வளர்ப்பிற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்தது. இதில் அரசு அலுவலர்கள், விவசாய சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியும், சட்டை மற்றும் சேலைகளில் கருப்பு பேட்ச் அணிந்தும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் கூட்டத்தை துவங்கி வைத்ததும் பேசிய விவசாயிகள், கறிக்கோழி பண்ணை கூலி உயர்வு தொடர்பாக அறவழியில் போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோரிக்கைகளை முன்வைத்தும் கண்ணில் கருப்பு துணி கட்டி வந்ததாகவும், தமிழக அரசு உடனடியாக கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பரமசிவம் கூறுகையில்,

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பிற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கறிக்கோழி வளர்ப்பிற்கு தற்போது வரை 6 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்து சிறையில் அடைத்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். 

    • திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம் என கோஷமிட்டனர்.

    தஞ்சாவூா்:

    கர்நாடகா அரசிற்கு மேகதாதுவில் அணைக்கட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்து தமிழ்நாட்டை பாலைவனமாக்க நினைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், மத்திய அரசையும் கண்டித்து இன்று தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    இதையொட்டி இன்று தஞ்சை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

    பின்னர் ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பியவாறே தடைகள், தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றம், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம் என கோஷமிட்டனர்.

    இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
    • கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் குறித்து பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.

    போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் கிழவி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனாவின் மனுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக பஞ்சாபின் பாதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் இன்று ஆஜரானார்.  நீதிமன்ற விசாரணைக்கு மஹிந்தர் கவுர் சார்பாக அவரது கணவர் வனத்திருந்தார். விசாரணையின்போது தனது கருத்துக்கு கங்கனா மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்கு ஒதுக்கிவைக்கப்ட்டது. 

    மேலும் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே அந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும், நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

    கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார். 5 வருடங்கள் முன் கழிந்து கங்கனா தனது  கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
    • தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு.

    ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் இன்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது;-.

    தமிழ்நாட்டில் பெரும்பா லான நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி 40 கிலோ எடையுள்ள 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவ சாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, சுமை தூக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.

    மத்திய அரசை காரணம் காட்டாமல், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல் மணிகளை தடையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயி கள், தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

    கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபக ரமான விலை வேண்டும் என்பன உள்ளிட்ட விவ சாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, அனை த்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    மேலும் விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கேட்டு 7-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், 5 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்.
    • நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்

    2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், "உங்கள் அறிக்கைகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது வெறும் ரீ ட்வீட் அல்ல. நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்" என்று கூறி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

    • அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் . பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சின்ன சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தினை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு விற்பனை செய்ததை கண்டித்தும், திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அமைந்திருக்கும் காகபுஜண்டா சித்தா மகரிஷி கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க வலியுறுத்தியும் அலுவலக பூட்டை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் வெளியில் நின்ற உதவி கலெக்டர் காரின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    • 'நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை' என்றேன்.
    • கருத்து வேறுபாடு கொண்டவர்களை அச்சுறுத்துவது தனது தந்தையின் குணம் அல்ல.

    'அரசியலமைப்பு சவால்கள்' என்ற தலைப்பில் டெல்லியின் இன்று நடைபெற்ற காங்கிரசின் வருடாந்திர சட்ட மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், "நான் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியபோது, அருண் ஜெட்லி என்னிடம் வந்து என்னை மிரட்டினார். 'நீங்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் போராடினால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்' என்று அவர் கூறினார். நான் அவரைப் பார்த்து, 'நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை' என்றேன்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி மகன் ரோகன் ஜெட்லி பதிலளித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"ராகுல் காந்தி, எனது மறைந்த தந்தை அருண் ஜெட்லி, வேளாண் சட்டங்கள் குறித்து அவரை மிரட்டியதாகக் கூறுகிறார்.

    அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன், எனது தந்தை 2019-ஆம் ஆண்டு காலமானார். வேளாண் சட்டங்கள் 2020-ஆம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டன" என்று ஜெட்லி கூறினார்.

    இது ஒரு தவறான குற்றச்சாட்டு மட்டுமல்ல, மரியாதை இல்லாத செயல் என்றும் ரோஹன் ஜெட்லி குறிப்பிட்டார். கருத்து வேறுபாடு கொண்டவர்களை அச்சுறுத்துவது தனது தந்தையின் குணம் அல்ல என்றும், அவர் எப்போதும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர் என்றும் ரோஹன் ஜெட்லி தெரிவித்தார். 

    • அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் மூன்றரை ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இறுதி அறிவிப்பை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

    கர்நாடகாவில் நீண்ட போராட்டத்தின் பலனாக பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி தாலுகா விவசாயிகள் ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா, அந்தப் பகுதியில் உள்ள சென்னராயப்பட்டணா ஹோப்ளியில் 1,777 ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் அரசின் திட்டம் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    இந்தப் பகுதியில் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்காவை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

    ஆனால் இதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் மூன்றரை ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் விவசாயிகளின் நீண்டகால போராட்டத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சித்தராமையா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இறுதி அறிவிப்பை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

    இழப்பீடு வழங்கிய பிறகு, நிலம் கொடுக்க முன்வரும் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நிலங்களைக் கையகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்திற்குப் பிறகு, நிலம் கையகப்படுத்தும் செயல்முறை முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவதாக சித்தராமையா அறிவித்தார். நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் பாராட்டினார்.

    விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்தின் முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மக்கள் போராட்டத்தால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. 

    • தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    வேளாண் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கண்டன உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், வி.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க தலைவர் முகமது இப்ராஹிம், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பழநிஅய்யா, துணை தலைவர் கோவிந்தராஜ், அறிவழகன், சி.ஐ.டி.யூ அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது
    • அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களாக நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடித்துக் கொண்டார்.

    கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

    இருப்பினும் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவரின் போராட்டம் தொடர்ந்து வந்தது. 70 வயதான அவர் ஏற்கனவே உடல்நலப்பிரச்னைகளுடன் இருந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார்.

    கூட்டத்தில் பேசிய அவர், பஞ்சாப் மற்றும் முழு நாட்டையும் சேர்ந்த விவசாயிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று எனது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முழு மனதுடன் முடிவு செய்துள்ளேன். ஆனால் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். போராட்டதின் வடிவம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.

    மேலும் மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்து பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறது என்றும் மறுபுறம் எங்கள் போராட்டம் இரவில் வலுக்கட்டாயமாக கலைக்கப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    முன்னதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதவில், விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் முன்னரே திட்டமிடப்பட்ட தேதியின்படி மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதாக உறுதியளித்தார். தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

    கடைசியாக கடந்த மார்ச் 19 அன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×