என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka"
- ரோஹித் 3 வருடங்களாக அரபு நாட்டில் வேலை பார்த்து வந்தார்
- தூரத்திலேயே தாயை கண்ட ரோஹித், தாயுடன் விளையாட விரும்பினார்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கந்தபூர் தாலுக்கா. இங்குள்ளது கங்கோலி எனும் கிராமம். கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரத்தில் பஞ்சகங்காவளி ஆறு கடலை சேரும் இடத்தில் இக்கிராமம் அமைந்துள்ளதால் இங்கு மீன்பிடி வியாபாரம் முக்கிய தொழிலாக உள்ளது.
இங்கு வசிப்பவர் சுமித்ரா எனும் மீன் விற்பனை செய்யும் பெண்மணி. இவருடைய இள வயது மகன் ரோஹித்.
ரோஹித் ஒரு அரேபிய நாட்டில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். 3 வருடங்களாக வீட்டிற்கு வராத ரோஹித் சொந்த ஊருக்கு திடீரென திரும்பி வந்தார். ஆனால், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தை கொடுப்பதற்காக தான் ஊர் திரும்பும் தகவலை பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ கூட கூறாமல் தனது சொந்த கிராமத்திற்கு வந்திறங்கினார்.
இவர் வீட்டிற்கு வந்த போது அவர் தாயார் வீட்டில் இல்லை. தினமும் அவர் செய்து வரும் மீன் வியாபாரத்திற்காக சந்தைக்கு சென்றிருப்பதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தாய்க்கு ஒரு ஆனந்த அதிர்ச்சியை கொடுக்க விரும்பிய ரோஹித் தனது முகத்தை ஒரு முகவுரையால் மூடிக் கொண்டு சந்தைக்கு சென்று தாயாரை கண்டார். அங்கு அவர் தாயார் மீன் விற்று கொண்டிருந்தார்.
தூரத்திலேயே தாயை கண்டு மகிழ்ந்தாலும், வேண்டுமென்றே முகத்திலிருந்த மாஸ்கை விலக்காமால் தாயிடம் சென்று "மீன் என்ன விலை?" என கேட்டு வியாபாரம் செய்தார்.
முதலில் மீன் வாங்க வந்திருக்கும் வாடிக்கையாளர் என நினைத்த சுமித்ரா, அந்த குரலை வைத்து சுதாரித்து கொண்டு சந்தேகம் அடைந்து, வாங்க வந்த நபரை உற்று நோக்கினார். ரோஹித் முகத்திரை அணிந்திருந்தாலும், அது தனது மகன் என அறிந்த சுமித்ரா ஓடிச்சென்று அவரை ஆர தழுவிக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ரோஹித் தாயிடம் முதலில் வியாபாரம் செய்வதையும், பின் அவரது தாயார் அவரை அணைப்பது வரை அங்கிருந்தவர்கள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.
எத்தனை வருடங்களானாலும் எந்த சூழ்நிலையிலும் மகனை அடையாளம் காணும் தாய் பாசத்தின் சிறப்பிற்கு ஈடில்லை என இந்த நிகழ்ச்சி குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு.
- தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, "மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் துவங்கும் முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம்," என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூட்டி இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசுவராஜ் பொம்மை, ஹெச்.டி. குமாரசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்களான பசுவராஜ் பொம்மை மற்றும் குமாரசுவாமி ஆகியோர் மற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காவிரி பகுதி அமைச்சர்கள், அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்து இருந்தார்.
- கோபமுற்ற ஆசிரியர், மாணவிகளை கடுமையாக வசைபாடினார் என்று தகவல்.
- சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி கல்வித் துறையிடம் புகார்.
கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் கன்னட மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா இந்துக்களுக்கான நாடு என்பதை கூறி மாணவிகளை பாகிஸ்தானுக்கு போகுமாறு அந்த ஆசிரியர் கூறி இருக்கிறார்.
உருது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகள் வகுப்பறையில் பேசியதாக கூறப்படுகிறது. மாணவிகள் பேசியதால் கோபமுற்ற ஆசிரியர், மாணவிகளை கடுமையாக வசைபாடினார் என்று கூறப்படுகிறது. கன்னடா மொழிப்பாடம் நடத்தி வரும் இந்த ஆசிரியர், மாணவிகளிடம், "பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள். இந்த நாடு இந்துக்களுக்கானது," என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி கல்வித் துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த பள்ளி கல்வித் துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து இருக்கிறது.
"நாங்கள் அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம். அவர் மீது துறை ரீதிலியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கை வெளியான பிறகு, மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பள்ளி கல்வித் துறை அலுவலர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
26 ஆண்டுகள் அனுபவம் மிக்க இந்த ஆசிரியர் உருது பள்ளியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு.
- குமாரசாமி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை தகவல்.
பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் குமாரசாமி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- விடுமுறை தினம் என்பதால் குறைந்த அளவே காவலர்கள் இருந்தனர்
- கீழே விழுந்ததில் காலில் அடிபட்டும் ஆட்டோவில் தப்பி சென்றார்
கர்நாடகாவின் மத்திய பகுதியில் உள்ள நகரம் தாவணகெரே.
இங்குள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு பாலியல் தாக்குதல் புகார் வந்தது. புகாரை விசாரித்த காவல் அதிகாரிகள், அது உண்மை என கண்டறிந்து வசந்த் என்பவரை கைது செய்து தாவணகெரே நகர சப்-ஜெயிலில் அடைத்தனர்.
அந்த சிறையின் சுற்றுச்சுவர் 40 அடி உயரம் கொண்டது.
இந்த சிறையில் நேற்று முன் தினம் குறைந்த அளவே சிறை காவல் அதிகாரிகள் இருந்தனர். விடுமுறை தினம் என்பதால் வெளியிலும் குறைவான அளவே கடைகள் திறந்திருந்தன.
இதனையறிந்து வசந்த் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் தீட்டினார்.
அதன்படி, 40 அடி உயர சுற்றுச்சுவரை சிறைக்குள் எப்படியோ ஏறிய வசந்த், தப்பிப்பதற்காக அதன் உச்சியிலிருந்து துணிந்து கீழே குதித்தார். இந்த முயற்சியில் கீழே விழுந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இருந்தும் அங்கிருந்து வெளியே சென்று ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி தப்பித்து சென்றார்.
இதையடுத்து சிறைக்கைதி தப்பி சென்றதாகவும், அவரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பசவநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறையால் ஒரு புகார் அளிக்கப்பட்டது. வசந்த் ஏறி குதித்த காட்சியும், காலில் அடிபட்டாலும் தப்பி செல்வதும், சிறையின் சுற்றுச்சுவர் அருகே ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.
இதனை கொண்டும், விசாரணையின் மூலமாகவும் வசந்த் ஹரிஹரா தாலுக்காவில் உள்ள துக்காவதி பகுதிக்கு சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற காவல்துறையினர் அவர் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்து பசவநகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
துரிதமாக செயல்பட்டு தப்பி சென்ற கைதியை 24 மணி நேரத்தில் காவல்துறை மீண்டும் பிடித்தது பலராலும் பாராட்டப்படுகிறது.
அதே நேரம், வசந்த் சிறையிலிருந்து தப்பிக்க உயரமான சுவற்றிலிருந்து கீழே குதிப்பதும், காலில் அடிபடுவதும் பதிவான காட்சி அடங்கிய கண்காணிப்பு கேமரா வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- திருமண வலைதளம் மூலம் அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார்
- அந்த பொறியாளர் ரூ.1 கோடிக்கு மேல் அந்த பெண்ணிற்கு அனுப்பினார்
கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், பிரிட்டனில் வேலை செய்து வந்தார்.
தொழில்முறை பயிற்சிகளுக்காக பெங்களூருவிற்கு வந்திருந்த அவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு திருமண வரன் தேடும் வலைதளத்தில் விவரங்களை பதிவு செய்து பொருத்தமான பெண்ணை தேடிவந்தார்.
திருமண வலைதளம் மூலம் அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். பொறியாளரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த அந்த பெண் தான் தந்தையில்லாமல் தாயுடன் மட்டும் வாழ்வதாக கூறியிருந்தார்.
தாயின் அவசர மருத்துவ தேவைக்காக ஜூலை 2-ம்தேதி ரூ.1500 வேண்டும் என பொறியாளரிடம் கேட்டு பெற்று கொண்டார். மீண்டும் ஜூலை 4-ம் தேதி பொறியாளருடன் வீடியோ காலில் தொடர்பு கொண்டார்.
அப்போது அந்த பொறியாளரின் ஆசையை தூண்டும் விதமாக ஆடையில்லாமல் தோன்றி, அவருடன் ஆபாசமாக உரையாடினார். ஆனால் அந்த உரையாடல்களை பொறியாளருக்கு தெரியாமல் தனது ஸ்மார்ட்போனில் பதிவு செய்து கொண்டார்.
பிறகு, இந்த பதிவை பொறியாளருக்கு அனுப்பி, அவரின் பெற்றோருக்கு அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு பெரும் தொகை வேண்டும் என கேட்டு அவரை பிளாக்மெயில் செய்தார். இதனையடுத்து அந்த பொறியாளர் ரூ.1 கோடிக்கு மேல் அந்த பெண்ணிற்கு அனுப்பினார். அவள் தொடர்ந்து மிரட்டவே, ஒரு கட்டத்தில் அந்த பொறியாளர் காவல்துறையிடம் புகாரளித்தார். உடனே வழக்குப்பதிவு செய்த காவல்துறை அப்பெண்ணை தேடிவருகிறது.
மொத்த தொகையில் சுமார் ரூ.30 லட்சம் வரை அப்பெண் ஏற்கனவே செலவழித்து விட்டார். மீதம் உள்ள சுமார் ரூ.84 லட்சம் மீட்கும் முயற்சியில் அப்பெண்ணின் வங்கி கணக்கை முடக்கி விட்டோம். ஒருவரை நேரில் சந்தித்து முழு விவரங்களும் அறியாமல் அலைபேசியிலேயே பேசி, இதுபோன்ற தொடர்புகளை வளர்த்து கொள்வதோ, பண பரிவர்த்தனைக்காக நம்புவதோ தவிர்க்கப்பட வேண்டும்.
அதேபோன்று, மறுமுனையில் பேசுபவரின் நடவடிக்கைகள் சரியில்லையென்றாலும் உடனே தொடர்பை துண்டித்து கொள்ள வேண்டும் என இச்சம்பவம் குறித்து பேசும்போது வைட்ஃபீல்ட் பகுதி காவல்துறை துணை ஆணையர் கிரீஷ் தெரிவித்தார்.
- ஐந்து பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
- ஜெயிலில் இருக்கும்போது பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியவர்கள்
கர்நாடகாவில் பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் குண்டு வைக்க திட்டமிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் 5 பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்தபோது, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து நான்கு வால்கி-டால்கி, 7 நாட்டு துப்பாக்கி, 42 தோட்டாக்கள், 2 கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், 2 சேட்டிலைட் போன்கள், 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கூறிய கருத்து மாநிலத்தில் போராட்டத்தை தூண்டி உள்ளது.
- வயதான பசுக்களை வெட்டுவது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் கால்நடைகளை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளை மட்டுமே வதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் வெங்கடேஷ், பசு வதை தொடர்பாக கூறிய கருத்து மாநிலத்தில் போராட்டத்தை தூண்டி உள்ளது. எருமை மாடுகளை வெட்டலாம் என்றால் பசுக்களை ஏன் வெட்டக்கூடாது? என அவர் பேசியிருந்தார்.
'முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மசோதாவில், எருமை மாடுகளை வெட்ட அனுமதித்துள்ளனர். ஆனால் பசு வதை செய்யக்கூடாது என கூறியுள்ளனர். அதுபற்றி விவாதித்து முடிவு எடுப்போம். வயதான பசுக்களை வெட்டுவது, அந்த கால்நடைகளை நிர்வகிப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்' என்றும் அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த கருத்திற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததுடன், கடந்த இரு தினங்களாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது, முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தில் தெளிவு இல்லை என்றும், அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
- பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை.
- கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது மேகதாது அணை திட்டம்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பேன்."
"விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.
மகராஷ்டிரா மாநிலம் கோலக்பூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயமடைந்த ஓட்டுநர் உள்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.