search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka"

    • இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா, அரியானா அணிகள் மோதின.
    • இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும், அங்கித் குமார் தலைமையிலான அரியானா அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித் குமார் 48 ரன்னும், ஹிமான்ஷு ரானாவும் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் 86 ரன்னும், ஸ்மரன் ரவிச்சந்திரன் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், கர்நாடகா அணி 47.2 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் மகாராஷ்டிரா, விதர்பா அணிகள் மோதுகின்றன.

    • டாடா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது.
    • டாடாவின் நர்சபுரா ஆலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது.

    இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

    இந்நிலையில், கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.

    நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகமாகும்.

    இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.

    2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

    • முதலில் பேட் செய்த கர்நாடகா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியும், குருணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அனீஷ் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பரோடா அணி சார்பில் ராஜ் லிம்பானி, அதித் ஷேத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. ஷாஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அதித் ஷேத் அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் பரோடா அணி 49.5 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகம் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    • அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை
    • குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது.

    கர்நாடக பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் தனது இறப்பு சான்றிதழுடன் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பெலகாவி துணை ஆணையர் முகமது ரோஷனின் அலுவலகத்திற்கு தனது இறப்புச் சான்றிதழுடன் சென்ற கணபதி ககட்கர் என்ற அந்த நபர் சென்றுள்ளார்.

    டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் செய்த சிறு பிழையால் கணபதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கணபதி அவர் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பல்வேறு அரசாங்க சலுகைகளை இழந்தார்.

    கணபதியும் அவரது சகோதரர்களும் 1976 ஆம் ஆண்டு காலமான தங்கள் தாத்தா விட்டுச் சென்ற நிலத்திற்கு வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்தபோது இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது.

     

    அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை, மேலும் அவரது மூன்று மகன்களும் இறுதியில் கணபதி உட்பட அவரது எட்டு பேரன்களுக்கு சொத்தை விட்டுச் சென்றனர்.

    நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றும் முயற்சியில், பேரன்கள் தங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் காணாமல் போனதால் தாமதத்தை எதிர்கொண்டனர். அதன்பின் நீதிமன்றத்தை அணுகினர். புதிய இறப்பு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இருப்பினும், ஹிண்டல்காவில் உள்ள வருவாய் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டர் ஒருவர் மறைந்த தாத்தாவின் ஆதார் எண்ணுக்குப் பதிலாக கணபதியின் ஆதார் எண்ணை தவறுதலாக பதிவுசெய்துள்ளார்.

    இதனால், குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றும் பலமுறை முயற்சி செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கடத்த 2023 இல் கணபதி அந்த எழுத்தர் செய்த பிழையை கண்டுபிடித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திங்களன்று, அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருடன் கணபதி, துணை கமிஷனர் ரோஷனை அணுகினார். அவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார். 

    • வனத்துறையினரின் உதவியுடன் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
    • தப்பி ஓடமுயன்ற சிறுத்தையின் வாலை ஆனந்த என்ற நபர் பிடித்தார்.

    கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது ஆனந்த என்ற நபர் துணிச்சலுடன் செயல்பட்டு தப்பி ஓட முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து தடுத்து நிறுத்தினார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    சில நாட்களாக அந்த கிராமத்தில் சிறுத்தை உலா வந்து கொண்டிருந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து வனத்துறையினரின் உதவியுடன் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.

    அப்போது தப்பி ஓடமுயன்ற சிறுத்தையின் வாலை ஆனந்த என்ற நபர் பிடித்தார். உடனடியாக வலை வீசி வனத்துறையினர் சிறுத்தையை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட சிறுத்தையை காட்டிற்குள் வனத்துறையினர் விட்டனர்.

    கர்நாடகாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுத்தை தாக்கி 52 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய 'வரிசை வளாகத்தை' ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
    • சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை

    விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என்பதால், விஐபி தரிசன கலாச்சாரத்தை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

    கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய 'வரிசை வளாகத்தை' குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த வசதி 'ஸ்ரீ சாநித்யா' என்று அழைக்கப்படுகிறது.

    இதனையடுத்து உரையாற்றிய ஜக்தீப் தன்கர், "ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவது சமத்துவம் எனும் கருத்தை இழிவுபடுத்துகிறது. சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
    • பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

    எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் கூட்டமான இடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    • கழிவறைக்கு அருகில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரப்பா தகாத முறையில் நடந்துள்ளார்.
    • உள்துறை அமைச்சர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது

    கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாவகடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    துமகுரு மாவட்டம் மதுகிரி பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராமச்சந்திரப்பா இந்த வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டுள்ளார்.

    புகார் அளிக்க வந்த அந்த பெண்ணை அலுவலக கழிவறைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமச்சந்திரப்பா தகாத முறையில் வற்புறுத்தி நடந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதையும் அங்கிருந்த நபர் ஒருவர் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வைரலாக பரவி வருகிறது.

    கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டமான துமகுருவில் நடந்த இந்த சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோன்ற கொடுமைகளை புரிவதை பலர் கண்டித்துள்ளனர்.

    வீடியோ வைரலானதைத் தொடர்ந்து டிஎஸ்பி ராமச்சந்திரப்பா தலைமறைவானர். இந்த சம்பவத்தில் ராமச்சந்திரப்பா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மதுகிரி போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • ஏன் வேறு ரூட்டில் செல்கிறீர்கள் என பலமுறை கேள்வி கேட்டும், டிரைவர் பதிலளிக்கவில்லை
    • வாகனம் நாகவாராவை அடைந்தபோது, ​​​​ஓட்டுனர் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மேம்பாலம் நோக்கி திரும்பினார்.

    பெங்களூரில் டிரைவர் தப்பான வழியில் சென்றதால் ஓடும் ஆட்டோவில் இருந்து 30 வயது பெண் ஒருவர் குதித்துள்ளார்.

    நேற்று [வியாழக்கிழமை] இரவு ஹோரமாவில் இருந்து தனிசந்திராவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக நம்ம யாத்ரி செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தார்.

    இருப்பினும், ஓட்டுநர் வழக்கமான வழியைப் பின்பற்றாமல், ஹெப்பல் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார். ஏன் வேறு ரூட்டில் செல்கிறீர்கள் என பலமுறை கேள்வி கேட்டும், டிரைவர் பதிலளிக்கவில்லை. டிரைவரின் சிவந்த கண்களையும் அவர் போதையில் இருந்ததையும் அந்தப் பெண் கவனித்தார். வாகனம் நாகவாராவை அடைந்தபோது, ஓட்டுனர் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மேம்பாலம் நோக்கி திரும்பினார்.

     

    வண்டியை நிறுத்துமாறு பெண் கெஞ்சியும் ஓட்டுநர் கேட்கவில்லை. எனவே அச்சமைடைந்த அந்த பெண் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான முடிவை எடுத்தார்.

    தாழ்வான பாதையில் ஆட்டோ மெதுவாகச் சென்றபோது, அப்பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்தார். அதிஷ்டவசமாக பெரிய காயங்கள் எதுவுமின்றி அவர் உயிர்பிழைத்துள்ளார். பெண் வெளியே குதித்த பிறகு, டிரைவர் அவளை அணுகி ஆட்டோவுக்கு திரும்பும்படி சமாதானப்படுத்த முயன்றார்.

    ஆனால் அதை புறக்கணித்த பெண் வேறு ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார். இந்த அச்சமூட்டும் அனுபவத்தை பெண்ணின் கணவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இரவு 9 மணிக்கு என் மனைவிக்கு இது நடந்துள்ளது, இன்னும் எத்தனை பெண்கள் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று பெங்களூரு போலீசை டேக் செய்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உதவிக்கு எங்களை DM செய்யுங்கள் என்று நம்ம யாத்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

    • ஜனவரி 5ம் தேதி முதல் அரசு பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு.
    • எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    வரும் ஜனவரி 5ம் தேதி முதல் அரசு பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மே 31 அன்று பெங்களூரு விமானநிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.
    • மக்களவை தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    ஆனால் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்டபெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார். அந்த சமயத்தில் அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்தார்.

    இதுதொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், "எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. சட்ட ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாம் என் கவனத்திற்கு வந்தது. எனவே எங்கிருந்தாலும் நாடு திரும்பவேண்டும்" என்று கூறியிருந்தார்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.

    இதற்கிடையே மே மாதம் 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மே 31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார்.

    அதன்படி மே 31 அன்று பெங்களூரு விமானநிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வந்திறங்கியதும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் அவரை கைது செய்தனர்.

    இதனிடையே "எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை" என்று பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா கர்நாடக சட்டமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா முதற்கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இறுதி வாக்குகள் எண்ணப்படும் சமயத்தில் அவர் பின்னடைவை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் உள்ளடக்கிய 2,144 பக்கங்கள் அடங்கிய 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தனர்.

    அந்த குற்றப்பத்திரிகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி மீண்டும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதை நிரூபிக்கும் விதமாக அதில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக ரேவண்ணாவின் மனைவி பவானி மூலம் விடுதி ஒன்றும் பணியில் சேர்ந்த பெண் பின்னர் ரேவண்ணாவின் வீட்டில் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.

    பணியில் சேர்ந்த பெண்ணை 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. 2020 இல் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா அதை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த பெண், தான் இங்கு நடந்ததை வெளியே சொல்லப் போவதாகக் கூறியுள்ளார்.

    அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா, இதை நீ வெளியே சொன்னால் உனது கணவனை சிறையில் தள்ளுவேன், உனக்கு என்ன செய்தேனோ அதையே உனது மகளுக்கும் செய்வேன். எந்த வழக்காக இருந்தாலும் அதை எப்படி மூட வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு எம்.பி [பாராளுமன்ற உறுப்பினர்] என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு முறையும் அந்த பெண்ணை குறிப்பிட்ட உள்ளாடை [lingerie] அணியவைத்து தான் பலாத்காரம் செய்யும்போது சிரித்த மாதிரி இருக்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இந்த கொடூரங்களை அரங்கேற்றியுள்ளான். இதை வெளியில் சொன்னால் ஒவ்வொரு முறையும் தான் எடுத்த வீடியோ பதிவுகளை வெளியிட்டுவிட்டேன் என்று கூறி தொடர்ச்சியாக பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பிரஜ்வல் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து முதன்முதலில் தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்து இந்த கொடூரங்களை செய்துள்ளான் என்று அந்த நிகழ்ச்சியில் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ஒருவரின் வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

    வழக்கு விசாரணையின் இடையே ஜாமின் கோரி பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் விசாரணையில் தான் உள்ளது. 2025 ஆம் ஆண்டிலாவது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • பாஜக எம்.எல்.ஏ.மீது முட்டை வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா வந்திருந்தார். அப்போது அங்கிருந்த சில மர்ம நபர்கள் எம்.எல்.ஏ மீது முட்டைகளை வீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முனிரத்னா மீது முட்டை வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய எம்.எல்.ஏ. முனிரத்னா, "இது ஒரு கொலை முயற்சி. கிட்டத்தட்ட 150 பேர் என்னை கொலை செய்ய வந்திருந்தனர். எனது ஆதரவாளர்களும் போலீஸ்காரர்களும் இல்லையென்றால் இந்நேரம் என்னை கொலை செய்திருப்பார்கள். இந்த விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டீ.கே. சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டீ.கே. சுரேஷ் சம்பவந்தப்பட்டுள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.

    ×