என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka"
- அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் முழுவதும் வெளியேற்றம்.
- கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறப்பு
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.
கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி போன்ற அணைகள் நிரம்பிவிட்டன. அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 1,25,569 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை நிரம்பியுள்ளது. அந்த அணையின் 33 மதகுகள் திறக்கப்பட்டு ஒரு லட்சம் கனஅடி நீர் துங்கபத்ரா ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஹம்பியில் உள்ள வரலாற்று சின்னங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கட்டபிரபா, மல்லப்பிரபா, கிருஷ்ணா, காவிரி, சுபா, வராகி மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. கடலோர பகுதிகளில் உள்ள அணைகளும் நிரம்பி வழிவதாக கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர்.
- தட்சிண கன்னடா பகுதியில் பாஜகவினர் போராட்டம்
தட்சிண கன்னடா:
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மாலை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த படுகொலையை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெல்லாரே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலையை கண்டித்து தட்சிண கன்னடா பகுதி பாஜகவினர் சாலை மறியல் உள்ளிடட் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில்,பிரவீன் நெட்டாரு படுகொலைக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரவீன் நெட்டாரு படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமது டுவிட்டர் பதிவில் பொம்மை குறிப்பிட்டுள்ளார். கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், விரைவில் நீதி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
- காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
- காவிரி நீர் வரத்து அதிகரிப்பதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு.
மாண்டியா:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன.
அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 49 ஆயிரத்து 244 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரத்து 356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேறும் மதகுகள் பகுதியில் மூவர்ண கொடியின் நிறத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இது காண்போரை கவர்ந்து வருகிறது.
இதுபோன்று, கபினி அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 847 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளிலிருந்தும், தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடையும் என தெரிகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அபாயம் உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
- தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு.
- கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 34,304 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15,727 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஓட்டல் வரவேற்பு பகுதியில் சந்திரசேகர் குருஜியை இரண்டு பேர் கத்தியால் மீண்டும் மீண்டும் குத்தினர்.
- கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
ஹுப்ளி:
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜியை ஹுப்ளியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரண்டு பேர் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்து தப்பி ஓடினர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சந்திரசேகரை வரவேற்பது போல் நடிக்கும் இரண்டு பேர், திடீரென அவரை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்திய காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார் இந்த கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மஞ்சுநாத் மாரேவாட் மற்றும் மஹந்தேஷ் சிரூர் ஆகியோரை பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க்கா பகுதியில் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் ஹூப்ளிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் கமிஷனர் லாபு ராம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பாகல்கோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் குருஜி மும்பையில் வசித்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது குடும்பத்தில் குழந்தை ஒன்று இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் ஹுப்ளி வந்திருந்தார்.
இந்நிலையில் சந்திரசேகர் குருஜியை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு கொடூரமான செயல் என்று தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்கிறது
- மேகதாது அணை தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும்.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்சநீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்டவிரோதமானதாகும்.
இதுதொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணியக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கிறேன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். அது தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரியின் உரிமையைக் காக்கத் தமிழக அரசு தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் அருகே கரிஞ்சா மலையில் அமைந்துள்ள சரிஞ்சேஸ்வரா கோயில் வளாகத்தில் கடந்த மாதம் வாலிபர்கள் நான்கு பேர் காலணிகள் அணிந்தபடி நுழைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அதனை வீடியோ எடுத்து கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி அன்று சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதைதொடர்ந்து, மங்களூரு நகரத்தை சேர்ந்த நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் பகவான் சோனாவானே கூறியதாவது:-
புனித வழிபாட்டுத் தலத்துக்குள் காலணிகளை அணிந்து சென்ற புகாரில், புஷர் ரெஹ்மான் (20), இஸ்மாயில் அர்ஹமாஸ் (22), முகமது தானிஷ் (19), முகமது ரஷாத் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழிபாட்டு தலம் அல்லது புனிதமான ஒரு பொருளை அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது அசுத்தம் செய்தல், ஒரு வகுப்பினரின் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வாலிபர்கள் மீது புன்னாலகட்டே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.
காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஊடகங்கள், இந்த கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று செய்திகளை வெளியிடுகிறீர்கள். உண்மை நிலையை அறிந்து செய்தி வெளியிடுங்கள்.
இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். மண்டியாவில் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
இவ்வாறு அனிதா குமாரசாமி கூறினார்.