என் மலர்
உத்தரப் பிரதேசம்
- 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், சிறுமி ஒருவரை கேலி செய்த சிறுவர்களின் தாயாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்களுக்குச் நல்லொழுக்கம் கற்பிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களது 4 தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
காவல் ஆய்வாளர் அஜய்பால் சிங் பேசுகையில், "இந்தச் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். சிறுவர்களை நல்வழிப்படுத்தத் தவறிய பெற்றோரைத் தண்டிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறோம். குழந்தைகளுக்குச் சிறந்த மதிப்புகளைப் போதிக்காத பெற்றோர்களே இதற்குப் பொறுப்பு," என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- லக்னோவில் நடக்க இருந்த 4-வது டி20 போட்டி கடும் பனியால் கைவிடப்பட்டது.
லக்னோ:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே லக்னோவில் நடைபெற இருந்த 4-வது டி20 போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஆடுகளத்தை நடுவர்கள் 6 முறை ஆய்வுசெய்த பிறகே போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கைவிட்டனர். 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவேண்டும். ஆனால் இரவு 9.25 மணி வரை நடுவர்கள் ஆட்டத்தை நடத்த முடியுமா என ஆய்வு செய்தனர்.
ஆனால் கடும் பனி நிலவியதால் போட்டியை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
போட்டி கைவிடப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து பிசிசிஐ மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
போட்டி நடக்காததால் டிக்கெட்டுக்கு உரிய பணத்தை திரும்ப வழங்குவது இந்திய கிரிக்கெட் வாரியமா அல்லது உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் டிக்கெட்டுக்கு உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமே முழு பொறுப்பு என கிரிக்கெட் வாரியம் கூறியது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்ற ரசிகர்களுக்கு அதற்குரிய பணம் அதே வழியில் திரும்ப வழங்கப்படும். அது தொடர்பான விவரங்கள் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு அவர்களது இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என உத்தர பிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் பிரேம் மனோகர் குப்தா தெரிவித்தார்.
கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கியவர்கள் வரும் 20 முதல் 22-ம் தேதி வரை லக்னோ மைதானத்தில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து தேவையான விவரங்களைத் தெரிவித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
- காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
- வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பர்தா அணியாத மனைவி மற்றும் 2 மகள்களை நபர் ஒருவர் கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஷாம்லியில் கந்த்லா எல்லைக்குட்பட்ட காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் டிசம்பர் 9 அன்று தாஹிரா சொந்த ஊர் சென்றுள்ளார். ஹிஜாப் அணியாமல் அவர் வீட்டை விட்டு சென்றதால் பரூக் ஆத்திரத்தில் இருந்துள்ளார். தாஹிரா வீடு திரும்பியதும் இதுகுறித்து பரூக் வாக்குவாதம் செய்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 10 ஆம் தேதி பரூக், வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனைத் தடுக்க முயன்ற 12 வயது மகளையும் சுட்டுக்கொன்றார். பின்னர், தனது 5 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
கொலை செய்த பிறகு, மூன்று உடல்களையும் வீட்டின் உள்ளே ஏற்கனவே திட்டமிட்டு தோண்டி வைத்த குழியில் புதைத்துவிட்டு, கடந்த சில நாட்களாக எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். தாஹிரா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என்று பரூக்கின் தந்தை நேற்று முன் தினம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதைதொடர்ந்து நடந்த விசாரணையில் வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலீசார் விசாரணையின் போது, தனது மனைவி புர்கா அணியாமல் வெளியே சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாகப் பரூக் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நிதி நெருக்கடி மற்றும் பணப் பிரச்சனைகளால் தம்பதியிடையே ஏற்கனவே வாக்குவாதம் இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே தாஹிராவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரூக் மீது கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது.
லக்னோ:
இந்தியா-தென் ஆப்பி ரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூ சண்டிகரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாததால் அக்சர் படேல் விலகியுள்ளார். கடந்த ஆட்டத்திலும் அவர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது அணிக்கு தேர்வாகியுள்ளார்.
31 வயதான ஷாபாஸ் அகமது 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். நாளைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஏனென்றால் 3-வது போட்டியில் அக்சர் படேல் இடத்தில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். முதல் 2 ஆட்டத்திலும் சொதப்பிய சுப்மன் கில் கடந்த போட்டியில் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.
கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், மில்லர், யான்சென், நிகிடி, டொனவன் பெராரியா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் 34 டி20 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
- 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
- மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து தீவிபத்துக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரா போலீசார் கூறுகையில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் தீயில் எரிந்து சேதமாயின. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
- பலரும் மணப்பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர்.
இன்றைய நவீன காலத்திலும் வரதட்சணை வாங்கி தான் திருமணம் முடிப்பேன் என்று சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்து திருமணமே நின்றுபோய் பேசு பொருளாகி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன் திருமணக்கோலத்தில் ஊர்வலமாக வந்து மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட தயாராகிறார்.
அப்போது திடீரென மணமகன் எனக்கு 20 லட்சம் ரொக்க பணமும் ஒரு காரும் தந்தால் தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடிக்கிறார். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளின் தந்தை மணமகனின் காலில் விழுந்து கெஞ்சுகிறார் என் மகளை திருமணம் பண்ணிக்கோங்க மாப்பிள்ளை என்று... ஆனால் அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் எனக்கு பணம் தான் முக்கியம் என்று சொல்கிறார்.
இதனை பார்த்த மணப்பெண் எனக்கு இந்த திருமணம் வேண்டாம். பண ஆசை பிடித்த இவரிடம் என்னால் நிம்மதியாக வாழமுடியாது என்று கூறி தனது தந்தையை அழைத்துச் செல்கிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பலரும் அந்த மணப்பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர்.
- பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
- பிருந்தாவனத்தின் கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தை பிரசாதமாக பெற்றார்.
லக்னோ:
அது ஒரு தனியார் அலுவலகம். அங்கு பணிபுரியும் சுப்ரமணிக்கு மறுநாள் திருமணம். அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கு பத்திரிகை வைத்து, கண்டிப்பாக திருமணம், வரவேற்பு ஆகியவற்றுக்கு வரும்படி அழைப்ப்பு விடுத்திருந்தான்.
திருமணத்துக்கு முந்தைய தினம். அலுவலகத்தில் மாலை நேரம் இடைவேளை. டீக்கடையில் நின்று சூடாக வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மகேஷ். அப்போது எதிரில் கந்தன் வருவதைக் கண்டான்.
வாடா கந்தா, சாயந்தரம் சுப்ரமணி ரிசப்ஷன் எப்படி போறே? என கேட்டான். அனைவருடன் தான் செல்ல வேண்டும் என பதிலளித்தான் கந்தன்.
கல்யாணத்தை பண்ணி பார், வீட்டை கட்டிப் பார்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்கன்னு பேச்சை தொடர்ந்தான் மகேஷ்.
ஆமாண்டா, எவ்வளவு செலவு? எதையும் சுருக்க முடியாதுடா. கண்டிப்பா செய்தே ஆகணும். இல்லைன்ன ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குறை சொல்ல ஆரம்பிச்சுடறாங்க என்றான் கந்தன்.
ஆமாடா, இப்படியும் திருமணங்கள் நடக்குற வேளையில், சில விநோதமான திருமணங்களும் நடக்குது பார் அதுதான் ஆச்சரியம். போன வாரம் கூட உத்தர பிரதேசத்தில் அப்படி ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துச்சு என்றான் மகேஷ்.
அப்படி என்னடா விநோதம் என கேட்டான் கந்தன்.
உ.பி.யில் நடந்த விநோதமான திருமணம் குறித்து மகேஷ் கூறியதன் சுருக்கம் இதுதான்:
இந்தியா என்பது பல்வேறு கலாசாரங்களும் மொழிகளும் ஒன்றிணைந்த ஒரு நாடு. அதனால்தான் இங்கு மாநில வாரியாக உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி என அனைத்திலும் வேறுபாடு இருக்கிறது.
இந்திய கலாசாரத்தில் திருமண விழா என்பது மிக முக்கிய விஷயமாக உள்ளது. திருமணத்தில் மாறுதல்கள் இருந்தாலும் இந்தியா முழுவதும் திருமணம் குறித்த முக்கியத்துவம் மாறுவதில்லை. வடமாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் விநோத திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர்மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார் பிங்கி என்ற இளம்பெண்.

உ.பி.யின் படோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி சர்மா (28). இவருக்கு திருமணம் செய்துவைக்க பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வந்துள்ளனர் அவரது பெற்றோர். பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
பட்டப்படிப்பை முடித்துள்ள பிங்கி சர்மா 3 மாதத்துக்கு முன் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றார். அப்போது கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தைப் பிரசாதமாக பெற்றார்.
காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்தேன். காய்ச்சல் குணமானது எனக்கூறிய அவர், இந்த சம்பவங்கள் கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என உறுதியாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய பிங்கி, இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்ததார்.
பிங்கியின் இந்த முடிவு பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்தது. அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்தனர். ஆனால் பிங்கி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, டிசம்பர் 6-ம் தேதி பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் பிங்கிக்கும் திருமணம் நடைபெற்றது.
வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், பிங்கி சர்மாவுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இந்தியாவில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில கிராமங்களில் இதுபோன்ற விநோத திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது எனக்கூறி முடித்தான் மகேஷ்.
ஆமாண்டா, கேட்ட எனக்கே இவ்வளவு ஆச்சரியமா இருக்குது என்றால் அதில் கலந்து கொண்டவர்கள் எப்படி இருந்திருப்பாங்க என சொன்ன கந்தன், சரி, வா சுப்ரமணி ரிசப்ஷனுக்கு போய்ட்டு வரலாம் என கிளம்பினான்.
- இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
- 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.
இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கேசவ் பிரசாத் மௌரியா, "மசூதி கட்டுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என்று மிரட்டல் விடுத்தார்.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
- முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார்.
உத்தர பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது.இதில் அசாதுதீனின் மகன் சுஹைல் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்த சம்பவம் நடந்ததாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த கூடுதல் எஸ்பி ஸ்வேதாம்ப பாண்டே தெரிவித்தார். ஆனால் சரியான காரணம் மற்றும் யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது விசாரணைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்தப்பட முடியும் என்றார்.
- மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
- அடுத்த மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.
வாடா ரமேஷ் எப்படிடா இருக்கே?
நான் நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்கே?
நான் இந்த வாரம் வெளிநாட்டுக்கு போகப் போறேண்டா. நீ எங்கேயும் போகலையாடா ரமேஷ்.
இல்லைடா சுரேஷ். நான் இந்தியாவை விட்டு தாண்டலைடா.
ஆமா, நீ தான் ஒரு செய்தி சேனல் ஆச்சே. எங்க இந்த ஆண்டு நடந்த முக்கியான செய்திகளை சுருக்கமா சொல்லு கேட்போம்.
எனக்கு தெரிந்ததைச் சொல்றேன். கேட்டுக்கோ.
முதல்ல ஜனவரியில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி பத்தி சொல்றேன்.
மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட விழாதான் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா.

கும்பமேளாவில் சில வகைகள் உள்ளன. ஆர்த் கும்பமேளா 6 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். பூர்ண கும்பமேளா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மகா கும்பமேளா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதுதான் மகா கும்பமேளா.
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கியது.
45 நாட்கள் கோலாகலமாக நடந்த மகா கும்பமேளா பிர்ப்ரவரி 26-ம் தேதியுடன் சிறப்பாக நிறைவடைந்தது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
பிரயாக்ராஜ் மாவட்டம் சார்பில் ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனவரி 29-ம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.

கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
இனி அடுத்த மகா கும்பமேளா 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என கூறினான் சுரேஷ்.
பரவால்லடா, இவ்வளவு தகவல் சொல்லுவேன்னு நான் நினைக்கலடா. உண்மையிலேயே நீ ஒரு மினி செய்தி சேனல் தாண்டா.
என் மூஞ்சிக்கு நேரா என்னைப் புகழாதடா, எனக்கு பிடிக்காது ஓகேவா என பேச்சை நிறைவு செய்தான்.
- பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.
- இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் இன்கிலா தேவி. இவர் சந்தைக்குச் சென்றபோது ஒரு பானி பூரி தள்ளுவண்டி கடையில் நின்று பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடம்பெயர்ந்தது. பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.
இதனால் அவர் கடுமையான வலியை சந்தித்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
எனவே அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடப்பெயர்வை அங்குள்ள மருத்துவர்கள் நீண்ட முயற்சியின் பின் சரி செய்தனர்.
- நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை.
- 29 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை கொலை செய்த ரத்த கரை பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் படிந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் இதன்போது பணிச்சுமை மற்றும் மூத்த அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பல BLOக்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான பணி அழுத்தம் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் சர்வேஷ் சிங் (46) தற்கொலை செய்து கொண்டார்.
உதவி ஆசிரியரான சர்வேஷ் சிங், அக்டோபர் 7 ஆம் தேதி பிஎல்ஓ ஆக நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பான பணிகளுக்கான அவரது முதல் பணி இதுவாகும்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோவில், சர்வேஷ் சிங், "கடினமாக உழைத்தாலும், என் வேலையை முடிக்க முடியவில்லை. நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை. மற்றவர்கள் வேலையை முடித்து வருகிறார்கள். அம்மா, சகோதரி என்னை மன்னித்து விடுங்கள். எனது மகள்களை பார்த்துக்கொள்ளுங்கள். நான் தேர்தல் பணியில் தோற்று விட்டேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சர்வேஷ் சிங் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாப்லி தேவி அதிர்த்துப்போனார். தவலறிந்த போலீசார் சம்பவ இடதிற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் இரண்டு பக்க கையால் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையே நாடு முழுவதும் 29 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை கொலை செய்த ரத்த கரை பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் படிந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.






