search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pocso act"

    • மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை
    • சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கூட்டேரிப்பட்டில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து கை, கால்களை அழுத்த சொல்லி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக பெற்றோர்கள் பெரியதச்சூர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதப்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வர் கார்த்திகேயனை போச்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது.

    தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

    இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

    அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.

    சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

    2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

    போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

    அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.

    வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-

    போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.

    மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.

    1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 820 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கவுண்டம்பாளையம் அடுத்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது36) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு ஆதரவாக ஆலாந்துறை அரசு பள்ளியை சேர்ந்த 800-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பள்ளி எதிரே உள்ள சிறுவாணி சாலையில் திரண்டனர்.

    பின்னர் மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஆசிரியர் ஆனந்தகுமார் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மிகவும் நல்லவர்.

    அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் மற்றும் பள்ளி தலைமை யாசிரியர்(பொறுப்பு) கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மாணவ, மாணவிகள் ஆசிரியரை உடனே விடுவிக்க வேண்டும் என்று கூறியபடியே போராட்டத்தை கைவிட மறுத்து கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

    இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் அங்கிருந்து எழுந்து 1 கி.மீ தூரம் நடந்து சென்றனர்.

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் அங்கு விரைந்து வந்தார்.

    அவர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து நேராக பள்ளி வளாகத்திற்கு அழைத்து செல்ல முயன்றார்.

    அப்போது மாணவர்கள் பள்ளிக்குள் வர மறுத்தனர். போலீசார் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். அப்போது அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒருவழியாக மாணவர்களை உள்ளே அழைத்து சென்ற போலீசார் அவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்தனர். அவர்களுக்கு பேரூர் டி.எஸ்.பி. அறிவுரைகளை வழங்கினார்.

    மாணவர்களின் போராட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இவர்கள் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதி தொப்பம்பட்டி பிரிவு, கோத்தாரி நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 38). இவர், கோவை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

    மேலும், அந்த பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார். அவற்றை எடுத்துச் சென்றபோது அந்த மாணவிக்கு, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர். 

    • உறவினரான சிறுமியை மின்வாரிய அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
    • புகாரின்பேரில் மின்வாரிய அதிகாரியை போக்சோ சட்டத்தின் கீழ் செய்து சிறையில் அடைத்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி.காலனியை சேர்ந்தவர் கந்தசாமி(59). இவர் நிலக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் மகள் உறவு கொண்ட உறவினர் சிறுமி தங்கியுள்ளார்.

    சம்பவத்தன்று இரவு சிறுமியை கந்தசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கந்தசாமி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து அவரை கைது செய்து நிலக்கோட்டைமாஜிஸ்திரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் கந்தசாமி சிறையில் அடைக்கப்பட்டார். மகள் உறவுகொண்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
    • போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்த புகாரில் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடினர். பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் உதவி ஆய்வாளர் சகாதவேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
    • தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).

    இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

    இதில் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

    விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், வழிகாட்டுதலின்படி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

    காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

    பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் மன்மத லீலையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான சம்பவம் ஏரியூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆஷிக் ஆசை வார்த்தைகள் கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் நான் மற்றும் தங்கை, தம்பி ஆகியோர் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறோம். நான் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லும்போது பனியன் பிரிண்டிங் நிறுவன தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆஷிக் (வயது 19) என்பவர் என்னிடம் நட்பாக பழகினார். இருவரும் அடி க்கடி போனில் பேசி வந்தோம்.

    பள்ளி படிப்பு முடிந்தும் எங்களது நட்பு தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் தன்னை காதலிப்பதாக ஆஷிக் கூறினார். முதலில் மறுத்த நான் பின் காதலை ஏற்றுக்கொண்டேன். இந்த நிலையில் எனது தந்தைக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் எனது போனை என்னிடம் இருந்து பறித்து வைத்துக்கொண்டார்.

    சிறிது நாட்கள் கழித்து வேறு ஒரு போன் நம்பரை மாற்றி அதை பயன்படுத்தி வந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நான் என்னிடம் பேச வேண்டாம் என மறுத்து விட்டேன்.

    இந்த நிலையில் எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனால் எனது தந்தை மற்றும் தம்பி, தங்கை ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் எனது பாட்டியுடன் தங்கி இருந்து வருகின்றனர்.

    நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் நேரடியாக எனது வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார். அப்போது திடீரென என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல் நேற்று முன்தினமும் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் எனது வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து எனது சித்தப்பாவிடம் நான் கூறினேன். என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த ஆஷிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
    • போலீசார் தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    அதே கிராமத்தை லாரி டிரைவர் உறவினர் என்பதால் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியை செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அழைத்துச சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

    மேலும் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நெல்லை:

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று சந்திப்பு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் காவல் துறையினர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் (உதவி எண் :1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் குறித்தும், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி பெற்றோர் புகார் அளித்தனர்.
    • விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது24). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லும் சமயங்களில் பஸ் நிலையத்தில் வைத்து சிறுமியை பார்த்ததாக தெரிகிறது.

    அடிக்கடி பார்த்ததால், சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். அதனை தொடர்ந்து அவருடன் நட்பாக பழகி வந்தார். ஒரு நாள், சிறுமியிடம், காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் சிறுமி எதுவும் கூறவில்லை. இருந்தபோதிலும் அவர் சிறுமியிடம் காதலிக்க கூறி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று, விக்னேஷ் சிறுமியை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன். நாம் எங்காவது சென்று விடலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

    அதன்படி கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி பள்ளி செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.

    போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை, விக்னேஷ் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஆனால் அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியாமல் இருந்தது.

    விக்னேஷின் செல்போன் எண்ணை வைத்து, தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல் ஒவ்வொரு நேரமும் பல்வேறு இடங்களை காட்டியதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விக்னேஷ் சிறுமியுடன், திருப்பூரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த விக்னேஷ் மற்றும் சிறுமியை மீட்டனர்.

    பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது, விக்னேஷ் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை சிறுமியும் நம்பியுள்ளார்.

    இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி, விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

    அவர் ஒரே இடத்தில் இருக்காமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    ×