என் மலர்
இந்தியா

பள்ளி மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது
- மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக தெரிவித்தார்.
- கடந்த 20 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் மாணவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், மல்காஜ்கிரி அடுத்த போச்சாரம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மைதீன் (வயது 27) என்பவர் இயற்பியல் ஆசிரியராக வேலை செய்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய மைதீன் தன்னுடைய வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் பாடம் நடத்தினார்.
மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக தெரிவித்தார். மாணவியும் அவரது ஆசை வார்த்தையில் மயங்கி மைதீனை காதலித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் மாணவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் தனது மகளின் கழுத்தில் மஞ்சள் கயிறு இருப்பதை கண்ட அவரது தாயார் மகளிடம் விசாரித்தார். அப்போது மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்தனர். பின்னர் மல்காஜ்கிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






