என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
- இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றனர். இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்து விட்டனர். மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கபடாமல் உள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஜனவரி 31-ம் தேதி வரை தங்கள் அணியில் மாற்றங்களைச் செய்யலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மூன்று ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
- முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்த 3 ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி 2 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. இந்திய நட்சத்திர வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளது இதன்மூலம் தெரியவருகிறது.
- மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள்.
- விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.
விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள். அந்தத் தொடரில் ஜெய்ப்பூரில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கோவாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.
இதில் மும்பை அணிக்காக ஜெய்ஸ்வால் 46, முஷீர் கான் 60, சர்பராஸ் கான் சதமடித்து 157, ஹர்டிக் டாமோர் 53 ரன்கள் அடித்து மும்பை 444 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்கள்.
குறிப்பாக 3-வது விக்கெட்டுக்கு தம்பியுடன் சேர்ந்து கோவாவை வெளுத்து வாங்கிய சர்ப்ராஸ் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.
இந்நிலையில் ஒரு உள்ளூர் போட்டியில் தாமும் முசீர் கானும் சேர்ந்து ஒன்றாக சதமடிக்க வேண்டும் என்பது கனவு என்று சர்பராஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு போட்டியில் நாங்கள் இருவரும் சதங்கள் அடித்து ஒன்றாக பேட்டை உயர்த்த வேண்டும் என்பது கனவாகும். அதை நாங்கள் உண்மையாக செய்ய விரும்புகிறோம். நாங்கள் ரஞ்சிக் கோப்பையில் சதமடிக்க நினைத்தது நடக்கவில்லை. இன்றும் முஷீர் சதமடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
நிறைய நேரம் இருப்பதால் அது நிச்சயம் நடக்கும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவும் வேடிக்கையானதாகும். நானும் என்னுடைய தம்பியும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.
களத்தில் விளையாடும் போது எப்படி பவுலரை கையாளலாம் அல்லது ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி நாங்கள் ஒருவரை ஒருவர் ஆலோசித்துக் கொள்வோம்.
என்று சர்பராஸ் கூறினார்.
- உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- கவுதம் கம்பீர் லண்டனில் புத்தாண்டை கொண்டாடினார்.
உலகம் முழுவதும் 2026-ம் ஆண்டு புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
அந்த வகையில் புத்தாண்டை மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொண்டாடுகிறார். 'என் வாழ்வின் ஒளியுடன் 2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்' என்று குறிப்பிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தாய்லாந்தில் தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடினார்.

குல்தீப் யாதவ் தனது வருங்கால மனைவி வான்ஷிகாவுடன் புத்தாண்டை ஒன்றாகக் கொண்டாடினார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது குடும்பத்துடன் லண்டனில் புத்தாண்டை கொண்டாடினார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார்.

- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரனெலன் சுப்ராயன்.
- இவர் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரனெலன் சுப்ராயன். இவர் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தமிழ் வம்சாவளி வீரரான 32 வயதான சுப்ராயன் தனது கையில், ஓம் சரவண பவ... என தமிழ் கடவுளான முருகன் டாட்டூவை பச்சைகுத்தி இருப்பது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தனது கையில், ஓம் சரவண பவ டாட்டூ குறித்து பிரனெலன் சுப்ராயன் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் நான் முருகனின் தீவிர பக்தன். எனது வெற்றிக்கு பின்னால் இந்த டாட்டூதான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் கூப்பர் கனோலி இடம்பெற்றுள்ளார்.
- மிச்சேல் ஓவன், பென் டுவார்சியஸ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிக்கான இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் கூப்பர் கனோலி இடம்பெற்றுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான அவர் இடதுகை சுழற்பந்து வீரர் ஆவார். பிக் பாஷ் லீக் போட்டியில் அவரது ஸ்டிரைக் ரேட் 166.66 ஆக இருந்தது.
மிச்சேல் ஓவன், பென் டுவார்சியஸ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
காயத்தில் இருந்து குணம் அடைந்த கம்மின்ஸ், ஹேசல் வுட், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் இடம்பெற்று உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி
மிச்சேல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனெமன், மேக்ஸ் வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.
- முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவரில் 444 ரன்களைக் குவித்தது.
- கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை:
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் எலைட் குரூப் சி போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கோவா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் சர்பராஸ் கான் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டினார்.
கோவா பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நான்கு புறமும் சிதறடித்தார். அவர் 75 பந்துகளில் 14 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 157 ரன்களை குவித்தார்.
இறுதியில், மும்பை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 444 ரன்களைக் குவித்தது. சையது முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த சர்பராஸ் கான், இப்போது விஜய் ஹசாரேவிலும் தனது அதிரடியை தொடர்கிறார்.
445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கோவா அணி களமிறங்கியது. அந்த அணியின் அபினவ் தேஜ்ரானா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். தீப்ராஜ் கவோன்கர் 70 ரன்னும், லலித் யாதவ் 64 ரன்னும் சேர்த்தனர்.
இறுதியில், கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
- நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- 2027 உலககோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. 35 வயதான அவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தார்.
அதன் பிறகு காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக முகமது ஷமி இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார்.
இதற்கிடையே 2027-ம் ஆண்டு உலக கோப்பையில் முகமது ஷமியை சேர்ப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் கட்டமாக அவர் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. 10 மாதங்களுக்கு பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதிக்க உள்ளார்.
இது தொடர்பாக பி.சி.சி. ஐ. வட்டாரங்கள் கூறியதாவது:-
முகமது ஷமி தேர்வு குழுவின் விவாதத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் அணியை விட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. அவருடைய உடற்தகுதி மட்டுமே முக்கிய கவலையாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் அணிக்கு தேவை.
2027 உலககோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம். நியூசிலாந்து தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முகமது ஷமி சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி 20 ஓவர் தொடரில் பெங்கால் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட் கைப்பற்றினார்.
விஜய் ஹசாரே கோப்பையில் 3 ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த அபாரமான பந்து வீச்சால் தேர்வு குழுவினரை தனது பக்கம் திரும்ப வைத்து உள்ளார்.
முகமது ஷமி 2015, 2019, 2023 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி உள்ளார். 18 ஆட்டத்தில் 55 விக்கெட் கைப்பற்றி சர்வதேச வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் உதவியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது. அவரை குறுகிய கால அடிப்படையில் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.
2014-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை இலங்கை அணி மலிங்கா தலைமையில் வென்றது நினைவு கூரத்தக்கது.
- 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- 5-வது போட்டியில் இந்தியாவின் தீப்தி சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது.
இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இந்த போட்டியில் தீபதி சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா வீராங்கனை மேகன் ஷட் சாதனையை தீப்தி சர்மா முறியடித்துள்ளார். அவர் 133 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை பட்டியலில் தீப்தி ஷர்மா 152 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து மேகன் ஷட் (ஆஸ்திரேலியா) 151 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 3 முதல் 5 இடங்கள் முறையே நிடா டார் (பாகிஸ்தான்) 144 விக்கெட்டுகள், ஹென்றிட் இஷிம்வே (ருவாண்டா) 144 விக்கெட்டுகள் சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து) 142 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.
- டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
- ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி:-
ரஷீத் கான் (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், குர்பாஸ், முகமது இஷாக், அடல், தர்வீஷ் ரசூலி, ஷாஹிதுல்லா கமால், ஒமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, நூர் அகமது, முஜீப் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்சாய்.
- இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
- இது அவருக்கு 12-வது ஆட்ட நாயகி விருதாகும்.
இந்தியா-இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
நேற்றைய ஆட்டத்தில் 68 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இது அவருக்கு 12-வது ஆட்ட நாயகி விருதாகும். இதன்மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகி விருது பெற்றவர் என்ற சாதனையை படைத்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை ஹர்மன்பிரீத் கவுர் சமன் செய்தார்.
மிதாலி ராஜ் 89 போட்டிகளில் 12 முறை இந்த விருதை வென்றிருந்தார். ஹர்மன்பிரீத் இதுவரை 187 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
தொடர் நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டது. இது அவருக்கு 3-வது விருதாகும். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகி விருது வென்ற இந்திய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோருடன் ஷபாலி வர்மாவும் இணைந்தார்.






