என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அரசு"
- தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.
- குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் 100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்து, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. அதோடு, இந்த சட்டத்தின் மூலம் இனி 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தின் இதர அம்சங்கள், இந்த திட்டத்தையே முடக்கி போட்டு விடும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உதாரணமாக முன்பு இந்த திட்டத்தில் இந்த திட்டத்திற்கான நிதி உதவி, அதாவது ஊழியர்களுக்கான சம்பளம் முழுவதும் மத்திய அரசு வழங்கியது. அதே நேரத்தில் சொத்துகளை உருவாக்குதல் திட்டத்தின் கீழ் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசின் பங்கு 25 சதவீதமூம் இருந்தது.
ஆனால் புதிய திட்டத்தில் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும் இருக்கும். இது மாநிலங்களுக்கு பெரும் நிதி சுமை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மிக அதிக பாதிப்பு ஏற்பட உள்ளது. ஏனென்றால் இந்தியாவிலேயே, இந்த திட்டத்தால் அதிகம் பலன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.தமிழ்நாட்டில், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்ய மொத்தம் 88 லட்சத்து 56 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையை விட பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதிகம் நிதி பெறுவதில் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.
தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். ஆனால் அதே மதிப்பில் இந்த திட்டத்தை வரும் ஆண்டிலும் தமிழக அரசு செயல்படுத்தினால், அதாவது குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 600 கோடி தமிழக அரசு ஒதுக்க வேண்டி வரும். ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை நிச்சயம் ஒதுக்க முடியாது. எனவே இந்த திட்டத்தின் செலவை குறைக்க மாநில அரசு முற்படும். அப்படி செய்தால் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். இது தவிர இந்த புதிய திட்டத்தால் தமிழக அரசுக்கு ஏற்படும் மற்ற பாதிப்புகள் விவரம் வருமாறு:-
* பழைய திட்டத்தில் தமிழக அரசு, ஒரு நிதியாண்டிற்கு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்த போகிறோம் என்று கூறி மத்திய அரசுக்கு உத்தேச அறிக்கை கொடுப்பார்கள். பின்னர் திட்டங்களை கூடுதலாக செயல்படுத்தினாலும், அந்த தொகையையும் மத்திய அரசு கொடுத்து விடும். ஆனால் இனி அது போல் நடக்காது. கூடுதலாக மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான நிதியை 100 சதவீதம் மாநில அரசு மட்டுமே ஏற்கவேண்டும்.
* இந்த திட்டத்தின் கீழ் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கிராம ஊராட்சிகளும், மாநில அரசும் முடிவு செய்தது. ஆனால் இனி மத்திய அரசும் அதனை முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.
* முன்பு தமிழக அரசு எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டுக்கு திட்டம் வகுத்தாலும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால் இனி நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு தான் முடிவு செய்யும். அதாவது மக்கள்தொகை போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு தான் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.
* கிராமப்புறங்களில் இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை மற்றும் சிமெண்ட் ரோடு ஆகியவற்றுக்கும் 100 நாள் திட்டத்தின் வேலை உழைப்பு நாட்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதற்கான பொருட்கள் செலவில் மத்திய அரசு 75 சதவீதம் வழங்கியது. ஆனால் இனி 60 சதவீதம் தான் வழங்கும். எனவே அதற்கும் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்.
- தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
- துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்...
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!
நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, #MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி!
அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, தொகுதி நிர்ணயம் மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய #MGNREGS திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் #VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும்.
தனது 'Owner' பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்... என பதிவிட்டுள்ளார்.
- 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும்.
- இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை:
சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க 'சைபர்' கிரைம் போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஆனாலும், திரை மறைவில் கொள்ளையர்கள் இருந்துகொண்டு செல்போனுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அந்த லிங்கை தொட்ட சில கணங்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் முற்றிலும் துடைத்து எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், "மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, உதவிதொகை பெற விண்ணப்பிக்குமாறு தங்கள் குடும்பத்தினரையும் வற்புறுத்துகிறார்கள். இது தூண்டில் போட்டு மீனை பிடிப்பதுபோல, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக எடுக்க கையாளப்படும் முயற்சியாகும் என சிலர் லிங்கை தொடுவதை தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
- ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.
தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.
2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார்.
- சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டும்
- கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகவே மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கக் கூடாது.
அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது என்பது மக்களுக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், தங்களுக்குள்ள பெரும்பான்மையையும் பயன்படுத்தி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றும் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
- வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.
- உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?
கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
#ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?
#MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?
இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?
நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று கூறியுள்ளார்.
- இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
- இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்ட முன்வரைவில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றுவது நியாயமானது அல்ல.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும், வறுமை ஒழிப்பு ஆயுதமாகவும் திகழும் இந்தத் திட்டத்தின்படி 100 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, மொத்த பயனாளிகளில் 5 விழுக்காட்டினருக்குக் கூட முழு நாள்கள் வேலை வழங்கப்படவில்லை. அதனால், இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை 150 நாள்களாக உயர்த்த வேண்டும்; 50 % பயனாளிகளுக்காவது முழுமையாக 150 நாள்கள் வேலைவழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பயனாளிகளுக்கு அதிக நாள்கள் வேலை கிடைக்க வகை செய்யும்.
அதேபோல், நடவு, அறுவடை போன்ற விவசாயப் பணிகள் நடைபெறும் நாள்களில் இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கும் விஷயமாகும். இதன் மூலம் வேளாண் பணிகளுக்கு தடையில்லாமல் ஆள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஆனால், இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியடிகளின் பெயர் நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதும், திட்டச் செலவில் இதுவரை இருந்த 10%க்கு பதிலாக 40 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தின்படி எங்கு, எந்த நேரத்தில், என்ன பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள்.
- வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்.
சென்னை:
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விக்ஷித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று ஒன்றிய பாஜக அரசு மாற்றப் போவதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வர போகிறது. இதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலை வாய்ப்பு, ஒன்றிய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறார்கள்.
இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி கள்ள மவுனம் காக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
- நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
திருச்சி:
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39-வது வார்டில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டம் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் என்னென்ன பணிகள் விடுபட்டு போயிருந்ததோ, அந்தப் பணிகளையும் சேர்த்து இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார். குறிப்பாக நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது. நேருவை அடித்தால் இந்த பகுதியில் தி.மு.க.வை அழித்து விடலாம் என்ற உள்நோக்கத்தோடு அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை பரிந்துரை கடிதம் அளித்திருந்தது. அதுதொடர்பாக அவர் கூறுகையில், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும், பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.
- விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் 98.45 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 2 கார்டுதாரர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை தேசிய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
இந்த நிலையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் சரிபார்ப்பு வாயிலாக, 'பாயிண்ட ஆப் சேல்' என்ற விற்பனை முனைய கருவியில் விரல் ரேகையை வைத்து உண்மை தன்மையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இதற்கான பணி முழுமையாக முடிவடையவில்லை. இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இதையடுத்து இந்த பணியை வேகமாக முடிக்குமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, "விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை" என்றனர்.
- கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
- குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
மெட்ரோ ரெயிலால் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிவதால் மெட்ரோ ரெயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த திட்ட அறிக்கையில் மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ. 10,740 கோடியிலும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
ஆனால் மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை மறுத்த மத்திய அரசு அதனை ஆய்வு செய்வதாகவும், கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது. இதனால் இவ்விவகாரம் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து, கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கிடைக்காததற்கு தி.மு.க. அரசுதான் காரணம். திட்ட அறிக்கை முறையாக தயாரிக்கப்படாததால் மத்திய அரசு நிராகரித்ததாகவும், 2026ல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோவைக்கு மெட்ரோ நிச்சயம் கொண்டுவரப்படும் என்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மக்கள் நலத் திட்டங்களை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க. முடக்கி வைப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் வானதி கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
வானதி சீனிவாசன் கூறியதுபோல் 2026-ல் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் அதற்கு கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிரந்தரமாக மத்திய அரசு அனுமதி மறுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே.
- சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும்.
புதுடெல்லி:
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைமாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகளை வருகிற ஜனவரி 15-ந்தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனத்தை 2026-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள்-1990-ன் விதி 3-ன் படி, ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகார சபையின் எந்தவொரு அதிகாரியும் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்படலாம். கணக்கெடுப்பாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். ஜனவரி 15-ந்தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






