என் மலர்
நீங்கள் தேடியது "Rangasamy"
- ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.
- இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியின் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆண்டு விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி பேசினார். அப்போது வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை அரசியல் ரீதியாக உருவாக்கியுள்ளது.
தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் பா.ஜ.க. விரும்புகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பு இந்த கூட்டணியை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.
புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, மயிலாடுதுறை ஆகிய தமிழக பகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் அவர் சார்ந்த சமூகத்தினரும் அதிகளவில் உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது த.வெ.க.வைத் தொடங்கி ஓராண்டு நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் நடிகர் விஜயை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். முதல்-அமைச்சர் என்ற புரோட்டா காலை காட்டிக்கொள்ளாமல் தனக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் ரங்கசாமி நேரில் சென்று விஜயை சந்தித்தார்.
அதன் பிறகு நடிகர் விஜய், முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.
இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போது அதற்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து கட்சி முதல் மாநாட்டின் போதும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை விஜய் அழைப்பார் என்ற பேச்சு எழுந்தது. இதனால் ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.
இந்த எண்ணத்தில்தான் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் தனது கொள்கை விரோதியாக தி.மு.க., பா.ஜ.க.வை த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் 2026 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.
- கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
- காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவையில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி, பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
முதலமைச்சர் ரங்கசாமி அலுவலக வாசலில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி கட்சி அலுவலகத்தில் உள்ள சாமி படங்களுக்கு பூஜை செய்தார்.
தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணிகளே நடைபெறாத சூழ்நிலை இருந்தது. எமது அரசு பொறுப்பேற்றது முதல் காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். அரசின் அனைத்து துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மீதமுள்ள காலிபணியிடங்களையும் நிரப்புவோம்.
ஆளும்கட்சி, எதிர்கட்சி என எம்.எல்.ஏ.க்களில் வேறுபாடும், வித்தியாசமும் பார்க்காமல், மாநில வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.
கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 11 தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை இருந்து வருகிறது. தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும்.
காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும். மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள். அரசிடமும் தெரிவியுங்கள், அரசு அதை நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 10-ந்தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
- விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் கோடியக்கரை அருகே விசைப்படகில் மீன் பிடித்த காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
துப்பாக்கி சூட்டில் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த செந்தமிழ் மற்றும் நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த பாபு என்ற 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை 10-ந்தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ பஞ்சாயத்து மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புதுச்சேரி வந்து முதலமைச்சர் ரங்கசாமி, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்தனர்.
அப்போது மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ரங்கசாமி காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார்.
- அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை.
- பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ரங்கசாமி தனது வாகனத்தை விட்டு இறங்காமல் பார்வையிட்டார். காரை விட்டு ஏன் இறங்கவில்லை? உள்துறை அமைச்சர் வெளிநாடு சென்று விட்டார். முதலமைச்சர் கிராமப்புற பகுதிக்கு சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் செல்லவில்லை.
அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் என்பது கண்துடைப்பு. இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் பிரதமர் மீது பழி போடுவார். இதுதான் முதலமைச்சர் ரங்கசாமியின் வேலை.
ஒட்டுமொத்தமாக புதுவை அரசு இந்த புயலை எதிர்கொள்ள தவறிவிட்டது. நிவாரண பணிகள் திருப்திகரமாக இல்லை. இதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் முழு கணக்கெடுப்பை நடத்தி நிவாரணத்தை முறையாக வழங்க வேண்டும். புதுவையில் உட்கார்ந்து கொண்டு நிதி கேட்கக்கூடாது, டெல்லி சென்று கேட்க வேண்டும்.
அப்படி கேட்காமல், பிரதமர் நிதி தரவில்லை என ரங்கசாமி கூறுவார். பிரதமர் மோடி பணம் தரவில்லை என பழி போடுவார். இந்த பழி போடும் காலமெல்லாம் முடிந்து விட்டது. இந்த இரட்டை என்ஜின் ஆட்சி ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. எதுவும் நடக்கவில்லை.
உண்மையில் இந்த இரட்டை என்ஜின் ஆட்சி என்றால், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கப்படும்.
- மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
புதுச்சேரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 1971-ல் 31 செ.மீ. மழை அதிகமாக பதிவாகியிருந்தது. தற்போது 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். புதுச்சேரியில் விளைநிலங்கள், வீடுகளின் சாலைகள் உள்பட அனைத்து பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசின் உதவி கோரப்படும்.
புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கப்படும். அனைத்து துறைகளும் கள பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
- புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
- முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவரும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும்.
புதுச்சேரி:
த.வெ.க. தலைவர் விஜய்க்கும், புதுவை மாநில முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமிக்கும் இடையே வயதை தாண்டிய புரிதலும், நட்பும் உள்ளது.
விஜய் கட்சி தொடங்கும் முன்பும், மாநாட்டுக்கு முன்பும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் சில ஆலோசனைகளை பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் த.வெ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக புதுவை பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கூட்டணி அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அல்லது த.வெ.க. தலைவர் விஜய் ஏதாவது கூறியுள்ளார்களா? பொதுவாக தேர்தல் குறித்து மக்களிடம் பல்வேறு கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். அது பொய்யாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம்.
அந்த கருத்து யார் வாயால் கூறப்படுகிறது என்பதுதான் முக்கியம். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவர் விஜயும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும். வதந்திகளுக்கு பதில் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்டோபர் 21-ம் தேதி ரேஷனில் வழங்கப்படும்.
- மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களைச் சந்தித்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அக்டோபர் 21-ம் தேதி புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும்.
தொடர்ந்து ரேஷனில் மாதா மாதம் இலவச அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தபடி, மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மாதம் ரூ.2000 உதவித் தொகை பெறுபவர்கள் இனி, ரூ.3,000 உதவித் தொகை பெறுவார்கள். அதேபோல் ரூ.2500, ரூ.2700, ரூ.3500, ரூ.3800 உதவித் தொகை பெறுவோர் இனி கூடுதலாக ரூ.1000 சேர்த்து பெறுவர்.
உயர்த்தப்பட்ட உதவித்தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.24.5 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் 21,329 பயனாளிகள் பயன்பெறுவர்.
இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை அக்டோபர் 2024-ம் தேதி முன் தேதியிட்டு நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
- திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை.
- எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
சபையில் பேசிய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து பேசினர். மக்களின் எண்ணமும் அதுவாக தான் உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி கொண்டே உள்ளோம்.
பல முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். கடந்த முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது மத்திய அரசு மாநில அந்தஸ்து தர வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டது.
எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்யவும், கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் மாநில அந்தஸ்து தேவை.
மத்திய அரசை கேட்டு வலியுறுத்தி வருகிறோம். அரசு என்றால் சட்டசபை என இல்லாமல் கவர்னர் ஒப்புதலும் மிக அவசியம். மறைவாக இருந்த இதை உச்சநீதிமன்றம் வரை சென்று கவர்னருக்கு தான் அதிகாரம் என வெளிப்படையாக தெரிவிக்க செய்து விட்டனர். அதன் காரணமாக அனைத்தும் காலதாமதம் ஆகிறது.
கோப்புகளை பார்க்கும் எல்.டி.சி., முதல் தலைமைச் செயலர் வரை அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதுதான் நிறைவேற வேண்டும் என நினைக்கின்றனர்.
அதனால் கோப்பு தேங்கி கிடக்கிறது. இப்படி இருந்தால் மக்கள் எண்ணங்கள் எப்படி நிறைவேறும்? இதனை சுட்டி காட்டி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துகிறோம்.
திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை. எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.
இதன் மூலம் வருவாய் மற்றும் மத்திய அரசின் உதவி அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மாநில அந்தஸ்து பெற தயக்கம் இல்லை.
மாநில அந்தஸ்து பெற்றால் சிரமமின்றி புதுச்சேரிக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். அரசு பொறுப்பேற்ற போது, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் 3 மாதத்தில் நிரப்பலாம் என நினைத்தால், 3 ஆண்டு முடிந்தும் நிரப்ப முடியாத நிலை உள்ளது.
மாநில அந்தஸ்து தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கும் அதிக எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வலியுறுத்த வேண்டும்.
நாமும் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசலாம். புதுச்சேரி மாநிலம் பெரிய அளவில் வளர்ச்சி காண மாநில அந்தஸ்து வேண்டும்.
கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகளை கோப்புகளில் கவர்னர் வெளிப்படுத்த தொடங்கினர். அதுவும் வளர்ச்சிக்கு தடையானது.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
- வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
- அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.
ஆகஸ்டு 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று தெரிவித்தார்.
15-வது சட்டசபையின் 5-வது கூட்டம் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார். 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.
- பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார்.
- டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகவும், பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராகவும், பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் புரையோடியிருப்பதாகவும், புரோக்கர்கள் மூலம் ஆட்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதை கட்சி மேலிடத்துக்கு தெரிவிப்பதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். இதனால் பாஜக தலைவர்களை சந்திக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகிறார். இதனால் நேற்றைய தினம் மத்திய மந்திரியும், புதுவை பொருப்பாளருமான அர்ஜூன்ராம் மெக்வாலை மட்டும் சந்தித்து பேசினர்.
இன்று பிற்பகலுக்கு பிறகு புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர் நட்டா மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதில் புதுவையில் இதே நிலையில் ஆட்சி நீடித்தால், பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்சித்தலைமை உரிய முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்ற யோசனையை முன்வைக்க ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடைய பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார். அவரும் கட்சித் தலைவரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
- என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
புதுவை அமைச்சரவை யில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் 4 அமைச்சர்களும், பா.ஜனதா தரப்பில் 2 அமைச்சர்களும், சபாநாயகரும் உள்ளனர். என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதாவுக்கும் 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.
இதோடு புதுவை சட்ட மன்றத்தில் உள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்ற னர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆட்சி அமைந்தது முதலே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது.
முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் சட்ட சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
புதிய மது ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக சட்டசபையிலேயே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அதோடு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கூட தங்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை என்றும் புகார் செய்தனர்.
வளர்ச்சிப் பணிகளில் தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நடத்தியுள்ளனர். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.
இந்தநிலையில் பாராளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி சார்பில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வி என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.
அதோடு தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தில் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
ஆனால், கவர்னருடனான சந்திப்பு குறித்து கேட்ட போது தொகுதியில் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்தவும், குடியிருப்பு, பள்ளி, கல்லூரிகளிடை யிலான ரெஸ்டோ பார் களை அகற்றவும் கவர்னரி டம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.
அதேநேரத்தில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்த திருபு வனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசிய ஆடியோ வெளியானது. இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து பேசிய விரங்களை தெரிவித்துள் ளார்.
அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களையும் புரோக்கர் கள் துணையோடு முதல்- அமைச்சர், அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாகவும் கவர்னரிடம் எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்ததாக பகிரங்கமாக தெரிவித்துள் ளார்.
இதேநிலை நீடித்து கூட்டணி ஆட்சி தொடர்ந் தால் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டணி தர்மத்தை மதிக்காத முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்ததாகவும் அங்காளன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இந்த ஆடியோ புதுவை மக்களிடம் வைரலானது. மேலும் பா.ஜனதா தலைமையை சந்தித்து பேச எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இது புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது.
- கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் அப்பா பைத்தியம் சாமி கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அங்கிருந்து கார் மூலம் திலாசுப்பேட்டையில் உள்ள பழைய வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அதே தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.
அங்கு காலை 8.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.

வி.மணவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், தனது மனைவி வசந்தியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அங்கிருந்து காரில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்தார்.
அங்கு முதல்-அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்குள் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அப்பா பைத்தியம் சாமிக்கு ரங்கசாமி தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார்.
தொடர்ந்து வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அவர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து பக்தர்களுக்கு ரங்கசாமி திருநீறு வழங்கினார்.
பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காலை 8.45 மணிக்கு எனது வாக்கை பதிவு செய்தேன். புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மடுகரை கம்பத்தம் வீதியில் உள்ள அரசு பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன் வீராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.