என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"

    • சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.

    இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அ.தி.மு.க தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியது.

    சட்டசபை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் பா.ம.க. போட்டி என்பது குறித்து இன்றே தெரிந்து விடும்

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.
    • கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது.

    சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.

    அ.தி.மு.க. உடனான கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரமும் இன்றே தெரிய வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. பா.ம.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அன்புமணி தரப்பு அ.தி.மு.க.வுடன் கைகோர்க்கிறது.

    ராமதாஸ் தரப்பு யாருடன் கூட்டணி வைக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    • ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி 8 நாட்கள் தொடர்ச்சியாக விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்தோடு தலைமை கழகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினார்கள். 8 நாட்களில் 9 ஆயிரம் பேர் வரையில் விருப்ப மனுக்களை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் மேலும் 4 நாட்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.

    இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.
    • கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார்.

    அங்கு மாலை 6 மணிக்கு காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் படத்திறப்பு நிகழ்ச்சி கலைஞர் கோட்டம், அஞ்சுகம் அம்மையார் திருமண அரங்கில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை (சனிக்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளாங்கண்ணியில் நடைபயிற்சி சென்றார். பின்னர் நாகை துறைமுகத்துக்கு சென்று அங்கு பாய்மர கப்பல் விளையாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து அவர் நாகூர் சில்லடி கடற்கரையில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள நாகூர் ஹனீபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டு அவரது குடும்பத்தினரை கவுரவித்தார்.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்றாலும் நாகை இங்கு வருவது எனது சொந்த ஊருக்கு வருவது போன்று நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் என மும்மத வழிபாட்டு தலங்களும் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

    நாகூர் ஹனீபா, அண்ணா, கருணாநிதி ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்றவர். கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது. ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே இறைவன் என வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தி.மு.க. அரசு ஆட்சியில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. வைக்கம் நூற்றாண்டு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா என பல்வேறு நூற்றாண்டு விழாக்களை தி.மு.க. அரசு கொண்டாடி உள்ளது.

    இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார் அறிவித்த பேராட்டம் தான் கருணாநிதியையும், நாகூர் ஹனீபாவையும் போராட்ட களத்துக்கு கொண்டு வந்தது. இந்தி திணிப்பை எதிர்த்து அன்று போராடினோம். அதேபோல் தற்போது வேறு வழியில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதனை தமிழக முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் என உறுதியாக கூறுகிறார். மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விநிதி என்கிறது மத்திய அரசு. இப்படி பல்வேறு வழிகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது.

    தனது குரல் வளத்தால் இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர் நாகூர் ஹனீபா. நாகூர் தைக்கால் தெருவிற்கு முதலமைச்சர் நாகூர் ஹனீபா தெரு என பெயரிட்டார். நாகூர் ஹனீபா மறைந்தபோது கலைஞர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் நாட்டை மதநல்லிணக்கம் மிகுந்த மாநிலமாக வைத்திருக்க வேண்டும். தி.மு.க. அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது. நாகூர் ஹனீபாவின் பாடல்களை மதுரை ஆதீனம் சிறப்பாக பாடி காட்டுவார். தமிழகம் என்றென்றும் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈரோடு மக்கள் சந்திப்பு பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியாக காணப்படும் விஜய், தொடர்ந்து சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருக்கிறார்.
    • ஜனவரிக்குள் கூட்டணி தொடர்பான நல்ல முடிவு எட்ட த.வெ.க. தலைமை வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை சந்திக்க முழு வீச்சில் த.வெ.க. தயாராகி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் 234 தொகுதிக்கும் தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். இதில், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பெண்கள், பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். ஈரோடு மக்கள் சந்திப்பு பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியாக காணப்படும் விஜய், தொடர்ந்து சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்கான பணிகளை த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா பாணியில் விஜய்க்கும் அவர் பயண திட்டத்தை வகுத்து வருகிறார். இதற்கிடையே, த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை கட்சியின் தலைவர் விஜய் முடுக்கி விட்டுள்ளார்.

    த.வெ.க. கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இடம் பெற உள்ளனர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனை கூட்டணி அமைப்பதற்கான குழு தலைவராக அமர்த்துவதன் மூலம் மற்ற கட்சி தலைவர்களை எளிதாக அணுக முடியும் என்று த.வெ.க. நம்புகிறது. எனவே விரைவில் இதற்கான அறிவிப்பை த.வெ.க. வெளியிட இருக்கிறது.

    தற்போதைய சூழ்நிலையில் எந்த அணியிலும் இல்லாத தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடம் செங்கோட்டையன் தலைமையிலான குழு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஜனவரிக்குள் கூட்டணி தொடர்பான நல்ல முடிவு எட்ட த.வெ.க. தலைமை வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களை உடனடியாக அறிவிக்கவும் த.வெ.க. திட்டமிட்டுள்ளது. வரும் 24-ந் தேதி கட்சிக்கு புதிய சின்னம் (விசில் அல்லது மோதிரம்) கிடைத்து விடும் என்பதால் த.வெ.க. தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    • கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார்.
    • ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவான த.வெ.க. சட்டசபை தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாத பொருளாக மாறி வருகிறது.

    பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது.

    இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இனி வரும் நாட்களில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக ஜனவரி 2-வது வாரம் வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்தநிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் என குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தேர்வை விஜய் நடத்தி முடித்து, உடனடியாக அதற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்.

    • சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
    • தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்தல் கூட்டணி ஜனவரி மாத இறுதியில்தான் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க புதிது, புதிதாக அரசியல் கட்சிகள் களம் இறங்கி வருகிறது. இந்த புதிய அரசியல் கட்சிகளில் தொகுதிதோறும் பிரபலமாக உள்ள வேட்பாளர் பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.

    இதில் காங்கிரசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் மாதத்தில்தான் தேர்தல் நடைபெறும்.

    தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் முன்பாகவே காங்கிரஸ் 30 தொகுதிக்கும் விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது.

    இதன்மூலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்த தொகுதி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனது யுக்தி மூலம் தங்களிடம் உள்ள வேட்பாளர் பிரமுகர்களை தக்க வைக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

    புதுச்சேரியை பொறுத்தவரை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் துறை அறிவிக்கும் வரை கட்சி தாவல்கள் சகஜமாகவே இருக்கும். இதனால் காங்கிரசின் புதிய யுக்தி கைகொடுக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.

    • தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

    * அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    * சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம்.
    • வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.

    சிதம்பரம்:

    ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க தி.மு.க. கூட்டணியில் வலியுறுத்துவோம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

    சிதம்பரம் வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம். வக்பு சட்ட திருத்தம் மூலமாக அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி ஒரு தீர்மானம் கொண்டு வந்து பரிசோதித்து பார்க்கிறார்.

    அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. இது மிகவும் வரவேற்க தக்கது. உலகில் சக்தி வாய்ந்த நாடுகள் தங்களுடைய மதத்திற்கு அதிகளவு மரியாைத கொடுப்பதில்லை.

    ஆனால் இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை கொடுக்கிறோம. இந்த நிலையில் வக்பு வாரியத்திற்கு மட்டும் சட்ட திருத்தம் செய்வது ஏன்?

    சட்ட திருத்தம், அனைதது மதங்களுக்கும் செய்து தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். வக்பு வாரியத்திற்கு மட்டும் திருத்தம் கொண்டு வருவதை ஏற்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு நமது அரசமைப்பு சட்டத்தை கடைபிடித்து வக்பு வாரிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து காப்பாற்றி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் தேர்தல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்.

    வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.

    அத்துடன் தமிழகத்தில் கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க கூட்டணியில் வலியுறுத்தப்படும் என்றார்.

    • கூட்டணி குறித்து தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.
    • 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனாரோ, அதேபோல் 2026-ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்." என்றார்.

    இதற்கிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்," 234 தொகுதிகளுக்கு நேரடியாக சென்று வருகிறோம். 2026 தேமுதிகவிற்கான காலம் நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் இருக்காது" என்றார்.

    • நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்களால் இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
    • 2026 சட்டசபை தேர்தலில் சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ராம சரவணன் மகள் சாய்ஸ்ரீ-ஜீனத் பிரியன் திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:-

    நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளை கடந்து இன்றைக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்களால் இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்களிலேயே தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே இந்த திராவிட மாடல் அரசுக்கும், நம் முதலமைச்சருக்கும் நம் அத்தனை பேரும் முழு ஆதரவை தர வேண்டும். நான் உங்களிடம் கேட்ப தெல்லாம் அடுத்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.

    நாம் அனைவரும் ஒரு உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நம் முதலமைச்சர் 2-வது முறையாக பதவியில் உட்கார வேண்டும் என்றால், நம் திராவிட முன்னேற்றக் கழகம் 7-வது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் என்றால், நீங்கள் அத்தனை பேரும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டார்கள், தேர்தல் பிரசாரத்தை, அரசின் சாதனைகளை, முதலமைச்சரின் பணிகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    2026 சட்டசபை தேர்தலில் சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். தலைவர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இலக்கு கொடுத்து இருக்கிறார்.

    நாம் அனைவரும் களத்தில் இறங்கி, முழுமையாக பணியாற்றினால் 200 இல்லை 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு நாம் அத்தனை பேரும் இந்த திருமண நிகழ்வில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார்.
    • கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. சந்திக்க தயாராகி வருகிறது. இதையொட்டி கட்சிக்கு புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, கட்சியின் சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டம் வரும் 10-ந்தேதி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்க உள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார். மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.

    மாநிலத்தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் தமிழக வருகை மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    ×