என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"

    • இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.
    • இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார்.

    மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது 

    "கிறிஸ்தவக் கொள்கைகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே எல்லா நேரத்திலும் அன்பை, மனிதநேயத்தை, சமத்துவத்தைதான் மற்றவர்களிடம் காட்டவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது.

    உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா மக்களாலும் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்றால், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான். அதைவிட முக்கியம் அவரது பிறந்தநாளை மட்டும் கொண்டாடினால் போதாது, அவரது கருத்துகளையும் பின்பற்றவேண்டும். ஏனெனில் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.

    மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்ற கருத்தை தனது பிறப்பால் உடைத்தவர்தான் இயேசு. சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தால்கூட உழைத்தால் உயரலாம் என்பது நமது திராவிட இயக்கம். இயேசு கிறிஸ்துவை போல. அதற்கு எடுத்துக்காட்டு நமது பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி. இவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக வளர்ந்தவர்கள்.

    அதுபோல இரக்கம் என்பது எல்லோரிடத்திலும் இருக்கவேண்டும் என கிறிஸ்தவம் கூறுகிறது. அதைத்தான் நமது திராவிடமும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் இருப்பவர்களுக்கு இரக்க உணர்வைவிட வெறுப்புணர்வுதான் அதிகம் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு மீதும், தமிழ்நாட்டு மக்கள்மீதும். மதம், மொழி, சாதியின்பேரில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எப்போதும் நிறைவேறாது. ஏனெனில் தமிழ்நாடு எப்போதும் ஒரு தனித்துவமான மாநிலம்.

    இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார். ஆனால் பகிர்வு என்றாலே மத்திய அரசுக்கு பிடிக்காது. திமுக கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் எப்போதும் ஒரு பாதுகாப்பு அரணாகத்தான் இருந்துள்ளது" என தெரிவித்தார். 

    • ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
    • செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.

    அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக ஒரு தீய சக்தி என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், திமுக அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.

    இந்நிலையில், திமுக அரசின் மீதான தவெக தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    மேலும், உதயநிதி ஸ்டாலினிடம்,"அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா" என விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்," என்னைக்காவது விஜயிடம் போய் கேள்வி கேட்டிருக்கிறீர்களா? ஒருவாட்டி அவரை பேச விடுங்கள் பார்க்கலாம்.." என்றார். 

    • லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.
    • தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.

    சட்டசபை தேர்தல் வர உள்ளதால் மடிக்கணினி தர உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

    * மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

    * சில வாரங்களில் மாணவர்களுக்கு மடிக்கணினி தரப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வியின் அர்த்தம் அனைவருக்கும் தெரியும்.

    * திராவிட மாடல் அரசு மாணவர்களுக்கு நிச்சயமாக மடிக்கணினி வழங்கத்தான் போகிறது.

    * மாணவர்கள் பயன்பெறும் திட்டத்துக்கு எதிராக அவதூறை பரப்ப வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.

    * லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.

    * எடப்பாடி பழனிசாமி அல்ல அவர்களது டெல்லி ஓனர் நினைத்தாலும் மாணவர்களுக்கு லேப்டாப் தருவதை தடுக்க முடியாது.

    * Windows 11 OS உடன் உயர்தரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.

    * அதிவேக Processor மற்றும் அதிகநேரம் தாங்கும் பேட்டரியுடன் லேப்டாப் உள்ளது.

    * தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.

    * பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    * மடிக்கணினி திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மாணவர்களை ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
    • இந்த 125 மின்சார பஸ்களில் 45 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை.

    பூந்தமல்லி:

    டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார பஸ்களை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 626 மின்சார பஸ்கள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக, வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பஸ்களும், 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    இந்த 125 மின்சார பஸ்களில் 45 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை. மற்ற 80 பஸ்கள் சாதாரணமானவை ஆகும்.

    பூந்தமல்லி பணிமனையில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான கட்டமைப்பு, 25 சார்ஜிங் மையங்கள் மற்றும் பணிமனைகளில் விரிவாக்க பணிகள் ரூ.43.53 கோடி செலவில் முடிந்து உள்ளன. இந்த சீரமைக்கப்பட்ட பணிமனையும் திறக்கப்படுகிறது.

    • அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்காலம் அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமையான இயக்கத்தை என்ஜின் இல்லாத கார் என்றும் அதை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுக்க முயன்று வருகிறது என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணியால் தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கலங்கி போய் ஒரு நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார்.

    இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு தடையாக இருப்பது அ.தி.மு.க. தான்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கண்டு நடுங்கிப் போயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி 54 ஆண்டு பொது வாழ்வில் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    வாரிசு அரசியலில் டெல்லியில் முடிவுரை எழுதப்பட்டு தற்போது பீகாரிலும் வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதி மக்கள் தந்த தீர்ப்பை கண்டு தான் ஸ்டாலினும், உதயநிதியும் அரண்டு போய் உள்ளார்கள்.

    அந்த காரில் சென்றார், இந்த காரில் சென்றார் என காரின் மீது கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும். வகுப்பு அறையில் மாணவிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சக மாணவர்களால் மாணவன் அடித்து கொலை.

    இப்படி எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வை பற்றியும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் வசை பாடி தான் கலங்கி நிற்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

    இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற சாமானியர் முடிவுரை எழுதும் வகையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். அ.தி.மு.க.வை வெற்றிப்பாதை அழைத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எத்தனை கோடி விமர்சனங்கள் வைத்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்வார்கள். தமிழக மக்கள் உங்கள் விமர்சனத்தை புறம் தள்ளுவார்கள்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அநாகரீகம் இன்றி எத்தனை விமர்சனம் செய்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள், எள் முனையளவும் பின் வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

    • இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக
    • வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு இன்று நடைப்பெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமக்கெல்லாம் ஒரு சவால் விடுத்துள்ளார். அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று. நான் அமித்ஷாவிற்கும், அவரது அடிமைக் கூட்டத்திற்கும் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களது கருப்பு, சிவப்பு படை, இளைஞரணி படை களத்தில் இருக்கும். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லித்தான் கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றினார் அண்ணா. அன்றிலிருந்து தமிழ்நாட்டை காப்பதற்கான போர்வரிசையில் என்றுமே திமுக முன் நின்றுள்ளது. இந்த போர்களத்தில் எதிரிகள்தான் மாறியுள்ளனர். திமுக அப்படியேத்தான் இருக்கிறது.

    ஏனெனில் முதலமைச்சர் சொன்னவாறு 'தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்'. அப்படிப்பட்ட நம்மை பார்த்து தயாராக இருங்கள், தமிழ்நாட்டிற்கு வருகிறோம் என மிரட்டப் பார்க்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல திமுக. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மிசா என்ற நெறிபாட்டில் நீந்தி வந்த இயக்கம். உலக வரலாற்றிலேயே ஈடு, இணை இல்லாத மொழிப்போரை நடத்தி அதிலும் வெற்றிப் பெற்ற இயக்கம். தமிழ்மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திராவிட இயக்கம். பல துரோகங்களை, அடக்குமுறைகளை வீழ்த்தியது. இப்படிப்பட்ட எங்களை குஜராத்தில் இருந்து மிரட்டி, அடிபணிய வைக்க நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில் கூட நடக்காது. கடைசி உடன்பிறப்பு இருக்கும்வரையில் தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. வடமாநிலங்களில் நீங்கள் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என தப்பு கணக்கு போடூகிறீர்கள். ஏனெனில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது.


    நிகழ்ச்சியில்

     பெரியார் எனும் கொள்கை நெருப்பு தமிழ்நாட்டை சுற்றிநின்று காப்பாற்றி கொண்டிருக்கிறது. 23 வயதிலேயே மிசா கொடுமையை கண்ட கட்சித் தலைவர் இன்று நம்மை வழிநடத்த இங்கு உள்ளார். பாஜக மதம்பிடித்து ஓடும் யானை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த யானையை அடக்கக்கூடிய அங்குசம் இங்கு இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என, பழைய அடிமைகளையும், புது புதுசா புது அடிமைகளையும் அழைச்சிக்கிட்டு நம்மோடு மோத பார்க்கிறார்கள்.

    இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் துறை, தேர்தல் ஆணையம் என எல்லோருடனும் கூட்டு வைத்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது பாஜக. இப்படிப்பட்ட பாஜகவை நம்பிதான் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். ஆனால் நாம் தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி களத்திற்கு வந்துள்ளோம். நாம் தொடர்ந்து மக்களோடு உள்ளோம். அவர்களும் தொடர்ந்து நம்முடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். 2026-ல் எடப்பாடியை முதலமைச்சராக்குவோம் என அடிமைகள் தீர்மானம் போட்டுள்ளனர். காரில் பேட்டரி போனால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் இன்ஜினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக. எடப்பாடி எதை எதையோ காப்பாற்ற வேண்டும் எனக்கூறுகிறார். முதலில் அவர் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

    அதிமுகவிலிருந்து நிறைய பேர் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர், யார் வேண்டுமானாலும் போகலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நான்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என சொல்கிறார். அது அவருக்கும் மட்டும் தேவை இல்லை. நமக்கும் அதுதான் தேவை என்பதை நீங்கள் உணரவேண்டும். அடிமையாய் இருந்து சுகமாய் வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும். பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் சக்தி திமுகவிற்கும் மட்டும்தான் உண்டு என தமிழ்நாட்டு மக்கள் நம்புகின்றனர். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும், போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. வானவில்லை பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரம் கிடையாது. உதய சூரியன் மட்டும்தான் நிரந்தரம்." எனப் பேசினார். 

    • இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை.
    • திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது

    திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று(டிச. 14) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

    "இன்று பல கட்சிகளில் மாநாடு என்றால் இளைஞர்களை திரட்டுவது மிக கஷ்டம். ஆனால் திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகளையே மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்யாத சாதனையை நாம் செய்து காட்டியுள்ளோம். இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. நம் எதிரிகளை சுக்குநூறாக்க கூட்டப்பட்ட கூட்டம், நம் இளைஞரணி கூட்டம், கொள்கை கூட்டம். இளைஞர்கள் அதிகம் கூடினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் தற்போது உருவாகி உள்ளது. ஆனால் நம் கட்சியினர் அப்படி கிடையாது. அவர்கள் மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டம் சாட்சி.

    கட்டுப்பாடு இல்லாமல் 1 லட்சம் இல்லை, 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது. ஆனால் உங்களைப் போன்ற இந்த கொள்கை கூட்டம் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஒரு பலம் என என்னால் உறுதியாக கூறமுடியும். மற்ற கட்சிகளில் தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் இருப்பர். ஆனால் திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது." என தெரிவித்தார். 

    • விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு நாளை முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2-வது கட்டமாக நாளை முதல் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மகளிர் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு நாளை முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. மதியம் 3 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், 2022-ம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுதிறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன் ஆகியோர் உடன் கலந்து கொள்கின்றனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களினால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக மாநில அளவில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார்.

    தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி முகவர்களை முழுமையாக நியமித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறுவதால் அதில் விடுபடும் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    அதுமட்டுமின்றி என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி என்று அறிவித்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டுள்ளார். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    அவ்வாறு வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் கட்டாயம் மகளிர் இடம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் இப்போது வீடு வீடாக சென்று தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து சொல்லி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் வருகிற 14-ந்தேதி நடத்துகிறார்.

    தேர்தலுக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் இந்த மண்டல மாநாட்டில் வட மாவட்டங்களில் உள்ள 91 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். அப்போது சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சியினருக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தெரிகிறது.

    தி.மு.க. கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்துவார் என தெரிகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும், த.வெ.க. கட்சியுடன் காங்கிரஸ் ரகசியமாக பேசி வருவது பற்றியும் இந்த மாநாட்டில் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார் என தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. அது தி.மு.க.வின் வெற்றியை முடிவு செய்தது. அதேபோல் திருவண்ணாமலையில் இளைஞரணி மண்டல மாநாடு நடத்தப்படுகிறது.

    இது 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை நிச்சயம் உறுதி செய்யும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதற்காக இளைஞரணி மண்டல மாநாட்டை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள்.
    • எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும்.

    சென்னை:

    அம்பேத்கர் நினைவு நாளையொட்டி துறைமுகம் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் விவகாரத்தை அயோத்தி போல் ஆக்கத் துடிப்பதாக கூறுகிறார்கள். அயோத்தி என்ன இந்தியாவில்தானே இருக்கிறது. இங்கிலாந்திலா இருக்கிறது. அயோத்தி மாதிரி இருந்தாலும் சரி என்னவாக இருந்தாலும் சரி, ராமர் போல் ஆட்சி வர வேண்டும்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத் தூணுக்கு பக்கத்தில் தர்கா இருப்பது ஊருக்கே தெரியும். அங்கு யாரும் செல்ல அனுமதி இல்லை. தீபம் ஏற்றுவதற்கு மட்டும்தான் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதற்கும் தர்கா தரப்பில் இருந்து யாரும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

    அப்படி இருக்கும்போது மதக்கலவரம் எப்படி வரும்? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் என்ன பாதகம் ஏற்படுகிறது. சனாதன தர்மத்தை அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் சபதம் போட்டார். அதற்கான ஆரம்பகட்ட வேலையாகத்தான் இதை பார்க்கிறோம்.

    அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் பற்றி 2021-ம் ஆண்டு முதல் என்றாவது பட்ஜெட்டில் அறிவித்தது உண்டா?

    மத்திய அரசு அறிக்கை கேட்ட பிறகுதான், அறிக்கை தயார் செய்தார்கள். அதுவும் முறையாக இல்லை. ரெயில் பயணத்திற்கும், பஸ் பயணத்திற்கும் 2 நிமிடம் தான் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால் மெட்ரோ ரெயில் வேண்டாம் என்பதாகத்தானே அர்த்தம்.

    ஒரு நிலையம் கட்ட குறைந்தது 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் 10 மீட்டர் அளவுக்கு 3 நிலையங்கள் கட்டுவதற்கு இடம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த குறைகளைத்தான் நிவர்த்தி செய்ய மத்திய அரசு கூறியுள்ளது. இதுதான் தி.மு.க. செய்யும் வளர்ச்சி அரசியலா?

    தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. இது வளர்ச்சியை கொடுக்காதா? நாங்கள் வளர்ச்சிக்கான அரசியல் செய்கிறோம். தி.மு.க. என்ன அரசியல் செய்கிறது என்பதை மக்கள் உணருவார்கள். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கிறது.

    எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும். நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். தி.மு.க. கூட்டணிக்குள்தான் குழப்பம் நிலவுகிறது. காங்கிரசுக்கு அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள். அமைச்சரவையில் இடம் கொடுப்பார்களா? விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள்? பேச்சுவார்த்தை தொடங்கட்டும், அப்போது இந்த குழப்பம் வெளிவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
    • அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.

    தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை. 

    இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.

    அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.

    அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார் 

    • மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
    • இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

    இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது,

    காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.

    இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×