என் மலர்
கோயம்புத்தூர்
- தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும்.
- மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
கோவை:
மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும். தி.மு.க. தயாரிக்கும் தேர்தல் அறிக்கை, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை.
அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள்.
கோவை:
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போது அவர் கோவை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் அவர் கரூர் தொகுதியில் இருந்து இடம் மாறி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். தான் கோவையில் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் யாராவது சேர்க்கப்பட்டுள்ளனரா? என்பதை பூத் வாரியாக ஆராய வேண்டும். அதைப் பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும் தி.மு.க.வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. இதுதான் தமிழக அரசியல் சூழல். விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். தி.மு.க.வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள். மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல் அரசு நடத்தும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க.வும் சரி, புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதி மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை.
நான் கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதை நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது. கரூர் மக்கள் என்னை தொடர்ந்து ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு என்றார்.
- ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.
- தவழும் குழந்தை தான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னாட்சி நடத்துவார்கள்.
கோவை:
தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
எஸ்ஐஆர் குறித்து ஏற்கனவே த.வெ.க தலைவர் விஜய் விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவே பொருத்தமாக இருக்கும்.
ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர். அது அவர்களின் கருத்து.
தவழும் குழந்தை தான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னாட்சி நடத்துவார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து, இன்று மாலை தலைவரிடம் பேசிவிட்டு அது எந்த இடம் என்பதை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரிடம், களத்தில் இல்லாத கட்சி தமிழக வெற்றிக்கழகம் தான் என தமிழிசை தெரிவித்துள்ளது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன் பதில் அளித்து கூறும்போது, அது அவருடைய கருத்து. களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் தான் தீர்ப்பளிக்கும் என்றார்.
அதேபோன்று த.வெ.க.வின் அடுத்த வியூகம் என்ன என்பது தொடர்பான கேள்விக்கு, எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என்பதை பார்த்து நாடே வியக்கும் என அவர் தெரிவித்தார்.
- கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.
கோவை:
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கியது. அதன்படி கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை கோவை மாவட்டத்திலும் வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்று முடிந்தது.
பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பவன்குமார் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு, இறந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 489 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 360 பேர், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 பேர், இரட்டைப்பதிவுகள் 23 ஆயிரத்து 202 பேர், இதர காரணங்கள் 380 பேர் என கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சேர்த்து 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.
அதாவது 20.17 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.
மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் குடிபெயர்ந்தவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இப்படி மாறியவர்கள் மட்டுமே 20 சதவீத வாக்காளர்கள் இருப்பர். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் போது பலரும் இறந்து விட்டனர். இவையே வாக்காளர் பட்டியலில் அதிகம் பேர் நீக்கப்பட்டதற்கான காரணம் ஆகும்.
கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் நீக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்களில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 வாக்காளர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் தான்.
இதற்கிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விவரங்கள், நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களுடன் அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் படிவம் 7, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8, ஆதார் எண் இணைக்க படிவம் 6 பியை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவரிடம் ஜனவரி 18-ந் தேதி வரை அளிக்கலாம். ஆன்லைன் வாயிலாக www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் Voter Helpliner என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கோவை:
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.
இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் எனும் உயிர் நீதிமன்ற தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை அத்துக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
- சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன.
- மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
கோவை:
'சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு' கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்றைய மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும், சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரிகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது.
சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்தபோதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும், ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும், பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளது. குறிப்பாக தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்களும் உள்ளன.
இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும் அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகத்திற்கே அந்த கருத்துக்கள், தத்துவங்கள் இன்று தேவைப்படுகின்றன. இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும்.
உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகிறது. மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தத்தால் தற்கொலை அதிகரித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளின் தலைநகராக தமிழகம் உள்ளது.
அந்த வகையில் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியோடு இழந்த நமது கலாச்சாரத்தையும் மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புது சக்தியை கொடுத்து வருகிறது. நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல தடைகளையும் கடந்து வளர்ந்து வருகிறது.
ஆரியம், திராவிடம் என பலரும் பிரிக்க நினைத்தாலும் அவர்கள் தோற்றுப் போவார்கள். காரணம் அவர்களிடம் இருப்பது பொய்யான கருத்துக்கள் தான். அந்த வகையில் சரஸ்வதி நதி நாகரிகம் மற்றும் அதன் சிறப்பை இது போன்ற மாநாட்டின் மூலம் எடுத்துரைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை.
- பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.
கோவை:
பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் அந்த மின்வழித்தொகுப்பில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.
மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.
- நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆனைமலை:
கோவை மாவட்டம் ஆழியார் அருகே கவியருவி உள்ளது.
இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் கவியருவியில் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.
இந்த நிலையில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டியது.
தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். ஆங்காங்கே மலைகளில் இருந்து அருவி போல் நீர் வந்து கொண்டிருப்பதால் அவற்றுக்கு அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருமூர்த்திமலை மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும்.
- தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.
பேரூர்:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில் குறைந்த காலத்தில் அதிக லாபம் பார்க்க முடியும்.
இதன்காரணமாக அங்குள்ள விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் தக்காளி,வெண்டை, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்தரி போன்றவற்றை நடவு செய்து உள்ளனர். காய்கறி விளைச்சலுக்கு போதிய தட்பவெப்பநிலை மற்றும் சீதோஷ்ண சூழ்நிலை இருந்தால் மட்டுமே விளைச்சல் நல்ல முறையில் இருக்கும்.
ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளாகவே தொண்டாமுத்தூர் பகுதிகளில் காலநிலை மாற்றம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தீத்திபாளையம், மாதம்பட்டி, குப்பனூர், சென்னனூர், வடிவேலாம்பாளையம், செம்மேடு, தென்னமநல்லூர், தேவராயபுரம் பகுதிகளில் சின்ன வெங்காயத்தை நடவு செய்து இருப்பு வைத்து கிட்டத்தட்ட 70 சதவீதத்துக்கும் மேல் விவசாயிகள் விற்பனை செய்து விட்டனர்.
இதற்கு விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு போதிய விலை கிடைக்க இயலாததால் அங்கு தற்போதுஅதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் 50 சதவீதம் தக்காளிகளை விவசாயிகள் பறித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். விவசாய தோட்டங்களில் மீதம் உள்ள தக்காளி பயிர்கள் பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அதிகப்படியான பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பூக்கும்-காய்க்கும் தருவாயில் உள்ள தக்காளி செடிகளுக்கு பூஞ்சாண நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காய்ப்புழு தாக்குதல், செம்பேன், இழைப்புள்ளி நோய், வேர்வாடல் நோய் போன்ற நோய்களின் தாக்குதல் தக்காளி விளைச்சலை பெருமளவில் பாதித்து உள்ளது. பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும். ஆனால் தற்போது 4-5 டன்கள் வரை அறுவடை செய்ய முடிகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. விவசாய தோட்டங்களில் தக்காளி பயிரிட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.10 லட்சம் முதல் 1 1/4 லட்சம் வரை செலவாகிறது.
ஆனால் தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு போதியவிலை கிடைக்காததால் அங்குள்ள விவசாயிகள் தற்போது பாக்கு, வாழை போன்ற பயிர்களை விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே கோவை மாவட்ட விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளி உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு தோட்டக்கலை, வேளாண் அதிகாரிகள் கால சூழலுக்கு ஏற்ப தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் பருவநிலை மாற்றத்தை பாதிக்கப்படும் தக்காளி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
- கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி இளநீருக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிரா, அசாம், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது. இவ்வாறு விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
இளநீர்விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீர் டிசம்பர் 8-ந்தேதி முதல் ரூ.23 ஆகவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.10 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவுவதாலும், பொள்ளாச்சி பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும், இளநீர் வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வாரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார்.
- எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் கோவை மாவட்டத்திற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள எந்திரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டு பின்னர் அந்த அறைக்கு சீல் வைப்பது வழக்கம்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனையொட்டி இன்று கோவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் 8,391 வாக்குப்பதிவு கருவி எனப்படும் பேலட் எந்திரங்கள், 5 ஆயிரத்து 245 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 5,885 வாக்குச்சீட்டு சரிபார்க்கும் கருவி எனப்படும் வி.வி.பேட் எந்திரம் என மொத்தம் 19,521 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் முதல்கட்ட சோதனை பணி இன்று கலெக்டர் பவன்குமார் தலைமையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார். இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளானது 1 மாதம் வரை நடைபெற உள்ளது. இதனை தினமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிபார்க்கும் பணியில் 19 ஆயிரம் மின்னணு எந்திரங்களும் தற்போது எந்த நிலையில் உள்ளது என பரிசோதனை செய்யப்படும். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டப்படும் பேலட் எந்திரத்தின் அனைத்து பொத்தான்களும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து சரிபார்க்கப்படுகிறது. மேலும் அந்த எந்திரத்தில் உள்ள தேர்தல் கால தகவல்கள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் அழிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






