search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "residential area"

    • குடியிருப்பு பகுதியில் உள்ள பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன
    • அந்த வழியாக சென்ற மாணவர்களை கடித்து வந்தன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், பெரிய மடப்புரம், கீழத்தெரு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன.

    இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் பொறையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
    • கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

    வெள்ளகோவில்:

    தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கன மழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தன. வெள்ளகோவில் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளகோவில் நகர் பகுதியில் குமாரவலசு, கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி மழை நீர் தேங்கி இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    • காட்டுமன்னார்கோவிலில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்தது.
    • பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வாத்தியார் தெருவில் குடியிருப்பு பகுதியில் 3 அடி நீளம் நாகப்பாம்பு புகுந்ததுஇதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கொளஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் அந்த வீட்டிற்கு சென்று பாம்பை மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால், அவை திசை மாறி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. வனத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், குடியிருப்புக்குள் புகும் வனவிலங்குகளை கண்காணித்து விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

    கோத்தகிரியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள காமராஜ் நகர், புதூர், சேலாடா உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி அடித்துக்கொன்று வருவதால், பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் நகரில் ஜெயபால், பாண்டியன், சேக் முகமது, கல்வி ஆகியோரது வீடுகளில் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி கவ்வி சென்றது. கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தைப்புலி கடித்து காயப்படுத்திவிட்டு சென்றது. நேற்று முன்தினம் இரவு புதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை அடித்துக்கொன்று, அட்டகாசம் செய்தது.

    முன்னதாக மதிய வேளையில் அளக்கரை செல்லும் வழியில் புதூர் விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பகலில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதியிலும் தொடர்ந்து நடமாடி வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    ஓசூரில் குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் நகர் அருகே உள்ள துளசியம்மா நகரில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், துளசியம்மா நகர் பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

    மேலும் அதற்கு தீ வைப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கலந்த புகையால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினர்.

    இதனால், ஆத்திரம் அடைந்த துளசியம்மா நகர் பொதுமக்கள், நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ளது கேர்பெட்டா. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு நடுவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கோத்தகிரி தாசில்தார் நேரில் ஆய்வு செய்து, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்து, கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி பெற்றது. இதையடுத்து அந்த பணி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணிக்கு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலெக்சாண்டர், கவுதம், நசீர், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார், கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டு உள்ளதால் பணிகளை தடுத்து நிறுத்துவது சட்டப்படி குற்றம். வேண்டுமென்றால் ஐகோர்ட்டில் பொதுமக்கள் சார்பில் மனு தாக்கல் செய்து செல்போன் கோபுரம் அமைக்க தடை உத்தரவு பெறலாம். மேலும் மாவட்ட கலெக்டரிடம் குடியிருப்பு பகுதி அல்லாமல் வேறு இடத்தில் செல்போன் கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கலாம் என்று யோசனை கூறினர். இதை கேட்டறிந்த பொதுமக்கள், எங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிக்கவே திரண்டோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களது நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர். 
    கோவை பி.என்.புதூரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேலு, கிளை செயலாளர் சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர், குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.புதூர் சென்னிமலை ஆண்டவர் நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, தேவையற்ற அசம்பாவிதங்களும் ஏற்படும்.

    மேலும் மதுக்கடை திறக்கப்பட உள்ள இடத்தின் அருகே மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கோவை கவுண்டம்பாளையம் உடையார் வீதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

    நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக மண் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இதனை நம்பி 40 குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 யூனிட் களிமண் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் நாங்கள் கணுவாய், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து மண்பானை செய்தோம். தற்போது எங்களுக்கு களிமண் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு களிமண் எடுக்க நிரந்தர அனுமதி சான்று வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மீது சிலர் கடந்த மாதம் 30-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் பதிவு செய்யப்பட்டும் குற்றவாளி கைது செய்யப்பட வில்லை.

    டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைந்த பார்களின் உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்கின்றனர். இதனை எதிர்க்கும் மதுக்கடை ஊழியர்கள் மீது சில நபர்களை தூண்டி விட்டு தாக்குதல் நடத்துகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் டாஸ்மாக் பார்களின் உரிமையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உள்ளது.

    கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு (வயது 39) என்பவர் அளித்த மனுவில், சிறு வயதில் ஏற்பட்ட நோய் காரணமாக எனது 2 கால்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளியான எனக்கு வடவள்ளி பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இருந்தது.

    கோவை அருகே உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அளித்த மனுவில், நாங்கள் தொழிற்சங்கத்தில் முன்னணி நிர்வாகிகளாக இருந்ததால் எங்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 
    குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு பல இடங்களில் கால்வாய்களை சுத்தம் செய்யாததாலும், பிளாஸ்டிக் பொருட்களின் தேக்கத்தினாலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி வீதிகளில் தேங்கி நிற்கின்றன. குறிப்பாக அச்சுக்கட்டு பகுதியில் அபுபக்கர் நகர், காளியம்மன் கோவில் தெரு, கண்மணிபாக்கம், உசேன் அம்பலம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கின்றன.

    இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முறையான வாய்க்கால் அமைத்து கழிவுநீர் செல்ல பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×