search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காரின் பின்புறம் மூட்டை மூட்டையாக சில்வர் டிபன் பாக்ஸ்கள் நூற்றுக்கணக்கில் இருந்துள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த நெடுங்குணம் பகுதியில் அமைந்துள்ள போளூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேளாண் அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னையிலிருந்து போளூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது அதனை நிறுத்தி சோதனையில் ஈடுபடும் பொழுது காருக்குள் இருந்த பொருட்களால் தேர்தல் பறக்கும் படையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    காரின் பின்புறம் மூட்டை மூட்டையாக சில்வர் டிபன் பாக்ஸ்கள் நூற்றுக்கணக்கில் இருந்துள்ளன இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் இது குறித்து விசாரித்துள்ளனர் காரில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தில் மஞ்சள் நீராட்டு விழா எனவும் அவற்றிற்கு வருபவர்களுக்கு பரிசு அளிக்க சென்னையிலிருந்து குறைந்த விலையில் வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அதற்கு உண்டான ரசீதையும் தேர்தல் பறக்கும் படையினரிடம் காண்பித்தனர்.

    இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    இந்நிகழ்வின் போது காவலர்கள் வேண்டா, சரவணன், சிவா, ஒளிப்பதிவாளர் சேட்டு உள்ளிட்டோர் இருந்தனர்.

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.
    • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.

    சேலம்:

    பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் பேச்சை தொடங்கினார்.

    முதலில் சேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன் என்றார்.

    அதன்பின் தொடர்ந்து பேச தொடங்கிய பிரதமர் மோடி,

    * தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை நாடே ஆச்சரியமாக பார்க்கிறது.

    * பா.ஜ.க.வுக்கு பெருகும் ஆதரவு தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

    * வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக 400-க்கும் அதிகமான இடங்களை பெற வேண்டும்.

    * தமிழகம் வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும்.

    * தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.

    * தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.

    * சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன். இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன.

    * சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார்.

    * ரத்தினவேல் இன்று நம்மிடையே இல்லை, அவரின் நினைவு மட்டுமே உள்ளது.

    * சேலம் வந்ததும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்த லட்சுமணன் என் நினைவுக்கு வருகிறார்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    இதனிடையே ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண் கலங்கினார்.


    • பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    • உதவி தேர்தல் அலுவலர் முருகன் மற்றும் தேர்தல் தாசில்தார் வேண்டா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த லோடு ஆட்டோவை மடக்கி விசாரணை நடத்தினர். அவர் சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த விஜயன், மாடுவியாபாரி என்பதும் வேலூர் பொய்கையில் நடந்த மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வாங்க உரிய ஆவணம் இல்லாமல், ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 500 எடுத்து சென்றது தெரியவந்தது.

    பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். உதவி தேர்தல் அலுவலர் முருகன் மற்றும் தேர்தல் தாசில்தார் வேண்டா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் தற்போது வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.
    • ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து சற்று அதிகரித்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் தற்போது வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.

    கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திடீரென்று நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி வினாடிக்கு 2500 கனஅடியாக அதிகரித்து வந்தது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நேர நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக சரிந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து சற்று அதிகரித்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.

    மழை அளவு பொறுத்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவும் குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி.
    • 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும்.

    சேலம்:

    சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வெள்ளி பேழையில் ஜவ்வரிசி பரிசாக வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்தார்.

    கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர். கடந்த 5 நாட்களாக தென்னிந்தியா முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்றார்.

    பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும். ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றார்.

    • அவினாசியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனா தலைமையிலான குழுவினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • பணத்தை ரஹ்மத்து ல்லாஹ் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனா தலைமையிலான குழுவினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அவினாசி ரவுண்டானா பகுதியில் சோதனை செய்தபோது, சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ்சில் வந்திறங்கிய மதுரை சிவகங்கை பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (வயது 27) என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் 500 ரூபாய் பண்டலாக ரூ.14 லட்சத்து 94 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான ஆவணங்களை கேட்டபோது ரஹ்மத்துல்லாஹிடம் இல்லை.

    இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த பணத்தை ரஹ்மத்து ல்லாஹ் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    சேலம்:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி களம் இறங்கி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இந்த இரு மாநிலங்களிலும் கடந்த மாதம் முதலே, அடுத்தடுத்து வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் கடந்த 15-ந்தேதி பிரசாரம் மேற்கொண்ட மோடி, இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் அஞ்சு விளக்கு பகுதியில் இருந்து சுல்தான்பேட்டை வழியாக பாலக்காடு தலைமை தபால் நிலையம் வரையிலான ஒன்றரை கிலோமீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் நின்றபடி வாகன பேரணி சென்றார்.

    அப்போது பாலக்காடு, மலப்புரம், பொன்னானி ஆகிய மக்களவை தொகுதி களில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.

    கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி சேலம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


    பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்குமார், இந்தியா மேலும் வலிமை அடைவதற்கு மோடியின் ஆட்சி தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

    இதையடுத்து பேசிய அன்புமணி ராமதாஸ், பொதுக்கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்பது பா.ம.க.வின் விருப்பம் என்றார்.

    இதனிடையே பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். பிரதமர் மோடியின் வாகனத்தில் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் உடன் வந்தனர்.

    • வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
    • தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் சுயேட்சையாக போட்டியிட பலரும் ஆர்வமாக உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செல்லும் வழியை காண்பிக்கும் அறிவிப்பு பலகை சுவற்றில் ஒட்டும் பணி நடந்தது.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,

    வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் ஊர்வலமாகவோ, கூட்டமாகவோ வந்து வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு போடப்படும் என்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் நாளை முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள். அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
    • இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை முதல் நாளை மாலை வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

    • இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர்.

    இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

    மேலும் இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.

    விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.

    சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.


    மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

    விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழி பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

    • மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி:

    பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பணபட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தற்போது இருந்தே தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை என நடத்திய சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியுள்ளன.

    மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பிரிவில் அதிகாரிகள் வாகன சோதனைகள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அ.தி.மு.க. கொடி கட்டிய கார் அந்த வழியாக வந்தது. உடனே அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியை அடுத்துள்ள காராம்பட்டி யைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கிருபாகரன் (வயது 29) இருந்தார்.

    தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் கிருபாகரனிடம் இல்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×