என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா்.
- இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள கவர்னர் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டாா்.
இதை தொடர்ந்து ஆா்.வி.ஆா்லேகா் நாளை மறுநாள்(புதன்கிழமை) சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் ஆா்.என்.ரவி, தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை கவர்னர் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.
இதையடுத்து தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் 12-ந்தேதி மதியம் 12 மணியளவில் பதவி ஏற்கிறாா். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.
- 11-ந்தேதி வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
11-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
12-ந்தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
14 மற்றும் 15-ந்தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இதனிடையே 12 மற்றும் 13-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- அய்யா கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வீட்டின் முன்பு 25-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுக்கு லாபகரமான விலை மற்றும் கோதாவரி காவேரி நதிகளை இணைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று சட்டமன்றத் தேர்தல் காலத்திலும் தடையின்றி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தியும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்திட கோரியும், கடந்த 2 வாரகாலமாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய கோரியும், நாளை மறுநாள் திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கை மனு அளிக்க அனுமதி வழங்க கோரியும் திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி திடீர் போராட்டம் நடத்தினர்.
ஓயாமரி மயானம் அருகே காவிரி ஆற்றில் அய்யா கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த கோட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அதன் பின்னர் அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் அனைத்து விவசாயிகளையும் வீட்டுக்காவலில் வைத்தனர். வீட்டின் முன்பு 25-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மாநாட்டில் முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
- காலையிலிருந்தே தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சாவூர்:
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் மாநாடு, பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க சார்பில் திருச்சி சிறுகனூர் பகுதியில் இன்று மாலை மாநில மாநாடு நடைபெறுகிறது.
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றுக்கின்றனர்.
மாநாட்டில் முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். காலையிலிருந்தே தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு இடங்களில் இருந்து மதிய உணவும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் அதிகாலை முதல் கலைஞர் அறிவாலயம் எதிரில் உள்ள இடத்தில் மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.
கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் 65, தால்சா அடங்கிய பிரியாணி பேக்கேஜ் செய்யப்பட்டு தஞ்சாவூரில் இருந்து வாகனம் மூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சுமார் 12 ஆயிரம் பேருக்கு கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் 65 தயார் செய்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூரில் மட்டுமே 12 ஆயிரம் பேர்களுக்கு 1300 கிலோ மட்டன், 800 கிலோ சிக்கன் மூலம் மட்டன் பிரியாணி ,சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி:
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஏறத்தாழ இறுதி செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க-பா.ஜ.க. உருவாக்கியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம. மு.க., த.மா.கா., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தற்போதைய சூழலில் வலுவான கூட்டணி அமைத்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்னரே தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசார கூட்டங்கள் பெரிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் ஒரே மேடையில் கைகோர்த்தனர்.
இதையடுத்து 2-வது முறையாக கடந்த வாரம் தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடி புதுச்சேரி சென்று அங்கு ஆரோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின்னர் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் இன்னும் சில முக்கிய நகரங்களில் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் நாளை மறுநாள் (11-ந்தேதி, புதன் கிழமை) திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இதற்காக திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழா நடக்கிறது.
இதில் இந்திய எண்ணெய் கழகம் சார்பில் சென்னை மணலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லூப் ஆயில் திட்டம், குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார். மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தமிழகத்தின் முக்கிய 4 வழிச் சாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட சுரங்க பாதைகள் மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 4 வழிச்சாலைகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அதே பகுதியின் பின்புறம் மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் தேசிய ஜனநாயகக்கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்த நிகழ்வுகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
பிரசார பொதுக்கூட்டத்திற்கு பின்னர் கார் மூலம் எடமலைப்பட்டி புதூர் வழியாக திருச்சி விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடந்தது.
இதற்கிடையே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு திருச்சி வந்தது. அதன் ஐ.ஜி. நவ்நீத்குமார் மேத்தா தலைமையில் வந்த அந்த குழுவினர் பஞ்சப்பூரில் அரசு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும், ஹெலிபேடு தளத்தையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் கார் மூலம் பிரதமர் மோடி செல்லும் வழித்தடத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து விமான நிலையம் மற்றும் பஞ்சப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சரவணன், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் முன்னேற்பாடு பணிகளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் வருகையையொட்டி திருச்சி மாநகரில் இரண்டு நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
- ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மங்கள் குமார், (வயது 22). இவர் காட்பாடி பகுதியில் சுற்றித் திரிந்து வந்தார். இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் செல்வதற்காக நின்று கொண்டிருந்தது.
அப்போது மங்கள் குமார் ரெயில் என்ஜின் மேற்கூரையில் திடீரென ஏறி அமர்ந்தார். என்ஜினில் மேல் உயர் அழுத்த மின்சார ஒயர்கள் சென்று கொண்டிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். அவரை கீழே இறங்குமாறு பலமுறை தெரிவித்தனர். அவர் இறங்க மறுத்தார். உடனே இது பற்றி ரெயில்வே மின்சார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, மங்கள் குமார் தன்னிச்சையாக பேசிக் கொண்டு, யாருடைய கட்டுப்பாடுகளையும் ஏற்காமல் சுற்றித் திரிவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
- 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை மறுநாள் சென்னை வருகிறார்கள்.
- ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்.
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய தலைமை நியமித்துள்ள சிங்தியோ தலைமையிலான 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை வருகிறார்கள்.
சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்கள்.
அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதியில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்.
இந்த குழுவினரின் தேர்வு பட்டியலின் அடிப்படையில் எந்தெந்த தொகுதிகள் என்று தி.மு.க.வுடன் பேசி முடிவு செய்ததும் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான 3 நபர்களை தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு டெல்லி ஒப்புதல் அளித்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நேற்று இரவு மணிஷ்குமார் வீட்டிற்கு இளம்பெண் சென்றார்.
- அப்போது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டார்.
போரூர்:
சென்னை நெற்குன்றம், பகுதியை சேர்ந்த 23வயது இளம்பெண் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது எதிர் வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிஷ்குமார் (வயது37) என்பவர் வசித்து வருகிறார் இவரிடம் இளம்பெண் நட்பு ரீதியாக பழகி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மணிஷ்குமார் வீட்டிற்கு இளம்பெண் சென்றார். அப்போது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரது பிடியில் இருந்து தப்பி ஓடி வந்து தாயிடம் நடந்ததை கூறி அழுதார். உடனடியாக இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது இதையடுத்து போலீசார் மணிஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.
- குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்த முடியும்?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன்.
இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள "கொலை நிலவரத்தை" சுட்டிக்காட்ட விழைகிறேன்.
-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை
-சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை
-தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை
இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது.
முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை? இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய பொம்மை முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா?
தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.
குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்த முடியும்?
ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" கொலைகள் நடக்கவில்லை. "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது.
நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்!
மேற்கூறிய வழக்குகளில் குற்றம் இழைத்தோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
- பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தனர்.
- ஓட்டு வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியில் இருந்தே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கி விட்டது. எல்நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட ஆரம்பித்துவிட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி கிழங்கு, கரும்பு, வெற்றிலை, வாழை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பகுதியில் நேற்று அதிக அளவில் வெயில் அடித்ததால் தோட்டங்களில் கூலி வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் தார் சாலைகளில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளும், அத்தியாவசிய காரணங்களுக்காக நடந்து சென்ற பொதுமக்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலையோர இளநீர் கடைகளுக்கு சென்று வாகன ஓட்டிகள் இளநீர் வாங்கி பருகியதை காணமுடிந்தது. மேலும் தர்பூசணி கடைகள், வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் களை கட்டியது.
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தனர். குறிப்பாக ஓட்டு வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டனர். 100.4 டிகிரி வெயில் நிலவியதால் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் தூங்கமுடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
கடந்த காலங்களில் அருகாமையில் உள்ள கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் தொடர்ந்து வெயில் சதத்தை தாண்டி வந்த நிலையில் தற்போது பரமத்திவேலூர் பகுதியில் முதன்முறையாக 100.4 டிகிரியை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கோடைகாலம் தொடங்கும் முன்பே தற்போது 100.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளதால் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் மேலும் கடுமையாக இருக்கும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் பழங்கள், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்தான உணவுகளை சாப்பிட டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல் சேலத்தில் நேற்று 99.7 டிகிரி வெயில் பதிவானது. பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மாலை 5.30 மணி வரை வெயிலின் தாக்கம் நிலவியது.
- உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆம்பூர்:
சென்னை பழவந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவபூசணம் (வயது48) . இவர் இன்று காலை ஆம்பூர் அடுத்த தேவலாபும் ஊராட்சி எட்டியம்மமன் கோவில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற பெண்ணை 11 ஆண்டு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததும், தற்போது ஆம்பூரில் கணவன்- மனைவி பைபாஸ் சாலையின் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 3- நாட்களுக்கு முன்பு தேவலாபுரம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நேற்று மாலை அறையை காலி செய்து வெளியே சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவபூசணம் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.
- ராமதாஸ் தரப்பில் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவைகளை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது, அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உரிமையியல் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'டாக்டர் ராமதாசுக்கு தற்போது 87 வயது ஆகிறது. உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களால், அவரால் கட்சி தொடர்பான நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக வழி நடத்துகின்றனர்.
ராமதாஸ் தன்னைத்தானே பா.ம.கவின் தலைவர் என அறிவித்துக் கொண்டது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. பா.ம.க.வின் நிறுவனர் என்ற அடிப்படையில் பா.ம.க. கட்சியில் ஆலோசனை வழங்கி, கட்சியின் வழிகாட்டுதலை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் கட்சியின் முடிவுகளை எடுக்க பா.ம.க.வின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. பொதுக்குழு மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுக்க உரிமை உள்ளது.
ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பா.ம.க. கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர நிறுவனருக்கு உரிமை, அதிகாரம் இல்லை. தன்னை தானே தலைவர் என ராமதாஸ் அறிவித்து கொண்டு விதிகளை திருத்தியதை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அன்புமணி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு வருகிற 11-ந்தேதிக்குள் ராமதாஸ் தரப்பில் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.






