என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது.
    • பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகர் கூறும்போது, விவசாய தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர்.

    இதனால் காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது. அதேநேரம் பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும் என்றார்.

    • கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.
    • இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை:

    தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று நள்ளிரவு 24 மணி நேர நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,390 பஸ்கள் இயக்கப்பட்டு, 2 லட்சத்து 1940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதில் மொத்தம், 6 லட்சத்து 90ஆயிரத்து 720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அத்துடன், இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்து உள்ளார்.

    • 100 நாள் வேலைத் திட்டமான ​மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது.
    • தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது.

    வத்தலகுண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்காக, அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு 17-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக நான் ஏற்கனவே எனது விளக்கத்தை முழுமையாகக் கூறிவிட்டேன். இதுபோன்ற கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கே உள்ளது. அவர்தான் இதுகுறித்து இறுதி முடிவை அறிவிப்பார். 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார் 4,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் 'மகாத்மா காந்தி' என்ற பெயரை மத்திய அரசு நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

    ஆண்டு முழுவதும் விவசாய வேலைகள் இல்லாத சூழலில், ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இத்திட்டத்தில் 240 நாட்கள் கூட வேலை வழங்கப்படுவதில்லை. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

    அமைச்சர்கள் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்குகள் குறித்து கேள்விக்கு, நாங்கள் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். 15 முதல் 20 முறை சிறைச்சாலைக்குச் சென்று போராடிப் பக்குவப்பட்டுத்தான் ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் நிலைக்கு உயர்ந்துள்ளோம். பதவிக் காலத்தில் நாங்கள் சேர்த்ததாகச் சொல்லப்படும் சொத்துக்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். இதுபோன்ற வழக்குகளால் எங்களது தேர்தல் பணி மற்றும் மக்கள் பணியில் எந்தச் சுணக்கமும் பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார்.
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சீமான் எதுக்கு வேண்டும் என்றாலும் பொங்கல் வைப்பார். திராவிடம் இணைந்தது தான் தமிழ்நாடு. அதனால் திராவிட பொங்கல் கொண்டாடி வருகிறோம். மகாராஷ்டிராவில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் தமிழர்கள் மீது தாக்குதல் என்று சொல்லிவிடுவார். அண்ணாமலை பேசிய இந்தி அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை.

    எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தவும் முடியாது. அவர்கள் கூட்டணி போகப்போக தேய்ந்து கொண்டே போகுமே தவிர, பலப்படுத்த எப்போதுமே முடியாது.

    எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார். நிறைய கட்சிகள் உருவாகி வருகிறது. லெட்டர் பேட் கட்சிகள், அந்த கட்சிகள் எல்லாம் வரும் என்று கூறி இருப்பார். ஜனநாயகனுக்கு பலரும் குரல் கொடுத்து இருக்கக்கூடிய நிலையில் அது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் குரல் கொடுக்காததை வைத்து அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்.

    1965-ம் ஆண்டு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. அன்றைய நிகழ்வுகள் இன்று எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர் பட்டாளம் துணிந்து எழுந்து நடத்திய போராட்டம். அப்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு, தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு.

    காங்கிரஸ், தி.மு.க.வினருக்குள் ஆட்சியில் பங்கு தொடர்பாக தற்போது எழுந்துள்ள விமர்சனத்தால் கூட்டணிக்குள் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. அவரவர்கள் அவர்களது விருப்ப கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது. அதில் சிறு துளியை மட்டுமே தந்துள்ளனர். நிச்சயமாக அதிகமாக தொகையை அவர்கள் தரவில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது கிடைத்த நிதி தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் தமிழ்நாட்டிற்கு சாலை, கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது.

    அமித்ஷா, மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்களுக்கு ஏமாற்றத்தத்தை தான் ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி பங்கேற்கவில்லை.
    • பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை.

    டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட செயலாளர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
    • உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள்-தைத்திருநாள்-உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, 3,000 ரூபாய் ரொக்கம் என நமது திராவிட மாடல் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.

    நானும், இன்று (ஜனவரி 14) சென்னை சங்கமம் கலைவிழா, ஜனவரி 17 அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.

    அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், தூய்மைப் பணியாளர்கள்-செவிலியர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்தப் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையவேண்டும் என மக்களின் மனமறிந்து நமது அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன.

    அடுத்த 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில், தமிழ் நாட்டு மக்களிடம் 'உங்க கனவ சொல்லுங்க' என அவர்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை 2030-க்குள் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி, திராவிட மாடல் 2.0 வடிவில் தொடர வேண்டும் என மக்களான நீங்களும் மனப்பூர்வமாக முடிவெடுத்துவிட்டீர்கள்.

    பொங்கல் திருவிழாவிற்காக வெளியூர் சென்று திரும்புவோர் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக்கோலம், உறவினர்களைச் சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடெங்கும் பொங்கிடும் சமத்துவப் பொங்கலை, தலைமைச் செயலகத்திலும் கொண்டாடினோம்! #பொங்கல்2026 என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.
    • நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்:

    1. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.

    2. காலை 5:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    3. நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    4. மேலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
    • மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.

    சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.

    * பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

    * பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.

    * பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

    * கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    * மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது உபரியாக கிடைக்கும் மொலாசஸ் திரவம் இங்கு பிரமாண்ட தொட்டியில் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    • நேற்று இரவு பணியில் இருந்தபோது 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி சேமிப்பு தொட்டியில் விழுந்து மூழ்கினர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியில் தனியார் கரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 21-ந் தேதி கரும்பு அரைக்கும் பணி தொடங்கிய நிலையில், கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது உபரியாக கிடைக்கும் மொலாசஸ் திரவம் இங்கு பிரமாண்ட தொட்டியில் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    மொலாசஸ் திரவம் சேமிப்பு தொட்டியின் பராமரிப்பு பணியில் சிவகங்கை அருகே உள்ள கரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 35) மற்றும் சிவகங்கை, மதுரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று இரவு பணியில் இருந்தபோது 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி சேமிப்பு தொட்டியில் விழுந்து மூழ்கினர். சிறிது நேரத்தில் அவர்கள் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தொட்டியில் சிக்கியிருந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக ஆலையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? பராமரிப்பு பணியின்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே, தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.

    கல்வித் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது.
    • தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது.

    28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருக்கிறது.அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 170-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. இதன்மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது.

    இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.307-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,360

    12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960

    11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-1-2026- ஒரு கிராம் ரூ.292

    12-1-2026- ஒரு கிராம் ரூ.287

    11-1-2026- ஒரு கிராம் ரூ.275

    10-1-2026- ஒரு கிராம் ரூ.275

    9-1-2026- ஒரு கிராம் ரூ.268

    ×