என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK"

    • குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
    • நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

    உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது திமுக அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்; மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.

    எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66-ஆம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.

    • தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன.
    • 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2025-26-ம் ஆண்டில் 12 கோடி மனித நாள் வேலைகளும், அதற்கான நிதியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 50 நாட்களாவது வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 43 கோடி மனிதநாட்கள் வேலை தேவைப்படும் நிலையில், அதில் சுமார் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. 2023-24-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு மொத்தம் 41 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்டது. அவற்றில் 40.87 கோடி மனித நாள் வேலை மக்களுக்கு வழங்கப்பட்டது.

    ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 20 கோடி மனித நாள்கள் மட்டுமே மத்திய அரசு வேலை வழங்கியது.

    தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு வெறும் 16 நாட்களுக்கு மட்டும் வேலை வழங்குவதன் மூலம் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்க முடியாது; வறுமையையும் போக்க முடியாது.

    தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாள்கள் வேலைவழங்க 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படுவதால், அந்த அளவுக்கு வேலை நாட்களை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாகவுள்ளன.
    • திமுக கூட்டணி மாறாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.-பா.ம.க. கூட்டணி வதந்தி தான் என விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்து உள்ள பேட்டி விவரம் வருமாறு:-

    கே: பா.ம.க. உங்கள் கூட்டணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கும் செல்லலாம் என்று பேசப்படுகிறதே? அதனால் தான் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளிவருவது உண்மையா?

    பதில்: நீங்களே முணு முணுப்புகள் என்று சொல்லி விட்டீர்கள். புறந்தள்ளுங்கள். தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமைக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.

    கே: பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி குறித்து உங்கள் பதில் என்ன? இந்த கூட்டணி உங்களுக்கு எதிரான வலிமையான கூட்டணி என நினைக்கிறீர்களா?

    பதில்: இது தி.மு.க. அணி யால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல, இரு முறை. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக் கால நிகழ்வுகள் இருந்தன.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.

    கே: மும்மொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள மற்றொரு சர்ச்சைக் குரிய பிரச்சினையாகும். இந்தி திணிப்பு பற்றிய நிலைப்பாடு தற்பெருமையா? அல்லது உண்மையிலேயே அச்சமா?

    பதில்: இந்திமொழி ஆதிக்கம் என்பது எத்தகைய மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கும், இந்தித் திணிப்பினால் வடமாநிலங்களிலேயே பலர் அவரவர் தாய்மொழிகளையும், வட்டார மொழிகளையும் கடந்த 50 ஆண்டுகளில் இழந்திருப்பதையும் ஆதாரத்துடன் முன்வைத்திருக்கிறோம்.

    பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அதுதான் இன்றைய தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி, பண்பாட்டின் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக உள்ளது. மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு உறுதியுடன் எதிர்ப்பதற்கு காரணம், அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கிலான பா.ஜ.க. அரசின் மறைமுகத் திட்டம் என்பதால்தான்.

    கே: நீங்கள் பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலை மேற்கொள்கிறீர்கள் என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

    பதில்: அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்?

    வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன. மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது.

    நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று, அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ் நாட்டைப் பார்த்து-தி.மு.க.வைப் பார்த்து, பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது.

    கே: உங்கள் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சியின் சில அம்சங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் மதுபான கொள்கையை பற்றி விமர்சிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்: தோழமைக் கட்சியினரின் ஆலோசனைகள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கேட்டு, அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோழமைக் கட்சியினரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.

    கே: மார்ச் 31, 2026 நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும் என்று உங்கள் அரசு ஒப்புக்கொள்கிறது. அதில் இருந்து எப்படி மீள்வீர்கள்?

    பதில்: தமிழ்நாட்டை கடனில் மூழ்கடித்து விட்டு காலி கஜானாவை விட்டுச் சென்ற ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. அதன் பிறகு நிதி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து திறம்பட்ட நிதி மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்புக்குள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. 10 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, பொருளாதாரச் சூழலை நாங்கள் முன்னேற்றியுள்ளோம்.

    முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பது தமிழ்நாட்டின் அடையாளமாகியுள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் முன்னேறுகிறோம். தேவைப்படும் அளவிற்கு கவனமாக பொறுப்புடன் அதனைப் பெற்று மாநில முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    கே: தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களிடையே போதைப் பொருட்களின் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தெரிகிறது. உங்கள் பதில்?

    பதில்: இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலையையும் நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும் கவலையளிக்கக்கூடிய ஒன்றை, தமிழ்நாட்டிற்கு உரியதாக சுருக்கிப் பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது.

    அ.தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினார்கள். ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு-போதைப் பொருள் விற்போரின் வங்கி கணக்குகளை முடக்குவது, கடைகளை சீல் வைப்பது, அதிகபட்ச சிறை தண்டனை பெற்றுத்தருவது எனத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

    குட்கா போன்ற போதை பொருட்கள் கடந்தகால ஆட்சியில் எந்தளவுக்குப் புழங்கின என்பதும், அன்றைய அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் வரை அதில் தொடர்பு டையவர்களாக இருந்ததையும் தமிழ்நாடு அறியும்.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் நார்க்கோடிக் வகைகள், இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருந்து துறைமுகங்கள் வாயிலாக உள்ளே நுழைந்து, இந்தியாவின் அனைத்து திசைகளிலும் உள்ள மாநிலங்களுக்குள் ஊடுருவுகிறது என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. நுழைவாயிலின் காவல் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.

    கே: பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்ளும் போது அவர் அமைச்சராக தொடர்வது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கடுமையான கேள்வி கேட்டுள்ளதே? இதில் அரசின் நடவடிக்கை சரியானதா?

    பதில்: வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இக்கேள்விக்கு கருத்துச் சொல்வது பொருத்தமாக இருக்காது.

    கே: ஜனவரியில், சிந்து சமவெளி நாகரீக இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளை புரிந்து கொள்வதற்காக நீங்கள் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்து இருக்கிறீர்கள். இது திராவிட-ஆரியப் போராட்டத்தின் நீட்சியா?

    பதில்: 3000 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருதுகோளை வெளியிட்டவர் பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறைத் தலைவரான சர் ஜான் மார்ஷல்.

    அந்த ஆய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டில், சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த எழுத்து வடிவங்களை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை என அறிவிக்கப்பட்டது. இது ஆரிய-திராவிட போராட்டத்தின் நீட்சியல்ல.

    ஆரியத்துக்கு முந்தைய இந்த மண்ணின் பண பாடான திராவிடத்தை ஆய்வுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிலைநாட்டும் முயற்சி. எழுத்து வடிவம் குறித்த வெற்றிகரமான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கி றேன்.

    கே: துணை முதல்-அமைச்சர் உதயநிதியின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுவீர்கள்?

    பதில்: துணை முதல்-அமைச்சர் எனக்கும் துணையாக இருந்து பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கும் துணையாக இருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்.

    கே: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்ததை ஒரு எதேச்சதிகார செயல் என்றும் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாசம் என்று நீங்கள் கூறி இருந்தீர்கள். ஆனால் நீட் செயல்படுத்தப்பட்டபோது தி.மு.க. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததே?

    பதில்: தி.மு.க பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வைப் பரிந்துரைத்தபோதே அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர்.

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்கவில்லை. மாநிலங்களின் விருப்ப உரிமையாக அது அமைந்தது. தி.மு.க தொடர்ந்த வழக்கிலும் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே "நீட் தேர்வு செல்லாது" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து விட்டது. தி.மு.க ஆட்சியில் இருந்த காலம்வரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஏன், அம்மையார் ஜெயலலிதா இருந்தவரைகூட நீட் தேர்வு நடக்கவில்லை.

    "நீட் தேர்வு செல்லாது" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு பா.ஜ.க. ஆட்சி காலத்தில் தான் திரும்ப பெறப்பட்டது. பா.ஜ.க.விடம் தங்களை அடகுவைத்துவிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், பதவியில் நீடிப்பதற்காக-பா.ஜ.க. விருப்பப்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் திணித்தார்கள்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
    • மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.

    சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொளள அன்புமணி நியமனம் செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025ம் ஆண்டில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.

    சித்திரை முழுநிலவு மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கிறேன். சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.

    மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.

    சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

    சமூக நீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என தெரிவிக்க வேண்டும்./ அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வரவேண்டும்.

    மாநாட்டுக்கு வரும் வழியில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்துவிடாமல் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

    • இரு தேர்விலும் குறைந்தது 40% மதிப்பெண் பெற்ற பலர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
    • தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means Cum Merit Scholarship தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், அதில் அதிக மதிப்பெண் பெற்ற பலர் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்களைக் கூட பெறாத பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரத்தில் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டப்படுவது சரியல்ல.

    தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 6695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்காக மாணவர்களுக்கு இரு தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு தேர்விலும் குறைந்த பட்சம் 40% மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 6695 பேர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் விதியாகும்.

    ஆனால், தமிழக அரசின் தேர்வுத்துறை தயாரித்த பட்டியலில் ஒரு தேர்வில் 40% மதிப்பெண் பெறாத மாணவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னொரு தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருப்பதால், இரண்டிலும் சேர்த்து சராசரியாக 40%க்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருப்பதாகக் கூறி அவர்கள் கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இரு தேர்விலும் குறைந்தது 40% மதிப்பெண் பெற்ற பலர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது தவறு மற்றும் சமூக அநீதி ஆகும்.

    தேசிய கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவது மாணவர்களுக்கு மதிப்பு சேர்க்கும் விஷயமாகும். அதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கும் மாணவர்கள், பட்டியல் தயாரித்தவர்கள் செய்த குளறுபடியால், தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அது அவர்களின் கல்வியையும் பாதிக்கும். இப்படி ஒரு நிலை ஏற்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

    எனவே, இந்த சிக்கலில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு, தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இரு தேர்வுகளிலும் தலா 40% மதிப்பெண் என்ற அடிப்படைத் தகுதியை பெற்ற மாணவர்களை மட்டும் வைத்து புதிய பட்டியல் தயாரித்து வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 11-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு-2025 நடைபெற உள்ளது.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 52 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருவிடந்தையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் கட்சியின் பொது செயலாளர் வடிவேல் ராமன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்னொரு நாள் பதில் சொல்றேன் என்று கூறி நழுவிச் சென்றார். 

    • அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
    • 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதே அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தக் கட்சிக்கு தேர்தலில் தோல்வியே கிடைத்தது.


    இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்கு காய் நகர்த்திய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அணியில் இருந்து கட்சிகளை இழுத்து புதிய கூட்டணியை அமைத்து விடலாம் என திட்டமிட்டார். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவே இல்லை .

    இந்த நிலையில் தான் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சேர உள்ளன.

    ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரும் இந்த கூட்டணியிலேயே தொடர உள்ளனர்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருக்கிறது. இப்படி அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எத்தனை இடங்களை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக அந்த கட்சி தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதன் மூலம். 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது.

    பா.ம.க.விற்கு 15 தொகுதிகள் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் தினகரனுக்கு 10 தொகுதிகள் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீ செல்வதற்கு தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை தக்க வைக்கும் வகையில் நான்கு இடங்களை ஒதுக்க லாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டணியில் 150 இடங் களில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ள தன் மூலம் மீதமுள்ள 84 தொகுதிகளையும் பார திய ஜனதா கட்சியிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மூலமாக மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. , பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கள் எவை? எவை? என்பது பற்றிய பட்டியலை தயா ரித்து வைத்துள்ளன.அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி இருப்பது போல மற்ற கட்சிகளுடனும் கூட்டணியை இறுதி செய்த பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என் கிற விவரங்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவ தற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தங்களுக்கு செல் வாக்கு உள்ள பகுதியான கொங்கு பகுதியில் குறிப் பிடத்தக்க தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. இதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி வடமாநிலங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெறுவதிலும் கவனம் செலுத்த தொடங்கி யுள்ளது.

    இப்படி கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் தங்களுக்கு தேவையான இடங்களை பெறுவதில் தீவிரம் காட்ட தொடங்கி யுள்ளது.இதன்மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க, கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக விரைவில் இறுதி செய்யப் பட்டு தொகுதி பங்கீடும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    • அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.
    • சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.

    மாமல்லபுத்திரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ராமதாஸின் கொள்கைக்கு இணங்க சித்திரை திருவிழா மாநாடு நடைபெறுகிறது.

    * அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.

    * சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.

    * மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களையும் ராமதாஸ் அழைத்துள்ளார். குறிப்பாக பின்தங்கிய மக்களை அழைத்துள்ளார்.

    * தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான யோசனைகள் மாநாட்டின் மூலம் வழங்கப்படும்.

    * தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என்றார். 

    • ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது.
    • அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்.

    பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வருகிறார். கௌரவ தலைவராக ஜி.கே. மணி இருந்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கட்சி நிறுவனர் ஆவார்.

    கட்சியில் உறவினருக்கு பதவி வழங்கியது தொடர்பாக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மேடையிலேயே, கட்சியில் இருந்தால் இரு... இல்லையென்றால் வெளியேறு... என டாக்டர் ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.

    இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்குவதாக தெரிவித்தார். இதனால் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே கட்சிக் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கூறுகையில் "மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே கலந்து கொள்வார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.

    ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்" எனத் தெரிவித்தார்.

    • தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
    • மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.

    இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.

    தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.

    மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
    • உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்றார்.

    சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.மாநில உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனான உறவுகளை மேம்படுத்திட ஆய்வு செய்து உயர்மட்டக்குழு அறிக்கை அளிக்கும். உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்திற்க பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு முதலமைச்சர் மு,.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 

    • பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை ராமதாஸ் திரட்டி வருகிறார்.
    • யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் பா.ம.க. நிர்வாகிகள் குழப்பம்.

    சென்னை:

    பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சத்தை அடைந்து உள்ளது.

    தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு தலைவர் பதவியையும் தானே ஏற்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் அறிவித் தார். இதனால் தலைவர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பொதுக் குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் கமிஷனாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். எனவே நானே தலைவராக நீடிக்கிறேன் என்று டாக்டர் அன்புமணி அறிவித்தார்.

    இதை அடுத்து இருவரையும் சமாதானப் படுத்தும் முயற்சியில் ஜி.கே.மணி, பு.தா.அருள் மொழி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளார்கள்.

    ஆனால் கட்சி தொடர்பாக நான் எடுத்த முடிவு உறுதியானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் தான் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.

    ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி தனது தலைவர் பதவிக்கு அங்கீகாரம் பெற்று விட்டால் அன்புமணியின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை அவர் திரட்டி வருகிறார்.

    அதே நேரம் தந்தை ஏற்பாடு செய்துள்ள அந்த பொதுக்குழுவுக்குயாரையும் செல்ல விடாமல் தடுப்பதில் அன்புமணி ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். இதனால் யார் சொல்வதை கேட்பது? என்று தெரியாமல் பா.ம.க. நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

    அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு இளை ஞர் அணி தலைவர் பதவி கொடுத்ததை அன்புமணி விரும்பவில்லை. அதை வெளிப்படையாகவே எதிர்த்தார். அதனால்தான் இந்த மோதலே உருவானது.

    நேற்று முகுந்தன், அன்புமணி வீட்டுக்கு சென் றார். தாத்தா ராமதாசை சமாதானப்படுத்த வரும்படி அப்போது அழைப்பு விடுத் தார். ஆனால் இதுவரை ராமதாசை சந்திக்க அன்பு மணி செல்லவில்லை.

    ஆனால் திருவிடந்தையில் அடுத்த மாதம் 11-ந்தேதி நடைபெறும் வன்னியர் இளைஞர் மாநாட்டு பணி களை தலைவர் என்ற முறை யில் டாக்டர் அன்புமணி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும் போது, நானே பா.ம.க. தலைவராக இருக்கிறேன். ராமதாசுடன் ஏற்பட்டுள்ள சண்டை உட்கட்சி பிரச்சினைதான் விரைவில் முடியும் என்றார்.

    அதே போல் டாக்டர் ராமதாசும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தீவிரமாக செயல்படுங்கள். கட்சியினர் யாரும் சோர்ந்து போக வேண்டாம் என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நீடிக்கும் இந்த மோதல் எப்படி முடியும்? எப்போது முடியும்? என்று தெரியாமல் கட்சி நிர்வாகிகள் தவிக்கிறார்கள்.

    சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது, வரும் தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தையை தானே நடத்து வேன் என்பதில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்.

    தலைவர் என்ற ரீதியில் அன்புமணி தனியாக சென்று கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது, யாரையும் சந்திப்பது போன்ற வேலைகளில் அன்புமணி ஈடுபட கூடாது என்பதிலும் கறாராக இருக் கிறார். இதற்கு அன்புமணி சம்மதித்தால் விரைவில் சமாதானம் வரும் என் றார்கள்.

    ×