என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK"

    • பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள்.
    • தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். ஒரு கூட்டம் பொய் பேசுவதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டோம். அவர்களிடம் ஒரு கூட்டம் சேர்ந்து செயல்படுகிறது.

    என்னை பற்றி அவதூறாக மனம் புண்படும்படியும், ஏளனமாகவும், பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள். என்னை மட்டுமின்றி அரசியல் அனுபவம் கொண்ட பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் அவர்கள் வசைப்பாடுகிறார்கள்.

    டெல்லி உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக 2 முறை தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் சிலரை அக்கும்பல் தன் வசப்படுத்தியதால் அவர்களுக்காக தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்யவேண்டிய வழக்கை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் சரியான திசையில் செல்லவில்லை. கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும்.
    • ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் ரூ.15,900 – ரூ.50,400 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை தொடர் விடுப்பு எடுத்து, சென்னையில் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

    ஆனால், அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததை உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடரும் நிலையில், அவர்களிடம் அரசு பேசாமல், 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் பணி நீக்க உத்தரவுகள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு மாநில அளவில் ரகசியமாக பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

    ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாக இருந்துவரும் நிலையில், அக்கிராமங்களின் ஊராட்சி செயலாளராக இருந்துவரும் இவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் பணியவைக்க முயல்வது மிகத்தவறு.

    எனவே அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க
    • கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள்.

    பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள், 'தேர்தல் ஆணையத்தை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்' என தெரியவில்லை என அன்புமணி தரப்பை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,

    "அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க. அக்கட்சியின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது" என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது இப்போது இந்த வாதத்தை மாற்றிக் கொள்கிறோம் என தேர்தல் ஆணையமே ஒரு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது. அதற்கு நீதிமன்றம் மாற்றமாட்டோம், பதிவு செய்துகொள்கிறோம் என கூறுகிறது.

    தற்போது தேர்தல் ஆணையத்தை இவர்கள் என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என்று தெரியவில்லை. அதன்மூலம் ஒரு பொய்யான அறிக்கையை சமர்பிக்கிறார்கள். மறுசீராய்வு மனு என்பது 30 நாட்களுக்குள் தாக்கல்செய்ய வேண்டும். ஆனால் 72 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் போடுகிறது. இதன் உள்நோக்கம் எங்களுக்கு தெரியவில்லை. கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள். அதற்கு நீதிபதி அனுமதி தரவில்லை. நீதிமன்றத்தை விலைக்கு வாங்கமுடியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தை வாங்கியுள்ளனர்." என தெரிவித்தார். 

    • நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
    • ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    * ராமதாசை சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி.

    * நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் ராமதாசிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள்.

    * ராமதாசை சுற்றி இருக்கும் துரோகிகள் அவருக்கு தவறான தகவல்களை சொல்லி அவரது மனதை மாற்றுகிறார்கள்.

    * ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் பேசும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை என்று பேசினார். 

    • அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
    • அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * எ.வ.வேலு அமைச்சர் கிடையாது வியாபாரி. இன்னும் 2 மாதத்தில் 1, 2, 3 என சிறையில் கம்பி எண்ணப்போகிறார்.

    * சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உட்பட 47 தொகுதிகளை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கி உள்ளது தி.மு.க.

    * தி.மு.க.வினர் கிராமங்கள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை கொண்டுபோய் பதுக்கி வைத்துள்ளனர்.

    * பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க. இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

    * கேடு கெட்ட தி.மு.க. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று கூறுங்கள்.

    * இளைஞர்களால் எத்தனையோ பல புரட்சிகள் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற புரட்சி நடக்கும்.

    * தேர்தலில் தி.மு.க. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.

    * அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

    * அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    * துணை பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு தி.மு.க. போலி வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.

    • நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை.
    • கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும்

    தி.மு.க. கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக நீண்ட நாட்களாகவே பேச்சு எழுந்துவருகிறது. ஆனால் பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெற மாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். திருமாவளவனின் இந்த நிலைப்பாட்டால், நீண்ட நாட்களாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவருகிறது. 

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 

    "அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை. டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவரும் பரஸ்பரம் ஆதரவாக நின்றவர்கள். வன்னியர் சங்கக் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்திருக்கிறார்.

    அதேபோல் வி.சி.க கொடியை டாக்டர். ராமதாஸ் ஏற்றி வைத்திருக்கிறார். எனவே அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினால், அவர்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்துவிடும். தேவைப்பட்டால், அவர்கள் சந்தித்து பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணியின் அச்சாணியாக தி.மு.க தான் உள்ளது. தி.மு.க கூட்டணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இணைவதற்கான முடிவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் எடுப்பார். அவரது முடிவே இறுதியானது." என தெரிவித்திருந்தார். 

    தி.மு.க கூட்டணியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இணைவதை ஆதரிக்கும் வகையில் பேசிய செல்வப்பெருந்தகை, இரு தலைவர்களுக்கும் இடையே இருந்த பழைய இணக்கமான சூழலை நினைவுகூர்ந்தார். இதன் மூலம், பா.ம.க, வி.சி.க கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணிப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்காது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில், 

    கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும் என்பதை தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை. எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இதனிடையே செல்வப்பெருந்தகையின் கருத்து குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

    இதுவரை அதுபோன்ற ஒன்று நடைபெறவில்லை. ராமதாஸ் தரப்பும் எங்களிடம் பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினும் அவர்களிடம் பேசவில்லை. இது அவரது கருத்து. சேர்வது என்பது அவரவர் கருத்து. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எல்லா எதிர் கட்சிகளையும் சேர்த்து தேர்தலை சந்தித்து உள்ளோம். 2006-ல் அப்படி தான் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தோம். நல்லாட்சியும் கொடுத்தோம். தற்போது தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது.

    இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லா கட்சியும் நம்முடன் உள்ளது. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை." என தெரிவித்துள்ளார். 

    • தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
    • தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.

    அங்கீகரிக்கப்படாத கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்ற உத்தரவை மாற்றக்கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பாமக விஷயத்தில் முடிவெடுத்துள்ளது பற்றி தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம், தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.

    தற்போதைய சூழலில் நீதிமன்றம் பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    பாமகவின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தக்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்கிறோம் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன.
    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவில், 2022-23ஆம் ஆண்டில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக இழப்பை சந்தித்த மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்றும், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி என்றும் பதினாறாம் நிதி ஆணையத்தின் முதன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று ஆகும்.

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 54 நிறுவனங்கள் லாபத்திலும், 35 நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன. இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதற்கு எதுவும் இல்லை. மது வணிகம் செய்யும் டாஸ்மாக், உழவர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறித்து 1000%க்கும் மேல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சிப்காட் போன்ற நிறுவனங்கள் தான் இலாபத்தில் இயங்கி வருகின்றன. இந்த 54 நிறுவனங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டில் ஈட்டிய இலாபம் வெறும் ரூ.2560 கோடி மட்டும் தான்.

    அதே நேரத்தில் நஷ்டத்தில் இயங்கும் 35 நிறுவனங்கள் அதே ஆண்டில் ஏற்படுத்திய இழப்பு ரூ.16,048 கோடி ஆகும். அந்த ஆண்டில் மேலும் 11 நிறுவனங்களின் இழப்பு குறித்த முழுமையான தகவல்கள் நிதி ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை. அந்தத் தொகையும் சேர்ந்திருந்தால், ரூ.18,814 கோடி இழப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இராஜஸ்தான் மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தைத் தமிழ்நாடு பிடித்திருக்கும்.

    2022-23ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ.26,867 கோடி வழங்கியது. அந்த மானியம் மட்டும் வழங்கப்படவில்லை என்றால், பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ.52,915 கோடியாக அதிகரித்திருக்கும். அத்தகைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பில் ரூ.32,430 கோடியுடன் முதலிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை தமிழகம் பிடித்திருக்கும்.

    இழப்பை எதிர்கொண்ட நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது மின்சார வாரியம் ஆகும். 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.9192 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2021-22ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.9000 கோடி ஆகும். 2022-23ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்திருக்கிறது என்றால் எந்த அளவுக்கு அந்த நிறுவனம் சீரழிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் திமுக ஆட்சியாளர்களின் ஊழல் தான்.

    இந்தியாவிலேயே அதிக பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். ஒரு மாநிலம் அதன் அனைத்துத் தேவைகளுக்கும் வரி வருவாயை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரம் பறிக்கப்பட்டு விட்ட நிலையில், வரி அல்லாத வருவாயை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

    மாநிலங்களின் வரி அல்லாத வருவாயைப் பெருக்குவதற்கான ஒரே வழி பொதுத்துறை நிறுவனங்களை இலாபத்தில் இயக்குவதும், கனிமவளங்கள் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது தான். ஆனால், இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஆற்று மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றின் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றாலும், அதில் நடைபெறும் வரலாறு காணாத ஊழல்கள் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஆட்சியாளர்களின் பைகளுக்கு செல்கின்றன. அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழக அரசின் வரி அல்லாத மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.4 லட்சத்து, 30,434 கோடி ஆகும். ஆனால், தமிழக அரசின் வரி அல்லாத வருவாய் நடப்பாண்டில் வெறும் ரூ.28,818.58 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 6.69% மட்டும் தான். ஒரு மாநிலத்தின் நிதிநிலை வலிமையாக இருக்க வேண்டும் என்றால், அதன் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 20% அளவுக்கு வரி அல்லாத வருவாய் இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசின் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து விட்டதால், வரி அல்லாத வருவாய் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டப் போவது உறுதி என்று கூறியுள்ளார்.

    • வன்னியர் சமூகத்தைச் சார்ந்த வெகுமக்களுக்கு எதிராக நாம் முடிவெடுத்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சிலர் முயற்சிக்கின்றனர்.
    • ஒரு சாதியினருக்கோ ஒரு மதத்தினருக்கோ எதிராக நமது கட்சி சிந்தித்ததுமில்லை; செயல்பட்டதுமில்லை!

    விடுதலைச் சிறுத்தை கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல்களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஊடகங்கள் அனலை ஊதி ஆதாரமில்லாத ஊகங்களையெல்லாம் பரபரப்புக்குரிய செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. இச்சூழலில் சில கருத்துகளைத் தங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். குறிப்பாக, தேர்தல் குறித்து நமது கட்சி எத்தகைய நிலைபாட்டை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.

    கடந்த கால்நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலில் நாம் ஒருபோதும் தேர்தல் ஆதாயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, அதாவது, வெற்றி-தோல்விகளைக் கணக்கில் கொண்டு முடிவெடுத்ததில்லை. கருத்தியலின் அடிப்படையில் இணக்கமான கட்சிகளோடு தேர்தல் உறவுகளைத் தீர்மானித்துக் கூட்டணி அமைத்திருக்கிறோம்.

    திமுக மற்றும் காங்கிரசு ஆகிய கட்சிகளோடு கடந்த காலங்களில் நாம் முரண்பட்டு எதிர்நிலையில் நின்றிருக்கிறோம். ஆனால், தற்போதைய சூழலில் தேசம் தழுவிய அளவில் நிலவிவரும் தீங்குநிறைந்த சனாதன அரசியலின் சதியை முறியடிக்க வேண்டிய தேவையை உணர்ந்து, திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்' நாம் அங்கம் வகித்து செயலாற்றி வருகிறோம்.

    ஏற்கனவே, 2001 மற்றும் 2011-சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் நாம் இடம் பெற்றிருக்கிறோம். 2011 இல் அமைந்த திமுக கூட்டணியில் விசிகவும் பாமகவும் இடம் பெற்றிருந்தன. ஆனால், அத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது.

    அதன்பின்னர், பாமக எடுத்த 'சோசியல் எஞ்சினியரிங்' என்கிற 'சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் தேர்தல் உத்தியைக்' கையில் எடுத்தபோது தமிழக அரசியல் களம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதன்பின்னர் தான் நாம், 'பாஜகவுடன் மட்டுமின்றி பாமகவோடும் இனி தேர்தல் உறவு இல்லை' என்கிற நிலைபாட்டை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

    2016 இல் இடதுசாரிகள் மற்றும் மதிமுக ஆகிய தோழமை கட்சிகளோடு இணைந்து மக்கள்நலக் கூட்டணி அமைத்து அப்போதைய சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்தோம். வெற்றிவாய்ப்பை இழந்தோம்.

    அதன்பின்னர் காவிரிநீர்ச் சிக்கலையொட்டி திமுக முன்னெடுத்த முயற்சியின் அடிப்படையில் ஒருங்கிணைந்து களமாடினோம். அதுவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாகப் பரிணமித்தது.

    2017இலிருந்து இக்கூட்டணி கருத்தியல் அடிப்படையில் களம்பல அமைத்து போராடி வருவதுடன், அடுத்தடுத்து சில தேர்தல்களையும் சந்தித்து சாதனைகளைப் படைத்து வருகிறது. குறிப்பாக, 2021-சட்டமன்றத் தேர்தல், 2024-நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் என இக்கூட்டணி தொடர்ச்சியாக மக்களின் நல்லாதரவோடு வெற்றிகளைப் பெற்று வருகிறது. தற்போது 2026-சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.

    மதச்சார்பின்மை, சமத்துவம், மாநில உரிமைகளை நிலைநாட்டும் பரந்துபட்ட நோக்கத்தில் - தெளிவான கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது தான் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதை நாடறியும். கடைசி நிமிட தொகுதிப் பங்கீட்டுக்காக தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பதாக இல்லாமல், மதவெறி சக்திகளையும் அவர்களோடு கைகோர்த்துள்ள இன்னபிற கட்சிகளையும் வீழ்த்தும் வகையில் இந்தக் கூட்டணியை அமைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்று வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். அந்த வகையில் நாம் அவருக்கு உற்றத் துணையாக இந்தக் களத்தில் கைகோர்த்து நிற்கிறோம்.

    பாஜக தலைமையிலான 'தேசிய ஜனநாயக கூட்டணியில்' இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளோடு, நாம் இத்தகைய கொள்கை அடிப்படையில் தான் முரண்பாடு கொண்டுள்ளோம். அதனடிப்படையில் நமது கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகிறோம். மற்றபடி தனிப்பட்டமுறையில் தனிநபர் யார்மீதும் அல்லது எந்தவொரு கட்சியின்மீதும் நமக்கு காழ்ப்புணர்வு இல்லை. குறிப்பாக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை அந்த வகையில்தான் மதிப்பீடு செய்து இந்த நிலைபாட்டை மேற்கொண்டுள்ளோம்.

    ஆனால், வன்னியர் சமூகத்தைச் சார்ந்த வெகுமக்களுக்கு எதிராக நாம் முடிவெடுத்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சிலர் முயற்சிக்கின்றனர். அதேபோல பாஜகவை விமர்சித்தால் ஒட்டுமொத்த இந்துச் சமூகத்துக்கும் நாம் எதிரானவர்கள் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சனாதன சக்திகள் முயற்சிக்கின்றனர். உண்மையில் குறிப்பான ஒரு சாதியினருக்கோ அல்லது ஒரு மதத்தினருக்கோ எதிராக நமது கட்சி சிந்தித்ததுமில்லை; செயல்பட்டதுமில்லை!

    தமிழ்நாட்டைச் சூழும் சனாதன ஃபாசிச சக்திகளை வீழ்த்துவதே நமது இலக்காகும். அவ்வாறு அவர்களை வீழ்த்துவதற்குரிய வெற்றி வியூகத்தை வகுத்து நமது கூட்டணியைத் தலைமையேற்று வழிநடத்தி வரும் திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் அளப்பரிய முயற்சிக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்போம். மதசாரபற்ற முற்போக்கு சக்திகளின் வெற்றிக்கு தீவிர முனைப்போடும் மிகுந்த அர்ப்பணிப்போடும் களப்பணி ஆற்றுவோம்.

    இந்நிலையில், திரிபுவாதங்களுக்கும் அவதூறுகளுக்கும் இடம்தரும் வகையில் நமது இயக்கத் தோழர்களின் கருத்துகள் அமைந்துவிடக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது.
    • ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

    வட மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ள பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்தக் கட்சி 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது.

    அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. இதன் காரணமாக டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. எந்த கூட்டணியில் சேரும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதேபோன்று தே.மு.தி.க.வும் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்த 2 கட்சிகளில் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

    ஆனால் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அன்புமணி இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் ராமதாஸ் சேர மாட்டார். இதையடுத்து ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ம. க., பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் இடம் பெறாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இது போன்ற சூழலில் தான் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. இடம் பெறும் கூட்ட ணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் திருமாவளவன் அதனை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க., பா.ம.க. ஆகிய 2 கட்சிகளுமே பிளவுவாத அரசியலை செய்து வருகின்றன. இந்தக் கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் எப்போதும் நாங்கள் இருக்க மாட்டோம்.

    ஒருவேளை ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றால் நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதன் காரணமாக ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    • தி.மு.க. அரசின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது.
    • தி.மு.க.வின் துரோகங்களுக்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் படுதோல்வியை பரிசாகத் தரப்போவது உறுதி.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் ரூ.34,237.39 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்து கொண்ட ரூ.12.16 லட்சம் கோடி மதிப்பிலான 1176 தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 80%க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக ஆட்சியாளர்கள் கூறி வந்த நிலையில், அவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தான் மிகச்சிறந்த சான்றுகள் ஆகும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களில் முதன்மையானது ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கத் திட்டங்கள் ஆகும். ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கம் தொடர்பாக அந்த நிறுவனம் தமிழக அரசுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் 11.05.2023-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் மகிழுந்து ஆலையை விரிவுபடுத்துவது, மின்சார மகிழுந்துகளை தயாரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

    இரண்டாவது ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது. ரூ.6180 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தமும் ஹூண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பானது தான். மொத்தம் 26,180 கோடி மதிப்பிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை; இதில் உறுதியளிக்கப்பட்டிருந்த தொகையில் ரூ.500 கோடி கூட இன்னும் முதலீடு செய்யப்படவில்லை என்பதை பல முறை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

    சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி சென்னையில் நான் வெளியிட்ட 'தி.மு.க. அரசின் பொய் முதலீடுகள்' என்ற தலைப்பிலான ஆவணத்திலும் இது குறித்து விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், 80%க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக தி.மு.க. அரசு மீண்டும், மீண்டும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு வந்தது. ஆனால், ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீடுகளுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே, அந்த நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையிலான முதலீடுகள் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. தொழில் முதலீடுகளைப் பொறுத்தவரை தி.மு.க. தொடக்கம் முதலே பொய்களைத் தான் கூறி வருகிறது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.

    நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேலும் இரு தொழில் முதலீடுகளை செய்ய இருப்பவை கெயின்ஸ் சர்க்யூட் இந்தியா நிறுவனம், சென்னையைச் சேர்ந்த இராதா எஞ்சினியரிங் நிறுவனம் ஆகியவை ஆகும். இந்த நிறுவனங்கள் முறையே ரூ.4,995 கோடி, ரூ.1500 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 04.08.2025-ஆம் நாள் தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டன.

    அதேபோல், எவர்வான் கோத்தாரி நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 26.02.2025-ஆம் நாளும், ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் 25.11.2025-ஆம் நாளும் கையெழுத்திடப்பட்டன. இவற்றின் முதலீட்டுத் திட்டங்களுக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த முதலீடுகளும் இன்னும் செயலாக்கம் பெறவில்லை என்பதை தி.மு.க. அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றாலும் கூட, அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடுகள் மட்டுமே செயலாக்கம் பெற்றுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மதிப்பில் இது வெறும் 8.20% மட்டும் தான். ஆனால், ஒட்டுமொத்த தொழில் முதலீடுகளும் வந்து விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வந்தது. தி.மு.க. அரசின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் எந்தவொரு உருப்படியான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை. ஐந்தாண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெறும் 8.20 விழுக்காட்டை மட்டுமே தி.மு.க. அரசால் ஈர்க்க முடிந்திருக்கிறது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகள், அதாவது வெறும் 13% மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. அரசின் இந்த படுதோல்விகளை பல்வேறு காலகட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது.

    படித்த இளைஞர்களுக்கு 5.50 லட்சம் அரசு வேலை வழங்குதல், தனியார் நிறுவனங்களில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குதல், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றுதல், மாதந்தோறும் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து அதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், பேருந்துக் கட்டணத்தைக் குறைத்தல், மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்தல், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுதல் என உறுதியளித்திருந்த அனைத்து சத்தியங்களையும் நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு தோல்வியடைந்து விட்டது.

    ஆனால், இந்த தோல்விகள் அனைத்தையும் வெற்று விளம்பரங்களின் மூலமாகவும், வெறும் ஜோடனைகள் மூலமாகவும் மூடி மறைக்க தி.மு.க. அரசு முயன்றது. ஆனால், அவை அனைத்தும் இப்போது அம்பலமாகி விட்டன. இவை அனைத்தும் தி.மு.க.வின் தோல்விகள் மட்டுமல்ல... தி.மு.க.வின் துரோகங்கள். இவற்றை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள். தி.மு.க.வின் துரோகங்களுக்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் படுதோல்வியை பரிசாகத் தரப்போவது உறுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதுக்கோட்டை ஆதி திராவிடர் நலத்துறை சமூக நீதி விடுதிக்கு மாணவிகளின் உணவுக்காக வழங்கப்படும் நிதி கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த 2 மாதங்களாக வெறும் சோறு மட்டும் வடித்து தங்கள் சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதி பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச்சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் 4 நாள்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும்.

    ஆனால், தி.மு.க. ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமின்றி, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று கூறியுள்ளார். 

    ×