search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Govt"

    • அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது.
    • துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை நேரடியாகவும், மின் கட்டண உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வால் மறைமுகமாகவும் வாட்டி வதைக்கின்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து

    அதிமுக சார்பில் கழக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெறுகிறது.

    அன்று எதிர்க்கட்சித் தலைவராக "ஷாக் அடிப்பது மின்சாரமா மின் கட்டணமா" என்று ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு, இன்று முதல்வராக இருக்கும் அவருக்கு, இந்த விடியா ஆட்சியில் "ஷாக்அடிக்கும்_மின்கட்டணம்" என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.

    நிர்வாகத் திறமையின்மையே உருவான இந்த அரசு, ஒருபுறம் மின் கட்டண சுமையை மக்கள் மீது ஏற்றியதுடன், மறுபுறம் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது.

    போதைப்பொருள் எங்கும் கிடைக்கும் விடியா திமுக ஆட்சியில் பருப்பு_பாமாயில்_எங்கே ஸ்டாலின் என்று மக்கள் கேட்கிறார்கள்

    மின் கட்டணத்தை உயர்த்தியும் ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சித்தும் மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அநியாயமாக மக்கள் தலையில் சுமத்தப்படும் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுமாறும், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • மத்திய அரசின் மீது பழியை சுமத்தி மக்களை திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
    • அடிதடியும், அடாவடியுமே அடையாளமாக கொண்டிருக்கும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்தும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்கும் வகையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததோடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் எவருமே இருக்கக் கூடாது என்ற கொள்கைப் பிடிப்போடு அயராது பாடுபட்டவர் இதயதெய்வம் அம்மா அவர்கள்.

    "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பதை லட்சியமாக கொண்டு வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு சுயநலமும், துரோக சிந்தனையும் கொண்ட பழனிசாமியின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக, தமிழக மக்களின் மீது எண்ணற்ற சுமைகளை ஏற்றி அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

    தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளையோ, மக்கள் நலத்திட்டங்களையோ செயல்படுத்தாத திமுக அரசு, அதற்கு மாறாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

    மின்சார உற்பத்தியை பெருக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஒவ்வொருமுறை மின்கட்டணத்தை உயர்த்தும் போதும் மத்திய அரசின் மீது பழியை சுமத்தி மக்களை திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

    ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் திறனற்ற திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க,

    • நூறு சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்ட சொத்துவரி

    • அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்வு

    • ஆறுமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால்பொருட்களின் விலை உயர்வு

    • விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு

    • நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு பலமடங்கு உயர்வு

    • முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு

    • மறைமுகமாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம்

    • அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சாலைவரி (Road Tax)

    என எண்ணற்ற வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி ஏழை, எளிய பொதுமக்களின் மீது சுமைகளை ஏற்றுவது தான் திமுக அரசின் திராவிட மாடல் சாதனையா? நனவிலும் பதவி, கனவிலும் பதவி என பதவிப் பித்தர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் திமுகவினருக்கு மக்கள் படும் துன்பங்களும், வேதனைகளும் எப்படி புரியும்? என அனைத்து தரப்பு மக்களும் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

    அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத நியாய விலைக்கடைகள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாத அரசு மருத்துவமனைகள், தமிழக அரசின் கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எழுந்திருக்கும் ஊழல் மற்றும், முறைகேடு புகார்கள், நகரங்கள் தொடங்கி கிராமங்களின் கடைத்தெரு வரை வந்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் எதிர்காலத்தை இழக்கும் இளைய சமுதாயம், நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என அடிதடியும், அடாவடியுமே அடையாளமாக கொண்டிருக்கும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்தும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இப்படி, அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்விகளை மறைக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது சுமைகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 22.07.2024 (திங்கள் கிழமை) அன்று மாலை காலை 10.00 மணியளவில் தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டனப் பேரூரை ஆற்றவிருக்கிறார்கள்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், வட்ட/வார்டு/கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

    • மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.
    • GR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது,

    மத்திய அரசின் Revamped Distribution Sector Scheme (RDSS) திட்டத்தில் நிதி பெறவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே பொய்யை மீண்டும் சொல்கிறது திமுக அரசு.

    இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுகவின் திசைதிருப்பும் முயற்சியைத் தமிழக மக்களிடம் எடுத்துரைத்தோம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

    * பொருத்தப்படவேண்டிய ஸ்மார்ட் மீட்டர், DT மீட்டர், Feeder மீட்டர்களின் எண்ணிக்கை: 3,06,82,343 (மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை)

    * பொருத்தப்பட்ட மீட்டர்களின் எண்ணிக்கை: 1,30,861 (4%)

    * தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தனியாரிடம் செய்த மின் கொள்முதல் மதிப்பு.

    2021-22: 39,365 கோடி ரூபாய்

    2022-23: 50,990 கோடி ரூபாய்

    2023-24: 65,000 கோடி ரூபாய்

    * கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த தனியார் மின் கொள்முதல் மதிப்பு: 1,55,355 கோடி ரூபாய்.

    * RDSS திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய எந்த பணிகளையும் திமுக செய்யவில்லை, மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.

    * கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரே மாற்றம், நலிவடைந்த BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

    • திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.
    • 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்றே ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியாக நடந்து வருகின்றது. வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்.

    திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்கள் கடுமையான மின்வெட்டாலோ, மின் கட்டண உயர்வாலோ பாதிக்கப்படுவது வாடிக்கை. 2011-ல் அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதை அனைவரும் நன்கறிவார்கள்.

    தமிழக மக்களின் சுமையைக் குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கியது அம்மாவின் அரசு. இதன் பலனைக்கூட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் ஆண்டுதோறும் இந்த விடியா

    திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி வருவது எவராலும் ஏற்க முடியாது.

    * திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.

    * பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு விடியா திமுக அரசு தமிழக மக்களுக்கு அளித்த பரிசு சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல வரி உயர்வுகள்.

    * குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வரை, அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விடியா திமுக அரசு அளித்த பரிசு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு.

    * 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.

    * தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு. இதன் காரணமாக விசைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு இணைப்பில் பொதுவான பயன்பாட்டாளர்கள் (வணிக கட்டணம் நிர்ணயம்) பாதிப்பு.

    * பாராளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர்.

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், 2024, ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவைகளை வழங்காமலும் மக்களை துன்பத்திற்குள்ளாக்கிய இந்த ஏமாற்று மாடல் அரசு, மூன்றாம் முறையாக மின்கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    * அம்மா ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் 'மின்சாரத்தை தொட்டால்தான் ஷேக் அடிக்கும், மின்சார கட்டணத்தைக் கேட்டாலே ஷேக் அடிக்குது' என்று வசனம் பேசியவாறு வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    * 'சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என்று நாடக வசனம் பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி, சொல்லாததையும் செய்துவிட்டார்!

    * ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னதை இந்த கையாலாகாத அரசு நிறைவேற்றியதா? என்று அல்லலுறும் மக்கள் கேட்கிறார்கள்.

    * உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை.

    மக்களுக்குத் தேவையில்லாமல் வரி மற்றும் கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம் அதனை ஒப்பீடு செய்ய, தங்களுக்கு வசதியாக இதர மாநிலங்களையும் விடியா தி.மு.க. அரசு துணைக்கு அழைத்துக்கொள்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்து வரிச் சுமையை தமிழக மக்கள் தலையில் கட்டுவதற்கல்ல. மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் செய்ததுபோல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

    எனவே, விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்றவைகளால் மக்களின் கோபம் எரிமலையாக வெடிப்பதற்கு முன்பு, பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வையும், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள், விடியா திமுக ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை.
    • பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதா சமூக நீதி?

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடக்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சமூகநீதிக்கான ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டியலினத்தவருக்கான சமூக நீதியை மூன்றாண்டுகளாக முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்காததால் நிரப்பப்படாமல் பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்ட ஏராளமான இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு திமுக அரசு அறிவித்தது.

    அதன்பின், அடுத்த 6 மாதங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவில் தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவருக்கு 8100, பழங்குடியினருக்கு 2302 பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமலிருப்பது தெரியவந்தது. அவை சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்திருந்தது.

    ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் ஆகப்போகும் நிலையில், சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்கள் இருந்த காலத்தில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    தமிழக அரசால் அமைக்கப்பட்ட சமூகநீதி கண்காணிப்புக் குழுவும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று 17.10.2022-ஆம் நாள் அறிக்கை மூலம் நான் வலியுறுத்தினேன். ஆனால், அதன்பின்னர் 2 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

    பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாத விவகாரத்தில் கடந்த ஆண்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தலையிட்டது. அனைத்து பின்னடைவு பணியிடங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் ஆணையிட்டார். ஆனால், அந்த ஆணையைக் கூட தமிழக அரசு மதிக்கவில்லை. இப்போது வரை பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே விட்டு வைக்கப்பட்டுள்ளன.

    பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது கடினமான ஒன்றல்ல. எந்தத் துறைகளில் எவ்வளவு இடங்கள் பின்னடைவுப் பனியிடங்களாக உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நினைத்தால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக சிறப்பு ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்து பின்னடைவு பணியிடங்களையும் நிரப்பிவிட முடியும். ஆனால், அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை.

    தமிழ்நாட்டில் சமூக நீதி ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதற்கு முன்பே பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள 10,402 பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதா சமூக நீதி?

    13 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள 10,402 பின்னடைவுப் பணியிடங்களில் 7090 பணி இடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையிலும், மதுவிலக்குத் துறையிலும் தான் உள்ளன என்பது வேதனையான உண்மை. உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சருக்கு இந்த உண்மை தெரியாதா?

    சமூக படிநிலையில் மிகவும் கீழாக இருக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி 10,402 பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக நீதியை தடுத்து நிறுத்துவது தான் சமூக நீதியா?

    பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும். அதை செய்யத் தவறியது திமுகவின் சமூக அநீதி இல்லையா?

    சமூகநீதி என்பதை வெற்று வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்தாமல், செயலிலும் காட்ட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழக அரசின் 34 துறைகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சமூகநீதியை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
    • தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.

    சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது.

    சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.

    எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

    • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது கேரள அரசு.
    • இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க அம்மாநில அரசு முயற்சி செய்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக மவுனம் சாதித்து, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இனியாவது தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல்... செயல்... செயல்..ன்னு நிரூபித்து காட்டியுள்ளேன்.
    • நாடும், மாநிலமும் பயன்பெற எந்நாளும் உழைப்பேன் என்று உறுதியேற்று ஆட்சிப்பயணத்தை உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்வேன்...

    சென்னை :

    தி.மு.க. ஆட்சி அமைத்து 3-ம் ஆண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!"

    மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!

    நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...

    பெருமையோடு சொல்கிறேன்...

    "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!"

    நான் உங்கள் நல்ஆதரவையும், நம்பிக்கையும் பெற்று நம் மாநிலத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்று ஆண்டு நிறைவுபெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7.

    இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்னு தினந்தோறும் பயன் அடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்றத விட பயன் அடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு. உளப்பூர்வமான வாழ்த்து.

    ஸ்டாலின் என்றால் உழைப்பு... உழைப்பு... உழைப்பு...ன்னு சொன்னாரு எங்களையெல்லாம் ஆளாக்கிய அன்பு தலைவர் கலைஞர். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல்... செயல்... செயல்..ன்னு நிரூபித்து காட்டியுள்ளேன்.

    எப்போதும் நான் சொல்றது இது என்னோட அரசு அல்ல நமது அரசு. அந்த வகையில் நமது அரசு 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நாடும், மாநிலமும் பயன்பெற எந்நாளும் உழைப்பேன் என்று உறுதியேற்று ஆட்சிப்பயணத்தை உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்வேன்... என்று பேசியுள்ளார்.


    • தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேரதல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்துள்ளார்.

    மீண்டும் அவர் பிரசாரத்துக்காக தமிழகம் வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில், தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    "நமோ செயலி" மூலமாக இன்று மாலை 5 மணிக்கு நமது கடின உழைப்பாளிகளான பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளேன்.

    தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் திறம்பட கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.

    தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் சலிப்படைந்து சோர்ந்து போய் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் ஒருங்கிணைந்த 9 மாவட்டங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்தது.
    • தலைமை கழக நிர்வாகிகள் தம்பிதுரை, பா.வளர்மதி, பரமசிவம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சென்னையில் ஒருங்கிணைந்த 9 மாவட்டங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்தது. தலைமை கழக நிர்வாகிகள் தம்பிதுரை, பா.வளர்மதி, பரமசிவம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


    மாவட்ட செயாளர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவதால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுவதால் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், ஆட்டோக்களில் வந்த தொண்டர்கள் போதைப் பொருளை தடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை வைத்து கோஷமிட்டனர்.

    திருவள்ளூரில் மருத்துக் கல்லூரி அருகில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, சிருணியம் பலராமன், மாதவரம் மூர்த்தி, அலெக்சாண்டர் மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், திருத்தணி அரி உள்ளிட்டவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட செயலாளர் சோம சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      கிருஷ்ணகிரி:

      கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவி மீது வன்கொடுமை செய்து கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

      இதற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

      ஆர்ப்பாட்டத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-


       கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல் இழந்த அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முடங்கி சீர் கெட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் மாணவியை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கண்டனத்திற்கு பிறகே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆட்சியாளர்களும், கடமை தவறிய அதிகாரிகளும் காரணம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து எம்.ஜி.ஆரை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-


      தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் யார் பெரியவர்கள் என மல்லுக்கட்டி நிற்கின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மாநில அரசு நிதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். அதை கூட தி.மு.க., அரசால் செயல்படுத்த முடியவில்லை.

      தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை, சிலைகளை எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அதை செய்கிறார். மாடு பிடி அரங்கில், ஏறுதழுவும் சிலையில் கூட தனது முகம் போல வைத்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்ற பார்க்கிறார். அரசியலில் தங்களை எதிர்த்தவர்கள் பெயர் எங்கும் இருக்க கூடாது என நினைக்கிறார். தமிழ்நாடு என்பதை கருணாநிதி நாடு என மாற்ற முயற்சிக்கிறார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று வரும்போது, கருணாநிதி என்ற பெயரே இல்லாமல் செய்து விடுவோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • திமுக ஆட்சியில், ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது.
      • துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      சென்னை:

      தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

      திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

      திமுக ஆட்சியில், ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

      ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழக பாரதிய ஜனதா

      சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

      ×