என் மலர்
நீங்கள் தேடியது "இடைநிலை ஆசிரியர்கள்"
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார்
- கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரின் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் தமது அரசு மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்று வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என சட்ட பேரவையில் முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர் மற்றும் பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது
- இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2009-மே மாதம் 31-05-2009 தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் அளிக்கப்படுகிறது.
2006-11 ம் ஆண்டு காலத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான் மக்கள் நலப்பணியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி போல இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டது. பின்னர் 16 ஆண்டுகளை கடந்தும் இந்த அநீதி துடைக்கப்படவில்லை. இந்த அநீதியைக் களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து அடைத்து வைப்பது, போராடும் ஆசிரியர்களை கைது செய்து இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் கொண்டு சென்று இறக்கி விடுவது என திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
டிசம்பர் 26-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கிய போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. அதன்பின் நடக்கும் போராட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் இவ்வளவு நாள்கள் நீடித்ததில்லை; மாணவர்களின் படிப்பும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதில்லை. இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால் மாணவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
ஆனால், இதுகுறித்த எந்தக் கவலையும் திமுக அரசுக்கு இல்லை. ஒருபுறம் ஆசிரியர்களுக்கு அநீதி தொடர்கிறது; இன்னொருபக்கம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனும் போது, ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சிக்கலுக்குத் தீர்வு காண்பது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்க முடியும்.
ஆனால், 25-ஆம் நாளாக போராட்டம் நீடிக்கும் போதிலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள திமுக அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக பல முறை பேச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், ''நிதிநிலை சரியானவுடன் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்'' என்பதையே அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள ஆசிரியர்கள் தயாராக இல்லை. அவர்களின் நிலைப்பாடு சரியானதும் கூட.
சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆசிரியர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய 3 உறுப்பினர் குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், அந்தக் குழு அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்த பின், அதனடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.
ஆனால், அதன்பின் 3 ஆண்டுகளாகும் நிலையில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை; ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் வெற்று வாக்குறுதிகளை ஏற்க மறுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. அடக்குமுறைகள் மூலம் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.
- ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?
14வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கண்டித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு!
"சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் முழங்கிவிட்டு, நான்கரை ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி, இடைநிலை ஆசிரியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி, குண்டுக்கட்டாகக் கைது செய்வதோடு, தற்போது போராடும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது எனத் திமுக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181-ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.
பல கோடி செலவழித்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று நாடக விழா நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா? பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?
போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க முனைய வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள்.
சென்னை எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலத்தில் காலை 11.30 மணி அளவில் திரண்ட ஆசிரியர் ஆசிரியைகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.
அதனை மையப்படுத்தி தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரே வேலையை செய்து வரும் உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியமும் எங்களுக்கு குறைவான ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், தினமும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக சென்னை மாநகர போலீசார் தினமும் எங்கு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி.
- அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) கூட்டமைப்பு சார்பாக கடந்த 08.12.2025 முதல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதற்கான நடவடிக்கைகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு முதல் நாளான 07.12.2025 அன்று இரவிலிருந்தே போராட்டத்திற்கு புறப்படத் தயாரான நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த செயல் கண்டிக்கத்தக்கது.
அதையும் மீறி பேருந்துகள், தொடர் வண்டிகள் மூலமாக சென்னை சென்ற ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் ஆங்காங்கே வழிமறித்து கைது செய்துள்ளனர். அத்தனை தடைகளையும் தாண்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூடிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அங்கிருந்து நுங்கம்பாக்கத்திற்கு பேரணியாக புறப்பட்டபோது அங்கும் வந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன் பிறகு டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் 3 நாட்களாக போராட்டக் குழுவிடம் அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, கோரிக்கைகள் குறித்து உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. இதனால் நாளை (12.12.2025) அடையாள வேலை நிறுத்தமும், மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி மாதம் 6-ம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி. அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
அதுபோல் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதும், தகுதி உயர்த்துவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்பதும், வட்டார அளவிலான பதிவு மூப்பு பதவி உயர்வு என்று இருந்ததை மாநில அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என மாற்றியதால் அவர்களின் குடும்ப சூழல் பாதிக்கும் என்பதால் மீண்டும் வட்டார் அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளாகும். மேலும் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 30,000-த்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அவர்களுக்கான கோரிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குமானதாகும்.
எனவே ஆசிரியர் பணியிடம் காலி ஆகாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்
- ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உடுமலை:
பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அருண்குமார் மற்றும் மனோஜ் கூறியதாவது:-
ஏற்கனவே, தி.மு.க.,வின், 311வது தேர்தல் வாக்குறுதியான, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் கட்டமாக சென்னையில், கோரிக்கை வெல்ல ஆயத்த மாநாடு நடத்தினோம்.இரண்டாவது கட்டமாக செப்டம்பர் 5-ந்தேதி முதல் வருகிற 27ந் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
அதிலும், அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என செப்டம்பர் 28-ந்தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் கடந்த 14ந் தேதி ஒரு திருமண விழாவில்தமிழக முதல்வர் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மீதம் உள்ள ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் மட்டும் தனியாக பங்கெடுக்காமல் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.
- அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தொடக்கக் கல்வி இயக்குனரின் கருத்துரு, அரசின் விரிவான பரிசீலனைக்கு பிறகு 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.
இந்த நிலையில் அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர்களில் தேர்வு செய்யப்படுபவர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும்போதே அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
- பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50,000 ஆசிரியர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் நமது கழக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், நமது கழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கல்வியாண்டின் இறுதி நிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.






