என் மலர்
நீங்கள் தேடியது "anbil mahesh poyyamozhi"
- கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.
- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி:
திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் மலைக்கோட்டை கிளையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா நடந்தது.
மேலும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை பணிமனை கிளையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 லட்சம் பணப்பலன்களை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது. இன்றைக்கு அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர வேலை போக்குவரத்துக்கழகத்தில் உள்ளது.
ஆனால் தமிழகத்தில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதியத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறார். அதேபோன்று கடந்த ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ரூ.1,500 கோடி வழங்கினார். தற்போது மகளிருக்கு இலவச கட்டணம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த தொகையையும் சேர்த்து நடப்பாண்டுக்கு ரூ.2,200 கோடி வழங்க இருக்கிறார்.
தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சினை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோன்று கடந்த ஆட்சியில் ஒரு நடத்துனர், டிரைவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் இப்போது முதல்வர் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
- கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:
பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இப்போது கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசனை நடத்தினோம். ஜூன் 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
- முதல்-அமைச்சர், அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
சென்னை :
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்கள், பிளஸ்-1 வகுப்புக்கும், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பார்கள். ஆக எஸ்.எஸ்.எல்.சி. முடித்து ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் செல்லும் மாணவர்கள் பள்ளிகளில் பயன்படுத்தக்கூடிய கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) வழங்கும் எண்ணை பயன்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.
இது எதற்காக என்றால், எஸ்.எஸ்.எல்.சி. முடிப்பவர்கள், பிளஸ்-1 வகுப்பில் சேராமல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் சென்றுவிடுவதால் அவர்கள் இடைநிற்றல் ஆகிவிட்டதாக விவரங்கள் வருகிறது. இப்போது எமிஸ் எண்ணை கொண்டு அவர்கள் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதால், எந்தெந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு அந்த படிப்புகளில் சேர்ந்துள்ளார்கள் என்பது தெரியவரும்.
இதன் மூலம் மேல்நிலைப் படிப்பை எத்தனை மாணவர்கள் தொடருகிறார்கள் என்பது தெரிந்துவிடும். அப்படி தொடரவில்லை என்றால் என்ன காரணம்? என்பதையும் கண்டறிய எளிதாக இருக்கும். இந்த புதிய முறையை நடப்பாண்டில் முதல் முறையாக செயல்படுத்த உள்ளோம்.
இந்த ஆண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்காக 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். முதல்-அமைச்சர், அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் என்னை வந்து சந்தித்தார். அப்போது அவரிடம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பதையும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் ஆண்டு அட்டவணையின்படி விரைவாக தேர்வுகளை நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை.
- வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
சென்னை:
சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வைரஸ் தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை. எனவே முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை.
வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
12-ம் வகுப்பு தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர். அதற்கு குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமா என்பது குறித்து ஆராயப்படும்.
அதிகமாக தேர்வு எழுத தவறிய மாணவர்கள் அடங்கிய கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ளி்ட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இப்போது வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை மாவட்டத்தில் 73 அரசு பள்ளிகளில் படிக்கும் 8,702 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- மதுரை நாராயணபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 21 அரசு தொடக்கப் பள்ளிகள், 26 அரசு நடுநிலை பள்ளிக்கூடங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டன.
இதன் மூலம் அங்கு படிக்கும் 5,517 குழந்தைகள் பலன் அடைந்து வருகின்றனர். அதன்பின் காலை உணவு திட்டம் மேலும் சில பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் 73 அரசு பள்ளிகளில் படிக்கும் 8,702 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை வந்திருந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 8 மணி அளவில் மதுரை நாராயணபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு அருந்திய உதயநிதி ஸ்டாலின், உணவின் தரம் எப்படி உள்ளது? குறைபாடுகள் உள்ளதா? என்பது தொடர்பாக குழந்தைகளிடம் அக்கறையுடன் விசாரித்தார்.
அப்போது அவருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இந்த ஆய்வின்போது மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
- மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதற்கான தேர்வு மையங்களை கண்டறிதல் பெயர்ப் பட்டியல், ஹால் டிக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளின் நிலை தொடர்பாக தேர்வுத்துறை சார்பில் இன்று சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறை சார்ந்த இயக்குனர்கள் அனைத்து முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 6 முதல் 10-ந்தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் முன் கூட்டியே நடத்தும் வகையில் தற்போது இதை மார்ச் 1-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று மாற்றி அமைத்துள்ளோம்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்முறை தேர்வுகளுக்கான அவகாசம் போதுமானதாக இல்லை என்றும் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதால் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே போல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-ந்தேதி வெளியாகும். பிளஸ்-1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 19-ந்தேதியும், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 5-ந்தேதியும் வெளியாகும்.
பொதுத் தேர்வை தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவர்கள் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
- சென்னை மாநகர நூலக ஆணைக்குழு உறுப்பினர் சார்பாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் ஜி.சுந்தர் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாவட்டங்கள்தோறும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு பொது நூலகச் சட்டத்தின்படி மாநில நூலகக் குழு அமைக்கப்பட வேண்டும்.
இக்குழு 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டதற்குப் பின்னர் இதுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. மேலும் சென்னை மாவட்ட நூலகங்களை நிர்வகிக்க, சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைப்பு இறுதியாக 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் 16.5.2011 அன்று பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஆனால் 2011-ம் ஆண்டிற்குப் பின்னர் சென்னை மாநகரத்திற்கு நூலக ஆணைக்குழு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் மாநில நூலகக்குழு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான எனது தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர், துறை செயலாளர்கள் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்களுடன், நூலகத்துறையில் அனுபவம் உள்ள ஜி.கோபண்ணா, தமிழ்நாடு நூலகச் சங்கத்தைச் சார்ந்த ஜி.ரத்தினசபாபதி, சென்னை நூலகச் சங்கத்தைச் சார்ந்த கே.நித்யானந்தம், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு உறுப்பினர் சார்பாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் ஜி.சுந்தர் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கவிஞர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரான மனுஷ்யபுத்திரன் என்கின்ற எஸ்.அப்துல்ஹமீது மற்றும் கவிஞர், எழுத்தாளர் தமிழ் தாசன் உள்ளிட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவையும் அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அமைதியான பூமியை வடிவமைக்க தியானம் மிக அவசியம்.
- அடக்கப்படாத மனம் என்றைக்கும் நமக்கு விரோதிதான்.
பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சேகர்பாபு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது:-
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாக இருந்தாலும் சரி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாக இருந்தாலும் சரி, பிரம்ம குமாரிகள் ராக்கி கயிறு கட்ட வந்தால் முதலில் அவர்களை வரச் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். ஒட்டுமொத்தமாக உங்களின் எண்ணங்கள் என்பது அமைதியான ஒரு மனிதம் வேண்டும், எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான். எங்கள் இயக்கத்தின் நிறுவனர் அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னார்.

மனஅழுத்தம் இல்லாத அமைதியான பூமியை வடிவமைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு தியானம் மிக அவசியம். நாங்களும் கல்வி நிலையங்களில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்களை வடிவமைத்து கொண்டு இருக்கிறோம். அடக்கப்பட்ட மனம்தான் நமக்கு நண்பனாக இருப்பான்.
அடக்கப்படாத மனம் என்றைக்கும் நமக்கு விரோதிதான் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். எங்களுடைய திராவிட மாடல் புத்தகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது இதுதான். நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.