என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக"

    • நாங்கள் திமுகவை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம்.
    • டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்.

    தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோடங்கள், 

    "கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படாதது குறித்து காங்கிரஸ் கமிட்டி கவலைகொள்கிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நவம்பர் மாதம் காங்கிரஸ், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். பேச்சுவார்த்தைக்கு அழைத்து இன்றுடன் கிட்டத்தட்ட 70 நாட்கள் ஆகிறது. நாங்கள் குழு அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. விரைவாக அவர்கள் குழு அமைப்பார்கள், உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார்கள், எத்தனை இடங்கள், எந்த இடங்களில் நாங்கள் போட்டியிடப் போகிறோம் என்பது தெளிவுபடுத்தப்படும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். இருக்கிறோம்.

    ஆனால் தற்போது வரை குழு அமைக்கப்படவில்லை. தொகுதிப் பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கோபமாக உள்ளனர். ஏன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர். நாங்கள் தாமதிப்பது போல் தெரிகிறது. நாங்கள் தாமதிக்கவில்லை. தொடர்ந்து முதலமைச்சரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருகிறோம். ஆனால் யாரும் முன்வரவில்லை. மாநிலத்தலைவர் சொன்னதுபோல இது வருத்தமளிக்கிறது. தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. எங்களுக்கு போதுமான நேரம் தேவை. பேச்சுவார்த்தை  தற்போதுவரை தொடங்கப்படாததற்கு என்ன காரணம் என தெரியவில்லை." என தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "நாங்கள் திமுகவை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம். கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். நாங்கள் பலமுறை முயற்சி செய்தோம். முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டோம். மேலும் விளக்கினோம் ஏன் முன்கூட்டியே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என. ஆரம்பத்திலேயே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என விரும்பினோம்." என தெரிவித்தார். 

    பேச்சுவார்த்தை நடத்த திமுகவுக்கு உடன்பாடு இல்லையா என்ற கேள்விக்கு, "எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம்" என தெரிவித்தார். 

    • அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
    • அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * எ.வ.வேலு அமைச்சர் கிடையாது வியாபாரி. இன்னும் 2 மாதத்தில் 1, 2, 3 என சிறையில் கம்பி எண்ணப்போகிறார்.

    * சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உட்பட 47 தொகுதிகளை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கி உள்ளது தி.மு.க.

    * தி.மு.க.வினர் கிராமங்கள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை கொண்டுபோய் பதுக்கி வைத்துள்ளனர்.

    * பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க. இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

    * கேடு கெட்ட தி.மு.க. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று கூறுங்கள்.

    * இளைஞர்களால் எத்தனையோ பல புரட்சிகள் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற புரட்சி நடக்கும்.

    * தேர்தலில் தி.மு.க. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.

    * அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

    * அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    * துணை பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு தி.மு.க. போலி வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.

    • அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
    • ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம்.

    மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ?

    சுவர் தன் மீது விழுந்துவிடுமோ?

    தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?

    போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.

    இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது…

    இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?

    அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?

    மாணவர்களின் பாதுகாப்பை Compromise செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா?

    இந்த நிலைக்கு அரசுப்பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.

    பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், Group II போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு.

    விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.

    • மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே வரும் 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது.
    • இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

    மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாட்டுக்கு பின் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. மாஞ்சோலை தொழிலாளர்களை தி.மு.க. அரசு விரட்டி அடிக்கிறது. அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், பஸ் வசதி, ரேஷன் பொருட்களை வழங்கவில்லை. மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. மாஞ்சோலையின் தற்போதைய நிலை குறித்து விசாரணை செய்ய வக்கீல் ஆணையம் அமைக்க ஐகோர்ட்டில் முறையிட இருக்கிறோம்.

    10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள கட்சியினர்கூட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து, 36 நாட்களாக காத்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அந்த சமயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டசபை தேர்தலுக்கு பின்பு தி.மு.க. ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும். 2026-ல் ஒரு கட்சி மட்டுமே ஆட்சியில் அமரக்கூடாது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம். அதனை கொடுக்கும் கூட்டணியில் அங்கம் வகிப்போம். வாக்குகளை அளித்து விட்டு, கோரிக்கைக்காக கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என நினைக்கிறோம்.

    கூட்டணி ஆட்சி இல்லை என்றால் அந்த ஆட்சி தமிழக மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சியாக இருக்காது. எனவே, கூட்டணி ஆட்சி அமைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி அரசாக இருந்தால்தான் அது மக்களுக்கான அரசாக இருக்கும். அமெரிக்காவின் ஒப்பந்தத்தால் இந்தியாவில் வேளாண் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பாதிப்படையும். அமெரிக்காவின் உத்தரவுக்கு ஏன் இந்தியா அடிபணிகிறது? என தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    கடந்த தேர்தலில் கூட்டணி வைத்ததால் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

    முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. மயானம், சாலை வசதிகள் இல்லை. இந்நிலை மாற வேண்டும். தனித்தொகுதிகளில் புதிய தமிழகம்தான் போட்டியிட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. யாரை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1967 வரை கங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, பிறகு வர முடிந்ததா?
    • எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது.

    திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அண்மைய காலமாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இதனிடையே சில நாட்களுக்கு முன்பு பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ""தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுமூகமாகத்தான் இருக்கிறோம். எந்தவிதமான இழுபறியும் இல்லை. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கும் அளவிற்கு தி.மு.க. தலைவருக்கு பெரிய மனது உள்ளது. அதேபோல் ஆட்சியில் பங்கு தரும் மனசும் அவருக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டமாக பேசியுள்ளார்.

    புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார்கள். 100 இடங்களில் வென்று கலைஞர் முதல்வராக இருந்தாரே, ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? 150 இடங்களில் திமுக ஜெயிக்கும் போது எப்படி கொடுக்கும்?

    நீங்கள் வேண்டுமென்பதை கேளுங்கள்; செய்து தருகிறோம்; எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது 1967 வரை கங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, பிறகு வர முடிந்ததா? திமுகவை வெல்ல ஒருவர் பிறந்து வர வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும்.
    • டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது.

    திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவிலேயே நிர்வாகத்திற்கு பெயர்போன இயக்கம் தி.மு.க.தான். தமிழ்நாடு தலைசிறந்த நிர்வாகமும், மாநில வளர்ச்சியிலும் முதலிடம் என மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாத்துறையிலும் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று உள்ளது.

    காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது. தி.மு.க. பதில் சொல்லவில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறி உள்ளார். நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். நாங்கள் கட்டுப்பாடுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும். மாணிக்கம் தாகூர் எம்.பி. தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம்.

    தமிழ்நாடு அரசு அதிகமாக கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஏற்கனவே இருந்த அ.தி.மு.க. அரசு ரூ.5½ லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். அதற்கு ஓராண்டிற்கு வட்டி எவ்வளவு என கணக்கீட வேண்டும். 36,000 முதல் 40,000 கோடி தோராயமாக வரும். புள்ளிவிபரம் என்னிடம் இல்லை.

    மாநில அரசு நிர்வாகத்தில் மூலதனங்களை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம். முதியோர் ஓய்வூதியம் திண்டுக்கல்லில் மட்டும் கடந்த வாரம் 10 ஆயிரம் நபர்களுக்கு கொடுத்துள்ளோம்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் திண்டுக்கல் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும், தொகுதிக்கு 20 ஆயிரம் பேருக்கும் முதியோர் உதவித்தொகை கொடுத்து இருந்தோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டார். 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும். தற்போது தான் அதனை சரி செய்து 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து வருகிறோம்." என தெரிவித்தார். 

    • நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை.
    • கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும்

    தி.மு.க. கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக நீண்ட நாட்களாகவே பேச்சு எழுந்துவருகிறது. ஆனால் பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெற மாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். திருமாவளவனின் இந்த நிலைப்பாட்டால், நீண்ட நாட்களாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவருகிறது. 

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 

    "அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை. டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவரும் பரஸ்பரம் ஆதரவாக நின்றவர்கள். வன்னியர் சங்கக் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்திருக்கிறார்.

    அதேபோல் வி.சி.க கொடியை டாக்டர். ராமதாஸ் ஏற்றி வைத்திருக்கிறார். எனவே அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினால், அவர்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்துவிடும். தேவைப்பட்டால், அவர்கள் சந்தித்து பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணியின் அச்சாணியாக தி.மு.க தான் உள்ளது. தி.மு.க கூட்டணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இணைவதற்கான முடிவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் எடுப்பார். அவரது முடிவே இறுதியானது." என தெரிவித்திருந்தார். 

    தி.மு.க கூட்டணியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இணைவதை ஆதரிக்கும் வகையில் பேசிய செல்வப்பெருந்தகை, இரு தலைவர்களுக்கும் இடையே இருந்த பழைய இணக்கமான சூழலை நினைவுகூர்ந்தார். இதன் மூலம், பா.ம.க, வி.சி.க கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணிப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்காது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில், 

    கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும் என்பதை தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை. எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இதனிடையே செல்வப்பெருந்தகையின் கருத்து குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

    இதுவரை அதுபோன்ற ஒன்று நடைபெறவில்லை. ராமதாஸ் தரப்பும் எங்களிடம் பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினும் அவர்களிடம் பேசவில்லை. இது அவரது கருத்து. சேர்வது என்பது அவரவர் கருத்து. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எல்லா எதிர் கட்சிகளையும் சேர்த்து தேர்தலை சந்தித்து உள்ளோம். 2006-ல் அப்படி தான் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தோம். நல்லாட்சியும் கொடுத்தோம். தற்போது தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது.

    இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லா கட்சியும் நம்முடன் உள்ளது. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை." என தெரிவித்துள்ளார். 

    • இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
    • ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால் பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    த.வெ.க.வுக்கு 42 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகின்றனர். அதை திருப்பி 24 இருந்தாலே பெரிய விஷயம். செங்கோட்டையனுக்கு அரசியல் புள்ளி விவரம் தெரியாது. அவருக்கு டூர் போட தெரியுமே தவிர, மக்களின் மனதை அறிய தெரியாது. 42 இல்லை 24 கூட கிடையாது, அதற்கும் குறைவுதான்.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஒத்துப்போகாது என்பது எடப்பாடி பழனிசாமியின் கனவு, அவரது எதிர்பார்ப்பு. அதனால் அதைச் சொல்கிறார். எடப்பாடி எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவர் என்பது நாடறிந்த உண்மை. அன்புமணி ராமதாசுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்? அவர் மருத்துவத்தில் ஏதாவது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் பொருளாதார நிபுணரும் அல்ல, மேதையும் அல்ல. அவர் சொல்வது ஏற்கத்தக்கதும் அல்ல. இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை தந்துள்ள அரசு திராவிட மாடல் அரசு. இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.

    பிரதமர் மோடி மலேசியாவுக்கு சென்றால் தமிழை புகழ்ந்து பேசுவார். ஏனென்றால் மலேசியாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள இந்தியர்கள் தான் அதிகம். அதனால் அப்படி பேசுவார். ஆனால் ஒடிசாவுக்கு போனால் தமிழனை திருடன் என்பார். தமிழ் திருடனின் கையில் ஒடிசாவின் சாவி இருக்கிறது என்பார். பீகாருக்கு போனால் தமிழனை திருடன் என்பார். அங்கே எல்லாம் தமிழர்கள் திருடர்கள், ஆனால் வெளிநாட்டிற்கு சென்றால் அவர்களின் பார்வையில் தமிழர்கள் இணைப்பு பாலமாக விளங்க கூடியவர்கள்.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பேச குழு அமைக்க எப்போது சரியான நேரம் வருகிறதோ அப்போது குழு அமைப்போமே தவிர, இது மிகப்பெரிய கூட்டணி. எல்லோருடனும் பேசுவதற்கு சுருக்கமான காலத்தில் அந்த கூட்டணியை பேசி முடிக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் எங்கள் தலைவர் வியூகம் வகுத்து கூட்டணியை முடிவு செய்வார். அதில் எந்தவித பிசுபிசுப்பும் வராது யாரும் கவலைப்பட வேண்டாம்.

    ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதைக் கொடுக்கின்ற இடத்தில் எங்கள் தலைவர் இருக்கிறார். அவரை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அது கூட்டணி கட்சி ஆதரவோடு தொடர வேண்டும் என்பது தான் எங்கள் தலைவரின் விருப்பம். எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி என்பது பொய்பாடி வாக்குறுதிகள். எல்லாமே பொய் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஆட்சியில் இருக்கும் போது இதையெல்லாம் செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. அவரை மக்கள் நம்பமாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் வராது. திராவிட மாடல் ஆட்சி தொடரும்.

    எங்கள் கூட்டணியை பற்றி பேச ஆதவ் அர்ஜூனா யார்? எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அடிமை போல நடத்துவதாக கூறுகிறார்களா. எடப்பாடி பழனிசாமி தான் அடிமை பழனிசாமி. விஜய்யின் அடிமை ஆதவ் அர்ஜூனா. இந்த அடிமைகளின் பேச்சுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் கூட்டணியில் உள்ளவர்களை சம இடத்தில் வைத்துள்ளோம். யாரையும் ஆண்டான் அடிமையை போல் நடத்துகின்ற பழக்கம் தி.மு.க.வுக்கு எந்த காலத்திலும் கிடையாது என்றார். 

    • நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு.
    • தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு?

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி, தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கிற பணிகளைச் செய்து கொண்டிருந்தாலும், இன்றைய தினம் முதலமைச்சருடைய கருணை உள்ள திட்டமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நலத்திட்டம் மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்குப் பணியாற்றுகிற உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் பயன்பெறுவர்.

    இந்த மகிழ்வான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு 'வயிற்றில் பால் வார்த்ததை போல' என்று சொல்லுவார்கள். பால் வார்க்கவில்லை, உணவையும் வழங்கி அந்த மக்களுடைய உழைப்பின் திறனை ஊக்குவிக்கிற முயற்சி எடுத்திருக்கிற முதலமைச்சருக்கு அனைத்து தரப்பு மக்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை, பாராட்டை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நேற்று எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று கூறியது வடிகட்டிய பொய். வடிகட்டிய பொய் என்று சொல்லுவதை விட வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு.

    வேண்டுமென்றால் அ.தி.மு.க ஆட்சியில் நெல் கொள்முதல் எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு? அ.தி.மு.க ஆட்சியில் விளைவிக்கப்பட்ட நெல் அளவு எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்த பிறகு நெல் பயிரிடப்பட்ட அளவு எவ்வளவு? என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் அபரிமித வளர்ச்சி அடைந்து தஞ்சை மாவட்டம் நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது என்பது தெரியும்.

    இந்தத் தருணத்தில் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது வடிகட்டிய பொய். இதனை விவசாயிகளும், பொதுமக்களும் நம்ப மாட்டார்கள். பொய்யையே சொல்லிப் பழக்கப்பட்ட பழனிசாமி வேறு விதத்தில் பொய் சொல்லலாம். ஆனால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்றார். 

    • தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன.
    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவில், 2022-23ஆம் ஆண்டில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக இழப்பை சந்தித்த மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்றும், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி என்றும் பதினாறாம் நிதி ஆணையத்தின் முதன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று ஆகும்.

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 54 நிறுவனங்கள் லாபத்திலும், 35 நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன. இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதற்கு எதுவும் இல்லை. மது வணிகம் செய்யும் டாஸ்மாக், உழவர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறித்து 1000%க்கும் மேல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சிப்காட் போன்ற நிறுவனங்கள் தான் இலாபத்தில் இயங்கி வருகின்றன. இந்த 54 நிறுவனங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டில் ஈட்டிய இலாபம் வெறும் ரூ.2560 கோடி மட்டும் தான்.

    அதே நேரத்தில் நஷ்டத்தில் இயங்கும் 35 நிறுவனங்கள் அதே ஆண்டில் ஏற்படுத்திய இழப்பு ரூ.16,048 கோடி ஆகும். அந்த ஆண்டில் மேலும் 11 நிறுவனங்களின் இழப்பு குறித்த முழுமையான தகவல்கள் நிதி ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை. அந்தத் தொகையும் சேர்ந்திருந்தால், ரூ.18,814 கோடி இழப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இராஜஸ்தான் மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தைத் தமிழ்நாடு பிடித்திருக்கும்.

    2022-23ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ.26,867 கோடி வழங்கியது. அந்த மானியம் மட்டும் வழங்கப்படவில்லை என்றால், பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ.52,915 கோடியாக அதிகரித்திருக்கும். அத்தகைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பில் ரூ.32,430 கோடியுடன் முதலிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை தமிழகம் பிடித்திருக்கும்.

    இழப்பை எதிர்கொண்ட நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது மின்சார வாரியம் ஆகும். 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.9192 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2021-22ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.9000 கோடி ஆகும். 2022-23ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்திருக்கிறது என்றால் எந்த அளவுக்கு அந்த நிறுவனம் சீரழிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் திமுக ஆட்சியாளர்களின் ஊழல் தான்.

    இந்தியாவிலேயே அதிக பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். ஒரு மாநிலம் அதன் அனைத்துத் தேவைகளுக்கும் வரி வருவாயை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரம் பறிக்கப்பட்டு விட்ட நிலையில், வரி அல்லாத வருவாயை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

    மாநிலங்களின் வரி அல்லாத வருவாயைப் பெருக்குவதற்கான ஒரே வழி பொதுத்துறை நிறுவனங்களை இலாபத்தில் இயக்குவதும், கனிமவளங்கள் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது தான். ஆனால், இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஆற்று மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றின் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றாலும், அதில் நடைபெறும் வரலாறு காணாத ஊழல்கள் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஆட்சியாளர்களின் பைகளுக்கு செல்கின்றன. அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழக அரசின் வரி அல்லாத மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.4 லட்சத்து, 30,434 கோடி ஆகும். ஆனால், தமிழக அரசின் வரி அல்லாத வருவாய் நடப்பாண்டில் வெறும் ரூ.28,818.58 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 6.69% மட்டும் தான். ஒரு மாநிலத்தின் நிதிநிலை வலிமையாக இருக்க வேண்டும் என்றால், அதன் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 20% அளவுக்கு வரி அல்லாத வருவாய் இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசின் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து விட்டதால், வரி அல்லாத வருவாய் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டப் போவது உறுதி என்று கூறியுள்ளார்.

    • அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது .
    • புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம்.

    புதுவை வில்லியனூர் ஜி.என். பாளையம்பேட் குழந்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும் என்ற விவசாயி களின் கோரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது .

    அமெரிக்க அதிபர் டிரம்பின் சதிக்கு மோடி பலியாகி விட்டார். இந்திய நாட்டின் நலனை விட கார்ப்பரேட் மீது அக்கறை காட்டுகிறார். வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய மக்கள் எதிர்க்கி றார்கள். எனவே, மோடி ஒப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டும்.

    கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் ஏற்பீர்களா.? என்பது யூகமான கேள்வி. ஒரு சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது. பா.ம.க. ஏற்கனவே எடுத்த சோசியல் என்ஜினியரிங் நிலைப்பாட்டால் வி.சி.க.வின் வெளிப்படை யான முடிவை அறிவித் தோம். அந்த முடிவைதான் மறுபடி மறுபடி சொல்கி றேன். இதில் மேற்கொண்டு கருத்து சொல்ல விரும்ப வில்லை.

    கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு கூடுதல் இடம் கிடைக்குமா.? என்பது பேச்சுவார்த்தையில் தான் தெரிய வரும். புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×