என் மலர்
நீங்கள் தேடியது "Krishnasamy"
- தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது.
- தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் தெற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. இளைஞரணி தலைவர் சியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது. வரும் காலங்களில் மதுபானக்கடைகளை முழுமையாக மூடுவதற்கு புதிய தமிழகம் கட்சி போராடும். தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாக உள்ளது. முக்கிய துறைகளை கையாளும் 4 அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
சமூக நீதி பேசும் அமைச்சர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர். வருகிற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெறும். வருகிற தேர்தலில் கூட்டணி ஆட்சியே அமையும் அதில் புதிய தமிழகம் இடம்பெறும்.
எங்கள் கட்சி வருகிற தேர்தலில் தனித்தொகுதி மட்டும் பொதுத் தொகுதிகளில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடும்ப ஆட்சியும், குடும்ப வாரிசுகளும் செழித்து வளர்ந்து வருகின்றனர். இதற்கு வருகிற தேர்தலில் முடிவு கட்டப்படும்.
நிலக்கோட்டை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது.
- இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாட்டுக்கு பின் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. மாஞ்சோலை தொழிலாளர்களை தி.மு.க. அரசு விரட்டி அடிக்கிறது. அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், பஸ் வசதி, ரேஷன் பொருட்களை வழங்கவில்லை. மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. மாஞ்சோலையின் தற்போதைய நிலை குறித்து விசாரணை செய்ய வக்கீல் ஆணையம் அமைக்க ஐகோர்ட்டில் முறையிட இருக்கிறோம்.
10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள கட்சியினர்கூட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து, 36 நாட்களாக காத்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அந்த சமயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டசபை தேர்தலுக்கு பின்பு தி.மு.க. ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும். 2026-ல் ஒரு கட்சி மட்டுமே ஆட்சியில் அமரக்கூடாது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம். அதனை கொடுக்கும் கூட்டணியில் அங்கம் வகிப்போம். வாக்குகளை அளித்து விட்டு, கோரிக்கைக்காக கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என நினைக்கிறோம்.
கூட்டணி ஆட்சி இல்லை என்றால் அந்த ஆட்சி தமிழக மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சியாக இருக்காது. எனவே, கூட்டணி ஆட்சி அமைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி அரசாக இருந்தால்தான் அது மக்களுக்கான அரசாக இருக்கும். அமெரிக்காவின் ஒப்பந்தத்தால் இந்தியாவில் வேளாண் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பாதிப்படையும். அமெரிக்காவின் உத்தரவுக்கு ஏன் இந்தியா அடிபணிகிறது? என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கடந்த தேர்தலில் கூட்டணி வைத்ததால் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. மயானம், சாலை வசதிகள் இல்லை. இந்நிலை மாற வேண்டும். தனித்தொகுதிகளில் புதிய தமிழகம்தான் போட்டியிட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. யாரை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன்.
- கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருந்தனர்.
கோவை:
புதிய தமிழகம் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்று தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது வரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். நேற்று நடந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இதுபற்றி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டி வருமாறு:-
கூட்டணி குறித்து புதிய தமிழகம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன். யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம்.
மதுவிலக்கு, ஊழல், கனிம வள கொள்ளை, அரசு வேலைக்கு விலை என தமிழ்நாட்டின் நிலை மாறி உள்ளது. எங்கள் கொள்கைகளுக்கு ஒத்துப் போகிறவர்களுடன் பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கொண்டு வரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க சிந்தித்து வருகிறோம்.
கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருந்தனர். ஆனால் இப்போது அதுபோன்று இல்லை. புதிய தமிழகத்தை அதிகாரப்பூர்வமாக எந்தக்கட்சியும் அணுகவில்லை.
தமிழ்நாட்டில் புதிய தமிழகம் இன்றி வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் வலுவாக உள்ளோம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல் தென்மாவட்டங்களில் யாரும் வெற்றி பெற முடியாது. நாங்கள் தனித்து விடப்படவில்லை.
புதிய தமிழகம் கட்சி ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்பதால் தேர்தலுக்கு 5 நாட்கள் முன்புதான் சின்னம் கொடுப்பார்கள் என்றார்.
- கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும்.
- சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் வெளியில் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சில பேர் கூறிக் கொண்டிருக்கிறார்கள், இது நடந்தது எப்படி என்பதை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அவர் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டக் கூடாது.
இந்த சம்பவத்தை வைத்து விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அவரை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே காவல்துறை விஜய்யின் மாநாடுகளை பார்த்திருக்கிறது. கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் அவரைப் பார்ப்பதற்கு வருவார்கள். அப்படி இருக்கும்போது அவரது பிரசாரத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் சரியான தேர்வு இல்லை. இதனை காவல்துறை அவரிடம் அறிவுறுத்தி இருக்க வேண்டும்.
பெரிய வாகனமாக இருந்தபோதிலும் குறுகிய பாதையில் குவிந்திருந்த மக்கள் இடையே நகர்ந்து சென்று கொடுக்கப்பட்ட இடத்தில் தான் நீங்கள் பேச வேண்டும் என்று காவல்துறை சொல்லி வற்புறுத்தி உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த உடனே விஜய்யை காவல்துறையினரே உடனடியாக வெளியேறுங்கள் என்று கூறினார்களா? அல்லது அவரே வெளியேறினாரா என்பது போன்ற விவரங்களும் இந்த விஷயத்தில் வெளிவர வேண்டும்.
இது பற்றி வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும். சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் வெளியில் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர் அரசியலுக்கு வந்து உள்ளார். எனவே அவரை முடித்து கட்டிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்படுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
- கவின் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.
- புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான ஐடி பொறியாளர் கவின் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ஆணவக்கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பான பேசுபொருளாகி உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது, "சாதி மறுப்புத் திருமணம் செய்வோரை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகள், தெரு, சாலைகளின் பெயர்களில் சாதிகளை நீக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இதேபோல் விசிக தலைவர் திருமாவளனும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் ’மது விற்பனை’ நடைபெறுகிறது.
- கள் உடம்புக்கு நல்லது என்றும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கள், சாராயம் அல்லது பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எதுவாயினும் உடலுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய மற்றும் தத்துவ நூல்கள் அனைத்தும் மதுவின் கொடுமையை எடுத்துரைத்துள்ளன. திருக்குறளில் 'கள் உண்ணாமை' குறித்து 10 குறள்கள் இயற்றப்பட்டுள்ளன. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரத்தில் மது மற்றும் மாமிசம், கொலை, கொள்ளைக்கு எதிராகவே கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.
1937 முதல் 1971 வரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலிலிருந்தது. 1971 இல் தமிழகத்தின் மீண்டும் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. 1974 இல் மதுவிலக்கு மீண்டும் அமலுக்கு வந்தது. 1984க்கு பிறகு மீண்டும் அதிமுக, திமுக ஆட்சிகளில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, மாநில அரசே மதுபான விற்பனையை நடத்துகிறது.
தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் 'மது விற்பனை' நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மது விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சட்ட விரோதமாக அதிகாலை 6:00 மணி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுகிறது; காலையில் வேலைக்குச் செல்வோர் குடிப்பதை அத்துறை அமைச்சரே நியாயப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் மதுப் பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு பெருமளவு உயிரிழப்புகளுக்கு ஆளாகின்றனர். கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் என அடிப்படை, நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது தினசரி வருமானத்தில் பெரும் பகுதியை டாஸ்மாக்கிலேயே தொலைத்து விடுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை, கள்ளத்தனமான விற்பனை என ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெறுகிறது. எனவே தமிழக மக்களின் நலன் காக்கப்பட வேண்டுமெனில் டாஸ்மாக் கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வாகும்.
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக 'மது, போதை, புகையில்லா தமிழகம்' என தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் அண்மைக் காலமாக 'கள் உணவு' என்று ஒரு சிலர் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
கள் மதுவே தவிர, அது உணவாகாது. பதநீர் வேறு; கள் வேறு. கள் இறக்க அனைத்து கிராமப்புறங்களில் அனுமதி கொடுத்தால் விவசாயத் தொழிலாளர்கள், பனை, தென்னை தோப்புகளே கதி என மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வார்கள். கடந்த காலங்களில் அவ்வாறே நிகழ்ந்தன.
கள் உடம்புக்கு நல்லது என்றும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது. 'உப்பு கருவாடும் ஒத்த மரக் கள்ளும் உடம்புக்கு நல்லது' என்று சினிமாவில் தவறாகப் பாடி வைத்துள்ளனர். எல்லா மது வகைகளிலும் அடிப்படையாக இருப்பது ஆல்கஹால். கள்ளில் 8 முதல் 15 சதவீத வரை ஆல்கஹால் அளவீடு இருக்கும்; பிற மதுபான வகைகளில் 30 முதல் 40 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும்.
எனவே போதையை அதிகரிக்க லிட்டர் கணக்கில் கள்ளைக் குடித்து விடுவார்கள். கள் பிற மதுபானங்களை விட அதிகமான பாதிப்புகளை உருவாக்கும் மிக மோசமான மதுவாகும். ரத்தக்குழாய்கள்; உணவு ஜீரணத்தை ஒழுங்குபடுத்தவும், உடலுக்குத் தேவையான சக்தியைச் சக்தியை சேமித்து வைக்கும் ஈரல்கள் மது குடிப்பதால் பெரும் பாதிப்படையும். நல்ல திசுக்களுக்கு பதிலாக கொழுப்பு சத்து அதிகமாகி ஈரலின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். இன்சுலின் சுரக்கும் கணையத்தை பாதிப்படையச் செய்து சர்க்கரை நோய் மற்றும் கணைய புற்றுநோயை அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு; மூளை நரம்பு மண்டல பாதிப்பு என பலவிதமான நோய்களையும் வரவழைக்கும் மிகக் கொடிய மது ' கள்' ஆகும். '
'கள்' ஒரு உணவு என்று சொல்வதற்கு உண்டான புரோட்டின், விட்டமின்கள், மினரல்ஸ் போன்ற எந்த விதமான சத்துக்களும் அதில் இல்லை. கள்ளின் ஆபத்து தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். கள் இறக்க அனுமதித்தால் கிராமம் தோறும் நாட்டுச் சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும். இதன் போக்கு எப்படி, எங்கு போய் முடியும்?
கள் இறக்கும் போராட்டம் நடத்துவது அதை பொது வழியில் குடித்துக் காட்டுவது அனைத்தும் சட்டவிரோதமே.
எனவே, வரும் 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கள் இறக்கும் போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்; தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும்.!
- விஜய் அவர்களின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும்.!
நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நேற்று கூறிய கருத்துக்குப் பிறகு. 'நீட் தேர்வு' மீண்டும் விவாத பொருளாக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் நீட் தேர்வு குறித்து சரியான கருத்தையே கூறி இருக்கிறார். தவறான கருத்தை எதையும் கூறவில்லை. ஆண்டொன்றுக்கு தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அதில் மருத்துவர், பொறியியல், வேளாண்மை, சட்டம் என நான்கு துறைகள் முன்னிலை வகிக்கின்றன.
எனினும், இன்றைய காலகட்டங்களில் விண்வெளி ஆராய்ச்சி, கம்ப்யூட்டர். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், வணிகவியல் தொழில் முனைவோர் என உள்நாடு, வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அத்துறைகள் மருத்துவம், பொறியியல் துறைகளை விட நிறைவைத் தரக்கூடியதாகவும், அதிகப் பொருளீட்டக் கூடியதாகவும், புகழ் சேர்க்கக்கூடியதாகவும் உள்ளன.
பெரும்பாலான மாணயர்கள் பள்ளிப் பருவத்திலேயே தங்களின் எதிர்காலத்தைச் சரியாகத் திட்டமிட்டு தாங்களே நீர்மானிக்கிறார்கள். பல நேரங்களில் பெற்றோரும். நண்பர்களும், ஆசிரியர்களும் வழிகாட்டிகனாக விளங்குகிறார்கள்.
எந்த மாணவரது வாழ்க்கையிலும் எந்த அரசியல்வாதிகளின் பங்களிப்பும் இதுனைரயும் சொல்லும் படியாக இருந்ததில்லை. பள்ளி அல்லது கல்லூரி பாடத் திட்டங்களையும் அந்த துறை நிபுணர்களே தீர்மானிக்கிறார்கள்.
அவ்வப்போது அசரியல் நோக்கங்களோடு அவர்களுக்கு பிடித்தமான தலைவர்களின் வாழ்ககை வாலாறுகளை பள்ளிப் பாடங்களில் திணிப்பதை தவிர அரசியல்வாதிகளுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது!
எனினும் அண்மைக் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலான பிறகு உருவான வாய்ப்புகளின் அடிப்படையில் "மத்திய அரசின் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவளர உருவாக்க வேண்டும்"என்ற உலக அளவிலான இலக்கை அடைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு தாராளம் காட்டியது.
அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் அரசியல், பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் புதிய புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினர். தமிழகத்தில் மிக மிக அதிகம்!!
தமிழகத்தில் புதிதாகத் துவங்கப்பட்ட பல மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வசதிகள் இல்லாமலேயே தேசிய மருத்துவ கல்விக் கழகத்தின் நிபந்தனைகளை மீறி மாட்டுக்கொட்டைகளுக்கு குறைவான வசதிகள் கொண்ட கட்டிடங்களில் மருத்துவக் கல்லூரிகள் நடத்த அரசியல் பலத்தோடு அனுமதி பெற்றுக் கொண்டார்கள்.
அந்த மருத்துவக் கல்லூரியில் சேர பெரும் தொகை மட்டுமே அடிப்படை அம்சமாக இருந்தது. தமிழக அரசியல்வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் கூக்குரலிடுவதைப் போல கிராமப்புற, நகர்ப்புற, எழை, எளிய மாவாவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியின் வாசல்களை எட்டிப் பார்க்க முடியாத நிலை இருந்தது.
ஆனால் 50 சதவிகிதம் பெற்றிருந்தாலும் பணப்பெட்டியுடன் சென்றவர்களும், வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியின் பிள்ளைகளும் மருத்துவர்கள் ஆக முடிந்தது.
இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் எண்ணிக்கை அடிப்படையில் நிறைவேறியது; ஆனால் தரமான கல்வியைக் கொடுக்க முடியாத நிலை குறித்து அனைத்து தளங்களிலும் பேசுபொருளாகியது எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி அனைத்திற்கும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தரம் நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதற்கு ஏற்ப உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 'தேசிய அளவில்' மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தி அதன் பிறகு அகில இந்திய அளவில் தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. பல மாநிலங்கள் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிகமாக கொண்ட தமிழ்நாடு அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டு.2017க்கு பிறகு தமிழகம் 'நீட் தேர்வை' அமலாக்கியது.
இந்த 7 வருடங்களில் ஆயிரக்கணக்கான கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றுத் தரத்தின் அடிப்படையில் எவ்வித நன்கொடையும் இன்றி மருத்துவராக முடிகிறது. ஆட்டோ டிரைவர், வேன் டிரைவர், கூலித் தொழிலாளி பிள்ளைகளும் மருத்துவராக சாதனை படைக்கிறார்கள் என்ற நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திய அரசியல் சாசனம் வகுத்துத் தந்துள்ள உண்மையான 'சமத்துவம் சம உரிமை அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் சம வாய்ப்பு உரிமை நீட் தேர்வுக்கு பின்னர்தான் அமலுக்கு வருகிறது.
அந்த வகையில் "நீட் தேர்வு' இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு திறமையின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குகிறது. அதன் அடிப்படையில் நாவரிசைப்படுத்துவது முழுக்க முழுக்க வெளிப்படையானதாகவே இருக்கிறது.
கடந்த காலங்களில் தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் முறையை கடைப்பிடிக்கக்கூடிய மாணவர்கள் தமிழகத்தைத் தாண்டி பிற மாநில மருத்துவக கல்லூரிகளிலும் இடம் பிடித்து விடுகிறார்கள்.
அதுவும் குறிப்பாக முதுநிலை வகுப்புகளில் தமிழக மாணவர்கள் பலரும் பிற மாநிலங்களில் பெரும் பங்கு வகித்து வரும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு விளைந்துள்ள இந்த மாற்றங்களைச் சிறிதும் கணக்கில் கொள்ளாத பிற்போக்கு அரசியல்வாதிகள் மிக மிகக் குறுகிய கண்ளேமாட்டத்துடன் திட் தேர்வு குறித்து தவறான எதிர் பிரச்சாரங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீட்டை ஒழிக்க வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார்கள் ஆனால் அந்த நீட் ஒழிப்பு ரகசியத்தை வெளியே சொல்லாமலேயே தமிழக மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் சவாரி செய்து வருகிறார்கள்.
நீட் தேர்வு ஒழிப்பு குறித்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் தவறான வாக்குறுநியாலேயே மாணவச் செல்வங்கள் நங்களின் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் நீட் தேர்வு குறித்து உண்மையைப் பேசி இருந்தால் ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்து இருக்காது.
எவர் விட்டு பிள்ளையோ அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை அன்றைய தினம் அனுதாப செய்திகளையும் பத்து லட்சம் 'பணமுடிப்புகளையும் கொடுக்கிறார்கள். ஓட்டுக்களை அள்ளி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்கிறார்கள். இந்த அநியாயம் நீண்டகாலம் நீடிக்காது, நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
இன்றைய நவீன உலகில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு +2 தேர்வில் வெற்றி பெறும் 10 லட்சம் மாணவர்களால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உன்ன 10,000 மருத்துவ இடங்களில் அனைவரும் வாய்ப்பை பெற இயலாது என்பது எதார்த்தம்.
எனவே மாணவச் செல்வங்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் முன்னேறிச் செல்ல வழி காட்ட வேண்டியது ஒவ்வொரு சமூக பற்றாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். அதை விட்டு நீட்டை ஒழிப்பது என மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலை எவர் செய்தாலும் அவர்கள் தமிழ் மக்களுக்கு, தமிழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் எனக் கருத வேண்டும் அந்த வகையில் நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் கருத்துக்கு எனது வாழ்த்துக்கள்!
தொடர்ந்து தமிழக மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும்.! விஜய் அவர்களின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும்.!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தக் கூடாது.
- Thugs & Pindaris அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது.
புதிய தமிழக தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Thug Life" எனும் பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. மிகவும் தவறான பொருள் கொண்ட Thug" எனும் பெயர் நடிகர் கமல்ஹாசன் அவர்களால் பெருமிதப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகிறது. அப்பெயர் கிஞ்சிற்றும் பிரபல்யப்படுத்துவதற்கோ, பெருமைப்படுத்துவதற்கோ உரியதல்ல. ஏனெனில் Thuge என்றால் பொறுக்கிகள் மூர்க்கர்கள் போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய வரலாற்றை ஆழமாகப் படித்தவர்கள் 18 மற்றும் 19.ஆம் நூற்றாண்டுகளில் Thugs & Pindaris என்ற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை நன்கு அறிவார்கள். Thugs & Pindaris என்பவர்கள் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகு இந்திய அளவில் நிலவிய நிலையற்ற தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய இந்தியாவில் துவங்கி இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளை கூட்டம் ஆகும். அவர்கள் மத ரீதியாகவோ, இன மொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்பலாவர். அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது.
வழிப்போக்கர்களோடு வழிப்போக்கர்களாக அண்டிப் பழகி அவர்களை மயிரக்கம் இன்றி கொலை செய்துவிட்டு அவர்களின் உடைமைகளைக் கொள்ளை அடிப்பது தான் அவர்களின் வாழ்வியல் முறை. அதில் பல குழுக்கள் கூட்டம் கூட்டமாக குதிரைகளில் வந்து மத்திய மற்றும் உத்திரப் பிரதேச சாம்பல் பள்ளத்தாக்குகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களைப் போல கொள்ளையடித்தும் செல்வார்கள்.
ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியாவெங்கும் கோலோச்சியது. பின் அவர்கள் கடுமையான போருக்குப் பின்னரே ஒடுக்கப்பட்டார்கள். எனினும் அவர்களின் மிச்சச் சொச்சங்களாக சமூகத்தில் பரவியும். பதுங்கியும் விடக்கும் மூர்க்க போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை இச்சமூகம் இன்னும் எதிர்கொண்டு தான் வருகிறது.
அதன் வெளிப்பாடுகளாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்து, நகை உடையைகளைக் கொள்ளையடித்துச் செல்வது, கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, அதிகாரிகளையே கொன்றுவிட்டு கனிமக் கொள்ளைகளில் ஈடுபடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது. கெளரவ சாதியக் கொலைகள் செய்வது, அரசாங்கத் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்வது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள் தான். அம்மூங்கப் போக்கிரி வழிப்பறி குண்டர்களின் அட்டகாசங்களை ஒழிக்கவே காவல்துறையே உருவாக்கப்பட்டது.
Thugs & Pindars இந்தியச் சமூகத்தையே அச்சுறுத்திய, இன்றும் அச்சுறுத்தி வருகிற ஒரு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு தவறான வாழ்வியல் முறை. அது போன்ற நெறியற்றவர்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு அடையானத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் திரைப்படங்களுக்கு பெயரிடுவது கூட சமூகத்திற்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல!
எனவே, மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தும் விதத்தில் தனது திரைப்படத்திற்கு Thug life" எனும் பெயரைத் தவிர்க்க வேண்டும் என நடிகர் கமலை வலியுறுத்துகிறேன்.
- வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
- புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.
திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களது கொள்கை. அதை வைத்துத்தான் கூட்டணிகள் அமைய வேண்டும்.
வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஆட்சி பகிர்வு என்ற லட்சியத்தோடு, அந்த குறிக்கோளோடுதான் ஆட்சி மாற்றங்கள் நடைபெற வேண்டும்.
புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது.
- வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
திருச்சி:
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலையில் திருச்சியிலும், மாலையில் கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2001-ல் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உள் ஒதுக்கீட்டில் அருந்ததினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்தார். இதன் மூலம் அருந்ததியினர் சமுதாயத்தினர் மட்டும் பலன் அடைந்தனர். மாறாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் பயனடைய முடியவில்லை.
இந்த பட்டியல் இனத்தில் 71 பிரிவுகளுக்கும் சரிசமமாக 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருகிற மே 17-ந் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் .இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைக் கட்சி ஆட்சியை அகற்றிவிட்டு ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும். ஒற்றைக் கட்சி ஆட்சி என்று சொல்பவர்கள் 2026-ல் புறக்கணிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்பு அந்தந்த மாநிலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஒப்புதல் வாங்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும். தற்பொழுது மத்திய அரசின் மும்மொழி புதிய கல்விகொள்கையை தி.மு.க. அரசு இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இதற்கு மத்திய அரசு சரியான விளக்கத்தை சொல்லவில்லை. தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய குழந்தையை மும்மொழி அமல்படுத்தப்பட்ட பள்ளியில் படிக்க வைத்து விட்டு மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கொள்கைகல்வி கற்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இதுதான் சமூக நீதியா பெரியார் அண்ணா வழியா ? திராவிட மாடலா?
ஒரு மொழி கொள்கையை பின்பற்றி ஜப்பான் போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மொழி வளர்ச்சிக்கு முக்கியமல்ல, மாறாக அறிவு தான் முக்கியம். ஆகவே மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால் தி.மு.க. அரசு தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா ?
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய தமிழக கட்சி சார்பில் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வழக்கு தொடர அனுமதி கேட்டோம். அப்பொழுது இந்த விஷயத்தை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் தற்பொழுது கனிம வள கொள்ளை மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.
- புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கிருஷ்ணசாமி பதிவேற்றம் செய்தார்.
சென்னை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை.
இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.
மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார்.
இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.
- ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
- பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது.
நெல்லை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக உள்ள பார்கள் மற்றும் சந்து, பொந்துகளில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வோம், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், உழைக்கும் மகளிர் அனைவருக்கும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
ஆனால் 2½ வருடங்கள் முடிந்த பின்னரும் இன்னமும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இது அவர்களது பாராளுமன்ற தேர்தல் வாக்கு வங்கியை பாதிக்கும். ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதனை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது. அவர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.






