search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puthiya tamizhagam katchi"

    இமானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாமக்கல்:

    இமானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

    மாவட்டப் பொருளாளர்கள் ஆறுமுகம், சின்னஅப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இம்மானுவேல் சேகரன் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்கக் கோரியும், குரு பூஜை விழாவை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் அர்ச்சுணன், பழனிவேல், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
    பழனி:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பழனி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இமானுவேல் சேகரன், சுதந்திர போராட்ட தியாகி சுந்தரலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து 7, 8, 9-ம் வகுப்பு பாடத்திட்டங்களில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்கள் போல் இவர்கள் குறித்த விவரங்களையும் அனைத்து வகுப்புகளுக்கும் துணை பாடதிட்டமாக சேர்க்க வேண்டும்.

    அதே போல் அனைத்து தலைவர்களின் பெயரிலும் அரசு விழா கொண்டாடப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

    கல்வி, மின்சாரம், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளுடன் சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் கையகப்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

    கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றி உங்கள் நிலைப்பாடு?


    பதில்:-ஒரு கட்சியின் சின்னத்தை நம்பியே மக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.க்களை உருவாக்குகின்றனர். அந்த கட்சி மீது எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர்களே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும்.

    கேள்வி:-பழனி சிலை மோசடி வழக்கில் அரசு ஒத்துழைக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியது பற்றி?

    பதில்:- அரசு கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது. எனவே அரசின் உத்தரவுக்கு யாராக இருந்தாலும் கீழ்படிந்தே ஆக வேண்டும்.

    கேள்வி:-கவர்னர் அடுத்து எங்கு ஆய்வு செய்தாலும் போராட்டம் நடத்துவேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

    பதில்:-சில கேள்விகளுக்கு உடனே பதில் அளித்துவிட முடியாது. அடுத்து நாம் சந்திக்கும் போது இதற்கான பதிலை நிச்சயம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.#Krishnasamy
    ×