என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TASMAC"

    • 240 ரூபாய்க்கு பதிலாக 250 ரூபாய் வசூலித்துள்ளார்.
    • இது தொடர்பாக கேள்வி கேட்டும், பதில் கூறாததால் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு.

    சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர், டாஸ்மாக் கடையில் 240 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கியுள்ளார். கடை விற்பனையாளர் 250 ரூபாய் வசூலித்துள்ளார்.

    பாட்டிலில் 240 ரூபாய்தான் போட்டிருக்கிறது என விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர் எந்தவொரு பதிலையும் கூறவில்லை. இது வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் தன்னிடம் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திரும்பி வழங்கிட உத்தரவிடக்கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரியும் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளார்.

    அந்த கடை விற்பனையாளர் தேவராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் வழங்காவிடில் ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க உத்தரவிட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மன்குடி பகுதியில் மழை நீரில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டார்.

    நாற்று நடப்பட்ட கொஞ்ச நாட்களில் மழை நீரில் நாற்றுகள் மூழ்கி அழுகி வீணாகி விட்டதை விவசாயிகள் அவரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். பின்னர் நிருபர்களுக்கு சவுமியா அன்புமணி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இன்னும் அதிகளவில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக வடிகால்களை சீரமைத்து விவசாயிகளை பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தூர்வாரும்பணி நடைபெற்று விட்டதாக கூறுகிறது.

    ஆனால் எந்த பணிகளும் செய்யப்படவில்லை. அதனால்தான் தண்ணீர் வயல்களில் தேங்குகிறது.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிப்பது போல் முதலில் நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

    தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொடுப்பதில்லை. எனவே தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது. மழையில் நனைந்து மக்கிப்போயும் முளைத்தும் நெல்கள் வீணாகிறது.

    எனவே அரசு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

    அப்போது அவருடன் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.

    • டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது.
    • பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு பணம் வாங்குகின்றனர் என தவறாக புரிந்து கொள்கின்றனர். அப்படி அல்ல. பாட்டில் திரும்ப அளிக்கும்போது 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு லேபிள் ஒட்டுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பல டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற்று வைப்பதற்கு இடம் இல்லாமல் சிரமம் உள்ளது. இது போன்ற சிரமங்கள் வருங்காலங்களில் தவிர்க்க இனி வரும் கடை கள் குறைந்தளவு 500 சதுர அடியில் கடை இருக்க வேண்டும் என கட்டாயமாக இருக்க வேண்டும் அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது. எப்.எல் 2 கொடுக்க வேண்டுவது அரசின் விருப்பமோ, திட்டமோ அல்ல. டாஸ்மாக் கடைகள் இல்லாத இடத்தில் கள்ளச்சாராயம், வெளி மாநிலத்தில் இருந்து வரும் மது போன்ற தவறான இடத்திற்கு சென்று விடக்கூடாது என தடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்றது. மதுவை மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தான். டாஸ்மாக் கடையை ஒரே நாளில் உத்தரவிட்டு மூட முடியும். ஆனால் அதற்கு பிறகு ஏற்படும் நிலை என்பது அனைவரும் அறிந்ததே. எனவே படிப்படியாக குறைத்து கொண்டு வருவது தான் அரசாங்கத்தின் முதல் நோக்கமாக உள்ளது.

    டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என தெரிவித்துள்ளோம். இதற்கு தகுந்தாற்போல் அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். சமாளிப்பதற்காக சொல்லவில்லை. மதுவை பழகிவிட்டனர். தவறாக சொல்லமுடியாது. அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையோ, பணிச்சுமையோ இப்படி சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

    இதனை சொன்னால் பலவிதமாக சித்தரிக்கின்றனர். விருப்பப்பட்டு மது வாங்க செலவழிப்பது அல்ல. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளது. சூழ்நிலை காரணமாக டாஸ்மாக் கடையில் தினமும் பணத்தை செலவிட்டு வருகின்றனர். இதனை மாற்றி கொண்டு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது.

    தற்போது வரை 500 டாஸ்மாக் கடைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் நிறுத்துவதற்காக மனுக்கள் வந்துள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    டெட்ரா பேக் நடை முறைப்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளது. டெட்ரா பேக் திட்டம் மது விற்பனையை பிரமோட் செய்வதற்கு அல்ல. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்றம் கூறும் கருத்தை வைத்து தான் முடிவெடுக்க முடியும். எனவே இதில் உடனடியாக முடிவெடுக்க முடியாது.

    பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எங்காவது மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற்றிருந்தால் தனிப்பட்டவரின் தவறு. அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 451 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.
    • குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழக மக்கள் மதுவால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற நிலையை காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்த வேண்டும். காரணம் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.

    தற்போது கூட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார். இந்த அசம்பாவிதத்திற்கு அடிப்படைக் காரணம் மதுபானமே.

    சமூகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தீமைகளுக்கு மதுபானங்கள் காரணமாக அமைகின்றன. எனவே ஏழைக்குடும்ப சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உடல்நலனிலும், எதிர்கால சமுதாயத்தினரின் நல்வாழ்க்கையிலும் அக்கறை இருக்குமேயானால் தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில் தமிழக அரசு பூஜை செய்ய வைத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது.
    • இதுதான் திராவிட மாடலா? என்று குறிப்பிட்டு பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

    சென்னை:

    அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் வந்த அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில் தமிழக அரசு பூஜை செய்ய வைத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. இதுதான் திராவிட மாடலா? என்று குறிப்பிட்டு பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. அர்ச்சகர் பூஜை செய்த வீடியோவில் உள்ளது டாஸ்மாக் கடை அல்ல. மேலும் அவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபரும் இல்லை. கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பகிரப்பட்டு வரும் இந்த பழைய வீடியோவை திரித்து வதந்தி பரப்பிவருகிறார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

    • ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகள் திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பதா?.
    • மதுபானக் கடைகளை மூடுவதற்கு வாக்குறுதி அளித்தாலும், அதை யாரும் நிறைவேற்றுவதில்லை.

    மதுரை கைத்தறி நகரில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் "ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகள் திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பதா?. ரம்மி விளையாட்டை முறைப்படுத்திய அரசு, டாஸ்மாக் கடைகளில் வேறு நிலைப்பாடு கொண்டுள்ளது. டாஸ்மாலக் கடையை நடத்துவது அரசின் வேலையா?. அரசு ஏன் நடத்த வேண்டும்?. அரசின் பணி இல்லை. எதற்காக மது விற்பனை செய்கிறீர்கள். மதுபானக் கடைகளை மூடுவதற்கு வாக்குறுதி அளித்தாலும், அதை யாரும் நிறைவேற்றுவதில்லை.

    ரம்மி, மது இரண்டும் கொலை செய்வதுதான். மதுவே ஊழல் போன்ற பல பிரச்சினைகளுக்கு காரணம். வேலைவாய்ப்பு, பொது நலன் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தில் நல்லது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.

    • ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
    • டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் 4,778 சில்லறை விற்பனை கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு மது வகைகளுக்கு ஏற்ப, ஒரு பாட்டில்களுக்கு கூடுதலாக குறைந்தது ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

    கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக கேட்கும்போது மதுப்பிரியர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அப்போது அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.

    எனவே தமிழக அரசின் உத்தரவின் பேரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், அனைத்து கடைகளிலும் மது பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் ஏராளமான ஊழியர்களையும் அவர், இடைநீக்கம் செய்தார். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை தான் வசூலிக்கபட்டது.

    எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க டாஸ்மாக் நிர்வாகம், டிஜிட்டல் பண பறிமாற்ற முறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது. ஒவ்வொரு கடையாக கொண்டு வரப்பட்ட இந்த முறை தற்போது அனைத்து கடைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு கடைகளிலும் 2 'ஸ்வைப்பிங்' மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.

    இதனால் ஏ.டி.எம். கார்டு, யு.பி.ஐ. பறிமாற்றம் மூலம் 2 சதவீதம் அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டது. இப்போது 20 சதவீதத்தை தாண்டி டிஜிட்டல் பறிமாற்றம் நடக்கிறது.

    இருந்தாலும்....? ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவது மட்டும் நிற்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது. அதாவது சூப்பர் மாக்கெட்டுகளில் வாங்கிய பொருளை ஸ்கேன் செய்தால் அந்த பொருளின் விலை மட்டும் தான் 'ஸ்வைப்பிங்' மிஷினில் வரும். அந்த தொகையை மட்டும் தான் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்.

    அதேபோல டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும். அந்த தொகையை மட்டும் தான் நாம் கார்டு மூலமாகவோ, யு.பி.ஐ. மூலமாகவோ செலுத்த முடியும். கூடுதல் தொகையை செலுத்த முடியாது.

    இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், 'ஸ்வைப்பிங்' பணம் செலுத்தும் எந்திரத்தை வழங்கியுள்ள வங்கிகளிடம் ஆலோசனை நடத்தியது. சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வங்கி பிரதிநிதிகள், இன்னும் 10 தினங்களுக்குள், அதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

    இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • குடிக்கிறது யாராக இருந்தாலும் சரி, அவர் சொல்லி திருந்துவான், இவரு சொல்லி திருந்துவான் இல்லை.
    • குடிக்கிறவன் நாட்டுக்கு தேவையில்லை என்று பேசினார்.

    சென்னை:

    பம்மல் அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தி பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    போன தேர்தலில் தோற்றதுக்கு காரணமும் ஆட்சிக்கு வர்றதுக்கும் நாங்க தான் காரணம். ஏன் என்றால் எங்கள் தளபதி சொன்னார், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடையை முதலில் மூடுவோம் என்று. நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று சொன்னால் ஒட்டுமொத்த பேரும் எங்களுக்கு ஓட்டுப்போடுவாங்கன்னு.

    ஆனா, குடிக்கிறவங்கள் எல்லாம் சேர்ந்து பிரசாரத்தை தொடங்கினதே டாஸ்மாக்கில் தான். சேல்ஸ் மேனும், சூப்பர்வைசரும் தான் தேர்தல் பிரசாரக் கருவி. அங்கு 5, 10 ரூபாய் குறைவா கொடுத்தாலும் பரவாயில்லைன்னு வாங்கி கல்லாவில் போடும் போது சொன்னான், இன்னிக்குதான் கடைசி, இனிமேல் கிடையாது என்றார். சாப்பாடுக்கூட இல்லாமல் இருப்போம் சரக்கு இல்லன்னா எப்படின்னு யோசனை பண்ணி இவங்க ஆட்சிக்கு வந்து கடையெல்லாம் மூடிட்டா என்ன பண்றதுன்னு சொல்லி குடிக்கிறவங்களா சேர்ந்து ஓட்டு மாற்றிபோட்டதால் தான் நாங்க ஆட்சியை விட்டுப்போனோம். இந்த தேர்தலில் நிறைய பேர் கேட்டாங்க, மூடுவிங்களா?ன்னு நாங்க வாயே மூடிட்டோம். ஏதாவது அபிப்ராயம் உண்டா என்றான். வாயைத்திறக்கவில்லை.

    இப்போ சொல்றேன். இது திராவிட முன்னேற்றக்கழகத்தின் கருத்து இல்லை. முதலமைச்சரின் கருத்து இல்லை. இது நெல்லிக்குப்பம் புகழேந்தியின் தனிப்பட்ட கருத்து. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் டாஸ்மாக் கடையை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு எல்லாம் மூட சொல்ல மாட்டேன். 24 மணி நேரமும் இயங்கட்டும். யாருக்கும் வஞ்சனை இல்ல. குடிக்கிறவன் தான் குடிக்கப்போவான்.

    குடிக்கிறது யாராக இருந்தாலும் சரி, அவர் சொல்லி திருந்துவான், இவரு சொல்லி திருந்துவான் இல்லை. அவனா திருந்தின்னாதான் உண்டே தவிர வேற யாராலயும் அவனை திருத்த முடியாது. இது என்னுடைய கருத்து. எதுக்கு டாஸ்மாக் கடை 24 மணிநேரமும் திறக்கணும் சொல்கிறேன் என்றால்... குடிக்கிறவன் நாட்டுக்கு தேவையில்லை என்று பேசினார். 

    • உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாக பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
    • 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த 2014 -ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து, தெளிவான உத்தரவுகளுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. இதில், மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் ஒப்புகை அளிக்க வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குள் மனுக்களை தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

    மேலும், 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அலுவலக கையேட்டில் திருத்தம் செய்து, மனுக்களை ஒரு மாதத்தில் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாக பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

    இதனால், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், நீர்வழிகள் தவறாக பயன்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல், பொது நல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன.

    எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. சுப்ரமணியம், ஆகஸ்ட் 19 மற்றும் 21 தேதிகளில் அளித்த மனுக்களை ஆட்சியர் மற்றும் ஆர்.கே. பேட்டை தாசில்தார் ஆகியோர் பரிசீலிக்காததால், இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டிற்கு வந்தது.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்க நேரிடும். 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொதுநல வழக்குகள் அதிகரித்துள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

    • சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும்.
    • தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 777 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அமைக்கும் போது, கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து நகர் பகுதியாக இருந்தால் 50 மீட்டரும், கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரமும் இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி பல கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இது குறித்து பொதுமக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அதேபோல் சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கடை வந்த பிறகு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த கடைகள் மீது புகார்கள் வந்தால் அதனை கலெக்டர் பரிசீலனை செய்து 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    • சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.
    • சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் செயல்படும் அரசு மதுபான கடைக்கு இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க வந்தார்.

    அப்பொழுது மதுக்கடைக்கு வந்த மது பிரியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடையின் விற்பனையாளர்கள் செய்வதறியாமல், மது வாங்க வந்த இளைஞரை எச்சரித்து, மது (பீர்) கொடுத்து அனுப்பி விட்டனர்.

    மது வாங்கி கொண்டு சென்ற அந்த வாலிபர், பீர் பாட்டிலை திறந்து, பாம்பின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அந்த வாலிபர் மது போதையில் நான்கு ரோட்டில், சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.

    சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர். அவர்களுக்கு அந்த இளைஞர் பல கோணங்களில் பாம்பை பிடித்து கொண்டு பாம்புக்கு முத்தம் கொடுத்தும், பாம்பு மற்றும், பீர் பாட்டிலை சாலை மைய தடுப்பு சுவரின் மீது வைத்தும், வித்தைக்காட்டி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

    • ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
    • டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை தொடர்ந்து 8-வது ஆண்டாக வெளியிடப்படாதது பேசுபொருளாகி உள்ளது. கடைசியாக 2016-17-ம் நிதியாண்டிற்கான 34-வது ஆண்டு அறிக்கையை டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

    நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும். இது அதன் செயல்பாடுகள் மற்றும் நிதி செயல்திறன் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை அதன் பங்குதாரர்களுக்கு வழங்கும் ஒரு விரிவான ஆவணமாகும்.

    உதாரணமாக, அரசுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் 2023-24ம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கைகளை 2023-24ம் நிதியாண்டு வரை முறையாக சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும், 2024-25-ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், ஏன் அவை வெளியிடப்படவில்லை என்பதை சரிபார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும், இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    முன்னதாக, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற சோதனை தொடர்பான வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×