search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor sales"

    • தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது.
    • சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது.

    சேலம்:

    தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது. நடப்பாண்டு தீபாவளியையொட்டி கூடுதல் மதுபானங்களை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதியும், தீபாவளி நாளான 12ம் தேதியும் மனுபானங்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2 நாளில் ரூ.467 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. சேலம் மண்டலத்தை பொறுத்தமட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் சுமார் 900 டாஸ்மாக் மது பான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளியையொட்டிய 2 நாட்களிலும் பிராந்தி வகைகள், பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவு வாங்கிச் சென்றனர். இதனால், சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது. 2நாளிலும் சேர்த்து, ரூ.86.40 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகம் என டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்று நீதிபதிகளே குற்றம் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் நாள்தோறும் மிகப்பெரிய சமூக அவலம் நிகழ்கிறது.
    • தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அரசு நடத்துகின்ற மதுக்கடைகள்தான்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டுவருவோம் என்று கடந்த காலங்களில் கூறிய திமுக, தற்போது 24 மணி நேரமும் மதுவிற்பனையில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது.

    மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் உண்மையில் தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மதுவிற்பனை

    நடைபெறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு மறுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

    அதுமட்டுமின்றி டாஸ்மாக் பார்கள் இரவு 10 மணிக்கே மூடப்படுவதால், நள்ளிரவில் குடிப்பவர்கள் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அமர்ந்து குடிப்பதாகவும் அதனை தடுத்து பொதுமக்கள் நலன்காக்க பார்களை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கில், பார்களை 24 மணிநேரமும் திறக்க பரிசீலிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

    மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்று நீதிபதிகளே குற்றம் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் நாள்தோறும் மிகப்பெரிய சமூக அவலம் நிகழ்கிறது. மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாமல் தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற நீதியரசர்களின் கேள்விக்கும் தமிழ்நாடு அரசிடம் உரிய பதில் இல்லை என்பதுதான் பெருங்கொடுமை. அதிகாலை 6 மணிக்கே மதுக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை காண்பது, சாதாரண காட்சியாக கடந்துபோக முடியவில்லை. பள்ளிக் கல்லூரி மாணவர்களும், மாணவியர்களும் குடித்துவிட்டு சீருடையுடன் போதையில் தள்ளாடும் காணொளிகள் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

    இலக்கு வைத்து 24 மணி நேரமும் முழுவீச்சில் மதுவிற்பனை நடைபெறும் மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும்? தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அரசு நடத்துகின்ற மதுக்கடைகள்தான். குடும்பங்கள் சீரழியவும், குழந்தைகளின் கல்வி தடைபடவும், இளம்விதவைகள் உருவாகவும் மதுக்கடைகள்தான் காரணமாகவுள்ளது.

    ஆனால், இளைய தலைமுறை அழிந்தாலும் பரவாயில்லை, தமிழ்க் குடும்பங்கள் சிதைந்தாலும் பரவாயில்லை அரசின் வருவாய் மட்டுமே முக்கியம் என்று திமுக அரசு நினைப்பது, அண்ணா அவர்கள் கூறியதுபோல் தொழுநோயாளியின் கையில் வழியும் வெண்ணெயே அன்றி வேறில்லை.

    கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்த திமுக, தற்போது அதுகுறித்து வாய்திறவாமல் இருப்பது ஏன்?. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் குட்கா விற்பனை நடைபெறுவது குறித்து சட்டப்பேரவைவரை போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான கிலோ கஞ்சா விற்பனையை இதுவரை தடுக்காதது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா விற்பனையின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி நிற்கிறது. குட்கா, கஞ்சா போன்றவை போதைப்பொருட்கள் என்று தெரிந்த திமுக அரசுக்கு, டாஸ்மாக்கில் விற்கப்படுவது போதைப்பொருளாக தெரியாமல் புனித தீர்த்தமாக தெரிவது ஏன்? என்ற கேள்விக்கும் இன்றுவரை பதிலில்லை.

    ஆகவே, திமுக அரசு இனியாவது மக்கள் நலத்தில் அக்கறைகொண்டு மதுக்கடைகளையும், பார்களையும் 24 மணிநேரமும் இயங்கச்செய்யும் முயற்சியை கைவிட்டு, உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    • சமீபகாலமாக அனைத்து பண்டிகை கால கொண்டாட்டங்களில் மதுபானம் முக்கிய இடம் பிடித்து வருகிறது.
    • அதற்கு ஏற்றாற்போல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மதுபான பாட்டில்கள் இருப்பு வைக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    சமீபகாலமாக அனைத்து பண்டிகை கால கொண்டாட்டங்களில் மதுபானம் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அதன் காரணமாக பண்டிகை, விடுமுறை நாட்களில், மதுபான விற்பனை அதிகரிப்பது வழக்கமாகி உள்ளது. அதற்கு ஏற்றாற்போல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மதுபான பாட்டில்கள் இருப்பு வைக்கப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் கடந்த 14-ம் தேதி மற்றும் 15-ம் தேதி ஆகிய 2 நாட்கள் மதுபான விற்பனை அமோகமாக நடந்தது. பெரும்பாலான கடைகளில் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இந்த 2 நாட்களில் மட்டும் ரூ.12 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.

    இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண நாட்களில், ரூ.3 கோடி முதல் ரூ.3.5 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகும். ஆனால், கடந்த 14-ம் தேதி ரூ.6.5 கோடிக்கும், 15-ம் தேதி ரூ.5.5 கோடிக்கும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. காணும் பொங்கலை முன்னிட்டு நேற்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை சூடுபிடித்தது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் ரூ.11.5 கோடிக்கு மதுபான விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வெட்டாறு செல்கிறது. அங்கு உள்ள சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் மாலை கீழ்வேளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ்காரர் மாஸ்கோ (வயது 32) உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் சாராய வியாபாரி தனராஜ் (21) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள வெட்டாற்றில் குதித்துள்ளார்.

    இதை கண்ட போலீஸ்காரர் மாஸ்கோ, தனராஜை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அப்போது கனமழையால் ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் போலீஸ்காரர் அடித்து செல்லப்பட்டு, முட்புதருக்குள் சிக்கி கொண்டார். இதை கண்ட மற்ற போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் போலீஸ்காரர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விற்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விற்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும்படியாக மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 63) என்பதும், அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும், அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் சம்பக்குளம் அருகே வரும்போது அங்கு அனுமதியின்றி மதுவிற்றதாக சுரேந்திரன் (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். புதுக்கடை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். அவர்கள் காப்பிக்காடு சந்திப்பில் வரும்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் (40) என்பதும், அவர் அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×