என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.
- குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழக மக்கள் மதுவால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற நிலையை காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்த வேண்டும். காரணம் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.
தற்போது கூட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார். இந்த அசம்பாவிதத்திற்கு அடிப்படைக் காரணம் மதுபானமே.
சமூகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தீமைகளுக்கு மதுபானங்கள் காரணமாக அமைகின்றன. எனவே ஏழைக்குடும்ப சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உடல்நலனிலும், எதிர்கால சமுதாயத்தினரின் நல்வாழ்க்கையிலும் அக்கறை இருக்குமேயானால் தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






