என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN"

    • மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர்.
    • சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    சென்னை:

    புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனால், சிகரெட் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகளின் வரி 60-ல் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.

    இந்தநிலையில், புதிய விலையேற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சில கடைகளில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டு பில்டர் சிகரெட்டுகள் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகின்றன.

    அதேபோல, கிங்ஸ் ரூ.20, சிசர் பில்டர் ரூ.10 என ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக, டீக்கடைகள் மற்றும் சிறிய கடைகளில் கேட்டபோது, ''மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர். கோல்டு பில்டர் பாக்கெட் (10 சிகரெட்டுகள்) முன்பு ரூ.92-க்கு கிடைத்தது, தற்போது ரூ.97-க்கு வாங்க வேண்டியுள்ளது. பாக்கெட்டில் விலை ரூ.100 என அச்சிடப்பட்டு உள்ளதால், கேள்வி கேட்க முடியவில்லை'' என தெரிவித்தனர்.

    சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விலை உயர்த்தப்படவில்லை என்றும், சில வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    • தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார்.
    • கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள்

    மதுரை:

    ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

    தமிழகத்தில் உண்மையான விடியல் கிடைத்திட எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும். தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும். போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, அனைவருக்கும் சமமான ஆட்சி, அமைய வேண்டும் என்று அன்னை மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்தேன்.

    தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார். எந்த முதலமைச்சரும் சாதிக்காத சாதனையை சாதித்தவர் எடப்பாடி பழனிசாமி. 11 மருத்துவக் கல்லூரியை தொடங்கி சாதனை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல வாழ எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.

    நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை வைத்து எடை போடக்கூடாது. சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே மக்களிடம் மவுசு உண்டு. அமிதாப் பச்சன் வந்தால் கூட அதிக அளவில் கூட்டம் வரும். ஆனால் யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் .

    மதுரையில் 200 கோடி ரூபாய் அளவுக்கு மாநகராட்சியில் தி.மு.க.வினர் கொள்ளையடித்துள்ளனர் இதற்கு தீர்வே இல்லை.

    மாநகராட்சி மேயர் இல்லாததால் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் மக்கள் பிரச்சினை தீராமல் உள்ளது . மதுரை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம்.

    இந்த ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சி போல இருக்கிறது. கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் அமேசான், சுமேட்டோ, சுகி போன்றவர்கள் வீடுகளில் பொருட்களை கொடுப்பது போல போதைப்பொருளும் வீடுகளுக்கு சப்ளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் தாக்கப்படுவது வேதனையளிக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்ததற்கு இதுவே சான்றாக உள்ளது.

    அன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் நாட்டுக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். தற்போது அந்த கட்சியில் உள்ளவர்கள் அல்ல. அவர்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    • மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
    • 2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை 125 வேலை நாட்களுடன் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடுமையான நடந்து கொண்டன. மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    ஆனாலும் ஆளும் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவோடு அதனை நிறைவேற்றிவிட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்து விட்டார். விரைவில் அது சட்டமாக இருக்கிறது.

    இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்னும் நிதி பாக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டுக்கும் நிதி பாக்கி உள்ளது.

    இது தொடர்பான விவரங்கள் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேட்ட கேள்விகள் மூலம் பதிலாக கிடைத்து உள்ளன.

    அந்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரி கமலேஷ் பஸ்வான் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், முந்தைய ஆண்டுகளின் ஏற்கத்தக்க நிலுவை பொறுப்புகள் ஏதேனும் இருந்தால், அவை மத்திய அரசாங்கத்தால் முறையாக ஈடு செய்யப்படுகின்றன.

    அதன்படி, 2024-2025 நிதியாண்டு வரையில் செலுத்தப்பட வேண்டிய மற்றும் ஏற்கத்தக்க அனைத்து நிலுவை ஊதிய பொறுப்புகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.

    2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. 2025-2026 நடப்பு நிதியாண்டில் (11-12-2025 நிலவரப்படி), தமிழ்நாட்டுக்கு ரூ.6,497.06 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் ஊதியக் கூறுக்காக ரூ.5,836.20 கோடியும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.660.86 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.

    10-12-2025 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு ஊதியப்பணம் தொடர்பான மொத்த நிலுவைத்தொகை ரூ.304.80 கோடி ஆகும். மேலும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.622.21 கோடியாக உள்ளது. நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையை மாநிலத்துக்கு விடுவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

    இவ்வாறு மந்திரி பதில் தெரிவித்து உள்ளார்.

    • 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
    • தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    மத்திய அரசு 2024-25-ம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையை உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற 2 வகைகளில் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 294.82 கோடி உள்நாட்டு பயணிகளும், 2 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 64.68 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இது இந்திய அளவில் 21.9 சதவீதம் ஆகும். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

    அடுத்தபடியாக தமிழகம் 30.68 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. இது தேசிய அளவில் 10.4 சதவீதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என ஆன்மிக தலங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாழ் தலங்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் காரணமாக அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.

    ஆனால், 2019-ம் ஆண்டு வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 2021 டிசம்பர் 13-ந் தேதி காசி விசுவநாதர் கோவில் காரிடார் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020-ல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக உத்தரபிரதேசத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதனால், தமிழகம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

    இந்த நிலையில், கர்நாடக மாநிலம் 30.45 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை (தேசிய அளவில் 10.3 சதவீதம்) கவர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது. 4-வது இடத்தில் 29.02 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 9.8 சதவீதம்) ஆந்திரபிரதேசமும், 5-வது இடத்தில் 23 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 7.8 சதவீதம்) ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.

    இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 37.1 லட்சம் எண்ணிக்கையுடன் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 2-வது மாநிலமாக 31.2 லட்சம் பயணிகளுடன் மேற்கு வங்கமும், 3-வது மாநிலமாக 22.7 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் உத்தரபிரதேசமும் இடம் பெற்றுள்ளன.

    அதே போன்று 22.7 லட்சம் பயணிகளுடன் குஜராத் மாநிலம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. 11.6 லட்சம் பயணிகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. இருந்த போதிலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
    • தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.

    சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

     

    பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை

    தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.

    இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு - மாவட்டம்

    ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி

    நீலகிரி டீ - நீலகிரி

    விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்

    சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்

    ஈரோடு மஞ்சள் -ஈரோடு

    மதுரை மல்லி - மதுரை

    கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்

    கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்

    வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்

    ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி

    கம்பம் பன்னீர் திராட்சை - தேனி

    சோழவந்தான் வெற்றிலை - மதுரை

    மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி

    மதுரை மரிக்கொழுந்து - மதுரை

    கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்

    பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி

    பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி

    புளியங்குடி எலுமிச்சை - தென்காசி

    சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்

    சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்

    சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்

    ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்

    கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி

    பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்

    மணப்பாறை முறுக்கு - திருச்சி

    ஊட்டி வர்க்கி - நீலகிரி

    உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி

    சேலம் ஜவ்வரிசி - சேலம்

    மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி

    சேலம் சுங்குடி - சேலம்

    காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்

    பவானி ஜமக்காளம் - ஈரோடு

    மதுரை சுங்குடி - மதுரை

    தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி

    ஆரணி பட்டு - திருவண்ணாமலை

    கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்

    சேலம் பட்டு - சேலம்

    தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்

    தோடா பூந்தையல் - நீலகிரி

    பத்தமடைப் பாய் - திருநெல்வேலி

    நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்

    செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை

    தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்

    கண்டாங்கி சேலை - சிவகங்கை

    தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்

    மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு

    அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்

    திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி

    கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்

    கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி

    நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்

    திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்

    மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி

    மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை

    தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை

    ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை

    நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்

    செடிபுட்டா சேலை - திருநெல்வேலி

    விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை

    தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி

    கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்

    கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி

    உறையூர் பருத்தி சேலை - திருச்சி

    கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு

    நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்

    பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்

    அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி

    • குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
    • 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.

    இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.

    இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் 13-ந்தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும். பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திரு வண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 320 பஸ்களும், வருகிற 13-ந்தேதி 310 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், வருகிற 13-ந்தேதி 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதவரத்தில் இருந்து நாளை (12-ந்தேதி) மற்றும் 13-ந்தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், இந்த வார இறுதியில் நாளை (12-ந்தேதி) 7,838 பயணிகளும், 13-ந்தேதி 3,573 பயணிகளும், 14-ந்தேதி 8,323 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.
    • இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.

    சென்னையில் ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு எல்லோருக்குமான மாநிலம். இங்கு பிரிவினை எடுபடாது.

    * சனாதனம் என்பது இறைக்கொள்கை அல்ல. சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.

    * பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

    * பக்தியை வைத்து பகையை வளர்க்க கூடாது. தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சியிலும் பிரிவினை எப்போதும் எடுபடாது.

    * ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்பரம்-காசி ஆன்மிக பயணத்தில் 602 பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    * திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?

    * இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    சென்னை:

    பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதே போன்று சென்னை முழுவதும் நேற்றிரவு வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    தனியார் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தனர்.

    • சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
    • சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருச்சியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.

    2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

    1.4.2003-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, அது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் வேலை செய்யாத நாளுக்கு ஊதியம் இல்லை எனவும் போராட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

    ஆனாலும் அதனை மீறி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இப்போராட் டம் நடந்தது.

    சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர். இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினா காமராஜர் சாலை நுழைவு பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமை செயலக சங்க தலைவருமான வெங்கடேசன் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்த பயனும் இல்லை. இன்றைய போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

    இதனால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    • குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்.

    தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை வெளிப்படுத்த ஒரு வழி தேவைப்படுகிறது. அதே போல், அதி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இயல்பாகவே நாம் தான் வன்னியர்களுக்கான சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எனவே, நமது பாட்டாளி சொந்தங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நாம் நடத்தவிருக்கும் 'வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தின்' நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக்கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் டிசம்பர் 17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாக வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்த வேலையின்மை விகிதம் என்பது வேலை செய்யத் தகுதி மற்றும் விருப்பம் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் சதவீதத்தை குறிக்கிறது.

    பொருளாதார மந்தநிலை, கணினி மயமாக்கல், குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்படுவது, சிறந்த ஊதியத்துடன் வேலையை தேடுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால் இந்த வேலையின்மை விகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவ்வப்போது அதிகரிக்கும், குறையும். இதனை சரியாக கையாளும் மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தை சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வைத்திருக்கும்.

    இதற்கான புள்ளி விவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ.), காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) வாயிலாக ஒவ்வொரு காலாண்டுக்கும் அதாவது ஆண்டுக்கு 4 முறை அறிக்கையாக வெளியிடுகிறது.

    அதன்படி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டுக்கான புள்ளி விவர அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வேலையின்மை விகிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    அந்தவகையில், கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது 5.7 சதவீதமாக இருக்கிறது. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது.

    அதில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதற்கடுத்தபடியாக கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அதற்கு உதாரணமாக, நடப்பாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதமாக இருந்து, அது 3-வது காலாண்டில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2024) இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும் நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற அதிக தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை என்பது உகந்த வரம்பாக பார்க்கப்படுகிறது.

    அதாவது, பொருளாதாரத்தை அதிக பணவீக்கத்திற்கு கொண்டு செல்லாமல், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வேலையின்மை விகிதமே சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    ×