என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN"

    • 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
    • தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    மத்திய அரசு 2024-25-ம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையை உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற 2 வகைகளில் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 294.82 கோடி உள்நாட்டு பயணிகளும், 2 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 64.68 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இது இந்திய அளவில் 21.9 சதவீதம் ஆகும். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

    அடுத்தபடியாக தமிழகம் 30.68 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. இது தேசிய அளவில் 10.4 சதவீதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என ஆன்மிக தலங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாழ் தலங்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் காரணமாக அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.

    ஆனால், 2019-ம் ஆண்டு வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 2021 டிசம்பர் 13-ந் தேதி காசி விசுவநாதர் கோவில் காரிடார் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020-ல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக உத்தரபிரதேசத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதனால், தமிழகம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

    இந்த நிலையில், கர்நாடக மாநிலம் 30.45 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை (தேசிய அளவில் 10.3 சதவீதம்) கவர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது. 4-வது இடத்தில் 29.02 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 9.8 சதவீதம்) ஆந்திரபிரதேசமும், 5-வது இடத்தில் 23 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 7.8 சதவீதம்) ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.

    இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 37.1 லட்சம் எண்ணிக்கையுடன் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 2-வது மாநிலமாக 31.2 லட்சம் பயணிகளுடன் மேற்கு வங்கமும், 3-வது மாநிலமாக 22.7 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் உத்தரபிரதேசமும் இடம் பெற்றுள்ளன.

    அதே போன்று 22.7 லட்சம் பயணிகளுடன் குஜராத் மாநிலம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. 11.6 லட்சம் பயணிகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. இருந்த போதிலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
    • தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.

    சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

     

    பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை

    தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.

    இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு - மாவட்டம்

    ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி

    நீலகிரி டீ - நீலகிரி

    விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்

    சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்

    ஈரோடு மஞ்சள் -ஈரோடு

    மதுரை மல்லி - மதுரை

    கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்

    கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்

    வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்

    ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி

    கம்பம் பன்னீர் திராட்சை - தேனி

    சோழவந்தான் வெற்றிலை - மதுரை

    மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி

    மதுரை மரிக்கொழுந்து - மதுரை

    கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்

    பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி

    பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி

    புளியங்குடி எலுமிச்சை - தென்காசி

    சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்

    சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்

    சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்

    ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்

    கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி

    பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்

    மணப்பாறை முறுக்கு - திருச்சி

    ஊட்டி வர்க்கி - நீலகிரி

    உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி

    சேலம் ஜவ்வரிசி - சேலம்

    மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி

    சேலம் சுங்குடி - சேலம்

    காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்

    பவானி ஜமக்காளம் - ஈரோடு

    மதுரை சுங்குடி - மதுரை

    தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி

    ஆரணி பட்டு - திருவண்ணாமலை

    கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்

    சேலம் பட்டு - சேலம்

    தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்

    தோடா பூந்தையல் - நீலகிரி

    பத்தமடைப் பாய் - திருநெல்வேலி

    நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்

    செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை

    தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்

    கண்டாங்கி சேலை - சிவகங்கை

    தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்

    மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு

    அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்

    திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி

    கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்

    கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி

    நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்

    திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்

    மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி

    மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை

    தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை

    ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை

    நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்

    செடிபுட்டா சேலை - திருநெல்வேலி

    விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை

    தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி

    கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்

    கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி

    உறையூர் பருத்தி சேலை - திருச்சி

    கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு

    நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்

    பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்

    அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி

    • குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
    • 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.

    இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.

    இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் 13-ந்தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும். பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திரு வண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 320 பஸ்களும், வருகிற 13-ந்தேதி 310 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், வருகிற 13-ந்தேதி 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதவரத்தில் இருந்து நாளை (12-ந்தேதி) மற்றும் 13-ந்தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், இந்த வார இறுதியில் நாளை (12-ந்தேதி) 7,838 பயணிகளும், 13-ந்தேதி 3,573 பயணிகளும், 14-ந்தேதி 8,323 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.
    • இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.

    சென்னையில் ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு எல்லோருக்குமான மாநிலம். இங்கு பிரிவினை எடுபடாது.

    * சனாதனம் என்பது இறைக்கொள்கை அல்ல. சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.

    * பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

    * பக்தியை வைத்து பகையை வளர்க்க கூடாது. தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சியிலும் பிரிவினை எப்போதும் எடுபடாது.

    * ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்பரம்-காசி ஆன்மிக பயணத்தில் 602 பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    * திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?

    * இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    சென்னை:

    பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதே போன்று சென்னை முழுவதும் நேற்றிரவு வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    தனியார் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தனர்.

    • சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
    • சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருச்சியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.

    2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

    1.4.2003-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, அது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் வேலை செய்யாத நாளுக்கு ஊதியம் இல்லை எனவும் போராட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

    ஆனாலும் அதனை மீறி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இப்போராட் டம் நடந்தது.

    சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர். இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினா காமராஜர் சாலை நுழைவு பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமை செயலக சங்க தலைவருமான வெங்கடேசன் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்த பயனும் இல்லை. இன்றைய போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

    இதனால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    • குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்.

    தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை வெளிப்படுத்த ஒரு வழி தேவைப்படுகிறது. அதே போல், அதி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இயல்பாகவே நாம் தான் வன்னியர்களுக்கான சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எனவே, நமது பாட்டாளி சொந்தங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நாம் நடத்தவிருக்கும் 'வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தின்' நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக்கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் டிசம்பர் 17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாக வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்த வேலையின்மை விகிதம் என்பது வேலை செய்யத் தகுதி மற்றும் விருப்பம் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் சதவீதத்தை குறிக்கிறது.

    பொருளாதார மந்தநிலை, கணினி மயமாக்கல், குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்படுவது, சிறந்த ஊதியத்துடன் வேலையை தேடுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால் இந்த வேலையின்மை விகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவ்வப்போது அதிகரிக்கும், குறையும். இதனை சரியாக கையாளும் மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தை சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வைத்திருக்கும்.

    இதற்கான புள்ளி விவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ.), காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) வாயிலாக ஒவ்வொரு காலாண்டுக்கும் அதாவது ஆண்டுக்கு 4 முறை அறிக்கையாக வெளியிடுகிறது.

    அதன்படி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டுக்கான புள்ளி விவர அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வேலையின்மை விகிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    அந்தவகையில், கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது 5.7 சதவீதமாக இருக்கிறது. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது.

    அதில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதற்கடுத்தபடியாக கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அதற்கு உதாரணமாக, நடப்பாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதமாக இருந்து, அது 3-வது காலாண்டில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2024) இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும் நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற அதிக தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை என்பது உகந்த வரம்பாக பார்க்கப்படுகிறது.

    அதாவது, பொருளாதாரத்தை அதிக பணவீக்கத்திற்கு கொண்டு செல்லாமல், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வேலையின்மை விகிதமே சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    • உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது.
    • தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    உலக நீரிழிவு தினத்தையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு பதாகை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது. 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆண்டிற்கு 34 லட்சம் பேர் நீரிழிவு நோயினால் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் மரணத்தை தழுவுகிறார்.

    இந்தியாவில் 20 முதல் 79 வயது வரை உள்ள முதியவர்கள் 9 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக அரசின் பாதம் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 9 லட்சம் பேர் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நீரிழிவு, வாதம் நோயினால் 72 லட்சத்து 70 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் ஏற்பட்டு 33 ஆயிரத்து 185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 26,448 பேர் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 3169 பேருக்கு உறுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன.

    எனவே தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீரிழிவு நோயை அலட்சியமாக கருதாமல் கவனமாக கையாள வேண்டும். இதனால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நல வாழ்வு குழு இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தர, மருத்துவ கல்வி இயக்குனர் ராஜ குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.
    • நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, முசாபர்பூரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அதில் அவர் ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை பேசினார்.

    அப்போது, 'கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த மக்களை திட்டுகிறார்கள். அவர்களின் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த மக்களை துன்புறுத்துகிறார்கள்' என்று பேசியிருந்தார்.

    பிரதமரின் இந்த பேச்சு தமிழக கட்சித்தலைவர்களை கொதிப்படைய செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி சொன்னது போல, தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்க்கும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:-

    சென்னையில் கட்டிட வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தன்வீர் கூறியதாவது:-

    நான் 5 ஆண்டுகளாக கட்டிட வேலை பார்க்கிறேன். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்தேன். வாரத்துக்கு 6 நாட்கள் வேலை பார்த்தால் போதும். ஒரு நாள் விடுமுறை. அந்த நாளில் எங்களை வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டார்கள். விருப்பம் இருந்தால் வேலை பார்க்கலாம்.

    ஒரு நாள் சம்பளம் ரூ.1,000. எங்களுடன் சேர்ந்து தமிழ் ஆட்களும் வேலை செய்கிறார்கள். என்னை போல, பலர் இங்கு தங்கி பணி செய்கிறார்கள். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த மாநிலத்தில் எங்கள் வீட்டில் எப்படி இருந்து வேலை பார்ப்போமோ? அதேபோல்தான் இங்கு இருந்து வேலை பார்க்கிறேன்.

    சென்னையில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் பப்பு குமார்:-

    சென்னைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஓட்டலில் முதலில் 'சப்ளையராக' பணியை தொடங்கி, இப்போது பரோட்டா மாஸ்டராக இருக்கிறேன். கடை உரிமையாளர் தங்குவதற்கு வசதியும் செய்து கொடுத்து இருக்கிறார். சொந்த ஊரில் இருப்பது போலவே உணருகிறேன்.

    கடைக்கு சாப்பிட வருபவர்களும், கடை உரிமையாளர்களும் கடுமையாக நடந்தது கிடையாது. எங்களை யாரும் துன்புறுத்தவில்லை. எப்போது லீவு கேட்டாலும் உரிமையாளர் முகம் சுழிக்காமல் கொடுப்பார். தமிழ் ஆட்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்களோ? அதே சம்பளத்தைதான் எங்களுக்கு கொடுக்கிறார். இங்கு வந்து அழகாய் தமிழ் பேசக்கற்றுக்கொண்டுவிட்டேன்.

    சென்னையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ஷரீப், சபீர், காசிம் ஆகியோர் கூறியதாவது:-

    சென்னை எங்கள் ஊரை விட அருமையாக இருக்கிறது. பருப்பு சாதம், சப்பாத்தி என இருமாநிலங்களுக்கும் பொதுவான உணவுகள் நிறைய இருக்கின்றன. தமிழக மக்களும் எங்கள் மீது அன்பு செலுத்தி, வேலை தந்து அழகு பார்க்கிறார்கள். கொடுக்கும் வேலையை நாங்களும் சலிக்காமல் திறம்பட செய்துகொடுக்கிறோம். அதனால் எங்கள் மீது அவர்களுக்கு நன்மதிப்பு உருவாகியிருக்கிறது.

    பீகார் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார்:-

    நான் 6 ஆண்டுகளாக சென்னையில் தங்கி ஓட்டலில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் சாதாரண ஆளாகவே வந்தேன். இப்போது மாஸ்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். வேலையை நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இங்கு சூழல் இருக்கிறது. எனக்கு நாளொன்றுக்கு ரூ.1,100 சம்பளம் கிடைக்கிறது. கடை விடுமுறையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தவறாமல் வேலைக்கு செல்வேன். கடைக்காரரும் என்னை கனிவோடு பார்த்து கொள்கிறார். நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.

    சென்னையில் உள்ள பீகார்வாசிகள் நலச்சங்கத்தை சேர்ந்த ஆசிஷ்குமார் கூறியதாவது:-

    பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே வசித்து வருகிறார்கள். கட்டுமான தொழிலில் தொழிலாளியில் இருந்து, மத்திய அரசு பணியில் அதிகாரி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என ஏராளமானோர் இருக்கிறார்கள். நாங்கள் 3-வது தலைமுறையாக சென்னையில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை எந்த பிரச்சனையும் நாங்கள் சந்தித்தது இல்லை. யாரும் பீகாரை சேர்ந்தவர்களை துன்புறுத்தி ஒடுக்கவும் இல்லை. தமிழக மக்கள் ஒருதாய் பிள்ளைகளாகவே எங்களை பாவித்து, சகோதரத்துவத்துடன் மிகவும் அன்பாக பழகுகிறார்கள்.

    அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ராமபிரபு:-

    பீகார் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கட்டுமான வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்துதான் வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகிலோ அல்லது தனியாக ஓரிடத்திலோ தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். தங்குவதற்கு மட்டும் ஏற்பாடு செய்வது இல்லை. உணவுக்கும் தேவையான வசதிகளை நேர்த்தியாக செய்து கொடுக்கிறோம். இதுவரை எந்த புகாரும் அவர்கள் தெரிவித்தது இல்லை. கட்டுமானப் பணிகளுக்காக வரும் இத்தகைய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சவுகரியமாகவே இருக்கிறார்கள்.

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் குஷ்புகுமாரி:-

    எனது கணவர் சந்தோஷ்குமார், கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நான் திருப்பூர் காட்டுவளவு பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்துள்ளேன்.

    எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை செல்கிறது. நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர். பக்கத்து வீட்டில் உள்ள பெண்களும் அக்காள், தங்கை, அம்மா போன்று பழகி வருகின்றனர். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். சொந்த மாநிலத்தை விட இங்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறோம்.

    திருச்சியில் வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி அகிலேஷ்:-

    பீகாரில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடையாது. சாதிய பிரச்சனைகளும், ரவுடியிசமும் அங்கு நிறைய உண்டு. அங்கே ஏதாவது வேலை பார்த்தாலும் வருமானம் மிகவும் குறைவு. ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்ற எந்த பிரச்சனையையும் நான் கண்டதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது. உணவு, தங்குமிடம் என அனைத்தும் செய்து கொடுக்கிறார்கள். இங்கு மனநிறைவான வேலை. கைநிறைய சம்பளம் கிடைக்கிறது. எங்களுக்கு அதுவே போதும்.

    மதுரையில் சாலையோரம் ஹெல்மெட் விற்கும் பகராஸ் என்ற வாலிபர் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. எங்களுக்கு பிரச்சனை என்றால் சக வியாபாரிகள் ஆதரவாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள். அனைவரும் எங்களுடன் உறவினர் போல் பழகி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் கோபால் குமார் சிங் கூறியதாவது:-

    நான் ராஜபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் 2 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இங்கு எந்த பயமும் இல்லாமல் வேலை பார்த்து வருகிறேன். வேலை பார்க்கும் இடத்திலும் எந்த இடையூறும் கிடையாது. எனது உடன் பணி புரியும் தமிழக தொழிலாளர்கள் என்னை சகோதரரை போல் நடத்துகின்றனர். பீகாரைவிட ராஜபாளையத்தில் வேலை செய்து வருவதை மகிழ்ச்சியாக உணருகிறேன்.

    நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தினேஷ்:-

    நாங்கள் சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்திற்கு வந்து இங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் பணியாற்றும் நிறுவனம் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. நாங்கள் நலமாக உள்ளோம்.

    நெல்லையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வித்யாசாகர்:-

    நாங்கள் கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்ப்பேட்டையில் நடந்து வரும் கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் எங்களுக்கு முன்பாகவே பல மாதங்களுக்கு முன்பு இருந்தே இங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

    இவ்வாறு தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • தீபாவளி திருநாளான நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.

    அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    * தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தீபாவளி திருநாளான நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * வரும் 22-ந்தேதி 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * வரும் 23-ந்தேதி சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * வரும் 24-ந்தேதி 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * வரும் 25-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×