search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN"

    • ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே உள்ளது. மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளில் இருந்து வறண்ட காற்றின் வருகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெப்பநிலை ஒரு டிகிரி உயரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும் மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்து உள்ளதே இதற்கு காரணம். ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.

    சென்னை மண்டல வானிலையும் பெரும்பாலும் வறண்டதாகவே உள்ளது என்று இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

    ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் வானிலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமேற்கு பகுதிகள் கடல் காற்றுடன் ஒன்றிணைந்து வெப்ப சலனத்தை தூண்டும் என்பதால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
    • வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பா.ம.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்று இருந்தால் நிச்சயம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்க மாட்டார்கள். இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகம். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மின்வாரியத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்வாரியத்துக்கு கடன் வெறும் ரூ.10 ஆயிரம் கோடி தான். ஆனால் இன்னும் மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக பொய் கூறுகிறார்கள்.

    இதற்கு காரணம் நிர்வாக திறமை இல்லாத அரசு ஆட்சியில் உள்ளது. மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க கூடாது. வீதிக்கு வந்து போராடுங்கள். மின்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. மாதம் தோறும் மின் கணக்கெடுக்கப்படும் என்றார்கள். அது என்னாச்சு? வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பானு, சிவக்குமார் எம்.எல்.ஏ., ஈகை தயாளன், ரா.செ. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 21 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்காலிலும் 25-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தென் தமிழக கடலோரம், குமரிக்கடல், வங்கக்கடலில் 23-ந்தேதி வரை அதிகபட்சமாக 65 கி.மீ. வரை காற்று வீசும். காற்று வீசும் பகுதிகளில் 23-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
    • பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான போராட்டத்தில் ஏராளமான பாமக-வினர் பங்கேற்றனர். மின்கட்டண உயர்வையும், தமிழக அரசையும் கண்டித்து பாமக-வினர் கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில் பாமக போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

    * தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

    * 2 மாதங்களில் தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.

    * இன்றும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது பெரும் மோசடி.

    * திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது.

    * பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    * அரசு துறைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அன்புமணி குற்றச்சாட்டி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரு சில பகுதிகளில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும்.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்காலிலும் 24-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

    தென் தமிழக கடலோரம், குமரிக்கடல், மத்திய, தென் வங்கக்கடலில் 22-ந்தேதி வரை அதிகபட்சமாக 65 கி.மீ. வரை காற்று வீசும்.

    காற்று வீசும் பகுதிகளில் 22-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அதிகபட்சமாக 22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மகாராஷ்டிரத்திலும் அமையவுள்ளன.
    • 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 63 ஆக உயர உள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மகாராஷ்டிரத்திலும் அமையவுள்ளன

    தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா ஓங்கூர், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை அவனம்பட்டு, மற்றும் கன்னியாகுமரியில் தனியார் சார்பில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

    தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளுமாக மொத்தம் 58 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 63 ஆக உயர உள்ளது. இதைப்போல நாடு முழுவதும் 706 மருத்துவக் கல்லூரிகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் 113- ஐயும் சேர்த்து மொத்தம் 819 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரிக்க இருக்கிறது.

    • நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன்.
    • சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ் கோபி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். என் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன்.

    பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும். சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.

    கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவரிடம் நீட் குறித்து நடிகர் விஜய் பேசியது குறித்து கருத்து கேட்டபோது, அரசியல் பற்றி கேட்க வேண்டாம் என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாநில போலீசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்ப் உத் தக்ரீர்' என்கிற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரசாரம் செய்து ஆட்களை திரட்டியதாக சென்னையில் கடந்த மே மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்தபோதுதான் சென்னையில் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக ஹமீது உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் யூடியூப் சேனல் வழியாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக ஹமீது உசேனின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக, இருந்த மேலும் 3 பேரும் கைதானார்கள்.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்களை திரட்டியது அம்பலமானது.

    கடந்த மாதம் 26-ந்தேதி சென்னை போலீசார் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை உள்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் ராயப்பேட்டை, முடிச்சூர் ஆகிய 2 இடங்களில் இன்று காலை 5.30 மணியில் இருந்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மின் வாரிய காலனியில் கபீர் அகமது என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்று தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

    தஞ்சை குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 4 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும், சாலியமங்கலத்தில் அப்துல்காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் ஆகிய 3 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு அப்துல் காதரின் மகன் அப்துல் ரஹ்மான் இல்லாததால் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

    அவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருப்பதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்கள். அப்துல் ரஹ்மானிடமும் விசாரணை நடத்தினர். பின்பு அவரை தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஈரோடு பெரியார் நகர் கருப்பண்ணசாமி வீதியில் முகமது இசாக் என்பவர் வீட்டில் கொச்சியில் இருந்து வந்திருந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டிலும் இன்று காலை சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த என்.ஐ.ஏ. சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


    • 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது 6 புதிய மருத்துவக் கல்லூரியில் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் சூழல் உருவாகி உள்ளது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஆங்காங்கே ஒருசில பகுதிகளில் இப்போது மழையும் பெய்ய தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக இன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 16-ந்தேதி வரை விட்டுவிட்டு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மற்றும் ஒடிசாவின் சில பகுதிகள் கேரளா, மாகே, கடலோர ஆந்திரா, ஏனாம், தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகாவில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை.
    • அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான்.

    சென்னை:

    இன்று (மே 1-ந் தேதி) உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மே தின நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமை நிலைய செயலாளரான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், தொ.மு.க. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதிச் செயலாளர் மதன்மோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

     

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை. என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை. அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி ஒழுங்காற்று குழு தண்ணீரை திறந்து விடுமாறு கூறியும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

    ஆகையால் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். எனவே காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் இருந்து அரசு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார்.
    • தற்போது கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டுக்கான சுற்றுச்சூழல் பற்றாக்குறை நீரை பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

    இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில அதிகாரிகளும் ஆன்லைனில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து அரசு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் கடந்த மாதம் 28-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 174 டி.எம்.சி. நீரில் 78 டி.எம்.சி. மட்டுமே கர்நாடகம் தந்துள்ளது என்றும், மீதம் உள்ள 95 டி.எம்.சி. நீரை வழங்காமல் உள்ளது.

    இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 28-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய சுற்றுச்சூழல் நீரின் அளவான 7.333 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. மாறாக 2.016 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது.

    தற்போது கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டுக்கான சுற்றுச்சூழல் பற்றாக்குறை நீரை பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும். அதுபோல மே மாதத்துக்கான சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டி.எம்.சி. தண்ணீரையும் வழங்க கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வுமைய உறுப்பினர், பிப்ரவரி 1-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை கோடைமழை இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது என்றும், அடுத்த 2 வாரங்களுக்கு காவிரிப் படுகையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்தார்.

    இதனை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொண்ட கர்நாடக அரசின் உறுப்பினர், "கர்நாடக அணைகளில் தற்போது உள்ள தண்ணீர், கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டுக்கு மேலும் தண்ணீரை வழங்க முடியாது" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இப்படி நீண்டநேரம் விவாதம் நீடித்தது. இதனைத்தொடர்ந்து ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா, மே மாதத்துக்கான சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டி.எம்.சி. நீரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும் என கர்நாடகத்தை வலியுறுத்தினார்.

    பின்னர் குழுவின் அடுத்த கூட்டத்தை வருகிற 16-ந்தேதி நடத்துவதாக தெரிவித்து கூட்டத்தை அவர் முடித்தார்.

    ×