என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "k veeramani"

    • ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
    • ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

    அகில இந்திய அளவில் நடைபெறும் ஏகலைவா பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான தேர்வு எழுதுவதில், தமிழ்ப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "ஏகலைவா பள்ளிகள் என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மாணவர்களுக்கென ஒன்றிய அரசு நடத்தும் ஏகலைவா மாடல் ரெசிடென்சியல் ஸ்கூல் (EMRS) – பள்ளிகள் தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், ஊட்டி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் செயல்படுகின்றன.

    தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளி...

    தமிழுக்கு இடமில்லை!

    கடந்த 19.09.2025 இல் மேல்நிலைப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான தேர்வுகள் 13.12.2025,14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. தேர்வில் பகுதி-6 இல் மொழிகளுக்கான பகுதியில் ஆங்கிலம், அசாமி, வங்காளம், போடோ, டோகிரி, கரோ, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோ, நேபாளி, ஒடிசா, சந்தலி, தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றன.

    உள்ளூர் மொழிகள் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் மொழிப் பட்டியலில், தமிழ் இல்லாத காரணத்தால் பகுதி-6 இல் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய இக்கட்டான சூழல் அமைந்தது. பகுதி 6-இன் 30 மதிப்பெண்களுக்கு 12 தகுதி மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழலில், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஹிந்தியிலும், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஆங்கிலத்திலும் பதில் அளிக்க வேண்டும். அடுத்து உள்ள உள்ளூர் மொழி என்னும் பிரிவுக்கான 10 மதிப்பெண்களுக்கு என குறிக்கப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லாத காரணத்தால், அப் பிரிவிற்கும் ஆங்கிலத்தையே தேர்வு செய்து எழுத வேண்டிய கடுமையான நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் நேர்ந்துள்ளது.

    40% மதிப்பெண்கள் கட்டாயமாம்!

    அனைத்திந்தியத் தேர்வுகள் எதிலும், இந்தியக் குடிமக்களாகப் பங்கேற்றுப் பணியில் தேர்வடைய எல்லோருக்கும் உரிமை உண்டு - தமிழர்களுக்கும் உண்டு. ஆனால், கட்டாயம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் தான், பிற கேள்விகளே திருத்தப்படும் என்று சொல்லப்படக் கூடிய கட்டாயமான மொழிப் பிரிவில் தமிழ் ஏன் இடம்பெறவில்லை?

    தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளிகள் இருக்கின்றன. அதில் பணியாற்ற மாட்டார்களா? அது குறித்த விவரம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகத் தமிழுக்கான ஆசிரியர்களே ஒன்றிய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் நிரப்பப்படவில்லை என்பது ஒன்றிய அரசின் வாயிலாகவே வெளிப்பட்டதே! அதே போல, ஏகலைவா பள்ளிகளில் உள்ள நிலைமை என்ன? எத்தனை இடங்கள் உள்ளன? அவற்றில் இட ஒதுக்கீட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது? தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நிரப்பப்படாத பணியிடங்கள் எவ்வளவு? போன்ற கேள்விகள் எழுகின்றன.

    இவற்றுக்கு உரிய பதில்களை ஒன்றிய அரசு தரவேண்டாமா?

    தேர்வில் உள்ளூர் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதே! இது அநீதி அல்லவா?

    ஒரே ஆண்டில் இரு காசி தமிழ்ச் சங்கமத்தின் பின்னணி!

    தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி தங்கள் பிரச்சாரத்திற்காக, காசித் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் "சங்கிமத்"தைத் ஒரே ஆண்டில் இரண்டு முறை நடத்திய ஒன்றிய அரசு, தமிழைப் போற்றுவதாக வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு, தமிழுக்குத் தர வேண்டிய உரிமையை மறுப்பதேன்?

    ''தமிழுக்காகப் பேசுகிறோம், தமிழுக்காக உருகுகிறோம்'' என்றெல்லாம் நாடகமாடும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் இரட்டை வேடத்திற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

    தமிழுக்கு உரிய நிதியையும் ஒதுக்காமல், தமிழர்களுக்கு உரிய வேலை வாய்ப்பையும் பறிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

    ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த அநீதிக்குரிய பரிகாரம் வழங்கப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாடெங்கும் கிளர்ச்சியைத் தொடங்க வேண்டி இருக்கும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து குரல் எழுப்பிட வேண்டும்.

    தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது. நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் இப்பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • திருப்பரங்குன்றத்தில் புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற முனைவோரின் நோக்கமென்ன?
    • திருப்பரங்குன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!

    திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றிய பிறகு, புதிதாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பவர்களின் நோக்கம் என்ன? இதில் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நுழைப்பது ஏன்? இதற்கு நீதிபதிகள் துணைப் போகலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்மீது தரந்தாழ்ந்து போகலாமா என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தலாமா? மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

    அந்த அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் 'தீபத்தூண்' என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, ஹிந்துத்துவ – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய நிகழ்வு நடத்தப்பட்டது – அக்கோயில் நடைமுறைப்படி.

    இதை ஏற்காமல், தாங்கள் குறிப்பிடும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது என்று கடந்த பல ஆண்டுகளாக மதக் கலவரத்தை ஏற்படுத்த – ஹிந்து முன்னணியினரும் அவர்களது ''சுற்றுக்கிரகங்களும்'' தமிழ்நாட்டில் மதக் கலவரங்களைத் தொடங்க திட்டமிடுகின்றனர்.

    இவர்கள் உண்மையான முருக பக்தர்களோ, கடவுள் பக்தர்களோ அல்ல; தங்களது ஹிந்துத்துவ வெறியைப் பரப்புவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, கொள்கை உறுதியும், மக்களின் பேராதரவும் பெற்ற ஓர் ஆட்சியாக, அசைக்க முடியாத பாறைபோல் இருப்பதால், வாக்காளர்களிடம் மத உணர்வைத் தூண்டி, 'பக்தி' முகமூடியுடன் அந்தத் திருப்ப ரங்குன்றத்தை வைத்து ''அரசியல்'' செய்ய கிளம்பியுள்ளது.

    எதிர்மனுதாரர்களுக்குப் போதிய அவகாசம் தராத நீதிபதிகள்!

    சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற, தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று பகிரங்கப்படுத்திய ஒருவர், இந்த தீப நிகழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்து, அவசர அவசரமாக – மற்றவர்களுக்குப் போதிய அவகாசம்கூடத் தராமல், குறிப்பிட்ட இடத்தில் மனுதாரருடன், சிலர் சென்று தீபம் ஏற்றுவதற்கு, மத்திய காவல்துறை துணை யுடன் அதை நிறைவேற்றவேண்டும் என்று கொடுத்த அரசியலமைப்புச் சட்ட விரோத அவசரத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் மேல்முறையீடு (அப்பீல்) செய்து, அவ்வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    (அந்த இரு நீதிபதிகள் அமர்வு டாக்டர் ஜஸ்டிஸ் ஜி.ஜெயச்சந்திரன், ஜஸ்டிஸ் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்).

    அந்த மேல்முறையீட்டில், தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை, தர்கா தரப்பு, வக்ஃப் போர்டு, தொல்பொருள் துறை, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் (இவர்களை நீதிமன்றமே இணைத்திருக்கிறது) ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்த ஆழமான வாதங்களை அப்படியே புறந்தள்ளி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அல்ல,

    தனி நீதிபதியின் ஆணையில் கண்ட பல அம்சங்கள்பற்றி மேலே குறிப்பிட்ட பல அமைப்புகளின் வாதங்களுக்கு உரிய முறையில் தாங்கள் ஏற்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் ஏதும் தராமல், மேல் முறையீட்டை ஏற்காமல், தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தேவையற்ற கருத்துகளை அரசுமீதும், துறைகள்மீதும் நீதிபதிகள் சுமத்தலாமா?

    மேல்முறையீட்டில், நீதிபதிகள் கருத்துப்படி, தீர்ப்பு வழங்க முழு உரிமை உடையவர்கள் என்பது மறுக்க முடியாதது என்றாலும், இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பில்,

    1. அப்பீல்தாரர்களின் வாதங்களுக்கு விளக்கம் தராதது மட்டுமல்ல; அதில் தரப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு அரசுமீது, காவல்துறை முதலிய பல துறைகளின் – பொறுப்புணர்வு பற்றிய தேவையற்ற கருத்துகளை எடுத்து எழுதியிருக்கிறார்கள். தனி நீதிபதி தீர்ப்பைவிட, மிகவும் மோசமான – அரசியலமைப்புச் சட்ட மதச் சுதந்திர கூறுகள் 25, 26–க்கேகூட முற்றிலும் எதிரானதாகவே உள்ளது என்பதை அவர்களது வாசகங்களில் இருந்து, நடுநிலையாளர் எவரும் புரிந்துகொள்ள முடியும்.

    எடுத்துக்காட்டாக,

    It is "ridiculous and hard to believe" the fear of the mighty State that by allowing representatives of the Devasthanam to light the lamp at the stone pillar near top of the hill located within its territory of devasthanam land, on a particular day in a year, will cause disturbance to public peace. Of course, it may happen only if such disturbance is sponsored by the State itself. "We pray no State should stoop to that level to achieve their political agenda,"

    இதன் தமிழாக்கம்:

    தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள கல் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில், தேவஸ்தானத்தின் பிரதி நிதிகளை விளக்கேற்ற அனு மதிப்பதால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்று சக்திவாய்ந்த அரசு அஞ்சுவது, 'கேலிக்குரியதும் நம்ப முடியாததும்' ஆகும். நிச்சயமாக, அத்தகைய குழப்பம் அரசாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது நிகழக்கூடும். ''தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்த அரசும் அந்த அளவிற்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.''

    கலவரத்தைத் தூண்டுவது அரசு என்று நீதிபதிகள் கூறலாமா?

    பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற நிலைபற்றி பொறுப்புள்ள ஓர் அரசு, அதன் அமைப்புகள் கவலைப்படுவதை கேலி செய்வதோடு, மிகவும் கீழிறக்கமான ஒரு கருத்தாக – அரசாங்கம்தான் அத்தகைய கலவரத்தையே தூண்டிவிடக் கூடும் என்று குற்றம் சுமத்தி எழுதலாமா? அதோடு அரசுக்கு ஏதோ ஓர் அரசியல் திட்டம் (Political Agenda) இருக்கிறது என்று எதை வைத்துக் கூறுகின்றனர்? இதுதான் மேல்முறையீடு தீர்ப்பின் லட்சணமா? இது முறையானதா? பொறுப்பான குற்றச்சாற்றா?

    அதுமட்டுமா?

    மற்றொரு பாராவில்,

    "We find that the apprehension expressed by the District Administration regarding probability of disturbance to the public peace is nothing but an imaginary ghost created by them for their convenience sake and to put one community against other community under suspicion and constant mistrust," the bench said.

    இதன் தமிழாக்கம்:

    ''பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக்கூடும் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தால் வெளிப்ப டுத்தப்பட்ட அச்சம், அவர்களின் வசதிக்காக அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கற்பனையான 'பூதமே' தவிர வேறில்லை என்றும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகச் சந்தேகத்திலும், தொடர்ச்சியான அவநம்பிக்கையின் கீழும் நிறுத்துவதே இதன் நோக்கம் என்றும்'' நீதிபதிகள் அமர்வு கூறியது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழியை அடித்து நொறுக்கலாமா நீதிபதிகள்?

    ''தனி நீதிபதியின் ஏற்க முடியாத தீர்ப்பினை, அகலப்படுத்துவதுபோல, ''தீபத்தூண் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது. கார்த்திகைத் தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கோயில் நிர்வாகம் ஏற்றவேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடவேண்டும்.

    தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல, மக்களுக்கு அனுமதி இல்லை.''

    இப்படிக் கூறுவது நீதிபதிகள் எடுத்த பதவிப் பிரமாணப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் உறுதிமொழிக்கு நேர் முரண் அல்லவா! பீடிகை (Preamble) அடிக்கட்டுமானம் கூறிய Secular என்பதை இது அடித்து நொறுக்குவதாகாதா?

    கூறு (Article) 25, 26, Subject to Public Order, Morality, Health என்ற பிரிவுகளைத் தூக்கி தூர எறிந்திருப்பது, தமது கடமை உணர்வு தவறியதாகாதா?

    முந்தைய பக்கங்களில் பக்தர்கள் வழிபாட்டு உரிமைபற்றி விளக்கம் கூறுவதை ஏற்ற இந்த அமர்வு, அதற்கு நேர்முரணாக சிலர் மட்டுமே தீபம் ஏற்ற மேலே செல்லவேண்டும் – மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணையோடு என்றால், மற்ற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றால், கொதிப்பு, கொந்தளிப்பு, கலவரம் ஏற்படாதா?

    இது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்காதா? அந்த அமர்வு நீதிபதிகள்தான் இந்த முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டும்!

    அதுமட்டுமல்ல!

    திருமூலர் பாட்டு ஆகமம் ஆகுமா?

    ஆகமப்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலில் முறைப்படி 'தீபம்' ஏற்றியாகிவிட்டது. மறு முறை செய்ய ஆகமத்தைச் சுட்டிக் காட்டிய அறநிலையத் துறை வாதத்தினை மறுத்து, திருமூலரைத் தேடி, தீர்ப்புச் சொல்கிறார்கள்.

    ''திருமூலர் பாட்டு ஆகமமாகுமா?'' அர்ச்சகக் கூட்டத்தினர்கூட ஏற்க மாட்டார்களே!

    திருமூலர், சித்தர்பாட்டு – அதுமட்டுமல்ல,

    ''நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

    சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்

    சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ''

    என்று சித்தர் சிவவாக்கியர் எழுதியுள்ளதை ஏற்பார்களா என்று கேள்வி கேட்டால், கனம் நீதிபதிகளின் நிலை என்ன?

    கலவரம் செய்ய காத்திருக்கும் ''தெரு மூலர்கள்'' தீபம் ஏற்ற தூபம் போடுவோர் யோசிக்காதது ஏன்?

    கிராமத்தில் நம் மக்கள் ஒரு பழமொழி கூறுவார்கள்.

    ''அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்'' (காயம் என்றால், நிரந்தரம் என்று பொருள்).

    மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்!

    அரசியலமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து, இப்படி தீர்ப்பு எழுதுவது, அறத்தை மீறியது மட்டுமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்காமல் காக்கும் மாநில அரசுமீது வெறுப்பை, வன்மத்தை உமிழ்வது எந்த வகையிலும் நீதியாகாது, நியாயமாகாது!

    மக்களின் பொதுப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மிக கீழிறக்கமான கண்ட னத்திற்குரிய தீர்ப்பு இது!

    உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், இது மாறிவிடக் கூடும் என்பது வேறு விஷயம்!

    ஆனால், எல்லாவற்றிற்கும் மேலானது மக்கள் மன்றம் என்பதை மறந்துவிடக் கூடாது!

    Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது?

    'Political Agenda' என்றெல்லாம் (தி.மு.க.) மாநில அரசு மீது அவசர குற்றப்பத்திரிகை எழுதும் நீதிபதிகளே,

    ''திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்'' என்று, திருப்பரங்குன்ற தீபத்தை சாக்காக வைத்து, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கக் குர லெழுப்பும் கலவரக் கும்பலுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதோடு, திருச்சியில் பேசியபோது,

    ''திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஹிந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடினால், பரிசீலிப்போம்'' என்று கூறியுள்ளது ஏடுகளில், ஊடகங்களில் வந்தன என்பதை அறியமாட்டீர்களா?

    Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது? என்பது இதன்மூலமாவது உங்களுக்குப் புரியாதா? எனவே, இந்தத் தீர்ப்பு நியாயவாதிகள் ஏற்கத்தகுந்த தீர்ப்பல்ல; சாய்ந்த தராசுத் தீர்ப்பேயாகும்! மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குரிய ஒரு சார்புத் தீர்ப்பேயாகும்! உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும்.
    • இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள்.

    பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    செங்கல்பட்டு மறைமலைநகர் பெரியார் திடலில் நடக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கருஞ்சட்டைக்காரர்கள் தமிழ்நாட்டின் காவலுக்கு கெட்டிக்காரர்கள்.

    தமிழ் சமுதாயத்திற்காக 92 வயதிலும் இளைஞர் போல் ஓய்வின்றி ஊழைத்து வருகிறார். கி.வீரமணி. கலைஞர், பேராசிரியருக்கு பிறகு தன்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. இந்த வயதிலும் தினமும் எழுதுகிறார், பிரசாரம் செல்கிறார்.

    பெரியாரின் சிந்தனைகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போற்றுவது பெரியாரின் கொள்கை, திராவிட சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி.

    திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    எனது ஒரு மாத ஊதியம், 126 எம், எம்எல்ஏக்கள் ஊதியத்தை சேர்த்து ரூ.1.5 கோடியை பெரியார் உலகத்திற்கு வழங்குவதில் மகிகழ்ச்சி.

    பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும். சாதி பெயரில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். நன் இனத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை.

    இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்துவது திராவிட மாடல் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
    • ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!

    சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

     நாளை மறுநாள் (4.10.2025) மறைமலைநகரில் (செங்கற்பட்டு) மிகப் பெரும் திரள் மாநாடாக நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – நமக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, மனுதர்மம் ஒழித்த சமதர்ம சிந்தனை பரவிடவும், சீர்மிகு பிற மாநிலங்களும், உலகமும் வியந்து பாராட்டும் – சமூகநீதித்துறையில் சரித்திரம் காணா சாதனை புரியும் 'திராவிட மாடல்' ஆட்சி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வதிந்த ஒடுக்கப்பட்ட மக்களான நமது மக்கள் சரியாசனம் பெற முடியும் என்பதற்குமான விழிப்புணர்வை வற்புறுத்த மாநாடு!

    நம் விழி திறந்த வித்தகர், புதிய வழிகாட்டி, மானத்தையும், அறிவையும் நம்முள் விதைத்து, மனுதர்மத் தாழ்ந்த தமிழ்நாட்டை மட்டும் அல்ல; வீழ்ந்த மக்கள் உலகின் எம்மூலையில் இருப்பினும் அவர்களுக்கான எழுச்சியைப் பெற வைக்கும் ஒரு சமூகப் புரட்சியாளர் அறிவாசான் தந்தை பெரியார் – ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கி, ஒப்பிட முடியாத சாதனை புரிந்து – தொடர்ந்த எதிர் நீச்சல்களிலும் அடித்தளம் எழுப்பிய மகத்தான மாளிகைக் கட்டுமானமே சுயமரியாதை இயக்கம்!

    1929இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்த அதே மண்ணில்.... சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை மலர்ந்து, ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தைப் படைத்திட, அதே மண்ணில் (செங்கற்பட்டு) – சென்னை மாகாண சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டினை 1929இல் நடத்திய தந்தை பெரியார் புதியதோர் புரட்சியுகத்தின் பிரகடனங்களை வெளியிட்டார்.

    நீதிக்கட்சித் தொடங்கிய 1920இல் இருந்து – 2025இல் அது 'திராவிட மாடலாக', அய்யா பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்சியாக, மானமிகு சுயமரி யாதைக்காரரான கலைஞர் தம் ஆட்சியில் நடத்திக் காட்டி வென்ற சமத்துவக் கொள்கைப் பயணத்தோடு தொடர்கின்றது.

    திக்கெட்டும் பாராட்டும் திராவிட நாயகன் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 'திராவிட மாடல்' ஆட்சி – அது ஒரு முழு உருபெருக் கொள்வதை மக்கள் மகிழ்ந்து – உலகம் பாராட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாத திராவிடக் கொள்கை எதிரிகள் இவ்வாட்சியை எதிர்க்க, அழிக்க வரும் 2026ஆம் ஆண்டுத் தேர்தலையொட்டி கூலிப்படைகளை, 'குத்தகைப் படைகளையும்', சினிமா கவர்ச்சியாளர்களையும் மட்டுமே நம்பி, பல ஏமாற்று உத்திகளோடு வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு எச்சரித்து, நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கும் மாநாடே – மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!

    ஒப்பற்ற நம் முதலமைச்சர், பழிக் குற்றச்சாட்டுகளை தூசிகள் எனத் தட்டி விட்டு கம்பீர நடையுடன் நம்முடன் வரவிருக்கின்றார்! நன்றியுள்ள அனைவரும் அவரை வரவேற்க வர வேண்டாமா?

    நமது முதலமைச்சர் கோடானு கோடி மக்களது, இதயச் சிம்மாசனத்தில் அவர் அன்பு, அறம், ஆளுமைகளில் நிலைத்திருப்பவர். வெற்று விளம்பரச் சரக்கல்ல; மாறாக நாளும் சரித்திரம் படைக்கும் தன்மானப் பெருந் தலைவர்.

    ''தலைகுனிய விட மாட்டோம் தமிழ்நாட்டை'' என்று சூளுரைத்து – சூடு போட்டு வரும் செயல் வடிவ திராவிடச் சிற்பி அல்லவா?

    பழிதூற்றல், தகுதியற்றவர்கள் தலை கொழுத்துக் கூறுகின்ற அவதூறு தூசுகளைத் தட்டி – இடையறாத் தொண்டாற்றும் தொண்டறத்தை வரவேற்க வர வேண்டாமா?

    வாருங்கள் தோழர்காள் அனைவரும்! கைகோர்த்து நின்று – போராதரவு தந்து – பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம்! 

    ''அடாது மழை என்றாலும் விடாது நடக்கும் எம் நிகழ்ச்சி'' என்பதற்கேற்ப சரியான ஏற்பாடுகள் தயார்!

    பருவம் பார்த்து உழைப்பதற்கு என்றும் தயங்காதவர்களல்லவா நாம்! உலகம் பெரியார் மயம், பெரியார் உலகமயம்!

    தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.

    ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!" என்று அழைப்பு விடுத்துள்ளார். 

    • ‘உலகெங்கும் கலைஞர்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
    • நூலை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார்.

    'உலகெங்கும் கலைஞர்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. சென்னை வளர்ச்சி கழகம் சார்பில் சட்டக் கதிர் ஆசிரியர் எழுதிய இந்த நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    அதனை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்த பிறகு, திராவிடர் கழக தலைவர் வீரமணி நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    துணைவேந்தர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது, திட்டமிட்ட ஏற்பாடு.

    முறையற்ற அரசியல் எனவும் சட்டத்திற்கும் நடைமுறைக்கும் விரோதமாக 2 பேர் திட்டமிட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தைவிட உயர்நீதிமன்றம் உயர்ந்தது என்ற தவறான சட்ட விரோதமான ஒரு தடை யானை கொடுக்கப்பட்டு உள்ளது. அவசரமாக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல.

    அந்த வழக்கை குறிப்பிட்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரித்து கடைசி நாளில் தடை வழங்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    மாலை 6 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்வோம் என்று சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

    முற்றிலுமாக நீதிபதிகளின் போக்கு கெட்ட எண்ணத்தில் ஆனது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தமிழகத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ளது.

    ஒரு அரசாங்கத்தை ஒரு வாரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என சொல்லுவது, நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செயல்படுவோம் என்பது போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சேதுசமுத்திர திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று திண்டுக்கல் வந்தார். பின்னர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    தந்தைபெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர். தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.

    இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென்தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.

    வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என பா.ஜ.க மத்தியமந்திரிநிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இத்துறைக்கான அமைச்சர் பேசுகையில், ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி இத்திட்டத்தை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.

    தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பிறகாவது சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும். இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணம் ஈரோட்டில் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி கடலூரில் நிறைவடைகிறது.
    • அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பயணம் ஈரோட்டில் நாளை (3-ந்தேதி) தொடங்கி 10-ந்தேதி கடலூரில் நிறைவடைகிறது.

    இந்த பரப்புரை பயணத்தில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

    குமாரபாளையத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கப்படுகின்ற பரப்புரை பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஈரோட்டில் மாலை 7 மணிக்கு நடக்கிறது. அனைத்து ஊர்களிலும் மாலை 5 மணி மற்றும் 7 மணிக்கு கூட்டங்கள் நடக்கின்றன. குன்னூரில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கு பரப்புரை கூட்டம் நடக்கிறது.

    கட்சி, ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து நடைபெறும் இந்த பரப்புரை பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி திராவிடர் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
    • ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறி இருப்பதாவது:

    தமிழக கவர்னர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். மீண்டும் தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டம் 200-வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் .

    என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அகவை 90-ல் ஆசிரியரின் 80 ஆண்டு பொதுத்தொண்டு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
    • நான் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்ததற்கு பெரியார் என்ற மாபெரும் தத்துவம்தான் காரணம்.

    சென்னை :

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வயதில் 90 ஆண்டையும், பொதுவாழ்க்கையில் 80 ஆண்டையும் கடந்துள்ளார். இதையொட்டி திராவிடர் கழகம் சார்பில் சென்னை தியாகராயநகரில் '90-ல் 80- அவர்தான் வீரமணி' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவிற்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பிரசார குழு செயலாளர் அருள் மொழி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-

    இந்த விழா என் வாழ்நாளில் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி. இன்னும் அதிகமாக உழை என்பதை நீங்கள் எனக்கு சொல்வதாக எடுத்து கொள்கிறேன். இந்தியாவிலேயே ஒப்பற்ற முதல்-அமைச்சராக திகழும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இதனால் என்னை மீறி உணர்ச்சி வசப்பட்டேன்.

    இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தலைவராக அவர் வளர்ந்திருக்கிறார். திராவிட கொள்கையை தமிழகம் மட்டும்தான் ஏற்றுக்கொண்டது என்பதல்ல. பா.ஜ.க.வின் மக்கள் விரோத காவி கொள்கைக்கு மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்திருக்கிறது.

    இன்றைக்கு தமிழகம் கண்ட மாற்றம், வட மாநிலங்களிலும் நிகழும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. கருணாநிதி இறந்தவுடன் வெற்றிடம் ஏற்பட்டதாக சில வெற்றுவேட்டுகள் சொன்னார்கள். ஆனால் வந்தது வெற்றிடம் அல்ல, புதிய இந்தியாவுக்கான கட்டிடம். ஒரு பெரிய திருப்பம் நிகழ்ந்து வருகிறது. நிச்சயம் அது நல்ல திருப்பமாக இருக்கத்தான் போகிறது.

    நான் எந்த பிறந்தநாளிலும் விழாக்களில் பங்கேற்பது இல்லை. ஆனாலும் இந்த விழாவுக்கு நான் ஒப்புக்கொண்டதற்கு காரணம், ஒரு ரகசியத்தை வெளியிட வேண்டும் என்பதுதான். இந்த 90 என்பதே, எனக்கு அந்த 80 மூலமாக கிடைத்ததுதான். அந்த 80 இல்லையென்றால் 90 கிடையாது. இது களத்தில் உள்ள போராளிகள் வரலாறு. எனவேதான் இந்த விழாவுக்கு ஒப்புக்கொண்டேன். இந்த விழாவில் 90 ஆக வந்தாலும், 20 ஆகவே திரும்புவேன்.

    அண்ணா பங்கேற்ற கூட்டத்தில் எனது முதல் பேச்சை மனப்பாடம் செய்து படித்தேன். பின்னர் வெளியூர்களுக்கு பேச சென்றேன். அரை டிக்கெட் ஆசாமியாக வளர்ந்தேன். நான் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்ததற்கு பெரியார் என்ற மாபெரும் தத்துவம்தான் காரணம். அந்த தத்துவமே என்னை ஆளாக்கியது.

    பெரியார் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நாம் இன்னும் உழைக்க வேண்டும். என் வாழ்நாளில் பதவியோ, பொறுப்போ முக்கியமாக நினைத்தது அல்ல. தோழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும்தான் முக்கியம். அதுவே எல்லாவற்றிலும் மகத்தானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில், 'அகவை 90-ல் ஆசிரியரின் 80 ஆண்டு பொதுத்தொண்டு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

    • ‘இந்தியா’ கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.
    • தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு வர வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடிதம் எழுதி இருந்தார்.

    அதற்கு பதில் அளித்து கி.வீரமணிக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார் அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பெரியார் திடலுக்கு என்னை அழைத்ததற்காக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 'இந்தியா' கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கூட்டணி அரசியல் கூட்டணி என்பதை விட மேம்பட்டது.

    சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களை பிரித்தாளும் பா.ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும்.

    ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுய மரியாதையுடன், வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலைநோக்கு தான் பாதை அமைத்து தந்தது. நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பற்று, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவது போராடியது தான் அடித்தளமாக அமைந்துள்ளது.

    பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழி நடத்தட்டும். தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
    • தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுவை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கீ.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை கவர்னர்களாக நியமித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றினால் ஆளுகின்ற அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்ற காரணத்தினால் கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத்துகின்றனர். இது சட்டவிரோதம்.

    அ.தி.மு.கவின் குடுமி கவர்னர் கையில் உள்ளது. ஊழல் பட்டியல் அவரிடம் உள்ளது. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுவையில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைக்கப்பட்டதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு என்பது பூசணிக்காயை அல்ல பெரிய மலையை சோத்துக்குள் மறைப்பதாகும்.

    புதுவை மக்கள் பா.ஜனதாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை. தற்போது தான் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வேலை பழங்குடியின மக்களை புதுவையில் தரையில் அமர வைத்த சம்பவம் புதுவை மாடலாக இருக்குமோ.?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • “திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்” என்பதையும் நிரூபித்து விட்டார்.
    • காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி, வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத, மறுக்க முடியாத, மகத்தான வெற்றியாக தமிழ்நாடு-புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவைத்து, "இந்த நாற்பது-இனியவை நாற்பது" என்பதை உணர்த்தி, பிரகடனப்படுத்தியதற்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

    அவரது கடும் உழைப்பும், திட்டமிட்ட மதியூக வியூகமும் தந்த வெற்றிக்கனிகள் இவை. கலைஞர் தம் நூற்றாண்டு நிறைவில் இந்த இனிய நாற்பதைக் கொண்டு முதலமைச்சரும் கூட்டணியினரும் கட்டிய இந்த வெற்றி மாலையைக் கலைஞரின் தோளுக்குச் சூட்டிடும் அவரது முயற்சியின் மூலம், மீண்டும் "இது பெரியார் மண்தான்" என்பதையும், "திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்" என்பதையும் நிரூபித்து விட்டார்,

    அவரே அதன் வெற்றிக்கும் அடித்தளமிட்டார். அந்த வெற்றித் திருமகனாருக்குத் தாய்க் கழகத்தின் வாழ்த்துகள்!

    காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.

    காங்கிரசும், இளந்தலைவர் ராகுல் காந்தியின் இடையறாத பிரசாரச் சுனாமியும் இந்தியா, கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரசாரமும் முகிலைக் கிழித்து எறிந்து புதிய விடியலுக்கு வித்திட்டிருக்கின்றன!

    இதற்குக் காரணமான வாக்காளர்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்!

    சர்வாதிகார வெறிக்கு அணை போடப்பட்டுள்ளது; அந்த அணை முழுமையாவதற்கு முழுக் கவனமும் அரசியல் வியூகமும் தேவை! அதற்கும் தமிழ்நாடும் அதன் மதியூகியான நமது தி.மு.க. தலைவரும் கலங்கரை வெளிச்சமாக என்றும் இருப்பார் என்பது உறுதி!

    ஜனநாயகத்தின்-அரசியல் சட்டத்தின் தலை தப்பியுள்ளது.

    இவ்வாறு கி.வீரமணி கூறி உள்ளார்.

    ×