என் மலர்
நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"
- அவர்கள் பதவியில் இருக்கும்போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
- இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது.
2023 இல் மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம், பதவிக்காலம் மற்றும் அவர்களுக்கான சட்டபாதுகாப்பு குறித்த சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின் பிரிவு 16, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
அதாவது, தேர்தல் ஆணையர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகளுக்காக அவர்கள் பதவியில் இருக்கும்போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது.
இதை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கூட குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநர்களுக்கோ இத்தகைய வாழ்நாள் கால பாதுகாப்பை வழங்கவில்லை.
ஆனால், இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது" என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், நமது அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பாதுகாப்பை வழங்க முடியுமா, முடியாதா? என்று ஆராய வேண்டியுள்ளது என்று கூறி, இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
அதேநேரம் மனுதாரர் கேட்டதற்கு இணங்க இப்போதைக்கு அந்தச் சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள்மறுத்துள்ளனர். எனினும், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணை தொடரும் என்றும் தெரிவித்தனர்.
எஸ்ஐஆர் பணிகளில் பாஜகவுடன் சேர்ந்து ஞானேஷ் குமார் தலைமையிலான மத்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.
- பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.
மத்தியப் பிரதேசம் இந்தூர் முதல் ஜபல்பூர் வரை செல்லும் ரெயிலில் கடந்த 2018 பயணித்த சிவில் நீதிபதி ஒருவர் மது அருந்திவிட்டு சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதன்போது சகா பயணியின் இருக்கையில் நீதிபதி சிறுநீர் கழித்தார். அப்போது அந்த பெட்டியில் பெண்களும் அமர்ந்திருந்தனர்.
மேலும் நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.
இதைதொடர்ந்து துறை ரீதியான விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தெரிந்ததையடுத்து, 2019-ல் அவரைப் பணியிலிருந்து நீக்கி அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.
அதேநேரம், அவர் மீதான குற்றவியல் வழக்கில் பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.
இதை அடிப்படையாகக் கொண்டு, 2025-ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த நீதிபதியை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய அவர்கள், "நீதிபதியின் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது" என்று கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்தியதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
அவரை மீண்டும் பணியமர்த்தும் உயர்நீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த நீதிபதிகள், இது குறித்து மாநில அரசு பதிலளிக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
- 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
- உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதைதொடர்ந்து, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.
இந்நிலையில், தணிக்கை வாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்," ஜன நாயகன் சான்றிதழ் தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது" என தணிக்கை வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றத்தில் புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற முனைவோரின் நோக்கமென்ன?
- திருப்பரங்குன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றிய பிறகு, புதிதாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பவர்களின் நோக்கம் என்ன? இதில் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நுழைப்பது ஏன்? இதற்கு நீதிபதிகள் துணைப் போகலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்மீது தரந்தாழ்ந்து போகலாமா என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தலாமா? மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் 'தீபத்தூண்' என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, ஹிந்துத்துவ – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய நிகழ்வு நடத்தப்பட்டது – அக்கோயில் நடைமுறைப்படி.
இதை ஏற்காமல், தாங்கள் குறிப்பிடும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது என்று கடந்த பல ஆண்டுகளாக மதக் கலவரத்தை ஏற்படுத்த – ஹிந்து முன்னணியினரும் அவர்களது ''சுற்றுக்கிரகங்களும்'' தமிழ்நாட்டில் மதக் கலவரங்களைத் தொடங்க திட்டமிடுகின்றனர்.
இவர்கள் உண்மையான முருக பக்தர்களோ, கடவுள் பக்தர்களோ அல்ல; தங்களது ஹிந்துத்துவ வெறியைப் பரப்புவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, கொள்கை உறுதியும், மக்களின் பேராதரவும் பெற்ற ஓர் ஆட்சியாக, அசைக்க முடியாத பாறைபோல் இருப்பதால், வாக்காளர்களிடம் மத உணர்வைத் தூண்டி, 'பக்தி' முகமூடியுடன் அந்தத் திருப்ப ரங்குன்றத்தை வைத்து ''அரசியல்'' செய்ய கிளம்பியுள்ளது.
எதிர்மனுதாரர்களுக்குப் போதிய அவகாசம் தராத நீதிபதிகள்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற, தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று பகிரங்கப்படுத்திய ஒருவர், இந்த தீப நிகழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்து, அவசர அவசரமாக – மற்றவர்களுக்குப் போதிய அவகாசம்கூடத் தராமல், குறிப்பிட்ட இடத்தில் மனுதாரருடன், சிலர் சென்று தீபம் ஏற்றுவதற்கு, மத்திய காவல்துறை துணை யுடன் அதை நிறைவேற்றவேண்டும் என்று கொடுத்த அரசியலமைப்புச் சட்ட விரோத அவசரத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் மேல்முறையீடு (அப்பீல்) செய்து, அவ்வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(அந்த இரு நீதிபதிகள் அமர்வு டாக்டர் ஜஸ்டிஸ் ஜி.ஜெயச்சந்திரன், ஜஸ்டிஸ் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்).
அந்த மேல்முறையீட்டில், தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை, தர்கா தரப்பு, வக்ஃப் போர்டு, தொல்பொருள் துறை, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் (இவர்களை நீதிமன்றமே இணைத்திருக்கிறது) ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்த ஆழமான வாதங்களை அப்படியே புறந்தள்ளி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அல்ல,
தனி நீதிபதியின் ஆணையில் கண்ட பல அம்சங்கள்பற்றி மேலே குறிப்பிட்ட பல அமைப்புகளின் வாதங்களுக்கு உரிய முறையில் தாங்கள் ஏற்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் ஏதும் தராமல், மேல் முறையீட்டை ஏற்காமல், தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேவையற்ற கருத்துகளை அரசுமீதும், துறைகள்மீதும் நீதிபதிகள் சுமத்தலாமா?
மேல்முறையீட்டில், நீதிபதிகள் கருத்துப்படி, தீர்ப்பு வழங்க முழு உரிமை உடையவர்கள் என்பது மறுக்க முடியாதது என்றாலும், இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பில்,
1. அப்பீல்தாரர்களின் வாதங்களுக்கு விளக்கம் தராதது மட்டுமல்ல; அதில் தரப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு அரசுமீது, காவல்துறை முதலிய பல துறைகளின் – பொறுப்புணர்வு பற்றிய தேவையற்ற கருத்துகளை எடுத்து எழுதியிருக்கிறார்கள். தனி நீதிபதி தீர்ப்பைவிட, மிகவும் மோசமான – அரசியலமைப்புச் சட்ட மதச் சுதந்திர கூறுகள் 25, 26–க்கேகூட முற்றிலும் எதிரானதாகவே உள்ளது என்பதை அவர்களது வாசகங்களில் இருந்து, நடுநிலையாளர் எவரும் புரிந்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக,
It is "ridiculous and hard to believe" the fear of the mighty State that by allowing representatives of the Devasthanam to light the lamp at the stone pillar near top of the hill located within its territory of devasthanam land, on a particular day in a year, will cause disturbance to public peace. Of course, it may happen only if such disturbance is sponsored by the State itself. "We pray no State should stoop to that level to achieve their political agenda,"
இதன் தமிழாக்கம்:
தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள கல் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில், தேவஸ்தானத்தின் பிரதி நிதிகளை விளக்கேற்ற அனு மதிப்பதால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்று சக்திவாய்ந்த அரசு அஞ்சுவது, 'கேலிக்குரியதும் நம்ப முடியாததும்' ஆகும். நிச்சயமாக, அத்தகைய குழப்பம் அரசாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது நிகழக்கூடும். ''தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்த அரசும் அந்த அளவிற்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.''
கலவரத்தைத் தூண்டுவது அரசு என்று நீதிபதிகள் கூறலாமா?
பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற நிலைபற்றி பொறுப்புள்ள ஓர் அரசு, அதன் அமைப்புகள் கவலைப்படுவதை கேலி செய்வதோடு, மிகவும் கீழிறக்கமான ஒரு கருத்தாக – அரசாங்கம்தான் அத்தகைய கலவரத்தையே தூண்டிவிடக் கூடும் என்று குற்றம் சுமத்தி எழுதலாமா? அதோடு அரசுக்கு ஏதோ ஓர் அரசியல் திட்டம் (Political Agenda) இருக்கிறது என்று எதை வைத்துக் கூறுகின்றனர்? இதுதான் மேல்முறையீடு தீர்ப்பின் லட்சணமா? இது முறையானதா? பொறுப்பான குற்றச்சாற்றா?
அதுமட்டுமா?
மற்றொரு பாராவில்,
"We find that the apprehension expressed by the District Administration regarding probability of disturbance to the public peace is nothing but an imaginary ghost created by them for their convenience sake and to put one community against other community under suspicion and constant mistrust," the bench said.
இதன் தமிழாக்கம்:
''பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக்கூடும் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தால் வெளிப்ப டுத்தப்பட்ட அச்சம், அவர்களின் வசதிக்காக அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கற்பனையான 'பூதமே' தவிர வேறில்லை என்றும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகச் சந்தேகத்திலும், தொடர்ச்சியான அவநம்பிக்கையின் கீழும் நிறுத்துவதே இதன் நோக்கம் என்றும்'' நீதிபதிகள் அமர்வு கூறியது.
அரசியலமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழியை அடித்து நொறுக்கலாமா நீதிபதிகள்?
''தனி நீதிபதியின் ஏற்க முடியாத தீர்ப்பினை, அகலப்படுத்துவதுபோல, ''தீபத்தூண் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது. கார்த்திகைத் தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கோயில் நிர்வாகம் ஏற்றவேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடவேண்டும்.
தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல, மக்களுக்கு அனுமதி இல்லை.''
இப்படிக் கூறுவது நீதிபதிகள் எடுத்த பதவிப் பிரமாணப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் உறுதிமொழிக்கு நேர் முரண் அல்லவா! பீடிகை (Preamble) அடிக்கட்டுமானம் கூறிய Secular என்பதை இது அடித்து நொறுக்குவதாகாதா?
கூறு (Article) 25, 26, Subject to Public Order, Morality, Health என்ற பிரிவுகளைத் தூக்கி தூர எறிந்திருப்பது, தமது கடமை உணர்வு தவறியதாகாதா?
முந்தைய பக்கங்களில் பக்தர்கள் வழிபாட்டு உரிமைபற்றி விளக்கம் கூறுவதை ஏற்ற இந்த அமர்வு, அதற்கு நேர்முரணாக சிலர் மட்டுமே தீபம் ஏற்ற மேலே செல்லவேண்டும் – மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணையோடு என்றால், மற்ற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றால், கொதிப்பு, கொந்தளிப்பு, கலவரம் ஏற்படாதா?
இது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்காதா? அந்த அமர்வு நீதிபதிகள்தான் இந்த முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டும்!
அதுமட்டுமல்ல!
திருமூலர் பாட்டு ஆகமம் ஆகுமா?
ஆகமப்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலில் முறைப்படி 'தீபம்' ஏற்றியாகிவிட்டது. மறு முறை செய்ய ஆகமத்தைச் சுட்டிக் காட்டிய அறநிலையத் துறை வாதத்தினை மறுத்து, திருமூலரைத் தேடி, தீர்ப்புச் சொல்கிறார்கள்.
''திருமூலர் பாட்டு ஆகமமாகுமா?'' அர்ச்சகக் கூட்டத்தினர்கூட ஏற்க மாட்டார்களே!
திருமூலர், சித்தர்பாட்டு – அதுமட்டுமல்ல,
''நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ''
என்று சித்தர் சிவவாக்கியர் எழுதியுள்ளதை ஏற்பார்களா என்று கேள்வி கேட்டால், கனம் நீதிபதிகளின் நிலை என்ன?
கலவரம் செய்ய காத்திருக்கும் ''தெரு மூலர்கள்'' தீபம் ஏற்ற தூபம் போடுவோர் யோசிக்காதது ஏன்?
கிராமத்தில் நம் மக்கள் ஒரு பழமொழி கூறுவார்கள்.
''அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்'' (காயம் என்றால், நிரந்தரம் என்று பொருள்).
மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்!
அரசியலமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து, இப்படி தீர்ப்பு எழுதுவது, அறத்தை மீறியது மட்டுமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்காமல் காக்கும் மாநில அரசுமீது வெறுப்பை, வன்மத்தை உமிழ்வது எந்த வகையிலும் நீதியாகாது, நியாயமாகாது!
மக்களின் பொதுப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மிக கீழிறக்கமான கண்ட னத்திற்குரிய தீர்ப்பு இது!
உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், இது மாறிவிடக் கூடும் என்பது வேறு விஷயம்!
ஆனால், எல்லாவற்றிற்கும் மேலானது மக்கள் மன்றம் என்பதை மறந்துவிடக் கூடாது!
Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது?
'Political Agenda' என்றெல்லாம் (தி.மு.க.) மாநில அரசு மீது அவசர குற்றப்பத்திரிகை எழுதும் நீதிபதிகளே,
''திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்'' என்று, திருப்பரங்குன்ற தீபத்தை சாக்காக வைத்து, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கக் குர லெழுப்பும் கலவரக் கும்பலுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதோடு, திருச்சியில் பேசியபோது,
''திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஹிந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடினால், பரிசீலிப்போம்'' என்று கூறியுள்ளது ஏடுகளில், ஊடகங்களில் வந்தன என்பதை அறியமாட்டீர்களா?
Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது? என்பது இதன்மூலமாவது உங்களுக்குப் புரியாதா? எனவே, இந்தத் தீர்ப்பு நியாயவாதிகள் ஏற்கத்தகுந்த தீர்ப்பல்ல; சாய்ந்த தராசுத் தீர்ப்பேயாகும்! மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குரிய ஒரு சார்புத் தீர்ப்பேயாகும்! உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!" என்று தெரிவித்துள்ளார்.
- மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
- பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது.
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தின் கங்காசாகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காகப் பயன்படுத்தும் செயலிகள் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டவை.
தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலிகள் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானவை.
இவை முழுக்க முழுக்க பாஜகவின் ஐடி செல் கண்காணிப்பில் இயங்குகின்றன. தேர்தல் ஆணையம் அனைத்தையும் தவறாகச் செய்கிறது. உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகப் பட்டியலிடுகிறார்கள்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது. மக்களின் குரலாக நான் நீதிமன்றம் செல்வேன்" என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உண்மைக்கு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று நாங்கள் நம்பினோம்.
- அழுத்தங்களும் பொதுமக்களின் ஆவேசமும் மேலோங்கத் தொடங்கினால், ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான பாதுகாப்பு என்ன இருக்கிறது?
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் இடைக்கால ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் இஷிதா செங்கார், 'கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது குடும்பம் அமைதியாகச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த நம்பிக்கை மெல்லத் தேய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"இந்தியக் குடியரசின் மாண்புமிகு அதிகாரிகளுக்கு,
களைப்படைந்த, அச்சமடைந்த மற்றும் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து வரும் ஒரு மகளாக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனாலும், செல்வதற்கு வேறு இடம் இல்லாததால் இன்னும் நம்பிக்கையை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எட்டு ஆண்டுகளாக, நானும் என் குடும்பமும் காத்திருந்தோம், அமைதியாக. பொறுமையாக. 'சரியான வழியில்' அனைத்தையும் செய்தால், உண்மை இறுதியில் தானாகவே வெளிப்படும் என்று நம்பினோம்.
நாங்கள் சட்டத்தை நம்பினோம். அரசியலமைப்பை நம்பினோம். இந்த நாட்டின் நீதி என்பது சத்தம் போடுவதிலோ, ஹேஷ்டேக்குகளிலோ (hashtags) அல்லது பொதுமக்களின் கோபத்திலோ இல்லை என்று நம்பினோம். இன்று, அந்த நம்பிக்கை சிதைந்து வருவதால் நான் இதை எழுதுகிறேன்.
எனது வார்த்தை கேட்கப்படுவதற்கு முன்பே, எனது அடையாளம் ஒரு முத்திரைக்குள் சுருக்கப்படுகிறது, 'ஒரு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் மகள்' என்று. என்னை ஒருமுறைகூட பார்த்திடாத, ஒரு ஆவணத்தையும் படிக்காத, ஒரு நீதிமன்றப் பதிவைக்கூடப் பார்க்காதவர்கள், என் வாழ்க்கைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று தீர்மானித்துவிட்டார்கள்.
இத்தனை ஆண்டுகளில் சமூக வலைதளங்களில், உயிருடன் இருப்பதற்காகவே நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும், கொல்லப்பட வேண்டும் அல்லது தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணற்ற முறை சொல்லப்பட்டிருக்கிறேன். இந்த வெறுப்பு வெறும் கற்பனையல்ல. இது தினசரி நடப்பது. இடைவிடாதது. நீங்கள் வாழ்வதற்கு கூட தகுதியற்றவர் என்று இத்தனை பேர் நம்புகிறார்கள் என்பதை உணரும்போது, அது உங்களுக்குள் இருக்கும் எதையோ ஒன்றை உடைத்துவிடுகிறது.
நாங்கள் அமைதியாக இருந்தோம். காரணம் எங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அல்ல, மாறாக நம் அமைப்புகளின் மீது (Institutions) நம்பிக்கை வைத்திருந்ததால். நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் கத்தவில்லை. உருவ பொம்மைகளை எரிக்கவில்லை அல்லது ஹேஷ்டேக்குகளை (Hashtags) டிரெண்ட் செய்யவில்லை. நாங்கள் காத்திருந்தோம், ஏனெனில் உண்மைக்கு ஆடம்பரம்/ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று நாங்கள் நம்பினோம்.
அந்த மௌனத்திற்கு நாம் கொடுத்த விலை என்ன?
எட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டும், கேலி செய்யப்பட்டும், மனிதத்தன்மையற்ற முறையிலும் நடத்தப்பட்டு, நமது கண்ணியம் சிறுகச் சிறுகப் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்திற்கு ஓடியும், கடிதங்கள் எழுதியும், தொலைபேசி அழைப்புகளைச் செய்தும், எங்களைக் கேளுங்கள் என்று கெஞ்சியும், நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைந்துவிட்டோம். நாம் தட்டாத கதவுகளே இல்லை. நாம் அணுகாத அதிகாரிகளே இல்லை. நாம் கடிதம் எழுதாத ஊடக நிறுவனங்களே இல்லை.
இருப்பினும் யாரும் கேட்கவில்லை.
அதற்குக் காரணம் உண்மைகள் பலவீனமாக இருந்ததல்ல. ஆதாரங்கள் பற்றாக்குறையாக இருந்ததும் அல்ல. மாறாக, எங்கள் உண்மை அவர்களுக்கு இடையூறாக இருந்தது என்பதே காரணம். மக்கள் எங்களை 'அதிகாரம் படைத்தவர்கள்' என்கிறார்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு குடும்பத்தை எட்டு ஆண்டுகளாகப் குரலற்றதாக ஆக்கும் சக்தி (மௌனமாக்கி) என்ன வகையான அதிகாரம்? உங்கள்பேரில் நாள்தோறும் சேற்றை வாரி இறைப்பதைக் கண்டும், உங்களைக் கண்டுகொள்ளாத ஒரு அமைப்பை (system) நம்பி நீங்கள் அமைதியாக அமர்ந்திருப்பது என்ன வகையான அதிகாரம்?
இன்று என்னை அச்சுறுத்துவது அநீதி மட்டுமல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள 'பயம்' தான் என்னை அச்சுறுத்துகிறது.
நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவரும் மௌனத்திற்குள் தள்ளப்படும் அளவுக்கு உரத்த ஒரு பயம். எவரும் நமக்கு ஆதரவாக நிற்கவோ, நாம் சொல்வதைக் கேட்கவோ, அல்லது 'உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்ப்போம்' என்று துணிச்சலாகக் கேட்கவோ கூடாது என்பதற்காகவே இந்த பயம் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளைப் பார்ப்பது என்னை ஆழமாக உலுக்கியுள்ளது. ஆத்திரத்தாலும், தவறான தகவல்களாலும் உண்மையை இவ்வளவு எளிதாக மூழ்கடிக்க முடியும் என்றால், என்னைப்போன்ற ஒருவர் எங்கே செல்வது? ஆதாரங்களையும் முறையான சட்ட நடைமுறைகளையும் விட, அழுத்தங்களும் பொதுமக்களின் ஆவேசமும் மேலோங்கத் தொடங்கினால், ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான பாதுகாப்பு என்ன இருக்கிறது?
நான் இந்தக் கடிதத்தை யாரையும் அச்சுறுத்துவதற்காக (மிரட்டுவதற்காக) எழுதவில்லை. நான் இந்தக் கடிதத்தை யாருடைய அனுதாபத்தையும் பெறுவதற்காக எழுதவில்லை. நான் பயந்துபோயிருப்பதாலும், எங்காவது யாராவது ஒருவராவது இதைக் கேட்கும் அளவிற்கு அக்கறை காட்டுவார்கள் என்று நான் இன்னும் நம்புவதால் இதை எழுதுகிறேன்.
நாங்கள் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை. நாங்கள் யார் என்பதற்காகப் பாதுகாப்பையும் கேட்கவில்லை. நாங்கள் மனிதர்கள் என்பதால் நீதியைக் கோருகிறோம்.
சட்டம் அச்சமின்றிப் பேசட்டும். ஆதாரங்கள் எவ்வித அழுத்தமுமின்றி ஆய்வு செய்யப்படட்டும். உண்மை விரும்பத்தகாததாக இருந்தாலும் இருந்தாலும், அது உண்மையாகவே கருதப்படட்டும். இன்னும் இந்த நாட்டை நம்பும் ஒரு மகள் நான். தயவுசெய்து அந்த நம்பிக்கையை நான் இழக்கும்படி செய்துவிடாதீர்கள்.
மரியாதையுடன்,
நீதிக்காக இன்னும் காத்திருக்கும் ஒரு மகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது.
- டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.
சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், உன்னாவ் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல்.
- மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல்.
2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாநில ஆளுநர்களின் மசோதா அதிகாரம் மற்றும் அவர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த தீர்ப்பில் சட்டப்பிரிவு 200க்கின் கீழ் ஆளுநருக்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தல். இதில், மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல். மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் அவற்றை நீண்ட காலம் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.
ஒரு மாநிலத்தில் ஆளுநர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என இரண்டு தனித்தனி அதிகார மையங்கள் இருக்க முடியாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நிச்சயமான காலக்கெடுவை நீதிமன்றம் விதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு காலக்கெடு நிர்ணயிப்பது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆளுநர் ஒரு மசோதா மீது எந்தக் காரணமும் இன்றி நீண்ட காலம் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று இந்தத் தீர்ப்பு அனுமதி அளித்துள்ளது.
ஆளுநரின் கையொப்பம் அல்லது ஒப்புதல் இல்லாமல், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதா நடைமுறைக்கு வந்த சட்டமாகக் கருதப்படாது என்பதையும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தத் தீர்ப்பு, மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நிலவி வந்த நீண்ட கால மோதல்களுக்கு ஒரு சட்டரீதியான தீர்வை வழங்கியுள்ளது.
- நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
- அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.
அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம்.
- விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்த ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது.
தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ED விசாரணைக்காக அழைக்கும்பேது அதிலிருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கிற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார்.
- நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஏற்றப்பட்டது.
ஆனால் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு மாறாக வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. போலீசார், போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு என தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவ சிஐஎஸ்எஃப் வீரர்கள் மலைமீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார். காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் பாஜவினர் மற்றும் இந்து அமைப்பினர் சிலர் தீபமேற்ற மலைமீது ஏற முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்து மலையேற அனுமதி மறுத்தனர். இதனால் மீண்டும் போலீசாருக்கும் - திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பு கூடியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால் கைது நடவடிக்கை தொடரும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைந்தனர். நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி, 2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.
2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசு வழங்கிய மேல்முறையீட்டு மனுவில், கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.
100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றி, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது.
2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது.
புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
- விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 13 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடியூரப்பா தனது வீட்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சதாசிவ நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் அதை சிஐடியிடம் ஒப்படைத்தனர்.
சிஐடி போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இருப்பினும், உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்ததால், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து எடியூரப்பாவுக்கு சத்தமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.






