என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage"

    • 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் வேடன் கவனம் பெற்றார்.

    கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்தார்.

    செம்புக்காவு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து எளிமையான முறையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.

    2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.

    "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

    'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.

    • வெள்ளிக்கிழமை இரவுவரை திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் நள்ளிரவில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர்.
    • முதற்கட்ட விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோத்பூர் மாவட்டத்தின் மனாய் கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (25) மற்றும் விமலா (23) ஆகியோர் சகோதரிகள். இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (பிப்.21) இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. வெள்ளிக்கிழமை இரவுவரை திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் நள்ளிரவில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். பின்னர் காலையில் திருமணத்திற்கு தயாராக குடும்பத்தினர் எழுப்ப சென்றுள்ளனர்.

    அப்போது இருவரின் உடல்நிலையும் மோசமாக இருந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.  

    முதற்கட்ட விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் உண்மையாக காரணம் தெரியும் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார்
    • கருத்து வேறுபாடு பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை திருமணம் செய்துள்ளார்.

    இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெற்றது. திருமண புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் சாஹல் வெளியிட்டார்.

    பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நட்புறவு மலர்ந்து, பின்னர் காதலாக மாறியது. 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    சோஃபி ஷைன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்'-இல் இரண்டாம் துணைத் தலைவர். மேலும், ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தொண்டுப் பிரிவான 'ஷிகர் தவான் ஃபவுண்டேஷன்' அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

    தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார். இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

    • திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது.
    • ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாக இருக்கலாம்.

    திருமணம் செய்வதாகப் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது.

    விசாரணையில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.

    நீதிபதி நாகரத்னா கூறியதாவது, திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்களே.

    அவர்களது உறவு எவ்வளவு நெருக்கமானதாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே அவர்கள் எப்படி உடலுறவில் ஈடுபட முடிகிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாக இருக்கலாம், ஆனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது.

    உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அதன் விளைவுகளைச் சிந்திப்பது அவசியம்" என்று கூறினார்.

    மேலும், புகாரளித்த பெண், குற்றம் சாட்டப்பட்டவருடன் சம்மதத்துடன் உறவு வைத்ததாக தெரிவதாகக் குறிப்பிட்டனர்.

    எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்கி வழக்கை முடிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு இரு தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.  

    • சுரேகா வாணிக்கு தற்போது 48 வயதாகிறது
    • சுரேகா வாணி கணவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார்.

    பிரபல குணசித்திர நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    சுரேகா வாணி கணவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது 48 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது மகள் சுப்ரிதா தெரிவித்துள்ளார்.

    தன் அம்மாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புவது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய சுரேகா வாணியின் மகள் சுப்ரிதா, "என்னுடைய திருமணம் நடக்கும் முன்னர், என் அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். என் சொந்தக்காரர்களிடம் கூட இதை பற்றி பேசிவிட்டேன்; அவர்களுக்கும் இதில் சம்மதமே.

    அம்மாவை மிக அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவரின் விருப்பங்களை மதிக்க வேண்டும். அப்படியான ஒருவர்தான் அம்மாவுக்கு சரியாக இருப்பார். ஆனால், இது என்னுடைய முடிவு மட்டுமில்லையே, அவருடைய விருப்பமும் மகிழ்ச்சியும் தான் பிரதானம். என் அப்பா இடத்தை வேறு யாருக்கும் தரக் கூடாது என அவர் நினைக்கிறார்; அதை நானும் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • அங்கித் சவுகானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார்.
    • மதுபான கடை கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்ற அங்கித் சவுகான் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். காவலாளியான இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். அதேப் பகுதியை சேர்ந்தவர் அங்கித் சவுகான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

    அங்கித் சவுகானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் மதுபான கடையில் நடந்த திருட்டு வழக்கில் அங்கித் சவுகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனிடையே சந்தியாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். முசாபர் நகரை சேர்ந்த போலீஸ்காரரான அதுல் சர்மா என்பவருக்கும், சந்தியாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இரு வீட்டாரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து முடித்தனர்.

    திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது. இதற்கிடையே மதுபான கடை கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்ற அங்கித் சவுகான் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். இதனையறிந்த சந்தியா காதலனை கரம்பிடிக்க முடிவு செய்தார். கடந்த சனிக்கிழமை சந்தியாவும், அங்கித் சவுகானும் வீட்டை விட்டு வெளியேறினர். மகள் வீட்டில் இல்லாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர்களால் சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தியாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சந்தியா தனது காதலனுடன் பக்சர் நகரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சந்தியா தன்னை யாரும் கடத்தவில்லை. அங்கித் கவுகானுக்காக தானே வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்தார்.

    போலீசார் அங்கித் சவுகான் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதனால் அவரை பிரிந்து வர வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் சந்தியா அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அவரைத்தான் நான் காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். என்னால் அங்கித் சவுகானை விட்டு பிரிந்து வர முடியாது என பிடிவாதமாக தெரிவித்தார். இதனால் சந்தியாவின் திருமணம் நிறுத்தப்பட்டது. 

    • கடந்த பிறவியில் தொடர்பு பெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம்.
    • சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும்.

    ஒரு ஜோதிடரை சந்திப்பவர்கள் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் இந்த 5 விசயங்களை கேட்காமல் செல்வது இல்லை. பூர்வ ஜென்ம புண்ணிய பலப்படி ஒரு ஜாதகரின் வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சம்பவங்களும் 5-ம் பாவகத்தில் தான் பதிவாகி இருக்கும். சென்ற ஜென்மத் தொடர்ச்சியே இந்த பிறவி என்பது நிதர்சனமான உண்மை. கடந்து வந்த ஜென்மத்தில் நிறைவேற்ற தவறிய நிறைவேற்ற முடியாமல் விட்டுப் போன கடமைகளை முடிக்கவே ஒரு ஜனனம் நிகழ்கிறது. இளம் பருவத்தினர் நான் காதல் திருமணம் செய்வேனா பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் செய்வேனா என்று அறிந்து கொள்ள விருப்புகிறார்கள்.

    ஒரு ஜாதகத்தில் 5ம் அதிபதியே ஒருவருக்கு காதல் வருமா வராதா என்பதை தெரிவிக்கும் ஸ்தானமாகும். ஒருவரின் ஆழ்மன எண்ணங்களை குறிக்கும் ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் நின்ற கிரகமும் ஐந்தாம் இடத்தை பார்த்த கிரகமும் ஐந்தாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்ற கிரகமும் ஐந்தாம் அதிபதியும் காதலை தீர்மானிக்கிறார்கள். ஒரு பாவக அதிபதி எந்த பாவத்தில் நிற்கிறாரோ எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறார்களோ அது தொடர்பான பலன்களே ஜாதகருக்கு நடக்கும்.

    மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரினால் நிச்சயிக்கப்படும் திருமணமா? அல்லது ஜாதகரின் விருப்ப திருமணமா? என்பதை எளிதாக கூற முடியும். ஒருவருக்கு காதல் திருமணம் நடைபெற பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெற்று இருக்க வேண்டும். இதை சஞ்சித கர்மா என்று கூறலாம். சஞ்சித கர்மா என்பது ஒருவரின் கடந்த கால செயல்களின் மொத்த விளைவுகளை குறிக்கும்.

    ஒருவரின் நல்வினை மற்றும் தீவினை பதிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது, இது அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்கப்படும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ம்மிடம் மனம் புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். சென்ற ஜென்ம தொடர்புகளை அறியுமிடம். கடந்த ஜென்மத்துடன் தொடர்பு பெற்ற மனிதர்களுடன் தீர்க்கப்பட வேண்டிய சம்பவங்கள் உள்ள மனிதர்களை இந்தப் பிறவியில் சந்திப்போம். அதாவது கடந்த பிறவியில் தொடர்பு பெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் 5-ம்மிடம் வேலை செய்ய வேண்டும்.

    பெரும்பான்மையாக ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி காலங்களில் அல்லது சுக்ரன், ராகு தசை புத்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5,7-ம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும். 2,5,7, 11-ம் பாவக தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தம் வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாக கூற முடியும். காதல் கிரகங்கள் 4-ம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் பள்ளி, கல்லூரி காலங்களிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்தில் அல்லது மத்திம வயதில் காதல் வரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

     

    சந்திரனும் காதலும்

    ஜோதிட சாஸ்திரத்தில் காதலுக்கு காரக கிரகம் புதனாக இருந்தாலும் மனதிற்கு காரக கிரகமான சந்திரனே ஒருவரின் காதலை நிர்ணயிக்கிறது. சந்திரன் பலம் வாய்ந்தவர்களுக்கு காதல் வராது. சந்திரன் பலவீனமாக உள்ளவர்களுக்கு மட்டுமே காதல் வரும். ஒருவரின் மனதில் நிறைவேறாத வெளியில் சொல்ல முடியாத ஒரு உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்பு கிடைக்கும்போது காதல் மலருகிறது. அந்த நட்பை அவர்கள் தமக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறார்கள். இந்த நட்பு இல்லை என்றால் தனக்கு வாழ்க்கை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் அவர்களால் தனது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

    சந்திரன் பலம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு பிறரின் உதவி தேவைப்படும். தனது மன உணர்வுகளை புரிந்த ஒரு நட்பை சந்திக்கும்போது அவர்கள் மேல் காதல் வந்து விடுகிறது. நல்லது எது கெட்டது எது என்பதை பகுத்தாய்வும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மனதிற்கு தேவைப்படும் ஆறுதலை கூறும் நபர்கள் மட்டுமே உலகத்தில் உண்மையானவர்கள் மற்றவர்கள் தீயவர்கள் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். அதுமட்டு மல்லாமல் சிரித்துப் பேசுபவர்கள் மட்டுமே நல்லவர்கள் கோபப்படுபவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமாக இருக்கும்.

    இந்த அமைப்பு உள்ளவர்கள் காதலில் தோல்வி அடைந்தால் மனநோயாளியாக மாறிவிடுகிறார்கள். சந்திரன் பலவீனமாக உள்ளவர்களுக்கு காதல் தோல்வியை எளிதில் தாங்க முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள். காதல் கலப்பு திருமண கிரக அமைப்புகள் வெளிநாட்டவர். வெளி மாநிலத்தினர், வேற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளுதல் கலப்பு திருமணமாகும். திருமணம் தொடர்பான பாவகங்கள் 1,2,7, 8 ஆகியனவாகும். காதல் பற்றி கூறும் பாவம் 5. இதில் 1, 2,7-ம் பாவங்களுடன் 5-ம் பாவகம் சம்பந்தம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். 9-ம் பாவகம் ஒருவரின் ஜாதி, மதம், குலம், கோத்திரம் ஆகியவற்றை கூறுமிடம். 1, 2, 5, 7-ம் பாவகத்துடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டால் காதல் கலப்பு திருமணம் நடைபெறும்.

    மேலும் ஏழாமிடம் அல்லது ஏழாம் அதிபதிக்கு சுக்ரன், சனி அல்லது சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் ஜாதகர் கலப்பு திருமணம் செய்ததற்கான அமைப்பு உண்டாகும். 5, 7, 9-ம் அதிபதிகள் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். மேலும் ஒன்பதாம் அதிபதி அல்லது ஒன்பதில் நின்ற கிரகம் நீச்சம் பெற்று அத்துடன் 1, 2, 5, 7-ம் பாவகம் சம்பந்தம் பெற்றால் தகுதி தரம் இல்லாத தனது குலத்தவரால் வெறுக்ககூடிய கலப்பு திருமணமாக அமைகிறது. 9-ம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் பெற்று 1,2,5, 7-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறும் அல்லது பெற்றோரே வேறு குலத்தில் வரன் பார்த்து திருமணம் நடத்துவார்கள்.

    ஏழாம் இடத்துடன் தனித்து சனி ராகு கேதுக்கள் இருந்தாலும் காதல் கலப்பு திருமணம் நடைபெறலாம். ராகு, கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். களத்திர காரக கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய்க்கு ராகு கேது சம்பந்தம் இருப்பது வேற்று மதம், இனம் மொழி பேசுபவருடன் கலப்புத் திருமணத்தை ஏற்படுத்தும். ஏழாம் அதிபதியுடன் சனி, ராகு கேது சம்பந்தம் பெறுவதும் கலப்பு திருமணத்தை நடத்தும். 7-ம் இடத்தில் சனி, ராகு, கேது நட்சத்திரம் இருந்தாலும் கலப்பு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. 7, 8, 9-ம் பாவகம் அசுபத்தன்மையுடன் இணைந்து நடக்கும் காதல் கலப்புத் திருமணங்கள் தோல்வியை தழுவும். மேலே கூறிய இந்த பாகங்கள் தசா புத்தியுடன் சம்பந்தப்படும்போது வெளியூர் வெளிநாடு வெளி மாநிலம் செல்பவர்கள் காதல் கலப்பு திருமணம் செய்து அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

    ஐந்தாம் அதிபதியும் லக்னமும் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை கூறுவது ஐந்தாம் இடமாகும். இந்த ஐந்தாம் இடத்தில் பூர்வ ஜென்ம புண்ணிய படி அனுபவிக்க வேண்டிய பல்வேறு நல்ல தீய விளைவுகள் இருக்கும். பல்வேறு வினைகளில் இந்த ஜென்மத்தில் ஜாதகர் எதை அனுபவிக்க போகிறார் என்பது லக்னத்தை லக்னாதிபதியை தொடர்பு கொள்ளும் கிரகத்தை வைத்து நாம் முடிவு செய்ய வேண்டும். லக்னம் லக்னாதிபதியுடன் தொடர்பு கொள்ளக் கூடிய சம்பவங்கள் இந்த வாழ்க்கையில் ஜாதகரின் விருப்பப்படி எளிதாக சுலபமாக நிறைவேறிவிடும். லக்னாதிபதியுடன் தொடர்பு பெறாத பாவகங்களின் கிரகங்களின் பலன்கள் ஜாதகர் போராடிய வெற்றி பெற வேண்டும்.

    வெற்றி பெற்றாலும் அது நீடித்த காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கூற முடியாது. லக்னாதிபதிக்கு தொடர்பு பெற்று நடக்கக்கூடிய சம்பவங்கள் ஜாதகருக்கு எளிதில் வெற்றியையும் நிலைத்த தன்மையையும் கொடுக்கும். லக்னாதிபதி ஐந்தாம் அதிபதியின் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஜாதகரை தேடி காதல் வரும். பூர்வ ஜென்ம தொடர்பு உண்டு. கடந்த ஜென்மத்தில் அனுபவித்த அனைத்து நற்பலன்களையும் இந்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். செல்வாக்கு புகழ் அந்தஸ்து கவுரவம் உண்டு. தற்பெருமை பேசுவார்கள். கடந்து வந்த ஜென்மத்தின் வாசனை அவர்கள் ஆழ் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

    உள்ளுணர்வு நிரம்பியர்கள். தனது உள்ளுணர்வால் நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் முன்னரே அறியும் சக்தி படைத்தவர்கள். கடந்து வந்த ஜென்மத்தில் சந்தித்த நபர்களை பார்க்கும்போது அவர்கள் மேல் இவர்களுக்கு உள் உணர்வு மிகுதியால் காதல் வரும். தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல பிறரின் வாழ்க்கைக்கும் நடப்பதை நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து சொல்வார்கள். அதிர்ஷ்டம் இவர்களை தேடி வரும். இவர்கள் காதலில் கவுரவம் நிரம்பி இருக்கும். அதிகப்படியாக உறவுகளிலேயே திருமணம் நடக்கும். பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் வல்லவர்கள். தங்கள் குல கவுரவத்திற்கு ஒத்துவராத காதலில் ஈடுபடுவது இல்லை. குடும்ப சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்று குடும்பத்திற்குள்ளேயே திருமணம் நடத்துபவர்களுக்கும் லக்னாதிபதி 5-ம் அதிபதி சம்பந்தம் உண்டு. லக்னாதிபதி ஐந்தில் இருந்தால் ஜாதகர் காதலை தேடிச் செல்வார். ஐந்தாம் அதிபத்தில் லக்னத்தில் இருந்தால் காதல் ஜாதகரை தேடி வரும்.

    காதல் வெற்றி தரும் கிரக சம்பந்தம்

    ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால் வெற்றி, செல்வம் இரண்டிற்கும் இவர்களே அதிபதிகள். குறைந்தது 2 முறை காதல் வரும். நம்பிக்கையானவர்கள் மேல் மட்டுமே காதல் வரும். காதல் நினைவுகள் பல வருடங்களுக்கு ஆறாத வடுவாக மனதில் இருக்கும். காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். ஈருடலும் ஓர் உயிருமாக வாழ்வார்கள். வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் காதலர்களாகவே வாழ்வார்கள். தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வதில் ஆர்வம் அதிகம். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும்.

    மனைவி வந்த பிறகு அதிர்ஷ்டம் கூடும். 5, 7ம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாத வரை எந்த தொந்தரவும் இருக்காது. பால்ய வயது முதல் முதிய காலம் வரை நண்பர்களுக்குள் பரஸ்பர அன்பு நீடிக்கும். நல்ல வசதியான சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தம் கிடைக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எளிதாக பிரிவினை உண்டாகும். சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும். நண்பர்கள், கூட்டாளிகள் குறுகிய காலத்தில் பயனற்று போவார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தியாக வெளித்தோற்றம் மட்டுமே இருக்கும். சம்பந்தம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பார்கள்.

    காதல் திருமணம் நல்லதா?

    காதல் திருமணங்களுக்கு ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே முக்கிய காரணமாகும். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையே காரணமாகும். சுக்கிரன். புதன், சனி, ராகு, கேது ஏழாம், ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை காதல் கலப்பு திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி காலங்களில் வீட்டைவிட்டு வெளியேறி ரகசிய திருமணம் நடத்துகிறார்கள். பெரியோர்கள் சம்மதம் ஆசிர்வாதம் இன்றி செய்யப்படும் ரகசிய திருமணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை நிர்மூலப்படுத்துகிறது. ஒரு திருமணம் நிச்சயமாக பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் குலதெய்வத்தின் ஆசியுடனே நடக்க வேண்டும்.

    செல்: 98652 20406

    • கண்ணாடியை அகற்ற முடியாவிட்டால், இரவில் அதை ஒரு துணியால் மூடவும்.
    • தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள்.

    ஜாதகம் சரியாக இருந்தாலும் பலர் திருமணங்களில் தடைகள் அல்லது விவகாரத்தை சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள். இன்று, திருமணத்திற்கு இடையூறாக இருக்கும் ஐந்து வாஸ்து தவறுகள் மற்றும் அவற்றின் எளிய தீர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    தவறான திசையில் படுக்கையறை

    வாஸ்துவின் படி, ஆண் அல்லது பெண்ணின் படுக்கையறை எப்போதும் தென்மேற்கில் (தென்மேற்கு மூலையில்) இருக்க வேண்டும். இந்த திசை உறவு நிலைத்தன்மை மற்றும் திருமண பேரின்பத்தைக் குறிக்கிறது. வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் ஒரு படுக்கையறை நிலையற்ற உறவுகளுக்கு வழிவகுக்கும், மேலும் திருமணங்கள் தாமதமாகலாம் அல்லது முறிந்து போகலாம். வடகிழக்கு என்பது வழிபாடு மற்றும் அமைதிக்கான திசையாகும். இங்கே ஒரு படுக்கையறை இருப்பது திருமண ஸ்திரத்தன்மையின்மைக்கு வழிவகுக்கும்.

    படுக்கைக்கு முன்னால் கண்ணாடி

    வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கைக்கு முன்பாகவோ அல்லது அருகிலோ கண்ணாடியை வைத்திருப்பது ஒரு கடுமையான குறைபாடாகக் கருதப்படுகிறது. தூங்கும் போது உங்கள் பிரதிபலிப்பைப் பார்ப்பது திருமண வாழ்க்கையில் பதற்றம், தவறான புரிதல்கள் மற்றும் பிரிவை ஏற்படுத்தும். இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் தவறான திருமண முடிவுகளுக்கு வழிவகுக்கும். எப்போதும் கண்ணாடியை படுக்கையிலிருந்து விலக்கி வைத்து மூடி வைக்கவும். கண்ணாடியை அகற்ற முடியாவிட்டால், இரவில் அதை ஒரு துணியால் மூடவும்.

     

    உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருத்தல்

    வாஸ்துவின் கூற்றுப்படி, நாற்காலி, மேசை, கட்டில் அல்லது அலமாரி, பாத்திரங்கள், கடிகாரங்கள், பிரேம்கள் அல்லது வேறு ஏதேனும் பயனற்ற பொருட்களை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது. இந்த பொருட்கள் வீட்டிற்குள் தனிமை, விரக்தி மற்றும் தடைகளை கொண்டு வருகின்றன. திருமணத்தில் தாமதங்கள் அல்லது உறவு முறிவுகள் பெரும்பாலும் இதனுடன் தொடர்புடையவை. வீட்டிலிருந்து உடைந்த அனைத்து பொருட்களையும் உடனடியாக அகற்றவும். நல்ல நிலையில் உள்ள பொருட்களை மட்டும் வைத்திருங்கள்.

    போலி புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள்

    தனிமையில் இருப்பவர்களின் படங்கள், சோகமான முகங்கள், மறையும் சூரியன், போர் அல்லது உடைந்த உறவுகளை சித்தரிக்கும் ஓவியங்களை உங்கள் வீட்டில் வைப்பது வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்தப் படங்கள் தனிமை மற்றும் விரக்தியை அதிகரிக்கும். இது திருமணத்தில் தடைகளை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் பூக்கள், இயற்கை, மகிழ்ச்சியான தம்பதிகள் அல்லது குடும்பங்களின் படங்களை வைக்கவும்.

    பூஜை அறையில் வாஸ்து குறைபாடுகள்

    பூஜை அறை வடகிழக்கில் (ஈசானிய மூலை) இருக்க வேண்டும். அது அழுக்காகவோ, சிக்கலாகவோ அல்லது தவறான திசையில் இருந்தாலோ, குடும்ப தெய்வம் கோபமடைந்து, வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் (குறிப்பாக திருமணம்) தடைபடும். ஒவ்வொரு நாளும் பூஜை அறையை சுத்தமாக வைத்திருங்கள், தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள்.

    இந்த தவறுகளுக்கு எளிய தீர்வுகள்

    உங்கள் படுக்கையறையை தென்மேற்கு நோக்கி மாற்றவும். படுக்கையிலிருந்து கண்ணாடிகளை அகற்றவும் அல்லது இரவில் அவற்றை மூடவும். உடைந்த அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்துங்கள். சோகமான படங்களை அகற்றி, அவற்றை பூக்கள் மற்றும் மகிழ்ச்சியான குடும்ப புகைப்படங்களால் மாற்றவும். வடகிழக்கு மூலையில் உள்ள பூஜை அறையை சுத்தமாக வைத்திருங்கள். இந்த நடவடிக்கைகள் வாஸ்து குறைபாடுகளை நீக்கி திருமண வாய்ப்புகளை அதிகரிக்கும்.

    • சென்னையில் விஜித் பச்சான் & ப்ரீத்தா தம்பதியின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
    • இது தொடர்பான புகைப்படங்களை திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தங்கர் பச்சான் தனது மகன் விஜித்தின் திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்றது.

    நேற்று சென்னையில் விஜித் பச்சான் & ப்ரீத்தா தம்பதியின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்கள் விஜித் பச்சான் & ப்ரீத்தா ஆகியோரை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மேலும், இந்த திருமண வரவேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    • தொட்டபள்ளாப்புரா போலீசில் சுதாராணி மீது அனந்தமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
    • முதல் கணவர் வீரேகவுடா சுதாராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்தவர் அனந்தமூர்த்தி. இவர், ஆன்லைன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். அனந்தமூர்த்திக்கும், தொட்டபள்ளாப்புரா அருகே அனபே கிராமத்தை சேர்ந்த சுதாராணிக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவர் இறந்து விட்டதாகவும் அனந்தமூர்த்தியிடம் சுதாராணி கூறியிருந்தார்.

    இதையடுத்து, தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அவர்களை சமாதானப்படுத்தி சுதாராணியை ஒரு கோவிலில் வைத்து அனந்தமூர்த்தி திருமணம் செய்திருந்தார். இதற்கிடையில், கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதத்தில் ஐதராபாத்துக்கு வேலை விஷயமாக செல்வதாக அனந்தமூர்த்தியிடம் கூறிவிட்டு சென்ற சுதாராணி திரும்பி வரவில்லை.

    இதற்கிடையே சுதாராணி பற்றி விசாரித்தபோது அனந்தமூர்த்திக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது அவரது முதல் கணவர் உயிருடன் இருப்பதும், தற்போது ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த சிவகவுடா என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வருவதும் அனந்தமூர்த்திக்கு தெரியவந்தது. இதுபற்றி தொட்டபள்ளாப்புரா போலீசில் சுதாராணி மீது அனந்தமூர்த்தி புகார் அளித்துள்ளார்.

    அதில், முதல் கணவர் இறந்துவிட்டதாக கூறி சுதாராணி என்னை 2-வது திருமணம் செய்தார். தற்போது அவர் உயிருடன் இருக்கிறார். மேலும் முதல் கணவருக்கு பிறந்த 2 குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி என்னிடம் ரூ.20 லட்சத்துக்கு மேல் வாங்கி மோசடி செய்ததுடன், 3-வதாக சிவகவுடாவை திருமணம் செய்துள்ளார்.

    என்னை போன்று பலரை திருமணம் செய்து, பல லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்வதுதான் கல்யாண ராணியான சுதாராணியின் வேலை என்று அனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அறிந்த முதல் கணவர் வீரேகவுடாவும் சுதாராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனக்கு மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட தெரியவில்லை எனக்கூறி பிரிந்து சென்று விட்டார். என்னிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வாங்கி மோசடி செய்துவிட்டதாக வீரேகவுடாவும் புகார் அளித்து உள்ளார்.

    இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அவரை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதற்கு அவை உபயோகமாக இருக்கும்.
    • பசுமை திருமணத்திற்கு ஏற்ப விருந்து உபசரிப்பிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை இடம் பெற செய்யலாம்.

    இன்றைய இளைஞர்கள் திருமணத்தை பிரமாண்டமாக, அதேவேளையில் அதிக செலவில்லாமல் விமரிசையாக நடத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். மணமேடை அமைந்திருக்கும் இடம் உள் அரங்கமாக இல்லாமல் பசுமை சூழ்ந்த திறந்தவெளியாக இருக்க விரும்புகிறார்கள். அதற்கேற்ற இயற்கை எழில் கொஞ்சும் பசுமை சூழ்ந்த இடங்களை தேர்வு செய்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், திருமணத்திற்கு வருகை தருபவர்கள் திறந்தவெளி பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடியும், இதமான காற்றை சுவாசித்தபடியும் உறவினர்களோடு பேசி மகிழும் அம்சத்தையும் பசுமை திருமணங்கள் கொண்டிருக்கின்றன. அப்படி நடைபெறும் 'பசுமை' திருமணங்களை நடத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    அலங்காரம்

    பசுமை திருமணத்துக்கு அலங்கார வேலைப்பாடுகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்காது. இயற்கை சூழலும், எளிய அலங்காரமுமே பிரமாண்ட தோற்றத்தை தரும். இருப்பினும் அலங்காரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க விரும்புபவர்கள் வண்ணமயமான காகித விளக்குகளை பயன்படுத்தலாம்.

    அவை அலங்காரமாக மாறி பசுமை சூழலுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். மண் பானைகள், கண்ணாடி பாட்டில்கள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் அலங்காரங்களை செய்து ஆங்காங்கே தொங்கவிட்டு அசத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காகிதம் மற்றும் துணி அலங்காரங்களை அழகுற வடிவமைக்கலாம்.

    தாம்பூலம்

    திருமணத்திற்கு வருகை புரிந்தவர்களுக்கு கொடுக்கும் தாம்பூலம், சணல் பையாகவோ, துணிப் பையாகவோ அமைவது சிறப்பு. கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதற்கு அவை உபயோகமாக இருக்கும். பசுமை திருமணத்தை நினைவூட்டும் வகையில் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கலாம். விதை பந்து, காய்கறி விதைகள் வழங்கவும் செய்யலாம்.

    விருந்து

    பசுமை திருமணத்திற்கு ஏற்ப விருந்து உபசரிப்பிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை இடம் பெற செய்யலாம். திருமண விருந்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இடம் பெறுவதை தவிர்த்து அதற்கு மாற்றாக கண்ணாடி டம்ளர், மண் குவளை போன்றவற்றை இடம் பெற செய்யலாம். திருமண விருந்தில் பசுமை நிறத்திலான பொருட்களை இடம் பெற செய்வதும் அழகு சேர்க்கும்.

    திறந்த வெளி

    பசுமை திருமணம் என்றாலே திறந்தவெளி இடம்தான் என்ற நியதிக்கு ஏற்ப இயற்கை எழில் கொஞ்சும் விசாலமான திறந்தவெளி பரப்பளவு கொண்ட பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அந்த திறந்தவெளி இடத்தில் மண மேடை அலங்காரமும் இயற்கை அலங்கார பொருட்களாக அமைந்திருக்க வேண்டும்.

    அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கும் பகுதியாகவும் அமைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் திருமணத்திற்கு வருகை தரும் நண்பர்கள், உறவினர்களுக்கு சவுகரியமானதாக இருக்கும். அதிலும் பூத்துக்குலுங்கும் மரங்களாக இருந்தால் மலர்கள் அலங்கார செலவும் குறையும். திருமண பந்தத்தை என்றென்றும் நினைவில் கொள்ளும் அம்சம் கொண்ட இடமாக அமைந்திருக்க வேண்டும்.

     

    முகூர்த்த நேரம்

    திருமணம் என்றாலே காலை வேளையில் முகூர்த்த நேரம் குறிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இரவில் திருமண வரவேற்பு அரங்கேறும். பசுமை திருமணத்திற்கும் காலை நேரத்தையே தேர்வு செய்யலாம். காலை 10 மணிக்குள் திருமணத்தை நடத்தும் விதமாக திட்டமிட்டால் வெயிலின் தாக்கம் அதிகமிருக்காது.

    அப்படி இருந்தாலும் மரங்களும், இயற்கை சூழலும் இதமான சூழலை உருவாக்கி கொடுக்கும். அந்த இடத்திலேயே இரவில் திருமண வரவேற்பை நடத்தினால் மின்னொளியும், இயற்கை அழகும் ஒருசேர மிளிர்ந்து பிரமாண்ட திருமண வைபவமாக மாற்றிவிடும்.

    திருமண ஆடை

    திருமண பந்ததத்தை என்றென்றும் நினைவுபடுத்தக்கூடிய அம்சம் கொண்டது என்பதால் திருமண ஆடை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மண மேடை திறந்தவெளி பரப்பளவில் அமைந்திருப்பதால் திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியும் வகையிலும், அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ற வகையிலும் வண்ணங்களை கொண்ட ஆடைகளாக அமைந்திருப்பது சிறப்பானது.

    அழைப்பிதழ் தேர்வு

    பசுமை திருமணங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சத்தை கொண்டிருப்பதால் திருமண அழைப்பிதழிலும் அது பிரதிபலிக்க வேண்டும். காகிதத்தில் திருமண அழைப்பிதழை அச்சடிக்கும் நடைமுறைக்கு மாற்றாக இளந்தலைமுறையினர் பலரும் டிஜிட்டல் மின் அழைப்பிதழ்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அது காகித பயன்பாட்டை குறைக்கும் அம்சத்தை கொண்டிருப்பதால் பசுமை திருமணத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. டிஜிட்டல் வழியாக சில நொடிகளில் அழைப்பிதழ்களை அனுப்பிவிடலாம் என்பதால் அதற்கு ஆகும் செலவும் குறைவும்.

    அதேவேளையில் டிஜிட்டலில் அழைப்பிதழ் அனுப்பியதும் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு திருமணத்திற்கு வருமாறு அழைப்புவிடுப்பது முக்கியமானது. நாம்தான் டிஜிட்டலில் அழைப்பிதழ் அனுப்பிவிட்டோமே என்று நினைப்பது ஏற்புடையதல்ல. அது திருமணத்திற்கு அழைப்பதற்கு உகந்த முறையும் அல்ல.

    அழைப்பிதழ் அடித்து அழைப்புவிடுக்க விரும்புபவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை கொண்டு அழைப்பிதழ் அச்சடிக்க முயற்சிக்கலாம். அந்த அழைப்பிதழுடன் விதை பதித்தும் கொடுக்கலாம். அவை குப்பைக்கு சென்றடைந்தாலும் அதிலிருக்கும் விதை துளிர்த்து செடியாகி பசுமை திருமணத்திற்கு பலம் சேர்க்கும்.

    • அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவர் உள்ளார்.
    • வரது வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண விழாவின்போது விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    பாகிஸ்தானில் திருமண விழாவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்

    பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவர் உள்ளார்.

    இவரது வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண விழாவின்போது விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.   

    ×