என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு மர்ம முறையில் உயிரிழந்த சகோதரிகள்...சோகத்தில் குடும்பத்தினர்
    X

    திருமணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு மர்ம முறையில் உயிரிழந்த சகோதரிகள்...சோகத்தில் குடும்பத்தினர்

    • வெள்ளிக்கிழமை இரவுவரை திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் நள்ளிரவில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர்.
    • முதற்கட்ட விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோத்பூர் மாவட்டத்தின் மனாய் கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (25) மற்றும் விமலா (23) ஆகியோர் சகோதரிகள். இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (பிப்.21) இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. வெள்ளிக்கிழமை இரவுவரை திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் நள்ளிரவில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். பின்னர் காலையில் திருமணத்திற்கு தயாராக குடும்பத்தினர் எழுப்ப சென்றுள்ளனர்.

    அப்போது இருவரின் உடல்நிலையும் மோசமாக இருந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் உண்மையாக காரணம் தெரியும் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×