என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்புக் கட்டுரைகள்"
- சிலருடைய வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்.
- சூழலுக்கு தகுந்தவாறு நம் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதிகாரம்: தெரிந்து செயல்வகை
இந்த அதிகாரத்தில்,
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
என்ற குறளில் தொடங்கி
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
ஒரு செயலை செய்வதற்கு முன் அதனை செய்வதால் ஏற்படும் இடர்பாடுகளையும் நன்மைகளையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.
அவ்வாறு செய்வதால் அச்செயல் நன்மை பயக்கும் செயலாக இருக்கும். இத்தகைய முன்னெச்சரிக்கையான சிறப்பான எண்ணம் சான்றோர்களுக்கும் புண்ணியபலம் படைத்த மன்னர்களுக்கும் உண்டு. சிலர் சிறந்த அறிவு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் அவர்களின் செயல்பாடுகளெல்லாம் இடர்பாடுகளுடன் இருக்கும். அறிவில் சிறந்து விளங்குபவர்களுக்கும், வியாபாரத்தில் தொழிலில் தோல்வி உண்டாகும். சிலருடைய வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்.
நல்வினை இருந்தால் சிறந்த முயற்சி உண்டாகும். தீவினையிருந்தால் சோம்பல் உண்டாகும்.
மேலும்மேலும் நட்டம் ஏற்பட்டு எல்லாமே இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிலர் மிகவும் உயர்ந்த நிலையில் வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டால் வேறு ஏதாவது கூலி வேலை செய்தாவது தங்களைக் காப்பாற்றி கொள்வார்கள்.
சிலர் தன்மானம் என்ற பெயரில் எல்லாப் பொருள்களையும் இழந்து கடனாளியாகி குடும்பத்தையே சீரழித்து விடுவார்கள். இதற்கு அக்குடும்பத்தின் தலைவனது பலகீனமே காரணம். சூழலுக்கு தகுந்தவாறு நம் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஒரு செயலில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் எவ்வாறு பயன்தரும்? உடனடியாக எவ்வாறு பயன்தரும்? எதிர்காலத்தில் எவ்வாறு பயன் தரும்? (உடனடி திட்டம், குறுகிய காலத்திட்டம், நீண்டகால திட்டம்).
ஒரு செயல் எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு எவ்வாறு பயன்தரும் என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும். இந்த அதிகாரம் அரசியலில் சொல்லப்படுவதால் அரசு நடத்துபவருக்கும் பொருந்தும். கோடிக்கணக்கான அளவில் முதலீடு செய்து வியாபாரம் அல்லது தொழில் செய்பவருக்கும் பொருந்தும்.

ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
வீடு கட்டுபவர்கள் அவர்களின் தேவைக்கேற்றவாறு எளிமையான வீடு கட்டிக்கொண்டு மீதியுள்ள பணத்தைத் தொழில் தொடங்கவோ அல்லது வேறு சில தேவைகளுக்கு வைப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
ஒரு சிலர், பலரும் பார்த்து பெருமைப்பட வேண்டும் என்பதற்காக தங்களுடைய தகுதிக்குமேல் கடன் வாங்கி வீடு கட்டி, அந்த வீட்டில் வாழ முடியாமலும், அந்த வீட்டை விற்க முடியாமலும் அல்லலுறுவார்கள்.
உலக வல்லரசுகளில் முதன்மை பெற்று விளங்குகின்ற அமெரிக்கா கருப்பு இனமக்களின் உழைப்பாற்றலை பயன்படுத்தி நானூறு ஆண்டுகளுக்கு சரிவு இல்லாத பொருளாதார வலிமையை பெற்றுள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் பொருளாதாரம் வானளாவிய அளவு உயர்ந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் அரபு நாடுகள் நீங்கலாக உலக பொருளாதாரம் மந்தமாக உள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டுமானால் உற்பத்தியாகின்ற பொருள் அதிநவீனமாகவும் அதே நேரத்தில் விலை குறைவாகவும் இருக்க வேண்டும்.
அந்த நுட்பம் ஜப்பானுக்குத் தெரியும். பத்தாண்டுக்கு முன் 1990ல் உலக சந்தையில் ஜப்பான் பொருள்கள் தலைநிமிர்ந்திருந்தது. தற்போது அந்நாட்டு பொருளாதாரத்திலும் சரிவு உண்டு. எதனை உற்பத்தி செய்தாலும் மக்களிடம் வாங்கும் சக்தி இருக்க வேண்டும்.
அதிக அளவில் முதலீடு செய்பவர்கள் உலக பொருளாதாரம், உள்நாட்டு பொருளாதாரம், மக்களின் வாங்கும் சக்தி, சந்தை நிலவரம் அறிந்து, தொழில் வியாபாரம் செய்தல் அவசியம்.
நல்வினை இருந்தால் எதனைச் செய்தாலும் திட்டமிட்டு செயல்படும் எண்ணம் உண்டாகும். தீவினை இருந்தால் அறிவு மங்கும்.
எந்தவொரு தொழிலைச் செய்தாலும், அதில் முன்அனுபவம் உள்ள தொழில் நிபுணர்களிடம் கலந்து ஆலோசனை செய்து ஆராய்ந்து பார்த்து செய்தல் வேண்டும்.
ஒரு நாட்டின் மீது படையெடுக்க முற்பட்டால் காலம், இடம், சூழ்நிலை தெரிந்து செயல்பட வேண்டும். தேவையான உணவு, நாட்டின் சூழ்நிலை, தட்ப வெப்ப சூழல் அறிந்து செயல்பட வேண்டும்.
திட்டமிட்டு செய்தால் எல்லாமே நன்றாக நடக்கும். முன் ஜென்ம வினை சரியாக இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும். ஆசான் திருவள்ளுவர் அரசுக்கே அறிவுரை வழங்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
அவர்களின் திருவடியை வணங்கி அவர்களுடைய ஆசி பெற்றால் தோல்வி என்பதே இராது. முற்றுப் பெற்ற முனிவர்கள் எல்லா வல்லமையும் நமக்கு அருளுவார்கள், வாழ்வில் வெற்றியடையலாம்.
நாம் ஒரு செயல்களைத் தொடங்கினால் திட்டமிட்டு செயல்படுதல் வேண்டும். காலம், இடம், சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும்.
முன் அனுபவம் உள்ளவர்களை கலந்து ஆலோசித்து செயல்களை செய்வது நல்லது.
- தினையானது சற்றே கூடுதல் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும்.
- கசப்புச் சுவை என்றாலே ரத்தத்தைப் பெருக்கும் இரும்புச் சத்து உடையது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
தினை என்ற சிறுதானியம் புல்வகையைச் சேர்ந்தது. அதாவது நிறைய நீர்த் தேவைப்படுவதில்லை, தினைதானியம் வளர்ந்து கதிர்பற்ற அதிக நீர் தேவையில்லை. எனவே மேட்டு நிலத்திலும் பயிரிடலாம். போதிய மழைப் பொழிவு இல்லாத வருடத்தில் விதைத்து விட்டு இரண்டுமுறை மேலோட்டமாகக் களைஎடுத்து விட்டால் போதும், பயிர் ஜிவ்வென்று எழுந்து உயர்ந்து விடும். மெல்லிய தண்டுதான் என்றாலும் உறுதியாக வேர்பற்றி நிற்பதால் கதிர் பற்றி, முற்றி, தானிய மணிகள் கனத்த பின்னரும் பயிர் சாய்ந்து விடாது. எனவே தானியம் விரயமாகாது.
சிறுதானியங்கள் அனைத்தும் லேசான கசப்புச் சுவை உள்ளவைதான். ஆனால் தினையானது சற்றே கூடுதல் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். எனவே வரகு, சாமை, குதிரைவாலி போன்று நேரடியாகச் சோறாகச் சமைத்து உண்ணமுடியாது. கசப்புச் சுவை என்றாலே ரத்தத்தைப் பெருக்கும் இரும்புச் சத்து உடையது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஐந்திற ஆற்றல் (பஞ்சபூதம்) கசப்புச் சுவை என்பது நெருப்பு மூலகமாகிய இதயத்திற்குப் பலம் தரக்கூடியது.
மனித உடலில் ரத்தம் மட்டுமே வெப்பத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ரத்தம் பாயும் வரையிலுமே உடலில் வெப்பம் இருக்கும். இறப்பின் அடையாளமாக மூக்கின் அருகில் கைவைத்து மூச்சு வருகிறதா என்று பார்க்கிறோம். இதயம் துடிக்கிறதா என்ற மார்புக்கூட்டில் கை வைத்துப் பார்க்கிறோம். இவை எதிலும் உறுதிப்படுத்த முடியாதபோது கால் கைகளில் சூடு இருக்கிறதா என்று பார்க்கிறோம். அதாவது உதிரம் உடலெங்கும் பாய்கிறதா என்று உறுதிசெய்கிறோம். உதிரவோட்டம் தன்னில் ஆக்சிஜன் எனப்படும் உயிர்வளியைச் சுமந்து செல்லும் வரையே இந்த உடலில் உயிர் நிலைத்திருக்கும். உதிரத்தில் உயிர்வளியை (வளி - காற்று) ஏற்றி உடலின் இறுதிப் பகுதிவரை எடுத்துச் செல்லப்படும் வரைதான் உடலின் இயக்கம் இருக்கும்.
வயது ஏற ஏற உடலின் செயல்திறன் குறைந்து கொண்டே வருகிறது. வயது ஏறுவதால் செயல்திறன் குன்றுமா என்றால் நிச்சயமாக இல்லை. நம்முடைய உணவு, நீர், காற்று இவற்றின் வழியாக உடலில் சேரும் கழிவுகள் இளம் வயதில் வெளியாவது போல வெளியேற நாம் அவகாசம் தருவதில்லை. எனவே அவை உள்ளே தங்கித் தங்கி நரம்பு மண்டலம், உள்ளுறுப்புகள், மூட்டு இணைப்புகள் ஆகியவற்றில் தேங்க ஆரம்பிக்கிறது. கழிவுகளின் தேக்கம் அதிகமாகும் பொழுது நம்மை அறியாமலே நம்மில் சோம்பல் படிகிறது. இச்சோம்பலால் கழிவுத் தேக்கம் இன்னமும் கூட இதயத்தால் உதிரம் செல்லும் பாதையில் உந்தித்தள்ள முடியவில்லை. பெரும்பாலான இறப்புகள் மாரடைப்பால் நிகழ்கின்றன. அல்லது நுரையீரலில் சளி சேர்ந்து நீர்கோர்த்து நடக்கின்றன. உண்மையில் இயற்கையான இறப்பு என்பது ஒருமனிதனின் செயல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து உடலின் சதையனைத்தும் வற்றி, நீர் வற்றி, எலும்புகள் சுருங்கி இன்னும் உத்தேசமாக எத்தனை நாட்கள் இருக்க முடியும் என்பதை அறிவித்து விட்டு அமைதியாக இறப்பதே இயற்கையான இறப்பாகும்.
அத்தகைய இயற்கையான இறப்பு இன்று மிகமிக அரிதாகி விட்டது. ஒன்று மிக இளம் வயதிலேயே திடீர் மாரடைப்பால் இறக்கின்றனர். அல்லது வயதான பின்னர் தொடர் மருந்துகளால் உள்ளுறுப்புகளிலும் ரத்தவோட்டப் பாதையிலும் கழிவுகள் அடைத்து உடலியக்கம் இறுக்கமடைந்து தவிப்பு நிலைக்கு ஆளாகின்றனர். அப்போது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கும் மருந்துகளால் நிலைமை சிக்கலாகி அங்கேயே சுவாசம் நிற்கிறது. அல்லது சுவாசத்திற்காக உயிர்வளி உருளைகள் (ஆக்சிஜன் சிலிண்டர்) உதவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உடல் வீக்கமடைந்து நினைவு தப்பிய நிலையிலேயே உயிர் பிரிகிறது.
இத்தகைய அகால இறப்பிற்கு அடிப்படையான காரணங்கள் இரண்டு. ஒன்று நாம் உணவில் மிதமிஞ்சியளவில் எடுத்துக் கொள்ளும் சர்க்கரை. சர்க்கரை தான் உடலின் இயக்க எரிசக்தி. ஆனால் எவ்வளவு சர்க்கரையை நாம் எடுத்துக் கொள்கிறோமோ அவ்வளவையும் எரிக்கிறோமா என்றால் இல்லை. அப்படி எரிக்கப்படாத சர்க்கரை உடலில் தேங்கத் தேங்க மேற்சொன்னவாறு உடலின் இயக்கம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அடுத்து நாம் எடுக்க மறந்துபோன கசப்புச் சுவை. கசப்புச் சுவை என்றதும் நமக்குத் தெரிந்ததெல்லாம் பாகற்காய் மட்டுமே. அரிசி உட்பட உணவுகள் அனைத்திலும் மெலிதான கசப்புச் சுவை உண்டு. ஆனால் அவை எல்லாவற்றில் இருந்தும் தீட்டுதல் என்ற பெயரில், சுவையூட்டல் என்ற பெயரில் அனைத்து உணவுகளிலும் உள்ள கசப்புச் சுவையை நீக்கி விட்டோம். அதன் விளைவைத்தான் நாம் நோயாக அனுபவித்துக் கொண்டுள்ளோம். மிதமாகத் தொடர்ந்து எடுத்து வரும் கசப்புச் சுவை உணவுகள் இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியுள்ளது போல ரத்தவோட்டத்திற்கும், ரத்த உற்பத்திக்கும் பேருதவி செய்யும்.

போப்பு
96293 45938
இந்த உண்மையை அறியாமல் நடுத்தர வயதைக் கடந்தபின்னர் சர்க்கரையைக் குறைக்கிறேன் என்று அன்றாடம் பாகற்காயை அரைத்துக் குடித்து உடலின் உள்ளுறுப்புகளுக்குக் கூடுதல் சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழி அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை இனிப்புச் சுவையின் உச்சத்தில் இருந்து விட்டு, பிறகு அதற்கு நேர் எதிர்த்திசையில் இன்னொரு விளிம்பிற்குப் போகிறோம். இரண்டுமே உடலுக்கு ஆபத்தானவை தான். எனவே தான் இங்கு நாம் முக்கியமாகத் தானியப் பயன்பாடு பற்றி மிக அளவிற்குப் பேசிக் கொண்டுள்ளோம். தானியங்களிலும் தினை நம்ப முடியாதளவிற்கு, பனையளவிற்கு மகத்தான ஆரோக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது.
இத்தொடரில் முன்னரே கூறியுள்ளதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ராகி, கம்பு தானியங்களில் பெருந்தானியமான அரிசி, கோதுமையைக் காட்டிலும் இனிப்பு (கார்போஹைட்ரேட்) குறைவாகவும், கசப்பு மற்றும் நார்ச்சத்துக் கூடுதலாகவும் இருப்பதைப் பார்த்துள்ளோம். அதேபோல பிற சத்துக்கூறுகளும் மிகுதியாக உள்ளன. அதேவகையில் தினையில் மற்றெல்லாத் தானியங்களை விட தினையில் கசப்புச் சுவைக் கூடுதலாக உள்ளது. சற்றே தூக்கலாக உள்ளது. அதனால் தான் தினை என்றதும் கூடவே இணைந்து வரும் சொல்லாக இருக்கிறது தேன். தேனும் தினை மாவும் என்ற சொல்லை பழந்தமிழ் இலக்கியங்களில் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
இரண்டு கைகளில் எடுக்கும் அளவிற்கு உருண்டையான தினைமாவினைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது கிட்டத்தட்ட நல்ல திரட்சியான தேங்காய் அளவிற்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன். மாவுருண்டையில் தேன் கலந்திருந்தால் தான் நம்மால் அதனை உண்ண முடியும். அப்படி மாவின் மூன்றில் ஒருபங்கு தேன்கலந்து உருண்டை பிடித்து நாவில் சுவைத்து உண்டு விட்டால்போதும், இரண்டு நாட்களுக்குப் பின்னர் கூட நிதானமாகத் தான் பூனையைப் போல எட்டிப் பார்க்கும். அவ்வளவு ஆற்றல் நிரம்பியது தினைமாவும், அதனுடன் கலந்த தேனும். என்னதான் நமக்கு இனிப்பு பிடிக்குமென்றாலும் இரண்டு தேக்கரண்டிக்கு மேல் தேனைக் குடித்து விட முடியாது. அதுபோலவே தினைமாவு நல்ல ஆற்றல் தரக்கூடியது என்றாலும் எலுமிச்சம் பழ உருண்டை அளவிற்கு மேல் அதனைத் தனியாக உண்டு விட முடியாது. ஆனால் தேனைத் தினைமாவில் ஊற்றிப் பிசைந்தால் ஒரு தேங்காய் அளவிற்குத் தின்று விடலாம்.
தேனும், தினைமாவும் எனில் அது இன்றளவும் மலைப்பகுதியில் மட்டுமே கிடைக்கக் கூடியது. ஆனால் தினை விளைச்சல் சமநிலத்தில் கிட்டத்தட்ட தமிழகத்தில் டெல்ட்டா, கடலோரப் பகுதி தவிர்த்து அனைத்துப் பகுதிகளிலும் விளையக்கூடியது. பசுமைப்புரட்சி என்று சொல்லப்பட்ட சிறுதானியங்கள் அழித்து ஒழிக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் எழுபதுகள் எண்பதுகளோடு தினை விளைச்சலும் குறைந்து விட்டது. ராகியும் கம்பும் விளையும் அளவிற்கும் கூட தினை விளைவிக்கப்படுவதில்லை.
இள மஞ்சள் நிறத்தில் கேழ்வரகைக் காட்டிலும் சிறிய தானியமான தினையின் மேலோடு நீக்கிய பின்னரே சமைக்க முடியும். தினைச்சோறு அவ்வளவாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அதீத சத்துக்கள் நிரம்பிய உணவுத் தானியத்தைத் தனியாக ஒரு அளவிற்கு மேல் எடுத்துக் கொள்ள முடியாது. அதனை உளுந்துடன் சேர்த்து (தினை ஐந்தில் ஒருபங்கு உளுந்து) அரைத்து நான்கு மணிநேரம் புளிக்க வைத்துத் தோசையாக ஊற்றினால் சாதாரணமாகவே நெய் விட்டுச் சுட்டது போல சுவையும் மொறுமொறுப்பும் அபாரமாக இருக்கும். நார்ச்சத்தும் வறள் தன்மையும் அதிகம் என்பதால் தோசையாக ஊற்றுவதற்கு மிகவும் ஏற்றது தினை. மேலும் தோசைக்கல்லுக்கு அதிக வெப்பம் ஏற்றாமலே குறைவான சூட்டில் அழகாக நல்ல நிறமாகப் பெயர்ந்து வரும் தோசை. அப்படியே சுவையும் மொறுமொறுப்பாக இருக்கும். கர்நாடகாவில் தினைமாவை ஊறவைத்து அதனுடன் சிறிதளவு உளுந்தும், புளியும் சேர்த்தரைத்து அடையாகச் சுடுவதாகக் கேள்வி.
தினையில் உள்ள மெதுவாகக் கரையும் நார்ச்சத்து இருப்பதால் நாம் உண்ட பின்னர் மிகவும் நிதானமாகவே சத்துக்களாக மாற்றப்படும். எனவே ரத்தத்தில் சர்க்கரையை அவ்வளவு எளிதில் ஏற்றாது. இரைப்பையில் தங்கும் பொழுது உருவாகும் தனிச்சிறப்பு மிக்க பாந்தோனிக் மற்றும் பிரெனுலிக் அமிலங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கவல்லவை. முன்னரே சொன்னது போல ரத்தத்தை பெருக்கவல்லது என்பதால் ஆண்களுக்கு வீரியத்தை வழங்குவதாகவும் இருக்கும்.
காதல் குருவிகளுக்கும், 300 கிமீ நிற்காமல் நீண்டதூரம் பறக்கும் புறாக்களுக்கும் மிகவும் பிடித்த உணவு தினைத்தானியந்தான். ஏனென்றால் உடலில் வெப்பத்தை நிதானமாக ஏற்றி சத்துக்களை வழங்கிக் கொண்டே இருப்பதால் தான் புறாவால் அவ்வளவு தொலைவிற்கு நிற்காமல் பறக்க முடிகிறது. பறவைகளிலேயே அதிக வெப்பத்தைத் தக்க வைத்திருப்பது புறாதான். ஆகையால் தான் மூச்சிரைப்பு, தொடர் சளித்தொல்லை போன்ற நோய்களுக்கு புறாக்கறியை தேர்ந்தெடுத்து உண்கிறார்கள். புறாவின் ரத்தம் நம்முடைய தலைமுடிக்குத் தேவையான புரதத்தை வழங்குவதாகச் சொல்லப்படுவது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புறாவின் ஆற்றலுக்கு ஆதாரமானது தினை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.
தினையின் நார்ச்சத்துகூறுகள் நம்முடைய சிறுகுடல், பெருங்குடலுக்கும் நன்மை செய்பவை. குடலில் நீண்ட நேரம் தங்குவதால் உடலில் சுரக்கும் சுரப்புகளை சீரமைக்கிறது. குறைவாக எடுத்து நீடித்த ஆற்றலை வழங்கும் வகையில் உடல் எடையைக் குறைப்போர் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தானியம் தினை.
தொடர்ந்து பார்ப்போம் தானியங்களின் சிறப்பு குறித்து...
- என் மகளை எப்படி கையாளுவது என்று எனக்கே தெரியவில்லை டாக்டர் என்பார்கள்.
- பெண் குழந்தை சிறந்த கல்வி பெற்று எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலைக்கு சென்றால் அவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கும் என்பதை அந்த குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.
பருவ வயதில் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே அவர்களின் எதிர்பாலினத்தவர் மீது தானாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. இதில் பருவ வயது பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர் அவர்கள் அந்த பருவ வயதை எப்படி நல்லபடியாக கடந்து வர வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது இல்லை.
சினிமாவில் கதாநாயகனோ, கதாநாயகியோ தவறான பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால் இதுதான் சரியான விஷயம் என்று நினைத்து அதை கடைபிடிக்க முயல்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களை இந்த காலகட்டத்தில் நல்வழிப்படுத்தும் முயற்சிகளில் பெற்றோர் ஈடுபட வேண்டும்.
எது சரி, எது தவறு என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்:
இதனை தவிர்ப்பதற்கு சினிமா பார்க்காதே என்று அவர்களிடம் சொல்ல முடியாது. ஆனால் அதில் எது சரி, எது தவறு என்பதை தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். அதையும் சொல்கிற விதத்தில் சொல்ல வேண்டும். நீ இதை செய்யாதே என்று சொல்வதை விட, இந்த தவறை நீ செய்யும்போது என்னென்ன பின் விளைவுகள் ஏற்படலாம் என்பதை உதாரணத்துடன் தெளிவாக சொல்ல வேண்டும்.
தாய்மார்கள் பலர் பள்ளி வகுப்புதான் முடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி உதாரணத்துடன் சொல்ல முடியும் என்று ஒரு கருத்தரங்கில் என்னிடம் சிலர் கேட்டனர். பருவ வயதில் ஏற்படும் பாலின ஈர்ப்பு பற்றி ஒரு பெண்ணுக்கு தனது தாயாரிடம் கேட்க தெரியாது. ஆனால் அந்த குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபடும்போது அது தவறு என்பது அவரது தாயாருக்கு தெரியும்.
எனவே சில நேரங்களில் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருந்தால் கூட அந்த குழந்தைகள் செய்யும் தவறால் பிரச்சினைகள் வரும் என்று கருதி அந்த குழந்தையை பாதுகாக்க அனைத்து தாய்மார்களும், அவர்களுடைய தந்தைகளும் முயற்சி செய்வார்கள். அப்படியென்றால் அதற்கான வழிமுறைகளை உதாரணத்துடன் சொல்வது எப்படி என்று அவர்கள் யோசிக்க வேண்டும்.
அவர்களுக்கு தெரியவில்லை என்றால் அவர்களைவிட பெரியவர்களாக, அனைத்தும் தெரிந்தவர்களாக ஒரு ஆசிரியர் இருக்கலாம். அல்லது அவர்களுக்கு நல்லது செய்யும் ஒரு பெரிய மனிதர் இருக்கலாம். அவர்களிடம் போய் கேட்கலாம். இதை கண்டிப்பாக பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மூலம் தங்களின் மகளை நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
குழந்தைகளின் தோழியாக பெற்றோர் மாற வேண்டும்:
தங்களின் மகள் நிலைமை பற்றி என்னிடம் வரும் நோயாளிகள் சிலர் கூறுவது உண்டு. என் மகளை எப்படி கையாளுவது என்று எனக்கே தெரியவில்லை டாக்டர் என்பார்கள். என் மகள் என்னிடம் சண்டை போடுகிறாள். தன்னுடைய தோழிகளுடன் சினிமாவுக்கு போவேன் என்று சொல்கிறாள். ஞாயிற்றுக்கிழமை லீவு என்றால் வெளியில் செல்ல வேண்டும் என்று சொல்கிறாள்.
அவளை எப்படி பாதுகாப்பாக அனுப்புவது என்று எனக்கு தெரியவில்லை. அவள் அங்கு போய் ஏதாவது தப்பாக நடந்து கொள்வாளோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. எனவே அவளை எப்படி நல்வழிப்படுத்துவது என்றே எனக்கு தெரியவில்லை என்று நிறைய பெற்றோர்கள் சொல்கிறார்கள்.
அதே நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம், தோழிகளுடன் வெளியில் செல்வது தப்பு என்று கூறினால், அதன்பிறகு அவர்கள் உங்களிடம் வேறு ஏதாவது காரணத்தை கூறி உங்களிடம் சொல்லாமல், உங்களுக்கு தெரியாமல் வெளியில் போவார்கள். ஏனென்றால் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் நட்புறவோடு பழகவில்லை.
நீங்கள் நட்புறவோடு பழகாததால் பருவ வயதில் ஏற்படும் பாதிப்புகளுக்கான தீர்வுகளை அவர்கள் தங்களின் தோழிகளிடம் போய் கேட்கிறார்கள். எனவே இதில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளின் தோழியாக மாற வேண்டும்.
அவர்களுக்கான அந்த தோழி நீங்களாக இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை எளிதாக தீர்க்க முடியும். பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்திருந்தாலும் உங்கள் மகளுக்கு நல்வழி காட்டும் உங்களை மிஞ்சிய தோழி வேறு யாரும் இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் மகளிடம் உனக்கு என்னம்மா பிரச்சினை? உனக்கு நான் என்ன பண்ண வேண்டும்? உனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தயங்காமல் சொல், தீர்த்து வைக்கிறேன் என்று நீங்கள் போய் அவர்களிடம் பேசினால் அவர்கள் தினமும் நடக்கும் ஏதாவது ஒரு விஷயத்தையோ அல்லது சம்பவங்களையோ உங்களிடம் சொல்வார்கள்.
அப்போது அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு சொல்ல உங்களுக்கு தெரியவில்லை என்றால் கூட, அதை குறையாகவோ, குற்றமாகவோ சொல்லாமல், இதை எப்படி சரி செய்வது என்று உங்களுக்கு தெரிந்த அனுபவமிக்க யாரிடமாவது கேட்க வேண்டும்.
நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் பழகியவர்கள், உங்களுடன் படித்தவர்கள், உங்களை விட அதிக விஷயங்களை தெரிந்தவர்கள் என அவர்களிடம் போய் கேட்கலாம்.
குழந்தைகளை வழி நடத்துவதற்கான ஆலோசனை:
எனக்கு தெரிந்து ஒரு பெண் தூய்மை பணியாளர் இருந்தார். அவரது மகளுக்கு பருவ வயதில் இந்த மாதிரி ஒரு பிரச்சினை. அவர் தான் வேலைபார்க்கும் மருத்துவமனையின் நிர்வாகியான பெண் மருத்துவரிடம் போய் இதை சொன்னார். டாக்டர் எனது மகளுக்கு 16 வயதாகிறது. அவள் ஒரு பையனை காதலிக்கிறேன் என்று சொல்கிறாள். அவள் தடம் மாறி செல்வதால் இதை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்று சொன்னார்.
இதை அவர் அந்த மருத்துவரிடம் போய் சொல்லக் காரணம், அவரால் தனது மகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்பாடு விதித்தால் அவள் வரம்புமீறி போய் விடுவாளோ அல்லது தப்பு பண்ணி விடுவாளோ என்று பயந்தார்.
இதுபோல் தான் இந்த காலகட்டத்தில் நீங்கள் அவர்களை நல்ல முறையில் வழி நடத்துவதற்கு விஷயம் தெரிந்த ஒருவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். இந்த ஆலோசனை உங்கள் குழந்தைகளை வழி நடத்துவதற்கு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
அதே நேரத்தில் அவர்களை உங்கள் குழந்தைகளுக்கு நேரடியாக ஆலோசனை சொல்ல வைக்கக்கூடாது. அப்படி அவர்கள் உங்கள் மகளிடமே நேரடியாக ஆலோசனை சொன்னால், அதன் பிறகு அவர்கள் உங்களை ஒரு வழி பண்ணி விடுவார்கள். நீ அவர்களிடம் என்னைப்பற்றி சொல்லி விட்டாயா? என்னைப்பற்றி அசிங்கமாக சொல்லி விட்டாயா? அவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்று சொல்வார்கள்.
எனவே அவர்களிடம் இருந்து நீங்கள் ஆலோசனையை பெற்று அதை நீங்கள் உங்கள் மகளுக்கு புரியும் விதத்தில் சொல்ல வேண்டும். அவர்களுடைய எதிர்கால நோக்கம் என்ன என்பதை தெளிவாக யோசித்து சொல்ல வேண்டும்.
உங்கள் வாழ்க்கையையே உதாரணமாக கூறி விளக்கலாம்:
இன்று அந்த குழந்தையின் தாய் ஒரு தூய்மை பணியாளராக இருக்கிறார். அவர் தனது குழந்தையை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இந்த பெண் குழந்தை சிறந்த கல்வி பெற்று எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலைக்கு சென்றால் அவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கும் என்பதை அந்த குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.
அவர் தினமும் பார்க்கின்ற அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள் எந்த மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது? அவர்களின் முன்னேற்றத்துக்கான காரணம் படிப்பும் கல்வியும் தான் என்று அந்த குழந்தைக்கு நீங்கள் போதிய உதாரணங்களை கூறி நன்றாக புரிய வைக்க வேண்டும்.
இது போன்ற குழந்தைகளிடம் நீ செய்தது தவறு என்று சொல்வதை விட, இந்த கால கட்டத்தில் பக்குவமாக நீ யோசித்து முடிவு செய்து, கல்வியில் கவனம் செலுத்தினால் உன் வாழ்க்கை எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்பதை அவர்களின் நிலையில் இருந்து உதாரணத்துடன் எடுத்துக்கூறினால் அவர்கள் நல்வழிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது.
உதாரணத்துக்கு அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடமோ அல்லது அலுவலகத்தில் உள்ள மானேஜரிடமோ மகளை அழைத்து சென்று காண்பித்து இவர்கள் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது பார். இவர்கள் வாழ்க்கையில் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் கல்வி. நான் கல்வி கற்காததால் தூய்மைப் பணியாளராக இருக்கிறேன் என்பது போல நீங்கள் செய்யும் வேலையையும், உங்களையும் உதாரணமாக காண்பித்து கூறலாம்.
அப்படி சொல்லும்போது அந்த குழந்தைக்கு நிஜ வாழ்க்கை புரியும். ஆனால் அந்த குழந்தைகளிடம் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதித்த பிரபலங்களை காட்டி நீ அவரை போல் ஆக வேண்டும். அதற்காக உனது இலக்கை நோக்கி செல் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள்.
ஆனால் உங்கள் வீட்டில் இருக்கிற உங்களுடைய வாழ்க்கைத் தரத்தையும், உங்கள் அலுவலக அதிகாரியாக இருக்கின்ற பெண்ணின் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிட்டு கூறினால் புரிந்து கொள்வார்கள்.
இதுபற்றி உங்களின் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காக நீங்கள் மருத்துவர்களிடம் கூட கலந்தாலோசனை செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் என்னென்ன சிறந்த அறிவுரைகள் கூறலாம் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- கிரக அமைப்பு உலக வரலாற்றில் இடம் பெறக் கூடிய சம்பவங்களை ஏற்படுத்தலாம்.
- விருப்ப விவாகம் பதிவு திருமணம் அதிகம் நடக்கும்.
ஜோதிடம் என்பது அறிவியல் கலந்த ஒரு கணித அமைப்பு. அறிவியல் வளராத காலத்தில் வானியல் கிரக நிலவரங்களை ஞான திருஷ்டியால் உணர்ந்து சித்தர்கள் மற்றும் ஞானிகளால் உலகிற்கு வழங்கப்பட்ட கலை ஜோதிடமாகும். நடக்கப்போகும் அனைத்து சம்பவங்களும் பெரும்பான்மையாக துல்லியமாக கணக்கிடப்பட்டு பஞ்சாங்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது கோச்சாரத்தில் 2025-ம் ஆண்டு நவகிரகங்களும் பெயர்ச்சியாகின்றன. அதில் வருட கிரகங்களான சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி தற்போது மீன ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். குருபகவான் 14.5.2025 முதல் மிதுன ராசிக்கு செல்கிறார். 18.5.2025 முதல் ராகு பகவான் கும்ப ராசியிலும் கேது பகவான் சிம்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள்.
கோச்சார ரீதியாக குருபகவானின் ஒன்பதாம் பார்வை கும்ப ராசியில் இருக்கும் ராகுபகவானை பார்க்கிறார். இந்த கிரக சம்பந்தத்தால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த கிரக அமைப்பு உலக வரலாற்றில் இடம் பெறக் கூடிய சம்பவங்களை ஏற்படுத்தலாம்.
குரு பகவான்: கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் குரு ஒன்பது மற்றும் பனிரெண்டாம் இடத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். ஒன்பதாமிடம் என்பது பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், தூர தேச பயணம், பூர்வீக சொத்தைப் பற்றி அறியுமிடம். பனிரெண்டாம் இடம் என்பது வெளி நாட்டு பயணம், அலைச்சல், செலவினம், துறவரம் போன்றவற்றை குறிக்கும். தனம், புத்திரம், பூர்வீகம், கவுரவம் (பாரம்பரியம்), தங்கம் போன்றவை குருகிரகத்தின் முக்கிய காரகத்துவங்கள்.
ராகு: ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை அழிப்பது ராகுவின் குணமாகும். தான் சஞ்சாரம் செய்யும் ராசியின் தன்மைகளை அழிக்கும் சக்தி படைத்த கிரகம் ராகு. தான் நின்ற ராசியின் பலன்களை ஒருவரை அனுபவிக்க விடாமல் தடை செய்பவர். ராகுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் தான் நின்ற வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார். ராகு ஒரு ஜாதகத்தில் வலுத்தால் ராகுவின் காரகத்துவங்களான நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, மதம் மாறுவது, அந்நிய நாட்டிற்கு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷம் அருந்த செய்தல், கூட்டு மரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு,மாந்திரீகம், பிறரை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சனைகளால் பாதிப்பு உண்டாகும். பிரமாண்ட சிந்தனை, தடை, புதுமை, பாட்டன், போன்றவை முக்கியமான ராகுவின் காரகத்துவங்கள்.

ஐ.ஆனந்தி
குரு சண்டாள யோகத்தின் விளைவுகள்
புனித கிரகமான குரு பகவான் அழிவு கிரகமான ராகுவை பார்க்கிறார். குரு பார்வை பட்ட இடத்தின் பலன்கள் பெருகும் என்பது ஜோதிட விதி. எதையும் பெருக்கும் தன்மை கொண்ட குருவின் பார்வை அழிக்கும் தன்மை கொண்ட ராகுவின் மேல் பதிவதால் அசுபங்கள் பெருக வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது உலகில் நிலவி வரும் போர் பதற்றமும் தங்கத்தின் விலை ஏற்றமும் இதற்கு சான்றாகும்.
பங்குச் சந்தை: ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பங்குச் சந்தை பெரும் பங்கு வகிக்கிறது.
நாட்டின் பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் பணவசதி படைத்தவர்கள் பலரின் பெரும் மூதலீடுகள் பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்யப்படுகிறது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவைகள் தங்களுடைய உபரி வருமானத்தை பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்கிறார்கள்.
பங்குச் சந்தை முதலீடு அபாயகரமானது என்று தெரிந்தும் பங்குச் சந்தை வணிகத்தின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகும். ஆன் லைன் வர்த்தகம் எனும் பங்குச் சந்தை வர்த்தகம் தற்போது நடுத்தர மக்களையும் குறிவைக்க துவங்கியுள்ளது. 500, 1000 என சிறிய லாபத்தை சம்பாதித்தவர்கள் புலி வாலை பிடித்த கதையாக பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வாழ்வாதாரத்தை பங்குச்சசந்தையில் இழக்கிறார்கள்.
பங்குச் சந்தை முதலீடுகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உபரி வருமானத்தைத் தரும் தொழிலாகவும் சாமானியர்களுக்கு பாதகத்தை மிகைப்படுத்தும் தொழிலாகவும் மாறும். ஜோதிடரீதியாக யூக வணிகமெனும் பங்கு வர்த்தகத்திற்கும் ராகுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. கோட்சார ராகு மற்றும் புதன் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயம் செய்கின்றன. கோட்சாரத்தில் குரு மற்றும் ராகுவுடன் சம்பந்தம் பெறும் காலங்களில் பங்கை வாங்கிய அன்றே விற்கும் தின வர்த்தகத்தில் ஈடுபடாமல் நிலையான நீண்ட கால முதலீட்டு முறையில் தரமான கம்பெனி பங்குகளில் முதலீடு செய்பவர்கள் பெரும் பணம் சம்பாதிக்கலாம்.
ரியல் எஸ்டேட்: நாட்டில் பெரும் பணம் புரளும் தொழில்களில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று. ரியல் எஸ்டேட் என்ற சொல்லை கேட்டாலே பலருக்கும் மனதில் இனம் புரியாத ஒரு சந்தோசம் ஏற்படும். ஏனென்றால் சிறிய முயற்சியில் பெரும் லாபத்தை தரும் இந்த தொழிலை முயன்று பார்க்காதவர்களே கிடையாது. சிறிய பெட்டி கடை வைத்து இருப்பவர்கள் முதல் பெரிய தொழில் அதிபர்கள் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் சம்பாதித்து இருப்பார்கள். கட்டுமானத் தொழிலுக்கும் ரியல் எஸ்டேட்டுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
மிக வேகமாக வளர்ந்து மிகப் பெரிய அளவில் வீழ்ந்ததில் கட்டுமான தொழிலும் ஒன்று.
தற்போது குரு ராகு சம்பந்தம் இருப்பதால் நடுத்தர மக்கள் பலரும் கடன் வாங்கி சொந்த வீடுகளில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகள், இதனை முதலீட்டுப் பத்திரங்களாக மாற்றும். அதீத வட்டியால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு அச்சம் கூடும்.
ஒரு கட்டத்தில் சொத்துக்களின் மதிப்பு கூடாமல் அசலை விட வட்டி மிகுதியாகுவதை உணர்ந்து மக்கள் வீடுகளை விற்று கடனை முன்கூட்டியே அடைக்க முயல்வார்கள்.
அதனால் பங்குப் பத்திரத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் பெரும் சிக்கலைச் சந்திப்பார்கள். வீடுகளின் விற்பனை எந்த வேகத்தில் அதிகரித்ததோ, அதே வேகத்தில் குறைய ஆரம்பிக்கும். நடுத்தர வர்கத்தினர் 60 சதவீதம் சொந்த முதலீடு 40 சதவீதம் கடன் உதவி பெற்று சொத்துக்களை உருவாக்கினால் பாதிப்பு ஏற்படாது.
தங்கம்: உலகத்தின் முக்கிய வர்த்தக பொருட்களில் ஒன்றானது தங்கம். பளபளக்கும் உலோகமான தங்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
தங்கத்தை வாங்காத நாடுகள் இல்லை. விரும்பாத மக்கள் இல்லை. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் தங்க வயல் மூடப்பட்டதால் இந்தியாவில் தங்கம் உற்பத்தி இல்லை என்பதால் மொத்த தங்கமும் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதியாகிறது.
சர்வதேச சந்தைகளே தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஓராண்டுகளாக தங்கத்தின் பயன்பாட்டில் நிலவிவரும் ஏற்ற இறக்கங்கள் பொருளாதார வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கத்தின் விலை விண்ணை முட்டும். அதிக தங்கம் வைத்திருப்பவர்கள் பணக்காரப் பட்டியலில் சேருவார்கள்.
சில பொது பலன்கள்
குரு என்றால் குழந்தை, தங்கம். பெரும் பணம், தெய்வ அனுகூலம். குழந்தைகளை சொந்த பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை நகைகளை இரவல் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய தேவைகளுக்கு அரசுடமை வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்க வேண்டும். அருகில் உள்ள வட்டி கடையில் வைக்க கூடாது.
பெரும் பணம் புரளும் தொழில் மற்றும் வட்டித் தொழில் செய்பவர்கள் ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைக்கான முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அதிக ரொக்க பணம் கையில் வைத்திருக்க கூடாது.
அவரவரின் தசா புத்திக்கு ஏற்ப மத நம்பிக்கை குறையும் அல்லது அதிகமாகும். ராகு நிற்பது நெருப்பு ராசி. குரு பகவான் நிற்பது காற்று ராசி. திரையரங்கம், தங்கும் விடுதி, மருத்துவமனை, உணவகம் நடத்துபவர்கள், தொழிற்சாலை நடத்துபவர்கள் நீர், நெருப்பு, காற்று சார்ந்த பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இயற்கை பேரிடர்களாகவும், நோயாகவும், விபத்தாகவும், உலக நாடுகளுக்கு இடையே இணக்க மற்ற சூழல், போர் அபாயம், பொருளாதார வீழ்ச்சி போன்ற வைகள் ஏற்படலாம். செயற்கை கருத்தரிப்பு அதிகரிக்கும். குளோனிங் குழந்தைகள் பிறக்கலாம்.
வீட்டில் பயன்படுத்தாத தேவையற்ற எலக்டானிக் சாதனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு மோகம் அதிகரிக்கும். தொழில் உத்தியோகத்திற்காக பலர் வெளிநாடு செல்வார்கள். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உச்ச கட்டத்தை தொடும்.
கிரடிட் கார்டு பயன்பாடு, கடன் கலாச்சாரம் அதிகமாகும். போலி பத்திரம் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகும். விருப்ப விவாகம் பதிவு திருமணம் அதிகம் நடக்கும். பல மொழி கற்கும் ஆர்வம் கூடும். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மிகப்பெரிய நம்பிக்கை மோசடிகள் நடைபெறும்.
அரசு உயர் பதவியில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள், அதிகாரம் மிக்க அரசியல் பொறுப்பில் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு பதவி பறிபோகும். புதிய ஆன்மீக குருமார்கள் மடாதிபதிகள் பொறுப்பேற்பார்கள்.
பல புகழ்பெற்ற ஆன்மீக தொடர்புடைய நபர்கள் முக்தியடைவார்கள். போர் தளவாட பொருட்களின் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும். சில புண்ணிய சேத்ரங்களுக்குச் சென்று சன்னியாசியாக மாறி விடுவார்கள். சிலர் லவுகீகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் மாட்டிக் கொண்டு வாழவும் முடியாமல் வீழவும் முடியாமல் தவிப்பார்கள்.
பூமியில் உயிர்கள் வாழத் தேவையான அனைத்து வளங்களும் பிரபஞ்சம் உலக உயிர்களுக்கு வழங்கிய நன்கொடை . நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்ச பூத தத்துவங்களையும் உள்ளடக்கியதே பிரபஞ்சவளம். மனிதன் பூமியை படைத்தானா? அல்லது பூமி மனிதனை படைத்ததா? என்று வியக்கும் வகையில் மனிதன் தன் அறிவால் பல விசித்திர, விநோத கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறான்.
ஆனால் இயற்கையின் உதவி இல்லாமல், இயற்கை அனுமதிக்காமல் பிரபஞ்ச சக்திகளான பஞ்ச பூதங்களை பயன்படுத்தாமல் எந்த விந்தை, விநோதமும் கண்டு பிடிப்பும் மனிதனுக்கு சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பஞ்ச பூதங்களும் நவ கிரகங்களும் இணைபிரியா சக்திகள். நவகிரகங்கள் தங்களின் இயக்கங்களினால் உலகிற்கு நன்மை மற்றும் தீமைகளை பஞ்ச பூதங்கள் வாயிலாகவே வெளிப்படுத்தும். மனிதன் இயற்கையின் கொடைகளை ஆக்கத்திற்கு பயன்படுத்தும் போது நவகிரகங்களின் பரிபூரண நல் ஆசிகள் பூமிக்கு கிடைக்கும்.இயற்கை வேறு நவகிரகங்கள் வேறு அல்ல. இயற்கையை போற்றினால் நவகிரகங்களின் நல்லாசிகள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கும்.
- திருச்செந்தூர் சண்முகருக்கு அர்ச்சகர்கள் விசிறியால் வீசிக் கொண்டிருந்தனர்.
- சண்முகரின் இயல்பு தெரியாததால் தவறாக கேட்டு விட்டேன்” என்று கூறினார்.
திருச்செந்தூர் ஆலயத்தில் சண்முகம், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாயுபெருமாள் என்று நான்கு உற்சவர்கள் உண்டு. அறுபடை வீடுகளில் எந்த தலத்திலும் இல்லாத வகையில் திருச்செந்தூர் ஆலயத்தில் மட்டுமே 4 உற்சவர்கள் இருக்கிறார்கள். இந்த 4 உற்சவர்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.
அதுபோல இந்த 4 உற்சவர்களும் முக்கிய விழா நாட்களில் மூலவருக்கு பதிலாக வெளியில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். குறிப்பாக சண்முகர் அதிக விழாக்களில் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். பெரும்பாலும் திருச்செந்தூர் ஆலயத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக சண்முகவிலாசம் மண்டபத்தில் அமர்ந்து அவர் அருள்பாலிப்பார்.
1803-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது ஒருநாள் சண்முக விலாசம் மண்டபத்தில் வீற்றிருந்து சண்முகர் பக்தர்களுக்கு காட்சி அளித்துக் கொண்டிருந்தார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அவருக்கு இருபுறமும் 2 அர்ச்சகர்கள் நின்று விசிறியால் சண்முகருக்கு வீசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நெல்லை ஜில்லாவின் கலெக்டராக இருந்த ஆங்கிலேயரான லூசிங்டன் என்பவர் அங்கு வந்தார். கலெக்டர் லூசிங்டன் ஒவ்வொரு நாளும் நெல்லை ஜில்லாவின் ஒவ்வொரு பகுதிக்கு சென்று வரி வசூல் எப்படி நடக்கிறது என்பதை பார்வையிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார்.
அந்த வகையில்தான் அவர் அன்று திருச்செந்தூர் ஆலயத்தில் மக்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளவும், வரி வசூல் எப்படி இருக்கிறது? என்பதை ஆய்வு செய்யவும் வந்து இருந்தார். அந்த சமயத்தில்தான் அவர் உற்சவர் சண்முகருக்கு 2 அர்ச்சகர்கள் விசிறியால் வீசிக் கொண்டிருப்பதை பார்த்தார்.
சண்முகருக்கு தினமும் ஷோசட உபச்சாரம் செய்வது உண்டு. ஷோசட என்றால் 16 வகையான உபச்சாரம் என்று பொருள். அதில் ஒன்று சுவாமிக்கு சாமரம் வீசுவது ஆகும். விசிறியால் வீசி இறைவன் நல்ல மனநிலையில் இருப்பதற்கு செய்வதாக இந்த உபச்சாரத்தை சொல்வார்கள்.
அதன்படி தான் அன்றைய தினம் திருச்செந்தூர் சண்முகருக்கு அர்ச்சகர்கள் விசிறியால் வீசிக் கொண்டிருந்தனர். இதை கண்டதும் கலெக்டர் லூசிங்டனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவருக்கு கடவுள் மீது கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. என்றாலும் கடவுளுக்கு செய்யப்படும் ஆராதனைகள் எதையும் தடுத்து நிறுத்த மாட்டார்.

மாறாக குறைகள் இருந்தால் அதை தீர்த்து வைக்கும் மனஇயல்பு கொண்டவராக இருந்தார். அப்படிப்பட்டவருக்கு சண்முகருக்கு வீசிறியால் வீசப்படும் காட்சி புரியாத புதிராக இருந்தது. சிரித்தபடியே உற்சவர் சண்முகர் அருகில் சென்றார்.
சண்முகர் விக்கிரகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு விசிறிக் கொண்டிருந்த 2 அர்ச்சகர்களை பார்த்து, "உங்கள் முருகனுக்கு வியர்க்குமா?" என்று கேட்டார். அவரது கேள்வியில் கேலியும் கிண்டலும் நிரம்பி இருந்தது.
உடனே அர்ச்சகர்களில் ஒருவர், "ஆம் எங்கள் முருகனுக்கு தினமும் வியர்க்கும். அவர் வியர்வையால் அவதிப்படக் கூடாது என்பதற்காகத்தான் அவருக்கு இருபுறமும் நின்று சாமரம் வீசுகிறோம். இது பல நூற்றாண்டுகளாக இந்த ஆலயத்தில் நடைமுறையில் உள்ள ஒரு விசயம் ஆகும்" என்றார்.
இதை கேட்டதும் கலெக்டர் லூசிங்டனுக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது. அவரால் இதை கொஞ்சமும் நம்ப இயலவில்லை. உற்சவர் சண்முகர் சிலை உலோகத்தால் செய்யப்பட்டதாகும். அந்த உலோகத்தில் இருந்து வியர்வை தண்ணீர் எப்படி ஆறாக பெருக்கெடுத்து ஓடி வரும் என்று நினைத்தார்.
அதுமட்டுமின்றி சண்முகருக்கு அணிவிக்கப்பட்ட வகை வகையான மலர் மாலைகளில் இருந்து தண்ணீர் துளிகள் உலோகத் திருமேனியில் பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டார். தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ள அர்ச்சகர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
"உங்கள் முருகனுக்கு வியர்த்துக் கொட்டுவதை நான் எனது 2 கண்களால் பார்க்க வேண்டும். எனவே சண்முகர் மீது அணிந்து இருக்கும் வஸ்திரங்களையும், மலர் மாலைகளையும் அகற்றுங்கள். அதன் பிறகு அவருக்கு வியர்க்கிறதா? என்று பார்ப்போம்" என்று கூறினார்.
இதை கேட்டதும் 2 அர்ச்சகர்களும் ஆடிப்போனார்கள். என்ன செய்வது என்று யோசித்தனர். ஜில்லா கலெக்டர் உத்தரவிட்டதால் மீற முடியாது என்று கருதி சண்முகருக்கு அணிவிக்கப்பட்டு இருந்த வஸ்திரங்களையும், மலர் மாலைகளையும் அகற்றினார்கள்.
சண்முகர் எந்த அலங்காரமும் இல்லாமல் வெறுமையாக இருந்தார். அவரது முகம் பாவனைகள் சிரிப்பது போல இருந்தது. அவரையே பார்த்த கலெக்டர் லூசிங்டன் அந்த விக்கிரகத்தை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்று நினைத்தார்.
நாற்காலி ஒன்றை கொண்டு வருமாறு உத்தரவிட்டார். நாற்காலி வந்ததும் அதை சண்முகர் விக்கிரகம் அருகில் வைக்குமாறு உத்தரவிட்டார். அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு உற்சவர் சண்முகரின் முகத்தையே கலெக்டர் லூசிங்டன் கண் கொட்டாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
என்ன ஆச்சரியம். ஓரிரு நிமிடங்களில் சண்முகர் முகத்தில் இருந்து வியர்வை துளிகள் தோன்றின. நேரம் செல்ல செல்ல வியர்வை துளிகள் முத்து முத்தாக அரும்பி நின்றன. அடுத்த சில நிமிடங்களில் அந்த வியர்வை வழிந்தோட தொடங்கியது.
சண்முகர் சிலையில் இருந்து தரை வரைக்கும் வியர்வை ஆறாக ஓடியது. இதை கண்ட கலெக்டர் லூசிங்டன் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். கைகளை கூப்பி தன்னையும் அறியாமல் சண்முகரை வணங்கினார்.
சண்முகருக்கு எல்லா உணர்வுகளும் உண்டு என்பதை மனதார ஏற்றுக் கொள்வதாக அங்கிருந்த அர்ச்சகர்களிடம் தெரிவித்தார். அதோடு மட்டுமின்றி உற்சவர் சண்முகரை மற்ற பக்தர்கள் போல விழுந்து வணங்கினார். பிறகு 2 அர்ச்சகர்களையும் பார்த்து, "என்னை மன்னித்து விடுங்கள். சண்முகரின் இயல்பு தெரியாததால் தவறாக கேட்டு விட்டேன்" என்று கூறினார்.
பிறகு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சென்றார். அங்கு வீட்டுக்கு சென்ற போது அவரது மனைவி கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வெப்ப நோய் ஏற்பட்டு இருந்தது.
உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். மருந்து-மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் கலெக்டர் லூசிங்டனின் மனைவிக்கு ஏற்பட்ட வெப்ப நோய் குறையவில்லை. அந்த நோயை அந்த காலக்கட்டத்தில் 'சூலை நோய்' என்று சொல்வார்கள்.
சூலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்செந்தூர் ஆலயத்துக்கு சென்று அங்கு வழிபட்டு பன்னீர் இலையில் தரும் விபூதி பிரசாதத்தை பயன்படுத்தினால் குணமாகும் என்பது அந்த காலத்தில் நம்பிக்கையாக இருந்தது. இதை ஒரு மருத்துவர் மூலம் கலெக்டர் லூசிங்டன் அறிந்தார்.
திருச்செந்தூர் ஆலயத்து உற்சவர் சண்முகரை சோதித்து பார்த்ததால்தான் தனது மனைவிக்கு சூலை நோய் வந்து இருக்கலாம் என்று அவர் நினைத்தார். அன்றே திருச்செந்தூர் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார். பன்னீர் இலை பிரசாதத்தை பெற்று வந்து தனது மனைவிக்கு கொடுத்தார்.
அந்த பிரசாதத்தை பயன்படுத்தியதும் லூசிங்டன் மனைவிக்கு இருந்த சூலைநோய் அகன்றது. இந்த அனுபவம் கலெக்டர் லூசிங்டனுக்கு பிரமிப்பை கொடுத்தது. திருச்செந்தூர் ஆலயத்துக்கு மிகப்பெரிய அளவில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
அதன்படி ஆலய பூஜை பயன்பாட்டுக்காக பல்வேறு வகையான வெள்ளிப் பாத்திரங்களை வாங்கி பரிசாக கொடுத்தார். அந்த பாத்திரங்களில் சில வெள்ளிப் பாத்திரங்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அந்த பாத்திரங்களில், "லூசிங்டன்-1803" என்று பொறிக்கப்பட்டு இருப்பதை காணலாம்.
திருச்செந்தூர் முருகன் தன் வாழ்நாளில் நிகழ்த்திய இந்த அற்புதத்தை கலெக்டர் லூசிங்டன் குறிப்புகளாகவும் எழுதி வைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.
- மூச்சு உங்களின் உடல்நிலையினைக் காட்டும். மூச்சு ஆழ் மனதோடு சம்பந்தப்பட்டது.
- நிதானமான ஆழ்மூச்சு மனதினை அமைதியாக வைக்கும்.
மனசு சில நிகழ்வுகளால் ரொம்ப வலிக்குதா? ஆறாத புண்ணாக இருக்கின்றதா? குடி குடித்து அந்த வலியினை விழுங்க முடியாது. புகை பிடித்து அதனை ஊதி விட முடியாது. பட்டினி கிடந்து அந்த வலியினை சாக அடிக்க முடியாது. இந்த வேதனையை விட்டு ஓடி விட முடியாது. அமைதியாய் அமருங்கள். முடிந்த வரை உங்கள் மூச்சு ஓட்டத்தினை கவனியுங்கள். பழைய கார் ஸ்டார்ட் செய்வது போல் சத்தம் வேண்டாம். 'புஸ் புஸ்' என்று பாம்பு போல் மூச்சு விட வேண்டாம். மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். அமைதி மட்டுமே இங்கு அவசியம்.
வலியும், வேதனையும் தானே மறைந்து விடும். இது பிரபஞ்ச ரகசியம் இந்த உலகில் ஒவ்வொரு ஜீவராசி வாழ்வதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. ஆறறிவு படைத்த மனிதனுக்கு இது கூடுதலாகவே இருக்கின்றது. அந்த காரணம், அந்த செயல் உங்களை புத்துயிர் கொள்ள செய்யும். அது என்ன என்பதனை உங்களால் உங்களுக்குள் தேடி கண்டுபிடிக்க முடியும். அதனுடன் ஒன்றி விடுங்கள். வாழ்வு சீராய் செல்லும்.
தினமும் ஒரு பசுமையான மரத்தினையோ, செடியினையோ அல்லது ஆகாயத்தினையோ 5 நிமிடங்கள் அமைதியாய் சலனமின்றி பாருங்கள். மன அமைதி உங்களை ஆக்கிரமித்து விடும்.
பொறுமையாய் உணவு உண்ணுங்கள். அவசரமும் ஆரவாரமும் வேண்டாம்.
இவை அனைத்தும் உங்களுக்கு சுயகட்டுப்பாட்டினைத் தரும்.

மூச்சின் அருமை தெரியுமா?
மூச்சு என்பது உயிர் நிலைக்க மட்டும்தானா? அதற்கு மேலே பல அதிசயங்கள் இருக்கு.
மூச்சு உங்களின் உடல்நிலையினைக் காட்டும். மூச்சு ஆழ் மனதோடு சம்பந்தப்பட்டது. நிதானமான ஆழ்ந்த அமைதியான மூச்சு உங்களை அமைதிப்படுத்தும். நரம்பு மண்டலம் கூட சீராகும் என்கின்றனர் யோகா பயிற்சியாளர்கள். இருதய படபடப்பு கட்டுப்படும். தசைகள், மனம் ரிலாக்சாக இருக்கும்.
ஆழ்ந்து மூச்சு விடுதல், மூச்சு உங்களுள் உங்களை ஆழமாய் இணைக்கின்றது. தன்னைத் தானே வெறுத்து இருப்பவர்கள் தன் மீதும் அன்பு செலுத்த ஆரம்பிப்பார்கள். ஆழ்ந்த தூக்கம் இருக்கும். பழைய நினைவுகளில் சோகம் கொள்ளாமல், எதிர் காலத்தினைப் பற்றிய பயம் இல்லாமல் நிகழ் காலத்தில் அந்தந்த நொடியில் வாழ்ந்திடுவர். உடலில் சக்தி நிலை கூடும்.நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உயர் ரத்த அழுத்தம் நன்கு கட்டுப்படும்.
மன அழுத்தம் இராது. நிதானமான ஆழ் மூச்சு படப்படப்பினை நீக்கி விடும். அதே போல் உயர் ரத்த அழுத்த அபாயத்தினைக் குறைக்கும்.
நிதானமான ஆழ்மூச்சு மனதினை அமைதியாக வைக்கும். நிதானமான ஆழ்மூச்சு என்பது கவலை, கோபம், இருதய நோய், அஜீரணம், நரம்பு கோளாறு, தலைவலி இவைகளை நீக்க வல்லது.

எதிர்மறை எண்ணங்கள், எரிச்சல், குற்ற உணர்வுகள் நீங்கும். இவற்றினை யோகா பயிற்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர் ஆனால் பயிற்சியாளரிடம் இதனை முறையாய் கற்காமல் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அநேகமான ஆபத்துக்களையும் ஏற்படுத்தலாம். இப்போதெல்லாம் 'ஆரோக்கிய வழி' என்ற பிரிவில் வலியுறுத்தப்படும் ஒன்று உடல் உறுப்புகளை 'Detox' செய்யுங்கள் என்பதுதான். அதாவது உடலின் நச்சுகளை நீக்குங்கள் என்பதாகும். இதற்கான காய்கறி, பழ-ஜூஸ்கள், மூலிகை சாறுகள் என பரிந்துரைக்கப்ப டுகின்றன. சில வகை காய்களும், பழங்களும் நமக்கு மிக எளிதாகக் கிடைக்கின்றன. அவைகளை பயன்படுத்தலாமே. ஆனால் பொதுவில் ஜூசை விட சமைத்து உண்பது நார்சத்து சேர உதவும். அவரவர் விருப்பப்படி செய்யலாம்.
கல்லீரல்-பீட்ரூட், ரத்த விருத்தி-பூண்டு, பசலை, சிறுநீரகம்-தர்பூசணி, உணவு பாதை- தயிர், மோர், ஆளி விதை, சருமம்-க்ரீன்ட், சோற்று கற்றாழை, நிணநீர் மண்டலம்-எலுமிச்சை, குடல்-சியா விதைகள், பூசணி விதை, கணையம்-பட்டை (சிறிதளவே), மூளை- வால்நட், பிளாக்ஸ் விதை, ஒமேகா3, கண்கள்- காரட், தசைகள்- மக்னீசியம், வாழைப்பழம், மூட்டுகள்- மஞ்சள், ஓமோகா 3 இவற்றினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாமே. மேலும் ஆரஞ்சு பழம் என்பது ஏனோ சற்று பழக்கம் குறைவாகவே இருக்கின்றது. வைட்டமின் சி சத்து கொட்டி கிடப்பது. இதனையும் மிஞ்சும் நெல்லிக்கனி.

கமலி ஸ்ரீபால்
மாதுளை-ஜீரண சக்தி, இருதயத்திற்கு நல்லது பசித்த வயிறும், காலியான பர்சும், உடைந்த மனமும் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடங்களை கற்றுத் தந்து விடுகின்றது
* மது, சோடா, அதிக காபி, டீ இல்லாது இருந்தாலே அன்றாடம் உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது போல் தானே.
* துரித உணவு, சிப்ஸ், உறைந்த உணவு இவற்றை தவிர்த்தால் உடல் உறுப்புகள் உங்களுக்கு நன்றி சொல்லும்.
* சர்க்கரை, பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் இவையெல்லாம் நம் கண்ணில் கூட படக்கூடாது.
வாழ்வின் ஆரோக்கியமான பயணத்திற்கு:
* பசலை கீரை, புரோகலி, முளை கட்டிய பயிறு, தக்காளி, வெள்ளரி, காலி பிளவர், காய்கறிகள்.
பழங்கள்- ஆப்பிள், வைட்டமின் 'சி' சத்து நிறைந்த பழங்கள்-ஆரஞ்சு, செர்ரி.
தானியங்கள்- பிரவுன் அரிசி, ஓட்ஸ், பார்லி, சிறுதானியங்கள், முழு தானியங்கள்.

மேலும் முட்டை, மீன், பீன்ஸ், புரத உணவு, கொழுப்பில்லத பால், எண்ணை, பாதாம், முந்திரி, பிஸ்தா, பிளாக்ஸ்விதை, மீன் போன்றவை வெகுவாய் உதவும்.
இதனையும் அறிவோம்- பச்சை கீரைகள், ஒமேகா 3, கொட்டை விதை வகைகள், மஞ்சள் இவை நரம்பு மண்டலத்தினை பலப்படுத்தும்.
உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, தரமான, தேவையான தூக்கம், அதிக நேரம் கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் இல்லாமல் இருப்பதும் நரம்பு மண்டலத்திற்கு பலம் தரும்.
முட்டை- பலமின்றி இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பப்பாயா- அஜீரணம் என அடிக்கடி சொல்பவர்கள் இப்பழத்தினை சேர்த்துக் கொள்ளலாம்.
சளி பிடிச்சிருக்கா- இஞ்சி டீ சாப்பிடலாமே.
பார்வை குறை உள்ளவர்கள்- கொடை மிளகாய் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
முட்டி வலிக்கு- மஞ்சள் சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றதா- பூண்டு அன்றாடம் சேர்க்கலாம். உடையும் நகங்கள் இருந்தால், அன்றாடம் 5 பாதாம் பருப்பு ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
சக்தி குறைவாக தோன்றுகின்றதா? சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம். பெரிதும் உதவும்.
நெஞ்சு எரிச்சலா? ஓட்ஸ் உணவு நன்கு உதவும். மலச்சிக்கலா- புரூன்ஸ் பழம் சாப்பிடலாமே. இது வாழ்வின் ஆரோக்கிய முறை.
வாழ்வில் அதிக நன்மைகளைப் பெற எளிமையான வழிகள்
வாழ்வில் ஏதேனும் ஒன்றுக்காக நீங்கள் மிகுந்த நன்றி உடையவராக இருக்கின்றேன் என்று ஒன்றினை யோசித்து ஒரு நோட்டு புத்தகத்தில் எழுத முற்படுங்கள். ப்பூ! இதென்ன பிரமாதம். ஒரு நொடியில் எழுதி விடுவேன் என்று மனது சொல்லுகின்றதா? சொல்லட்டும். ஒரு நோட்டு புத்தகமும், பேனாவும் எடுத்து அமருங்கள். எந்த ஒன்றினை எழுதுவது என்று மனம் திண்டாடி விடும்.
நல்ல பெற்றோர், படிப்பு, வேலை, சம்பளம், பல பாதிப்புகளில் இருந்து மீண்டது என டிராபிக் ஜாம் போல் எண்ணங்கள் முட்டும். இதில் எந்த ஒன்றினை தேர்ந்தெடுப்பது? ஆக ஒவ்வொருவர் வாழ்விலும் அநேக நன்மைகள் இறைவனாலோ அல்லது யாரோ ஒருவராலோ நடந்திருகின்றன. அதனை நாம் நினைப்பதும் இல்லை. நன்றி கூறுவதும இல்லை. அன்றாடம் ஓரிரு நிமிடங்கள் நன்றி கூற என்று நேரம் கொடுங்களேன்.
உங்கள் பழக்க, வழக்கங்களை முறைப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களை கம்பீரமான வராக ஆக்கி விடும்.
நம் எண்ணங்களைப் பற்றி நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எண்ணங்களே உண்மையாக உருவாகி விடும். "நான் நன்றாக இருக்கிறேன்", "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்", "நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்" என்ற நல்ல எண்ணங்கள் நம்மை அவ்வாறே மாற்றி விடும். உங்கள் உள்ளுணர்வு உங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு உணர்த்தும். கண்டிப்பாய் கவனம் செலுத்துங்கள்.
ஒருவரது செயல்களே சத்தமாக ஓலிக்கும். அவரது வார்த்தைகள் பலவீனமானவையே. பிறரிடம் பேசுவதும், பழகுவதும் அவருடைய வாழ்க்கையினை நாம் கையாள்வது போன்றது. தெரிந்தோ, தெரியாமலோ அவர்களது காயங்களை நாம் மிதித்து விடக்கூடாது.
- வயநாடு நிலச்சரிவின் போது அந்தரத்தில் கயிறு கட்டியபடி சென்று சிகிச்சை அளித்தது மறக்க முடியாத நிகழ்வு.
- பல நிகழ்வுகள் எங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டே உள்ளது.
செவிலியர் பணி என்பது சாதாரணமானது அல்ல. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் செய்வது ஒரு சேவை என்றே சொல்லலாம். சாதி, மதத்தை கடந்து சகிப்புத்தன்மையுடன் அவர்கள் ஆற்றுவது மகத்தான பணி ஆகும்.
நவீன செவிலியத்தின் முன்னோடியான புளோரன்ஸ் நைட்டிங்கே லின் பிறந்த நாளை முன்னிட்டு, சர்வதேச செவிலியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ஏராளமான பெண்கள் செவிலிய பணியை சேவையாகவும், உயிர் மூச்சாகவும் செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருசிலரை பார்ப்போம்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த நிலச்சரிவு பேரழிவை யாராலும் மறக்க முடியாது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச் சேவை அளித்ததில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா.
அவர் கூறியதாவது:-

நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். வீட்டு வேலைக்கு சென்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு தான் பட்டப்படிப்பு மற்றும் நர்சிங் படிப்பு படித்தேன். பணம் சம்பாதிப்பதை விட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருந்தேன். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தொண்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். புற்றுநோய் பாதித்து வீடுகளில் முடங்கி கிடப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது தான் என்னுடைய பணி. உடலில் புண் ஏற்பட்டு நடக்க கூட முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களை நான் தினமும் சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன்.
வயநாடு நிலச்சரிவின் போது அந்தரத்தில் கயிறு கட்டியபடி சென்று சிகிச்சை அளித்தது மறக்க முடியாத நிகழ்வு. அன்றைய தினம் 40 பேருக்கு நான் முதலுதவி சிகிச்சை அளித்தேன். இதற்காக கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் பல என்னை அழைத்து கவுரவித்து விருது வழங்கி உள்ளன. அப்படி மொத்தம் 60 விருதுகளை வாங்கி உள்ளேன்.
செவிலியர் சுசீலாதேவி
கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் இவர் சிறந்த செவிலியருக்கான விருதை 2 முறை பெற்றுள்ளார். தொடர்ந்து செவிலியர் சுசீலாதேவி பேசுகிறார்...

செவிலியர் பணி என்பது மிகவும் சவாலான பணி. அந்த பணியை நாங்கள் முழு மனதுடன் சேவையாக செய்து வருகிறோம். வயதான நோயாளிகள் அடிக்கடி கோபப்படுவார்கள். விபத்தில் ரத்தம் சிந்தி வருபவர்கள், உடலில் புண்கள், காயங்களுடன் வருபவர்களை துடைத்து சுத்தப்படுத்தி சிகிச்சை அளிப்பது எங்கள் கடமை. சில நோயாளிகள் அவர்களுக்கு வலி ஏற்பட்டால் எங்களை திட்டுவார்கள். அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் நாங்கள் ஐ.சி.யூ.வில் 3 உடைகளை அணிந்து கொண்டு பணியாற்றினோம். வீட்டிற்கு செல்ல முடியாமல் தனியாக அறை எடுத்து, நோயாளிகளை பாதுகாத்த பணி மறக்க முடியாதது.
ஒருநாள் அவசர சிகிச்சை பிரிவில் மாரடைப்புடன் வந்த நோயாளிக்கு துரிதமாக சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினேன். அப்போது எனக்கு தெரியாமல் நோயாளிகளுடன் நோயாளிகளாக மருத்துவ அதிகாரிகளும் கலந்திருந்துள்ளனர். அவர்கள் எனது பணியை பார்த்து பாராட்டினர். மறுநாள் சோகம் வீட்டில் இருந்த எனது கணவருக்கு திடீரென மாரடைப்பு வந்து விட்டது. ஆனால் அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. இருப்பினும் மனம் உடைந்து போகாமல் பிற நோயாளிகளை காப்பாற்ற சேவை செய்து வருகிறேன்.
சுகந்தி (ராஜபாளையம்):
சிறந்த செவிலியர்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் நைட்டிங்கேல் விருதை பெற்றவர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆர்.ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியபோது சுகந்திக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
எனக்கு சிறு வயது முதலே, மக்களுடன் இணைந்து பொதுச்சேவை ஆற்றும் ஆசையும், ஆர்வமும் இருந்தது. குறிப்பாக வலிகள் நிறைந்த கடினமான வேளைகளில், மக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு உதவி செய்ய ஆவலாக இருந்தேன். அதற்கு செவிலியர் பணி, சிறப்பானதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான், இந்த பணியை தேர்வு செய்தேன்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளை, ஆரோக்கியமாக கவனிப்பதுதான் என்னுடைய தலையாய கடமை. தற்போது கிராமப்புறத்தில் உள்ள மருத்துவமனையிலும் பிரசவம் பார்க்கும் வசதி வந்து விட்டது. ஆனால் முன்பு நாங்கள் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு பிரசவம் பார்ப்போம். அந்தவகையில் நான் கர்ப்பிணிகளின் வீட்டிற்கே சென்று இதுவரை 30 பேருக்கு பிரசவம் பார்த்து உள்ளேன். அத்தனையும் சுக பிரசவம் தான். கொரோனா காலக்கட்டத்தில் செவிலியர்கள், மருத்துவர்கள் ஆற்றிய சேவையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். 4 முக கவசங்களை அணிந்து கொண்டு தான் பணியாற்றினேன். தண்ணீர் கூட குடிக்க முடியாது. விடுமுறை இல்லாமல் பணியாற்றினேன்.
என்னுடைய சேவைக்கும், உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் தான் நைட்டிங்கேல் விருது. ஒரு பெண்ணான எனக்கு பெண் ஜனாதிபதியான திரவுபதிமுர்மு கையால் விருது வாங்கியது என்னை மேலும் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
தமிழ்ச்செல்வி (தலைமை செவிலியர், சூலூர்):
செவிலியர் பணியில் தினந்தோறும் பல்வேறு புது அனுபவங்களை பெற்று வருகிறோம். நான் பல்லடம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியபோது இளம்பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தபோது குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்தது. இதனால் குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். அந்த சமயம் சிறிதும் தாமதிக்காமல் அந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்தேன். அதில் அந்த குழந்தை புத்துயிர் பெற்று சத்தம்போட்டு அழுதது ஆஸ்பத்திரி முழுக்க எதிரொலித்தது. 7 வருடத்துக்கு பிறகு ஒருபெண், சிறுவனுடன் வந்து என் முன் நின்றாள். இவர் தான் உனது முதல் தாய் என அறிமுகப்படுத்தினார். அதன்பிறகே நான் சுவாசம் கொடுத்து காப்பாற்றிய குழந்தை என தெரிந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது.
இதேபோல காலனி நிறுவனத்தில் பணியாற்றிய வாலிபர் ஒருவர் பணியை விட்டு நீக்கியதால் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கினேன். அதன்பிறகு அவர் சொந்தமாக காலனி கடை வைத்து நன்றாக வாழ்கிறார். இதுபோல் பல நிகழ்வுகள் எங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டே உள்ளது.
ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள்தான் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும், மறுக்க முடியாததுமான உண்மை ஆகும். "செவிலியர்கள் - இன்னொரு தாய்" அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது, மதிக்கத்தக்கது, வணங்கத்தக்கது.
- சில ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் அமெரிக்காவில் சில நகரங்களிலும் புறாக்கள் வளர்க்க தடையே உள்ளது.
- நம் நாட்டிலும் டெல்லியில் கூட புறா வளர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கல்லீரல் பாதிப்புக்காக சாகரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஒன்றிரண்டு நாளில் குணமாகி விடும் என்று தான் நினைத்தோம். ஆனால் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறி விட்டார்கள்.
டாக்டர்கள் அறிவுரைப்படி சிகிச்சை தொடர்ந்தது. பயப்படும் அளவுக்கு அவர் உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ரொம்ப ஹெல்தியாகவே இருந்தார். எப்போதும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு சின்ன புறாவின் எச்சத்தால் எவ்வளவு பெரிய கஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
புறா எச்சத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தகவல்களை தேடினேன். அப்போது கிடைத்த தகவல்கள் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
புறா எச்சத்தால் மனிதர்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள், சுவாச கோளாறுகள் மற்றும் அரிதாக உயிருக்கு ஆபத்தான நோய்கள் கூட வரலாம் என்பதை உணர்ந்ததும் மனதுக்குள் என்னையும் அறியாமல் ஒரு விதமான பயம் சூழ்ந்தது.
60-க்கும் மேற்பட்ட நோய் தொற்றுக்கள் புறா எச்சங்களால் வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள் என்பதையும் படித்து தெரிந்து கொண்டேன்.

இதனால் சில ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் அமெரிக்காவில் சில நகரங்களிலும் புறாக்கள் வளர்க்க தடையே உள்ளது. அழகிய புறாக்கள் கூட்டம், கூட்டமாக பறப்பதை ஆர்வத்துடன் பார்ப்போம். பலர் புறாக்களுக்கு உணவு வழங்குவதும் உண்டு. இதனால் புறாக்கள் வீட்டு மாடிகளிலும் தாழ்வாரங்களிலும் வந்து அமர்ந்து இருக்கும்.
ஆனால் புறா எச்சத்தால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தவர்கள். அந்த நாடுகளில் புறாக்களை வீடுகளில் வந்து அமராதபடி கட்டமைத்து இருக்கிறார்கள். நம் நாட்டிலும் டெல்லியில் கூட புறா வளர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சாகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார் என்றதும் அவரது நண்பர்கள் பலர் பார்க்க வருவதற்கு ஆசைப்பட்டார்கள். ஆனால் சாகர், அவர்களிடம் ரொம்ப ஜாலியாக போனில் பேசுவார். ஆஸ்பத்திரிக்கு எதுக்குடா? வர்றீங்க? நான் சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்திடுவேன் அதன் பிறகு நாம் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்வார்.
ரொம்பவே தைரியமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தார். ஆனால் மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் என்றதும் அதிர்ந்து போனேன்.
எப்படி கிடைக்கும்? எங்கே போய் தேடுவது? என்று எனக்கு அப்போது எதுவும் தெரியாது. மருத்துவ உலகம் தனி உலகம். அதில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. கல்லீரலுக்காக அரசு பதிவேட்டில் பதிவு செய்தோம். நான் எதற்காகவும் யாரிடமும் எதையும் கேட்டது கிடையாது. என் சாகர் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல இடங்களுக்கு சென்று உதவி கேட்டு அலைந்தேன்.
பல நேரங்களில் என்னை துரத்திய துயரத்தால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன். அப்போதெல்லாம் நான் நினைத்தது 'யாருக்கும்' இந்த மாதிரி உடல் நல பிரச்சினைகள் வரக்கூடாது என்பதுதான்.
அதிலும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது' என்பது தான்.
நெருக்கடிக்குள் இருந்த அந்த நேரத்தில் 'ஆர்கானிக் மாமா. ஹைபிரிட் அல்லுடு (மருமகன்)' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன். அதற்காக முன்பணமும் பெற்று இருந்தேன்.
ஆனால் வீட்டு நிலைமை சிக்கலாக இருந்ததால் முழு ஈடுபாட்டோடு நடிக்க முடியுமா என்ற சந்தேகம். அதோடு சாகருக்கு ஆபரேஷன் எப்போது என்பதும் உறுதியாக தெரியாத நிலை. இந்த சூழ்நிலையில் படத்தில் நடிக்க முடியாது என்றும், அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும தயாரிப்பாளரிடம் தெரிவித்தேன்.
அந்த படத்தின் டைரக்டர் கிருஷ்ணாரெட்டி. எனக்கு நன்கு தெரிந்தவர். ஏற்கனவே என்னை வைத்து இரண்டு படங்கள் இயக்க முடியாமல் போனதால் இந்த படத்தையாவது கண்டிப்பாக இயக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்.
ஷெட்யூல்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த நேரம் வாருங்கள். ஒரு வாரத்துக்குள் முடித்து விடலாம் என்றார். அரைகுறை மனதோடு தான் ஷூட்டிங் கிளம்பி சென்றேன். படப்பிடிப்பின் போது சிறிது நேரம் கிடைத்தாலும் ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணி விசாரிப்பேன். சாகரிடமும் வீடியோகாலில் பேசுவேன்.

அப்போதும், முழு கவனத்துடன் நடி. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என்னை நினைத்து கவலைப்படாதே என்று எனக்கு நம்பிக்கை தருவார். சில நாட்கள் கிளம்பி சென்னைக்கு வந்து ஆஸ்பத்திரியில் இரவு தங்கி விட்டு மறுநாள் காலையில் படப்பிடிப்புக்காக செல்வேன்.
நைனிகாவும் அப்பாவை பார்க்க வருகிறேன் என்று அடிக்கடி சொன்னாள். ஆனால் சாகர் தான் 'அவள் சின்ன பொண்ணு' ஆஸ்பத்திரிக்கெல்லாம் அழைத்து வராதே என்று கூறி விட்டார். போனில் பேசிக் கொள்வார்.
இப்படியே ஆஸ்பததிரி வாசம் சுமார் ஒரு மாசமானது...
ஆனால் கல்லீரல் கிடைக்கவில்லை. இதனால் ஆபரேசனும் தள்ளிக் கொண்டே போனது. எத்தனையோ வழிகளில் எவ்வளவோ முயற்சித்தும் உறுப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியவில்லை. உறுப்பு கிடைத்து ஆபரேஷன் முடியும் வரை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்ற நிலை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் போலவே நகர்ந்து கொண்டிருந்தது. ஒப்பந்தப்படி நடித்து வந்த படத்தின் 2-வது ஷெட்யூல் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றனே். படப்பிடிப்பு தீவிரமாக சென்று கொண்டிருந்தது.
எனது மனம் மட்டும் ஆஸ்பத்திரியிலும், ஷூட்டிங் தளத்திலுமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் அவர் எப்படி இருக்கிறாரோ என்ற எண்ணம் தான் எழுந்து வரும்.
உடனே டாக்டருக்கு போன் போடுவேன். இப்போ எப்படி சார் இருக்கிறார்? என்பேன். டாக்டரும் பயப் பட தேவையில்லை. நன்றாக இருக்கிறார். நீங்கள் தைரியமாக இருங்கள் என்பார். அதை கேட்டதும் சற்று ஆறுதலாக இருக்கும். உடனே நம்பிக்கையோடு படப்பிடிப்புக்கு செல்வேன். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் சென்றது. 3 மாதங்கள் ஆஸ்பத்திரி வாசம்தான். மன ரீதியாக மிகப்பெரிய அழுத்தத்தில் இருந்தேன்.
ஒருநாள் இரவு படப்பிடிப்பு முடிந்து அறையில் இருந்தேன். அப்போது திடீரென்று போன் மணி ஒலித்தது. அழைப்பை பார்த்ததும் நெஞ்சுபடபடத்தது.
மறுமுனையில் என்னிடம் பேசிய டாக்டர் 'மேடம், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உடனே புறப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வாருங்கள்' என்றார். வழக்கமாக இப்படி உடனே வரும்படியெல்லாம் அவர் அழைக்கமாட்டார். எனவே அவரது அழைப்பு எனக்கு கூடுதல் பயத்தை ஏற்படுத்தியது.
நான் பதட்டத்துடனேயே, 'சார், சாகர் எப்படி இருக்கிறார்' என்றேன்.
சீரியசாகத்தான் இருக்கிறார். நீங்கள் உடனே வாருங்கள் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.
நான் அவசர அவசரமாக சென்னை புறப்பட்டேன். இரவு நேரம்.... இந்த சூழ்நிலையில் என்னை தனியாக அனுப்புவது சரியல்ல என்று தயாரிப்பாளர் அவரது மனைவியை என்னுடன் துணைக்கு அனுப்பி வைத்தார். சென்னை விமான நிலையத்தில வந்து இறங்கிய பிறகும் அவர் திரும்பி செல்லவில்லை. என்னோடு துணைக்கு ஆஸ்பத்திரி வரை வந்து இரவில் அங்கேயே இருந்தார். சாகரின் உடல் நிலையை விளக்கிய டாக்டர், 'மிக மோசமான நிலையில் இருக்கிறார்' என்றதும் என்ன சொல்வது? என்ன செய்வது? என்று எதுவும் தெரியாத வளாய் நிலை குலைந்து போனேன்.
என்ன நடந்தது....?
அடுத்த வாரம் சொல்கிறேன்....
(தொடரும்)
- அடுத்தவர் சொத்துக்கும், பொதுச் சொத்துகளுக்கும் ஆசைப்படுவதே இந்த ஆக்கிரமிப்புச் செயல்களுக்குக் காரணமாக அமைகிறது.
- நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவுகளையும் சந்திக்க நேர்ந்து விடுகிறது.
அன்பால் ஆக்கிரமித்துப் பாசமிகு அரவணைப்பை நல்குவதில் அக்கறை காட்டும் அன்பு வாசகர்களே வணக்கம்!
நமக்கு உரிமையும் சொந்தமும் இல்லாத பொருள்களை அபகரிப்பதும், நிலங்களில் இடங்களில் அத்துமீறல் செய்வதும் ஆக்கிரமிப்பு ஆகும். அடுத்தவர் சொத்துக்கும், பொதுச் சொத்துகளுக்கும் ஆசைப்படுவதே இந்த ஆக்கிரமிப்புச் செயல்களுக்குக் காரணமாக அமைகிறது. வயல்களையும் காடுகளையும் வரப்புகளும், வேலிகளும் எல்லைக்கோடுகளாக நின்று பிரிக்கின்றன. என்றாலும், அடுத்தவர்க்குத் தெரியாமல் அன்றாடம் வாய்க்கால்களைச் சீர்பண்ணுவதாக வரப்புகளை நகர்த்திப்போடுவதும், வேலிகளைத் தள்ளிப்போட்டுப் பொது இடங்களை வளைத்துப் போடுவதும் ஆக்கிரமிப்பு ஆகும்.
பொது நிலையில், சாலையோரங்களில் இருக்கின்ற மைதானங்கள், விவசாயக் களங்கள், ஏரி, குளம், கண்மாய், ஆறுகள் போன்ற நீர்நிலைகளின் மேட்டுப் பாங்காக இருக்கின்ற கரைப்பகுதிகள், கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், சாலையோரங்களின் இருபுறமும் மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் இங்கெல்லாம் ஆக்கிரமிப்புச் செய்யப்படுகிறது. சிறிது சிறிதாகக், கற்களைப் போடுவது, குடிசைகளைப் போடுவது, தள்ளுவண்டிகள் நிறுத்துவது, குப்பைகளைக் கொட்டுவது ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்புகள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாலையோர ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டாலும், மீண்டும் மீண்டும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வாய்க்கால்களையும் வரப்புகளையும் ஆக்கிரமிப்புச் செய்ததற்காக, வழக்குத் தொடர்ந்து, வழக்கை நடத்துவதற்காக வயல்களையே இழந்தவர்களும் உண்டு.
ஆக்கிரமிப்பு என்பது, உள்ளூர் அளவில் நடைபெறும் வரப்புத் தகராறு மற்றும் வாய்க்கால் தகராறு மட்டுமல்ல; சர்வதேச அளவில் நாட்டுக்கு நாடு எல்லைப் பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருப்பதும் அண்மைக்கால வரலாறு ஆகும். படைகளைக் கொண்டுவந்து அடுத்த நாட்டின் எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நிறுத்துவது, போர்ப்பயிற்சிகளில் ஈடுபடுவது போன்றவையும் ஆக்கிரமிப்பின் ஒரு வகை மிரட்டலே ஆகும். இடம், பொருள் சார்ந்து ஆக்கிரமிப்புச் செய்பவர்கள் தவிர வணிக ரீதியான கொடுக்கல் வாங்கல்களில் ஆக்கிரமிப்புச் செய்கின்ற சர்வாதிகார நாடுகளும் உண்டு. இம்மாதிரியான ஆக்கிரமிப்புகளால், பாதிக்கப்படும் நாடுகள், பொருளாதார ரீதியான இழப்புகளையும், நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவுகளையும் சந்திக்க நேர்ந்து விடுகிறது.
ஆக்கிரமிப்புகள், பொருளாதார ரீதியான லாப நஷ்டங்களைச் சார்ந்திருந்தாலும், பல நேரங்களில் மனரீதியான அற்ப சந்தோஷங்களையும், வீண் உளைச்சல்களையும் உருவாக்கவே செய்கின்றன. நகரப்பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடப் போகிறவர், ஓடிப்பிடித்து, இரண்டு இருக்கை இடத்தில், ஒன்னரை இருக்கை அளவுக்கு அகலித்து அமர்ந்து கொண்டு, பக்கத்தில் அமருபவர் உட்காரச் சிரமப்பட்டு நெளிகிற கஷ்டத்தைக் கண்டு மகிழ்கிற அற்ப நிகழ்வுகளும் உண்டு. கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்! என்று பணிவாகச் சொன்னாலும், 'இது என்ன உன் அப்பன் வீட்டு இடமா?' என்று சண்டைக்கும் வந்து விடுவார்கள். அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறவருக்கு அடுத்தவர் இடத்தை ஆக்கிரமிப்பதில் எவ்வளவு ஆர்வம் பாருங்கள்.
லட்சக்கணக்கில் பணம்போட்டு, இடம்வாங்கி வீடு கட்டுவார்கள். தெருப்பாதையோடு, நெருக்கி, அத்துக், கட்டடம் கட்டி விடுவார்கள்; இரண்டாயிரம் சதுர அடியில் வீடு கட்டினாலும், வீட்டு வாசலுக்கான படிகளைத் தெரு இடத்தை ஆக்கிரமித்தே அமைத்திருப்பார்கள். படிகள்தாம் ஆக்கிரமிப்பு என்றால், மேலே முதல்மாடி பால்கனியும் மேலேகூடி, கால்வாசித் தெருவுக்கு நீட்டி அமைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் நடக்கிற பாதையாயிற்றே, நடக்கும்போது அவர்கள் சிரமப் படுவார்களே! என்கிற அக்கறை சிறிதுமில்லாமல், ஆக்கிரமிப்புச் செய்ததில் ஆனந்தத்தோடு இருப்பார்கள். வீட்டிடத்தில் கார் பார்க்கிங் வைக்காமல், வெளியே பாதித் தெருவை அடைத்தே காரை நிறுத்தி வைத்திருப்பார்கள்.

சுந்தர ஆவுடையப்பன்
நகரத் தெருக்களில் வாகனங்கள் செல்வதே அரும்பாடு என்பதால், பாதை மேலே பாதை போட்டு, மேம்பால அமைப்புகளால் வழியை ஓரளவுக்குச் சீர் செய்திருக்கிறார்கள். சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் சிரமமின்றி நடந்து போவதற்கு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் நடந்து செல்லவே வாய்ப்பில்லாமல், நடைபாதை முழுவதும் சிறுசிறு நடைபாதைக் கடைகளும், குறுக்கே மறுக்கே நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களும் இடைஞ்சலாக உள்ளன. இதனால் சாலை விபத்துகள் பெருகுவதற்கு சாலையோர ஆக்கிரமிப்புகளே பெருங் காரணங்களாக அமைகின்றன.
ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில், விவசாய நிலங்களாகவோ, கட்டடப் பகுதிகளாகவோ ஆக்கிரமிப்புகள் பெருகும்போது, அங்கு நீர்வரும் மூலங்கள் அடைபட்டுப் போகின்றன. என்றாவது ஒருநாள், பெரு வெள்ளமும் புயல் மழையும் விஸ்வரூபம் எடுக்கும்போது, ஆக்கிரமிப்புகளெல்லாம் அழிந்துபோகும்படி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப், பெரும் உயிர்ச்சேதமும், பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டு விடுகிறது. அந்த இக்கட்டு நேரத்தில், குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது என்று கூக்குரலிட்டுப் பயனில்லை. இந்த மாதிரி அழிவுகளிடமிருந்து வரும் முன் காக்க வேண்டுமென்றால், ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.
அவரவர்க்கு உரிமையானது, சொந்தமானது என்று நிலங்களும் பொருள்களும் பூமியில் உண்டு. மேலும் மேலும் அவற்றைப் பெருக்க வேண்டும் என்றால், அவற்றை நியாயமான முறையில் சம்பாதிப்பதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அதைவிடுத்து, அடுத்தவர் சொத்தை அபகரிக்கவும், அனுபவிக்கவும் நினைப்பது ஆக்கிரமிப்பு மட்டுமல்ல; அது திருட்டும்கூட.
"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்."
திருட்டைப் பொறுத்தவரை, செய்தபிறகுதான் அது குற்றம் ஆகும் என்பதில்லை; மனத்தளவில் நினைத்து விட்டாலே அது திருட்டுத்தான்; தண்டனைக்குரிய குற்றமும் தான் என்பது வள்ளுவப் பெருங்கூற்று. ஆக்கிரமிப்பின் மூலமும், அபகரிப்பின்மூலமும், ஊடுருவலின் மூலமும் பெறுகிற செல்வம், முதலில் பெருகுவது போலப் பெருகிப், பிறகு எதுவுமற்று அழிந்துபோகும் என்பது வள்ளுவ எச்சரிக்கை.
"களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்."
ஒருவர் ஆடுவளர்க்க ஆசைப்பட்டுப், பத்து ஆடுகளைச் சந்தையில் வாங்கினார். ஆடுகளை மேய விடுவதற்கு ஊரோரமாக ஒரு புறம்போக்கு இடத்தில் பசுமையான புல்வெளி போதுமானதாக இருந்தது. அந்தப் புல்வெளி நிலத்தில் ஆடுகள் மேயும்போது பார்த்துக் கொள்வதற்கு, அருகில் நண்பனின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு காலியிடம் இருந்தது. அந்த இடத்தில் அமர்ந்து கொண்டால், அருகிலிருந்து ஆடுகளைப் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். பகலில் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அந்தக் காலியிடத்தில் ஒரு வெயில்கூரை அமைக்கத் தொடங்கினார். அவரது நண்பன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான். என் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள இடத்தை ஆக்கிரமித்துக் கூரை போடக்கூடாது என்று வாதிட்டான். இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்வதற்குத் தகுதியான ஒரு நீதிபதி பக்கத்து ஊரில் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டுப் பக்கத்து ஊருக்கு இருவரும் சென்றார்கள்.
நண்பர்கள் இருவரும் பக்கத்து ஊருக்குள் நுழைந்து, அந்த நீதிபதிவீடு எங்கிருக்கிறது என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது அந்த வழியே தலையில் தண்ணீர்க்குடம் சுமந்தபடி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரிடம் அந்த நீதிபதி குறித்து நண்பர்கள் விசாரித்தார்கள். "நான்தான் அந்த நீதிபதி! உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்!" என்று நின்றது நின்றபடி கூறினார் தலையில் தண்ணீர்க்குடம் சுமந்திருந்த நபர். " ஐயா! மகிழ்ச்சி!
முதலில் உங்கள் தலையில் இருக்கும் தண்ணீர்க் குடத்தை இறக்கிக் கீழே வையுங்கள். எவ்வளவு நேரம்தான் தலைச்சுமையோடு நிற்பீர்கள்; பிறகு எங்கள் வழக்கைச் சொல்கிறோம்!" என்றனர் நண்பர்கள். "இப்போது நாம் நின்று பேசிக்கொண்டிருக்கும் பாதை ஊர்ப் பொது இடம்; இங்கே குடத்தை இறக்கிக் கீழே வைத்தால், அது பொதுமக்கள் நடந்துசெல்ல இடைஞ்சலாக இருக்கும்; பரவாயில்லை! நான் தலையிலேயே குடத்தை வைத்துக் கொள்கிறேன்; உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்; நான் தீர்ப்புச் சொல்கிறேன்" என்றார். " மிக்க நன்றி ஐயா! வழக்கை நாங்கள் சொல்லாமலேயே தீர்ப்பை நீங்கள் எங்களுக்கு வழங்கி விட்டீர்கள்; நாங்கள் இருவரும் இனிச் சண்டை போடாமலேயே எங்கள் வேலைகளைப் பார்த்துக் கொள்கிறோம்!" என்று கூறிவிட்டு நண்பர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
ஊர்ப்பொதுப் பாதையோ, அல்லது அடுத்தவருக்குச் சொந்தமான இடமோ, அவற்றை நமது வசதிக்காக ஆக்கிரமிப்புச் செய்வதும், பயன்படுத்த நினைப்பதும் தவறு என்பதை அந்த நீதிபதி தலையிலிருக்கும் தண்ணீர்க் குடத்தை இறக்கி வைக்காமலேயே தீர்ப்பாகச் சொல்லிவிட்டார். நண்பனின் வீட்டிற்கு அருகில் ஆக்கிரமிப்புச் செய்யப் போவதில்லை என ஆட்டுக்கார நபரும் முடிவெடுத்து விட்டார். நீதிபதியின் நுட்பத்தைப் புரிந்துகொண்டால் வீண் ஆசைகளும், ஆக்கிரமிப்புகளும், மன சஞ்சலங்களும் வரவே வராது.
வீட்டெல்லைகள் தொடங்கி, நாட்டெல்லைகள் வரை எல்லாவற்றிற்கும் எல்லைகள் உண்டு. சங்கத் தமிழர்கள், தங்களின் வாழ்விட எல்லைகளை, வாழ்வியல் நிலவியல் தன்மைகளுக்கு ஏற்பக், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுத்துக்கொண்டு வாழ்ந்தனர். அதனால் நேரிய வாழ்வும், நிலம் சார்ந்த தொழில்களும், குறைவற்ற செல்வமும், பெருகிடும் வளமும் அவர்களுடையதாக இருந்தன. அரசர்களும் அரசாங்கங்களும் தத்தமது நாட்டெல்லை களுக்குள் ஆட்சி அதிகாரங்களைச் செலுத்தி ஆண்டு வந்தனர். எல்லை மீறுதல் என்கிற நிலை உருவாகும் போதுதான், போர்களும் சண்டைகளும், பிரிவினைகளும் உருவாகத் தொடங்கின. பக்கத்து நாடாக இருந்தாலும், பக்கத்து வீடாக இருந்தாலும், பக்கத்து நிலமாக இருந்தாலும் எல்லை மீறினால் அது ஆக்கிரமிப்பாக மாறிவிடுகிறது.
சாலையில் வாகனங்கள் செல்லும்போது, குறிப்பிட்ட வேகத்தைமீறி முந்திக்கொண்டு செல்வதுகூட ஆக்கிரமிப்புதான்; வரிசையில் நின்றிருக்கும் போது, இடையில் புகுந்து ஊடுருவி, வரிசைமுறை சீர்குலைப்பதும் ஆக்கிரமிப்புதான். பொது இடங்களில், பேருந்து, ரயில் பயணங்களில் அடுத்தவர்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கும்படி அத்துமீறி நடந்து கொள்வதும் ஆக்கிரமிப்புதான். பெரு விருந்துகளில் அளவறிந்து உண்ண ஆசைப்படுபவர்களைப் பாடாய்ப் படுத்தி அதை உண்ணுங்கள்! இதை உண்ணுங்கள்! என்று தொந்தரவு செய்வதும் ஆக்கிரமிப்புதான்.
அடுத்தவர்க்குத் தெரியாமல் அவர்களது சொத்துக்களைத் தமதாக்கிக் கொள்ள நினைப்பது, அதற்கான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது பெரும் வஞ்சகச் செயல் ஆகும்; அதே வேளையில் அடுத்தவகளுக்குத் தேவையான உதவிகளை அவர்களுக்குத் தெரியாமலேயே செய்து அவர்களது இதயப் பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்வது சிறந்ததினும் சிறந்த செயல். ஆசைகளால் அல்ல; அன்பால் ஆக்கிரமிப்புச் செய்வோம்.
தொடர்புக்கு 9443190098
- சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி தான் அதிக முக்கியத்துவம் பெற்றது.
- சித்ரா பவுர்ணமியில் சித்ர குப்தனை வழிபடும் வழக்கம் உள்ளது.
சித்திரை மாதம் பல சீரிய சிறப்பு இயல்புகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பன்னிரு மாதங்களில் வருகின்ற பவுர்ணமிகளில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி தான் அதிக முக்கியத்துவம் பெற்றது. சித்திரை மாதத்தை சுட்டி காட்டியும் சித்திரை நட்சத்திரத்தை மையப்படுத்தியும் அதனுடன் பவுர்ணமியையும் இணைத்து சித்ரா பவுர்ணமி என்றனர்.
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது சித்திரை மாதம் பிறக்கின்றது. சூரியன் இவ்விதம் மேஷத்திற்குள் செல்லும் போது தமிழ் வருடம் பிறக்கின்றது. ஆக சூரிய பிரவேசத்தால் தமிழ் வருட பிறப்பும், மாத பிறப்பும் நிகழ்வது இந்த சித்திரையில்தான்.
எந்த நட்சத்திரத்தின் அருகாமையில் சந்திரன் முழுநிலவு என்னும் பவுர்ணமி ஆகின்றதோ அதை அடிப்படையாக கொண்டு தமிழ் மாதப் பெயர்களை அமைத்தனர். இவ்விதமே சித்திரை நட்சத்திரத்தன்று பவுர்ணமி ஏற்படுவதால் அந்த மாதப் பெயர் சித்திரை ஆனது.
சூரியன் மேஷ ராசியில் உச்சத்தில் உள்ள போது நேர் ஏழாம் ராசியான துலாமில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் முழுநிலவாக தென்படுவார்.
இத்தகைய கிரகநிலைகளை கொண்டு சித்திரை மாத பவுர்ணமி சிறப்பு பெறும். மேலும் இந்த சித்திரை மாத பவுர்ணமியை அனுசரித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவைபவம் நடத்தப்படுகிறது.
மீனாட்சி திருக்கல்யாணம்:
கைலாசத்தில் பார்வதிதேவியானவள் தனது தோழி வித்யாவதியின் வேண்டுகோளுக்கு இணங்கி பாண்டிய நாட்டில் மதுரை மன்னனுக்கு மகளாக அவதரித்தாள். மீன் போன்ற விழிகளை கொண்டதால் மீனாட்சி என அழைக்கப்பட்டாள். மீனாட்சி குழந்தையாக பிறக்கும் பொழுது மூன்று மார்புகுறிகளை கண்டு கலங்கினான் பாண்டிய மன்னன்.
அப்பொழுது விண்ணில் ஒலி எழுந்து " மீனாட்சி தனது கணவனை எப்பொழுது காண்கின்றாளோ அச்சமயம் 3வது மார்பு குறி மறைந்து விடும்" என்றது. இதனால் பேருவுவகை அடைந்த மன்னன் மீனாட்சிக்கு கல்வியில் போர்கலையில் என 64 கலைகளையும் தக்க குருமார்களை நியமித்து கற்றுக் கொடுத்தான்.
போர்கலையில் அபாரமான திறமை பெற்று அகில உலகமெங்கும் திக்விஜயம் செய்து ஜெயக்கொடி நாட்டினாள் மீனாட்சி. கைலாய மலைக்கு சென்று போர்புரிந்தாள். சிவகணங்களுடன் போரிட்டு வந்தபோது சிவபெருமானை கண்டு நாணிளாள். அச்சமயம் அவளது 3-வது மார்பு குறி மறைந்தது.

தனது கணவர் இவர்தான் என மனந்தெளிந்து தன் கரம்பிடித்து மணம்முடிக்க சிவபெருமானை பாண்டிய நாட்டுக்கு அழைத்தாள். அன்பான வேண்டுகோளை ஏற்று பாண்டிய நாட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்டார் சிவபெருமான்.
பாண்டிய மன்னன், ராணியுடன் ஆலோசித்து சித்திரைமாதம் உத்திரம் நட்சத்திரம் வளர்பிறையில் முகூர்த்தம் குறித்தான். இந்த நாளில் தான் இறைவன் சுந்தரேசுவரர் இறைவி மீனாட்சியை மணமுடித்த நன்னாள்.
கள்ளழகர் வைகை உற்சவம்:
சுதபரிஷிக்கும் துர்வாச முனிக்கும் ஏற்பட்ட பிரச்னையில் துர்வாசர் ரிஷியை மாண்டூகமாக (தவளை) மாற சாபமிட்டார். சாப விமோசனமாக வைகை ஆற்றுக்குச் சென்று அங்கு வரும் விஷ்ணுவிடம் பிரார்த்திக்குமாறு சொல்லப்பட்டது. மாண்டூக ரிஷியும் வைகை ஆற்றுக்குச் சென்று தவம் செய்து கொண்டிருந்தார்.
இச்சமயம் கள்ளழகர் தனது தங்கை மீனாட்சி திருக்கல்யாண வைபவம் காண வந்து கொண்டிருந்தார். இவரது வருகை தாமதமானதால் சிவபெருமான் விஷ்ணுவை அழகராக வந்து திருமணத்தை நிறைவேற்று மாறு கூறினார். இவ்விதமாக திருமணமும் நடந்தேறியது.
பயணம் தாமதித்து வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது திருமணம் நடந்து முடிந்து விட்டது என செய்தி கேட்டறிந்தார். இதனால் தனது தங்கைக்காக கொண்டுவந்த சீர்வரிசை பொருட்களுடன் தனது இருப்பிடம் நோக்கி புறப்பட தயாரானார்.
அந்த சமயம் அங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் வந்து கள்ளழகருக்கு தரிசனம் கொடுத்தனர். கள்ளழகரும் சீர்வரிசைகளை தங்கைக்கு வழங்கி திரும்பினார். இந்த நிகழ்வே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அன்றைய தினமே மாண்டூக மகரிஷிக்கு தரிசனம் தந்து அவரது சாப விமோசனம் செய்து அருளிய நாளாகும்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்நாளில் விரதமிருந்து மலர்கள் கனிகள் கொண்டு துதித்து விரதம் நிறைவேற்றும் வழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும்.
சித்ரா பவுர்ணமியில் சித்ர குப்தனை வழிபடும் வழக்கம் உள்ளது. மானிடர்களின் வாழ்நாள் கணக்குகளில் பாவ வினைகளை போக்கவும், நல்வினைகளை உண்டாக்கவும் இவ்வழிபாடு உள்ளது.
எனவே இந்த சித்ரா பவுர்ணமி தன்னகத்தே பல அரிய நிகழ்வுகளை கொண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, மீனாட்சி சுந்தரேசுவரர் தரிசனம், கள்ளழகர் தனது இருப்பிடம் திரும்புதல், மாண்டூக மகரிஷியின் சாப விமோசனம், சித்திர குப்த பூசை, சித்ரா பவுர்ணமி விரதம், சைவ வைணவ மத வழிபாடு என கோலாகலமாக தென்படும். மக்கள் மனதில் இனம் புரியாத சந்ேதாசம், மனநிறைவு உண்டாகும். மக்களும் இந்த சித்ரா பவுர்ணமியில் விரதம் இருந்து வேண்டிய கோரிக்கைகள் நிறைவேற காண்பர்.
- இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இந்த மாநிலம் இமயமலையின் தெற்குப் பகுதியில் உள்ளது.
- நீர்வீழ்ச்சியையொட்டி அமைந்துள்ள குளத்தில் குளிக்கலாம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம் இது.
அழகிய அசாம் இமயமலைக் காட்சிகள், பிரம்மபுத்திரா நதியோட்டம், தேசியப் பூங்காக்கள், நீர்வீழ்ச்சி, பிரமாண்டமான ஆலயங்கள்... அப்பப்பா!
பிரபல ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்சின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் அசாம் மாநிலம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இந்த மாநிலம் இமயமலையின் தெற்குப் பகுதியில் உள்ளது. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கும் இதையொட்டியே உள்ளது. ஈடு இணையற்ற இடம் என்ற சிறப்புப் பெயரை இது பெற்றுள்ளது.

இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
காசிரங்கா தேசிய பூங்கா
இது அசாமின் தலைநகரான கவுகாத்தியில் இருந்து 105 மைல் தூரத்தில் உள்ளது.
காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் அபூர்வமான வன விலங்குகளையும் பறவைகளையும் கண்டு களிக்கலாம். இங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், நீர்யானை, சிறுத்தை, சிங்கம், புலி என எல்லா மிருகங்களையும் காணலாம்.
வடதுருவத்தில் இருந்து வரும் அபூர்வமான பறவைகள் இங்கு வந்து மரக்கிளைகளில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. ஆண்டுக்கு இரு முறை பல்லாயிரம் கிலோமீட்டர் தாண்டி உலகெங்கிலும் இருந்து இந்தப் பறவைகள் வருவது குறிப்பிடத்தகுந்தது. யுனெஸ்கோ இதை பாரம்பரிய தளமாக அறிவித்திருக்கிறது.
ஜீப் சபாரி
பூங்காவைத் திட்டமிட்டபடி சுற்றிப் பார்க்க வசதியாக ஜீப்பில் செல்லும் ஜீப் சபாரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் உண்டு. இரண்டு மணி நேரம் ஜீப்பில் சென்று இந்தப் பகுதியைக் கண்டு ரசிக்கலாம்.
யானை சபாரி
யானை மீதமர்ந்து காண்டாமிருகம் உள்ளிட்ட மிருகங்களைப் பார்ப்பது என்பது தனி ஒரு அனுபவம் தான். ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த யானை மீதான சபாரிக்குக் கட்டணம் உண்டு.
ககோசாங் நீர்வீழ்ச்சி
காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து 47 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அருமையான ககோசாங் நீர்வீழ்ச்சி. போககாட் என்ற நகரில் இருந்து இது 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்வோர் இதையும் திட்டத்தில் சேர்த்து திட்டமிடலாம். தேவையான உணவுப் பொருள்களைத் தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும்.

டிரெக்கிங் உள்ளிட்ட மலைப் பிரதேசத்திற்கே உரித்தான பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் இது. தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள், ரப்பர் காடுகள் உள்ளிட்டவற்றை இங்கு பார்த்து மகிழலாம். 116 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியையொட்டி அமைந்துள்ள குளத்தில் குளிக்கலாம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம் இது.
அகர்டோலி மலைத்தொடர்
காசிரங்கா தேசிய பூங்காவின் கிழக்கு வாயிலில் இருந்து அருகில் உள்ளது அகர்டோலி மலைத்தொடர். இங்கு ஒரு ஜீப்பில் ஏறி அமர்ந்து இரண்டு மணி நேரம் சுற்றிப் பார்க்கும்படியான திட்டங்கள் உள்ளன.
புத்தகங்களில் மட்டுமே படித்திருக்கும் வண்ண வண்ண அழகிய பறவைகளை இங்கு காணலாம். இங்கு செல்லவும் சுற்றிப் பார்க்கவும் விசேஷ அனுமதியை இங்குள்ள அலுவலகத்தில் பெற வேண்டும். கட்டணமும் உண்டு.
மகாபைரவ ஆலயம்
காசிரங்கா பூங்காவில் இருந்து 83 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மகாபைரவர் ஆலயம். பாணாசுரன் என்னும் அசுரன் சிவனுக்கு ஒரு கற்களால் ஆன கோவிலைக் கட்டினான். சிவராத்திரியன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு இங்கு வருவது வழக்கம்.

இந்தக் கோவிலில் ஒரு மாபெரும் அதிசயம் உண்டு. இங்குள்ள சிவலிங்கம் உயிருள்ள கல்லால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். அதாவது வருடங்கள் ஆக ஆக இந்த லிங்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். பாணாசுரனின் வலிமைக்கும் வளத்திற்கும் அவன் இந்த இடத்தில் சிவபிரானை வழிபட்டதே காரணம் என்பது ஐதீகம்.
இங்கு பிரசாதமாக தரப்படும் லட்டு ஒரு விசேஷமான தயாரிப்பாகும்.
பிஸ்வநாத் காட்
காசிரங்கா தேசியப் பூங்காவில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிஸ்வநாத் காட். பிரம்மாண்டமாகப் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதிக் கரையில் உள்ள பிஸ்வநாதர் ஆலயம் குப்த காசி என்று அழைக்கப்படுகிறது. அதாவது காசிக்கு நிகரான மகிமை பொருந்திய ஆலயம் இது என்பது பொருள். இயற்கைக் காட்சிகள் ஒரு பக்கம் பிரமிக்க வைக்க இங்கு ஆலயத்தில் உள்ள கட்டிட மற்றும் சித்திர வேலைப்பாடுகள் நம்மை இன்னும் அதிகம் பிரமிக்க வைக்கும்.
நகர்ப்புற வாழ்க்கையை ஒதுக்கி விட்டு அமைதியான இயற்கை சார்ந்த இடத்தில் ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கான இடம் பிஸ்வநாத் கிராமமாகும். இது இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலா கிராமம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ச.நாகராஜன்
மானஸ் தேசிய பூங்கா
இது கவுகாத்தியில் இருந்து 137 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. யுனெஸ்கோ இதை பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
இதற்கும் காசிரங்கா தேசிய பூங்காவிற்கும் இடையில் உள்ள தூரம் 274 கிலோமீட்டர். இதை அடைய புகைவண்டி வசதி உண்டு. காரிலும் செல்லலாம். இது புலிகளிள் மற்றும் யானைகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இமயமலை அடிவாரத்தையொட்டி பூடானின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான மானஸ் நதி இந்தப் பூங்காவின் நடுவே பாய்ந்து செல்கிறது. அதையொட்டி இந்தப் பூங்கா மானஸ் தேசிய பூங்கா என்ற பெயரைப் பெறுகிறது.
அசாமில் உள்ள இதர சுற்றுலா இடங்கள்
தெற்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்கையும் அழகிய மலைத்தொடரையும் கொண்டுள்ள மாநிலம் அசாம். இதன் பரப்பளவு 78438 சதுர கிலோமீட்டர்கள். தேயிலைக்குப் பெயர் பெற்ற மாநிலம் இது.
மகாபாரதத்தில் பிரக்ஜ்யோதிஷா என்ற பெயரால் குறிப்பிடப்படும் இந்த மாநிலம் பழம்பெரும் வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள 33 மாவட்டங்களிலும் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
ஓவ்வொரு இடத்தையும் அது அமைந்திருக்கும் இடம், தூரம், சிறப்பு ஆகியவற்றை முன்னமேயே நன்கு தெரிந்து கொண்டு சுற்றுலாத் திட்டத்தை வடிவமைக்க வேண்டுவது அவசியம்.
அசாமில் நிச்சயம் பார்க்க வேண்டிய இன்னும் சில இடங்களை மட்டும் இங்கு பார்ப்போம்:
காமாக்யா ஆலயம்

சக்தி பீடங்களில் ஒன்று இது. நிலாச்சல் மலையில் அமைந்துள்ள இந்த துர்க்கையம்மன் ஆலயம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
மஜுலி தீவு
பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ள அற்புதமான தீவு இது. இதன் பரப்பளவு சுமார் 880 சதுர கிலோமீட்டர். படகில் சென்று இங்குள்ள இயற்கைக் காட்சிகளையும் தாவர பறவை இனங்களையும் பார்ப்பது ஒரு அதிசயமான அனுபவமாகும்.
சிவசாகர்
அசாமின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிவசாகர் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடித்தள நகரமாகும். கவுகாத்தியில் இருந்து இது சுமார் 360 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள சிவசாகர் நீர்த்தேக்கம், அஹம் அரசர்களின் கல்லறைகள் உள்ளிட்டவை பார்க்கத்தக்க இடங்களாகும்.
கவுகாத்தி
வடகிழக்கின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த நகரம் அசாமின் தலை நகரமாகும். இங்குள்ள தேசியப் பூங்கா மிகவும் பிரபலமானது. 2405 மைல் நீளம் ஓடும் பிரம்மபுத்திரா நதிக் கரையோரம் அமைந்துள்ளது இது.
ஜோர்ஹாட்
கலையழகு பொருந்திய நகரம் ஜோர்ஹாட் அசாமின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. இங்குள்ள ஏராளமான ஆலயங்களும் தேயிலைத் தோட்டங்களும் அனைவரையும் ஈர்க்கின்றன.
இன்னும் ஹாப்லாங் ஏரி, ஜம்பு மலை மற்றும் பல்வேறு அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ள மாநிலம் அசாம்.
வட கிழக்குப் பகுதிக்கு வாருங்கள் என அழைக்கும் அசாமின் புகழுக்கு ஈடு இணையில்லை என்பதை அது
நியூயார்க் டைம்ஸ் இதழில் நான்காவது இடத்தைப் பிடித்ததில் இருந்தே தெரிகிறதல்லவா?
- ஐந்து நாட்கள் வேலையை ஒரே நாளில் முடித்து விடுவீர்கள்.
- ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே முதற் கவனம் செலுத்தி வந்தனர்.
நாம் பார்த்த உதாரணத்தையே சற்று மாற்றிப் பார்ப்போம்.
உங்களுடன் சேர்ந்து பணியாற்ற இருக்கும் ஒன்பது நபர்களும் உங்களுடைய பரம எதிரிகள் என்பதற்குப் பதிலாக, உங்களுடைய உயிர்த் தோழர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில் உங்களுடைய பணி எப்படி இருக்கும்?
ஐந்து நாட்கள் வேலையை ஒரே நாளில் முடித்து விடுவீர்கள்.
எதனால் இப்படி?
மனோவியல் நிபுணர்களின் ஆய்வு பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஒரு மனிதருடைய முக்கியமான தேவை என்ன தெரியுமா?
உணவா? அல்லது உடையா? அல்லது வேறு ஏதாவது ஆடம்பரமான வசதிகளா?
இவை எவையுமே கிடையாது.
நம்முடைய தேவைகளை வரிசைப்படுத்திய மனோவியல் நிபுணர்கள், நம்முடைய பாதுகாப்புக்குதான் முதலாவது இடத்தைக் கொடுத்துள்ளனர்.
ஆதியில் நாம் அனைவரும் காடுகளில் வசித்தவர்களே. எந்த நேரத்தில் என்ன ஆபத்துகள் ஏற்படும் என்று எவருக்குமே தெரியாது.
ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே முதற் கவனம் செலுத்தி வந்தனர்.
அந்த மனநிலை இன்றளவும் நமது மனதில் ஒரு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.
அதனால் மற்றவர்களால் நமக்கு இடையூறுகள் ஏதாவது ஏற்படுமோ என்ற எண்ணம் நம்மை அறியாமலேயே நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.
ஓர் உதாரணம். நீங்கள் சென்னையில் பணியாற்றி வருகிறீர்கள். இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்குகிறீர்கள்.
அதற்கான பணத்தையும் தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அந்த வகையில் கிராமத்தில் உள்ள சொத்து ஒன்றை விற்று பணமாக ஒரு கோடி ரூபாயை ஒரு சூட்கேசில் எடுத்துக்கொண்டு இரவு ரெயிலில் பயணம் செய்கிறீர்கள்.
நீங்கள் பயணம் செய்யும் முதல் வகுப்பு பெட்டியில் வேறு பலரும் உங்களோடு பயணம் செய்கிறார்கள்.
உங்கள் கையில் அதிகமான பணம் உள்ளது. அதனால் உங்கள் கண்களுக்கு உங்களோடு பயணம் செய்பவர்கள் அனைவரும் திருடர்களைப் போன்றே தோன்றுவார்கள்.
ஒவ்வொருவர் கண்களிலும் திருட்டுத்தனம் தெரியும்.
நம்முடைய இயற்கை இவ்வாறுதான் உள்ளது. அதனைச் சீரமைத்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். செயல்பட முடியும்.
அதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த ஐந்தாவது விதிமுறை.
"அனைவரையும் நமது நண்பர்களாகக் கருத வேண்டும்."
- இதுதான் இந்த ஐந்தாவது விதிமுறை.

ஸ்ரீ பகவத்
இந்த விதிமுறையை தங்கள் தொழில்களில் கடைபிடித்துப் பார்த்த சிலர் பலகோடி ரூபாய்களை சேமித்துள்ளனர்.
நமக்கு எதிரிகளே கிடையாது என்றும், நாம் தொடர்பு கொள்ளும் அனைவரும் நமக்கு வேண்டியவர்களே என்றும் நாம் எடுத்துக் கொள்வோமேயானால் நமது மனம் சாந்தியுடன் செயல்படும்.
ஓர் உதாரணம். தெருவில் உள்ள ரோட்டு ஓரத்தில் நமது வீடு அமைந்துள்ளது.
தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.
அவர்கள் விளையாடும் பந்து அடிக்கடி நமது வீட்டு ஜன்னலில் விழுவதும், நாம் அவர்களை விரட்டுவதுமாக இருந்து வந்தது.
அப்படி ஒரு நாள் சிறுவர்கள் அடித்த பந்து நமது வீட்டு ஜன்னலில் பட்டு, ஜன்னலில் உள்ள கண்ணாடியும் உடைந்து விட்டது.
' பந்தை அடித்த பையனுடைய தகப்பனாரிடம் நஷ்ட ஈடு வாங்கி விட வேண்டியது தான்' என்று கோபத்துடன் வெளியே வருகிறோம்.
வெளியே வந்து பார்க்க, அவ்வாறு விளையாட்டின் போது பந்தை அடித்து ஜன்னல் கண்ணாடியை உடைத்தது நம்முடைய மகன் என்று தெரிகிறது.
மகன் என்பதால் அவன் செய்தது சரியானதாக ஆகிவிடாது.
தவறினை எவர் செய்தாலும் கண்டித்து தான் ஆக வேண்டும்.
ஆனால் நமது மகனைக் கண்டிப்பதற்கும் அடுத்தவர்களைக் கண்டிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
தவறு செய்தாலும் கூட எதிரி மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நண்பர் மீது மேற்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
சிலர் உங்களுக்கு தேவை இல்லாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்களோ என்று நீங்கள் எண்ண ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த அளவுக்கு நீங்கள் பலவீனம் அடைந்து விடுவீர்கள்.
'அவர்கள் எத்தகைய தீங்குகளை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நான் அவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்திடுவேன் ' என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்றால், அந்த அளவுக்கு நீங்கள் பலம் மிகுந்தவர்களாக ஆகி விடுவீர்கள்.
நீங்கள் நட்பையும், அன்பையும் வெளிக் காட்டுவதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பதை மற்றவர்களும் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.
இந்நிலையில் உங்கள் உறவுகளும் செயல்களும் நல்ல முறையில் அமையும்.
அடுத்ததாக வருவது ஆறாவது விதிமுறை.
"நல்ல பழக்கங்களைக் கூட்டிக் கொள்; தீய பழக்கங்களைக் குறைத்துக் கொள்."
உங்களுடைய இடது கையையும், வலது கையையும் காலையில் இருந்து இரவு வரை சேர்த்து வைத்துக் கொள்ளுமாறு உங்களிடம் கூறுவதாக வைத்துக் கொள்வோம். நீங்களும் அவ்வாறு செய்கிறீர்கள்.
மறுநாள் எப்போதாவது ஒன்றிரண்டு முறை எவரும் உங்களிடம் கூறாமல் நீங்களாகவே அப்படி கைகளை சேர்த்து வைத்துக் கொள்வீர்கள்.
ஒரு நாள் முழுவதும் பழகிய பழக்கம் உங்களை அறியாமலேயே உங்களோடு சேர்ந்து கொண்டு விட்டது.
பழக்கங்கள் அனைத்தும் இவ்வாறுதான் நம்மோடு சேர்ந்து கொண்டு விடுகின்றன.
முதலில் நாமாக ஆரம்பிப்போம். பிறகு அதுவே நம்மையும் இழுத்துச் சென்று விடும்.
நல்ல பழக்கங்கள் என்று சிலவற்றை நாம் பழகி இருப்போம். அதனை நாம் ஒரு போதும் கைவிடலாகாது.
புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை நாம் சிரமத்துடன் தான் ஆரம்பிக்கிறோம்.
அதன்பிறகு அவற்றில் சுகங்காண ஆரம்பிக்கிறோம்.
அவை பழக்கமாகி விட்டால், அவற்றை நாம் விட நினைத்தாலும் விட்டுவிட முடியாது.
ஆகவே தீய பழக்கங்களில் இருந்து வெளி வந்திடவே முயன்றிட வேண்டும்.
சில நல்ல பழக்கங்கள் தேவையற்று இருப்பது போலவும் தோன்றலாம்.
ஆனாலும் கூட நல்ல பழக்கங்கள் எவற்றையும் கைவிட்டுவிடக் கூடாது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை எனது இடது பக்க அடி வரிசை கடைவாய்ப் பல் ஒன்று வலியெடுக்க ஆரம்பித்தது. அந்தப் பல் அசையவும் ஆரம்பித்தது.
இத்தகைய நிலையில் வலியெடுக்கும் பற்களைப் பற்றி ஏற்கனவே எனக்கு பழைய அனுபவங்களும் உண்டு.
நாள் ஆக ஆக, இத்தகைய பற்களில் வலி கூடிக்கொண்டு தான் இருக்கும். பிறகு தாமாகவே விழுந்து விடும்.
பல் வலி அதிகமாகிக் கொண்டிருக்கும் வரை ஏன் காத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்படியும் அந்தப் பல் சரியாகப் போவதில்லை.
மருத்துவரிடம் சென்று பல்லை எடுத்துப் போட்டு விடலாம் என்று முடிவு செய்தேன்.
பல் மருத்துவரிடம் சென்றேன்.
எனக்குப் பிரச்சினை இடது பக்கத்தில். ஆனால் அவரோ எனது வலது பக்கப் பல்லுக்கு கேப் ஒன்றை மாட்டிவிட்டுவிட்டு,
பிரச்சினையான பல்லுக்கு களிம்பு ஒன்றைக் கொடுத்து அனுப்பி விட்டார்.
அந்தக் களிம்பைப் போட்டால் அந்தப் பல்லில் இரண்டு நாட்களுக்கு வலி மட்டும் குறைந்து விடும். ஆனாலும் அந்தப் பல்லை பயன்படுத்தி உணவு எதுவும் சாப்பிடமுடியாது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வலி வந்து விடும். அடுத்து என்ன செய்வது?
மீண்டும் மருத்துவரைதான் பார்க்க வேண்டுமா?
அந்நிலையில் பழைய நினைவுகள் வந்தன.
இளமைக்காலத்தில் பல் துலக்கும்போது, நல்லது என்று கருதி பல்லின் ஊன்களுக்கு இரண்டு விரல்களால் மசாஜ் செய்வதுண்டு.
கட்டைவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் ஊன்களை பத்து, பத்து ரவுண்ட் மசாஜ் செய்ய வேண்டும்.
பழக்கம் ஏற்பட்டால் தான் அப்படி செய்ய
முடியும். எடுத்த எடுப்பிலேயே அப்படி செய்து விட முடியாது. வாயினுள் விரல்களைவிட்டால் வாந்தி வந்துவிடும்.
பழக்கப் படுத்திதான் இந்த மசாஜ்ஜை செய்ய முடியும்.
இளம் வயதில் பற்கள் அனைத்தும் ஆரோக்கியமாகவே இருந்தன.
மசாஜ் செய்தாலும் ஒன்று போல்தான் இருந்தது, மசாஜ் செய்யாமல் இருந்தாலும் ஒன்று போல்தான் இருந்தது.
காலப்போக்கில் அதனைக் கைவிட்டு மறந்தும் போய்விட்டேன்.
பல வருடங்களுக்குப் பிறகு அது நினைவுக்கு வந்தது.
வலியுடன் அசைந்து கொண்டிருக்கும் பல்லுக்கு இந்த மசாஜ் உதவும் என்ற நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இருந்தாலும் கடைசி முயற்சியாக அதையும் முயன்று தான் பார்ப்போமே என்று மசாஜ் செய்து பார்த்தேன்.
சொற்பமான முன்னேற்றம் தெரிந்தது.
பதினைந்தே நாட்களில் பல்லின் வலியும் போய்விட்டது, அசைவும் போய்விட்டது.
இன்றளவும் அந்த பல்லை பயன்படுத்திதான் உணவு உண்டு வருகிறேன்.
சேலத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் ஞான முகாம் என ஒரு முகாம் ஒன்றை எங்கள் ஆசிரமத்தில் நடத்தி வருகிறோம்.
அந்த முகாமிலும் இந்தச் செய்தியை நமது வகுப்பொன்றில் பகிர்ந்து கொள்வதுண்டு.
ஒரு முறை மருத்துவ நிறுவனங்கள் ஒன்றின் மேலாளரும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த மசாஜ் முறையைப் பயன்படுத்தி வலியுடன் அசைந்து கொண்டிருந்த அவருடைய பல்லையும் சரி செய்து கொண்டார். அவரிடம் பணியாற்றும் பல் மருத்துவர்களால் கூட நம்ப முடியவில்ல என்று அவர் தனது அனுபவத்தைக் கூறினார்.
இப்படி எத்தனையோ நல்லவிதமான பழக்கங்களைத் தவறவிட்டு விடுகிறோம்.
நல்ல பழக்கங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டுமே தவிர விட்டுவிடக் கூடாது.
அது போல் தீய பழக்கங்களில் இருந்து விடுபட முடிவு செய்துகொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: வாட்ஸஅப் - 8608680532