என் மலர்
நீங்கள் தேடியது "வழிபாடு"
- ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, துர்வாச முனிவரிடம் மலர் மாலை ஒன்றை அளித்தார்.
- கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது ஐராவதேஸ்வரர் திருக்கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், சோழர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும், இறைவி அதிதுல்ய குஜாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, துர்வாச முனிவரிடம் மலர் மாலை ஒன்றை அளித்தார். அதனை துர்வாச முனிவர் இந்திரனுக்கு பரிசளித்தார். இந்திரன், அந்த மாலையை தான் அமர்ந்திருந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தான். ஆனால் அந்த யானையோ மாலையை தரையில் வீசி காலால் மிதித்தது. இதைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. ஐராவதத்தைப் பார்த்து, ''நான் கொடுத்த மாலையை அவமதித்த உனக்கு தேவலோகத்தில் இருக்க தகுதியில்லை. பூலோகத்தில் காட்டு யானையாக சுற்றி திரிவாய்'' என சாபமிட்டார்.
அதன்படி பூலோகம் வந்த யானை ஒவ்வொரு சிவாலயமாக சுற்றித் திரிந்தது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்தபோது, இங்கிருந்த விநாயகர் 'இறைவனை வழிபடக்கூடாது' என வாதிட்டார். அந்த விநாயகர் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் 'வாதாடும் கணபதி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பின்பு சமாதானம் அடைந்த விநாயகர் யானையை வழிபட அனுமதித்தார். அதன்பிறகே யானைக்கு சாப விமோசனம் கிடைத்தது. ஐராவத யானை வழிபட்டதால் இத்தல இறைவன், 'ஐராவதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி காணப்படுகிறது. கோவில் முகப்பை தாண்டியதும் பலிபீடம், நந்தி காட்சி அளிக்கின்றன. அடுத்ததாக உள்ள மகாமண்டபத்தின் தென்திசையில் நால்வர் திருமேனி உள்ளது. வலதுபுறத்தில் அன்னை அதிதுல்ய குஜாம்பிகை நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். மேல் இருகரங்களில் கும்பத்தையும், தட்டையும் தாங்கி, கீழ் இருகரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி காட்சி அளிக்கிறார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வர்.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், பிரம்மா, துர்க்கா ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நான்கு வாரத்துக்கு துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள்.
திருச்சுற்றில் தல விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் காட்சி அளிக்கின்றன. இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் கோபக் குணம் குறைந்து, மனதில் அமைதியும், நிதானமும் நிலவும் என்கிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் தலத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார்.
- 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆவார். புனித பிரான்சிஸ் அசிசியார் இக்குடிலை கி.பி. 1223ஆம் ஆண்டு கிரேஜ்ஜோ என்கிற இடத்தில் இருந்த துறவற மடத்தின் அருகில் இருந்த ஒரு வனப்பகுதியில் அமைந்திருந்த குகையில், செல்வந்தரான ஜியோவான்னி வெலிதா என்பவரின் உதவியுடன் அமைத்தார்.
ஆனாலும் இயேசுவின் பிறப்பு நிகழ்வு காட்சிகள் திருஉருவங்களாக கி.பி. 1283-ம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை நான்காம் நிக்கோலாஸ் முன்முயற்சியால், டஸ்கன் பகுதியைச் சார்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் காம்பியோ நகர் அர்னோல்போவால் வடிவமைக்கப்பட்டு, மேற்கத்திய பெத்லகேம் என்றழைக்கப்பட்ட புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் வைக்கப்பட்டது.
இந்த பெருங்கோவிலானது 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது. ஏனென்றால், இங்குதான் இயேசுவைத் தாங்கிய தீவனத் தொட்டியின் ஒரு பகுதியானது வைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் மரத்துக்கு என வரலாறு உள்ளது. கிறிஸ்துமஸ் மரம், இயேசு நாதரின் முப்பரிமாணங்களாகிய, தந்தை, மகன் மற்றும் தூய ஆவி ஆகியவைகளைக் காட்டுவதாக கூறப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்கிற பாதிரியார் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கையில், ஒரு ஊரில், மக்கள் ஓக் மரத்தை வணங்குவதைக் கண்டு கோபமுற்று, வேர்ப்பகுதியுடன் அதை அடியோடு வெட்டி விட்டுச் சென்றார்.

சில நாட்களில் வெட்டப்பட்ட அந்த மரம் அதே இடத்தில் வளர்ந்து கம்பீரமாக நிற்க, இயேசு நாதரே மீண்டு வந்ததின் அடையாளமாக எண்ணி ஊர் மக்கள் வணங்கினர். சில மாதங்கள் சென்றபின், புனித போனிபேஸ் பாதிரியார் அங்கே வருகையில், அந்த புதிய மரத்தை அதே இடத்தில் கண்டு அதிசயப்பட்டார். அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார். 15-ம் நூற்றாண்டில், ஜெர்மானியப் பாதிரியார், தேவாலய காம்பவுண்டினுள் இருந்த 'பிர்' மரத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். எவர்கிரீன் மரமென 'பிர்' மரம் அழைக்கப்பட்டது. பின்னர் ஓக் மற்றும் பிர் மரங்கள் கிறிஸ்துமஸ் மரங்களாக உபயோகப்படுத்தப்பட்டன.
- நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
- நாமகிரி தாயார் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்த கோலத்தில் காணப்படுகிறார்.
நாமக்கல் நகரில் குன்றின்மீது அமைந்துள்ளது. நரசிம்மர் குடைவரைக் கோவில். இக்கோவிலில் மூலவராக நரசிம்மரும், நாமகிரி தாயாரும் உள்ளனர். கட்டிடக் கலைக்கு பெயர்பெற்ற இந்த கோவில், 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
திருக்கோவிலின் மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் குகைக்குள்ளேயே அமைந்துள்ளது சிறப்பாகும்.
நரசிம்மர், கர்ப்பக்கிரகத்தில் ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை தரையில் ஊன்றி நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். ஒரு கை ஊதா நிறத்துடன் காணப்படுகிறது. இது இரணிய கசிபுவின் ரத்த சாயல் என்று கூறப்படுகிறது. இங்கு லட்சுமி தேவி வழக்கம் போல நரசிம்மரின் மடியில் இல்லாமல், சுவாமியின் இதயத்தில் இருக்கிறார். சுவாமி உடன் சனகர், சனாதனர், சூரியர், சந்திரர் ஆகியோர் சாமரம் வீச, சிவபெருமானும், பிரம்ம தேவரும் சுவாமியை வணங்கும் கோலத்தில் உள்ளனர்.
நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சிலைக்கு மேற்கூரை கிடையாது. இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
நாமகிரி தாயார் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்த கோலத்தில் காணப்படுகிறார். தாயார், கவலைகளைப் போக்கும் கருணை கண்களுடன் அழகுற காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி, தாயாரை பூஜித்தால் சகல செல்வங்களும் வந்துசேரும், தீவினைகள் அகலும், ஞானம், அறிவு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்கு தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வரும் அனுமன் ஜெயந்தி விழாவும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
- உற்சவர் கரிவரதராஜப் பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
- மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்ட தலமான மாதவரத்தில் உள்ளது, கரிவரத ராஜப்பெருமாள் கோவில். நம் பாவங்களை போக்கி புண்ணியம் தரும் அற்புத தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
நாம் உணவு உண்ணும்போது 'ஜனார்த்தனன்' என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது 'பத்மநாபன்' என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்லும்போது 'நரசிம்மன்' திருநாமத்தையும், மலையேறும்போது 'ரகுநந்தன்' என்னும் திருநாமத்தையும் உச்சரிப்பது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்கள் கூறுகின்றன.
அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது 'மாதவபுரம்' என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம் செய்து வரம் பெற்ற தலம் என்பதால், 'மகாதவபுரம்' என்று பெயர் பெற்று, அதுவே மருவி 'மாதவரம்' என்றாயிற்று.
கோவில் 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உற்சவர் கரிவரதராஜப் பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருமலையில் எழுந்தருளி உள்ள திருவேங்கடமுடையான் போல், இடதுகரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், வேங்கடவரதன்' எனவும் வழங்கப்படுகிறார்.
ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாய் அருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக் கொண்டாராம். இதனால் இவருக்கு 'தேன் உண்ட பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சென்னை பாரிமுனையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மாதவரத்தில் இக்கோவில் உள்ளது.
- ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம்.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள்.
ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.
அனுமன் ஜெயந்தியான இன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
அனுமன் ஜெயந்தி அன்று, அனுமனை வழிபடும்போது அவருக்கு பிடித்த நைவேத்தியப் பொருட்களை படைத்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம்.
துளசி மாலை - ராமபிரான் கடாட்சம் பெற்று நற்கல்வி, செல்வம் பெறலாம்.
வெற்றிலை - விருப்பங்கள் நிறைவேறும்.
மல்லிகை - கெட்ட சக்திகள் விலகும்.
வடைமாலை - துன்பங்கள் நீங்கும்.
சந்தனம் - மங்களகரமான வாழ்க்கை அமையும்.
செந்தூரம் - அறிவும், ஆற்றலும் பெருகும்.
வீட்டில் அனுமன் படம் வைத்து அஷ்டோத்திரங்கள் சொல்லி பூஜை செய்து, வெண்ணெய், உளுந்துவடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியம் செய்யலாம். ஸ்ரீராமஜெயம் என எழுதுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் நலம் பெருகும்.
- ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.
- ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.
ராமரின் தீவிர பக்தனான அனுமன் துணிச்சல், வலிமை, அறிவு, ஆரோக்கியம், புகழ், வீரம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக அமையப் பெற்றவர். மகாவிஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தபோது, மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் அவதரித்தனர். அதுபோல, ராமருக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் அனுமனாக அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே அனுமனை வழிபடுவதன் மூலம் சிவபெருமானையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அனுமன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி நாளான இன்று அனுமன் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை கொண்டாடலாம். ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள். பொன் நிறமுடையவன், அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளிவிடும் முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.
திருமாலின் வாகனமாக கருதப்படும் கருட பகவான் 'பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். அதுபோல ஆஞ்சநேயர் 'சிறிய திருவடி' என்று போற்றப்படுகிறார்.
ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். இருப்பினும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.
ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர். மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள்.
ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். எனவே ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, நன்மைகள் பல அடையலாம்.
படிப்பில் பின்தங்கிய குழந்தைகளை 108 அல்லது 1008 முறை 'ஸ்ரீ ராமஜெயம்' எழுத வைத்து, அதை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களுக்கு, வெண்ணெய் கரைந்து போவதுபோல துன்பங்கள் கரைந்து போகும்.
சனிக்கிழமைதோறும் அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலை அணிவித்து, வெண்ணெய் சாற்றி, திராட்சை பழம் படைத்து, ஸ்ரீ ராம ஜெயம் எழுதி, அதை காகித மாலையாக அணிவித்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார்.
- தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் பிரசித்தி பெற்ற கனக்கிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாசல குமரன் கோவில் அமைந்துள்ளது. ஒரு முறை அகத்திய முனிவரின் அறிவுரைப்படி, புலிப்பாணி சித்தர் பத்தரை மாற்று தங்கத்துக்காக இந்த மலையை குடைந்தார். அப்போது முருகப்பெருமானின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், அது ஏழரை மாற்றுத் தங்கமாக அவருக்கு கிடைத்தது. இதன் காரணமாக இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்' என்று அழைக்கப்பட்டது. பின்பு ஏழரைமாத்தூர்' என்றாகி, தற்போது மருவி எழுமாத்தூர்' என்றானது.
இப்பகுதியில் இருந்த மக்கள் இந்த மலையின் சிறப்பையும், முருகப்பெருமானின் மகிமையும் அறிந்து, மலை உச்சியில் கோவில் எழுப்பினர். தங்கத்தை தந்த மலை என்பதால், இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு 'கனகாசல குமரன்' என்று திருநாமம் சூட்டி வழிபட தொடங்கினர்.
ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்ச - மாக இலந்தை மரம் உள்ளது. இந்த இலந்தை மரத்தடியில் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக சிறிய மூசிகம் காணப்படுகிறது. விநாயகரின் அருகில் ராகு, கேது மற்றும் ஏழு கன்னியர்கள் உள்ளனர். இங்குள்ள விநாயகரை வணங்கிவிட்டு, கனகாசல குமரனை மனதார வழிபட்டு வந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும், நல்ல வாழ்க்கை அமையும், பொன்னும் பொருளும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது இந்தக் கோவிலைச் சேர்ந்த கன்றுக்குட்டிகள் தானாக மலையேறி வந்து, பூஜை செய்யும் காட்சியை பார்ப்பது வியப்பளிக்கிறது.
ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
- திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிஷேகம், உதயமார் தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
தமிழ்நாட்டில் உள்ள பழமையான சிவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவிலும் ஒன்றாகும்.
வங்க கடலோரம் சுவாமி சுயம்புவாக தோன்றிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவர் சுயம்பு லிங்கசுவாமி கோவில் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
அதன்படி மார்கழி 2-ந் தேதியான இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை தொடர்ந்து கோவில் மூலவர் மீது காலை 6.35 மணிக்கு கோவிலில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.
சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானை சூரியன் வழிபடுவதாக நெகிழ்சியுடன் தெரிவித்தனர்
முன்னதாக மார்கழி மாதத்தையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிஷேகம், உதயமார் தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடல் மண்ணை பெட்டியில் சுமந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.
- மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும்.
- கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.
'மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ணர் அருளியுள்ளார். அதற்கேற்றால்போல் பல சிறப்புகளை மார்கழி மாதம் பெற்றுள்ளது. மார்கழி மாதம் வந்தாலே அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவது என்பது வழக்கமான ஒன்றாகும்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தேவலோகத்தில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. பகல் பொழுதை உத்தராயணம் என்றும், இரவு பொழுதை என்றும் அதன்படி தட்சிணாயனம் அழைப்பார்கள். அதிகாலையான, பிரம்ம முகூர்த்தமாக தேவர்களுக்கு மார்கழி மாதம் உள்ளது. இதனால் மார்கழி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு தனிச் சிறப்புகளும், பலன்களும் உண்டு. எனவேதான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.
ஜோதிட சாஸ்திரப்படி, சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமாக மார்கழி மாதம் உள்ளது. எனவே மார்கழி மாதம், 'தனுர் மாதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வ வழிபாட்டுக்குரிய சிறப்புமிக்க மாதமான மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும். மார்கழி மாதம் அதிகாலையில் வைணவ தலங்கள் திறக்கப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடி திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். அதுபோல சிவன் கோவில்களிலும் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படுகிறது.
மார்கழி மாதம் விடியற்காலையில் கன்னி பெண்களை துயில் எழுப்பி, ஆற்றில் நீராடி இறைவனை போற்றி வழிபடுவதை ஆண்டாள் திருப்பாவையில் விவரித்துள்ளார். அதன்படி, மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு பாவை நோன்பு இருந்து இறைவனை வழிபட்டால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. திருப்பாவை போன்று சிவ பக்தைகள், நோன்பு நோற்பதற்காக தோழிகளை எழுப்புவதாக அமைந்ததே, திருவெம்பாவை. சிவன் அடியாளர்களே கணவனாக வேண்டும் என்றும், பின்பு அவரோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
கோகுலத்தில் இந்திரனால் பெருமழை உருவாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் துன்பப்பட்டபோது, கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றினார். இந்நிகழ்வு நடந்தது மார்கழி மாதத்தில் தான். திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி, இந்த ஆண்டு மார்கழி மாதம் 15-ந் தேதி (30-12-2025) அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம், ஆண்டு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அந்த சொர்க்கவாசல் வழியாக நுழைந்துவந்தால், வாழ்வில் உள்ள சிக்கல்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் நடத்தப்படும். அதன்படி மார்கழி மாதம் 19-ந் தேதி (3-1-2025) அன்று சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் வருகிறது. இது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அனுமன் அவதரித்த நாளாக மார்கழி மாதம் அமாவாசை நாள் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் குவியும்.
மார்கழி மாதம் 10-ந் தேதி (25-12-2025) வியாழக்கிழமை அன்று பிள்ளையார் நோன்பு வருகிறது. திருக்கார்த்திகையில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். இந்த விரதம் இருந்து வழிபட்டால் இனிமையான வாழ்வு அமையும்.
மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு வீட்டின் முன்பு கோலமிட்டு அதன் மீது அழகான மலர்களால் அழகுபடுத்துவார்கள். கோலத்தின் மீது பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவது வழக்கம். இதன்மூலம் மகாலட்சுமியே வீட்டிற்குள் குடியேறுவாள் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலையில் வீட்டின் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவதுடன், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.
- மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார்.
- ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம்.
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக, பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள், அனுமன். இவர் அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம பக்தன், ராம தூதன், சிரஞ்சீவி, மாருதி, ஆஞ்சநேயர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சிவபெருமானின் ருத்ர அம்சமாக கருதப்படுகிறார். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும்.
மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள். சில வட மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதும் உண்டு.
ராமாயணத்தில் ராவணனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு, ராமராக அவதரித்தார். அவருக்கு உதவுவதற்காக தேவர்கள் பலரும் பல சக்திகளை கொடுத்து உதவினர். அதே சமயம், கிஷ்கிந்தை வனப் பகுதியில் கேசரி என்ற வானர அரசனும், அவரது மனைவியான அஞ்சனை தேவியும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். அவ்வேளையில் ராமருக்கு உதவுவதற்காக சிவபெருமான், தன்னுடைய சக்தியை வாயு பகவானிடம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சேர்க்கும்படி கூறினார். வாயு பகவான் ஈசனின் சக்தியை அஞ்சனை தேவியிடன் சேர்த்தார். இதன்மூலம் மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார்.
அனுமன் ஜெயந்தி அன்று, அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அனுமன் படத்துக்கு சிவப்பு நிற மலர்கள் சூட்டுங்கள். ஆஞ்சநேயருக்கு விருப்பமான உணவுகளை படைத்து, நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். அனுமனுக்குரிய பாடல்கள், ராமாயணத்தின் சுந்தர காண்டம் போன்றவற்றை படித்து வழிபடலாம். அதோடு வாழைப்பழம், வெற்றிலை, வெண்ணெய், செந்தூரம் போன்றவற்றை படைக்கலாம்.
வனவாசம் சென்ற ராமன் மனைவியை ராவணன் கவர்ந்து சென்றான். இதையடுத்து சீதையை மீட்கும் முயற்சியில் இருந்த ராமனுக்கு சிறந்த சேவகனாக இருந்தவர் அனுமன். ராமனுக்காக சீதையிடம் தூது சென்று, அவர் கொடுத்த கணையாளியை கொடுத்து சீதையின் மரணத்தை தடுத்தார். மேலும், சீதா தேவி கொடுத்து அனுப்பிய சூடாமணியை ராமரிடம் கொடுத்து, இருவரும் சேருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அனுமன். இதனால் அனுமனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர், கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும், ஆனந்த வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே, அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
சிவபெருமான், ராமருக்கு உதவி செய்வதற்காக ஆஞ்சநேயராக அவதரித்தார். இதனால் ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று, ஆஞ்சநேயரை மனதார வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். குடும்பத்தில் துன்பங்கள் விலகும், சகல மங்கலங்களும் வந்துசேரும்.
- பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்தது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலமாகும். மூலவர் வேங்கடகிருஷ்ணன் சாமி நிற்க, ஒரு புறம் ருக்மணி தாயார், மறுபுறம் சாத்யகியும் (இளைய தனயன்), தாயாரின் பக்கம் பலராமரும், சாத்யகியின் பக்கம் மகன் பிருத்யும்னனும், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 2 மணிக்கு பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்குகிறது.
பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனமும், காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.
இதையடுத்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலை 5.30 மணியிலிருந்து அன்றிரவு 10.30 மணி வரை மூலவர் பொது தரிசனம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடக்கிறது. 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.
ஜனவரி 9-ந்தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
- திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
16-ந் தேதி (செவ்வாய்)
* கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
17-ந் தேதி (புதன்)
* பிரதோஷம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
18-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
19-ந் தேதி (வெள்ளி)
* அமாவாசை.
* அனுமன் ஜெயந்தி.
* திருவரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டவம்.
* நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றியருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
20-ந் தேதி (சனி)
* விஷ்ணு ஆலயங்களில் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (ஞாயிறு)
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் பகற்பத்து உற்சவம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந் தேதி (திங்கள்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன காட்சி.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.






