என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட ஆலயம்
    X

    ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட ஆலயம்

    • ஈசன் அன்று முதல் இத்தலத்தில் தம்மை வணங்கும் அடியார்களுக்குப் பேரருள் புரிந்து வருகின்றார்.
    • அகத்திய மகரிஷியின் வேண்டுதலை ஏற்ற அம்மையப்பன், அவ்வாறே ஆகட்டும்!’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    திருக்கயிலாய மலையே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கரையிலாத கருணைப் பெருங்கடலாக அருளும் கயிலை நாதனுக்கும் மலையத்துவசன் பெற்ற மாமகள் அன்னை பார்வதி தேவிக்கும் திருமணம் என்பதாலேயே இவ்விழாக் கோலம்!

    ஈசனின் திருமண வைபவத்தைக்காண தேவர்களும் மகரிஷிகளும் வட திசை நோக்கிக் குவிந்தனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகம் சமநிலை பெறத் திருவுள்ளம் கொண்டார் சர்வேஸ்வரன், சர்வ வல்லமை பொருந்திய தவ முனியாம் குறுமுனி அகத்திய மகரிஷியை அழைத்து தென்திசையில் உள்ள பொதிகை மலை நோக்கிச் செல்ல ஆணையிட்டார்.

    உலகத்தைக் காத்து ரட்சிக்கும் உமாதேவிக்கும் பொன்னார் மேனியனுக்கும் நடைபெறும் திருமணக் காட்சியைக் கண்டு தரிசிக்க இயலவில்லையே என்ற ஏக்கம் கொண்ட அகத்திய மகரிஷி 'ஐயனே! அடியேன் தங்களது ஆணையினை சிரமேற்று இக்கணமே தென்திசை நோக்கிப் பொதிகை மலைக்குச் செல்கிறேன்.

    ஐயன் எமக்கு ஒரு வரமளித்து அருள வேண்டும். இப்புண்ணிய பூமியில் அடியேன் பயணிக்கும் வழியில் எங்கெல்லாம் உமா மகேஸ்வரப் பெருமானின் திருமணக்கோலத்தைக் காண விழைகின்றேனோ, அங்கெல்லாம் அம்பிகை சமேதராக எனக்குத் திருக்காட்சி தந்து அருள்பாலிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினார். அகத்திய மகரிஷியின் வேண்டுதலை ஏற்ற அம்மையப்பன், 'அவ்வாறே ஆகட்டும்!' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    ஈசனின் ஆணைப்படி தென்திசை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்த அகத்திய மகரிஷி, புனித பூமியான புதுவையில் பாயும் சங்கராபரணி நதியில் நீராடி, ஈசனின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க எண்ணினார். தமது திருக்கரங்களினால் ஒரு ஷோடச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, உமையொரு பாகனைத் தன் சிந்தையில் நிறுத்தித் தவம் செய்து தியானிக்க, திரு நீலகண்டன் தன் தேவியோடு கோடி சூர்யப் பிரகாசனாகத் தோன்றி அகத்திய மகரிஷிக்குத் தன் திருமணக்கோலத்தைக் காட்டியருளினார்.

    'நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடனாவார்' என்ற வாக்கிற்கு ஏற்ப உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் இதயக்கமலத்தையே கோவிலாகக் கொண்டு எழுந்தருளி நித்யவாசம் செய்யும் ஈசன் அன்று முதல் இத்தலத்தில் தம்மை வணங்கும் அடியார்களுக்குப் பேரருள் புரிந்து வருகின்றார்.

    அகத்திய மகரிஷிகளின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசனின் திருமேனி இத்தலத்தில் அருள்பாலிப்பதால் இத்தலம் ஸ்ரீ அகத்தீஸ்வரம்' என்றும் பூஜிக்கப்படுகின்றது.

    சங்கராபரணி நதியின் புதுப்புனலால் செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளம் பெற்ற திருக்காஞ்சி திருத்தலத்தில் தமிழாய்ந்த தவமுனி அகத்தியப் பெருமான் ஸ்ரீ கங்க வராக நதீஸ்வரப் பெருமானைக் குறித்து தவம் செய்வதற்கு ஏதுவாகவே ஊழிப்பெரு வெள்ளத்தில் இருந்து உலகம் காத்த ஸ்ரீவராகப் பெருமானின் திருவருளால் சங்கராபரணி உத்தரவாகினியாக வடக்கு நோக்கித் திரும்பி பின்னர் வங்கக் கடலில் சங்கமிக்கின்றது.

    ஸ்ரீராமபிரான் இலங்கைக்குச் செல்லும் போது சங்கராபரணி நதியில் நீராடித்தம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து இத்தல ஈசனை வழிபட்டுள்ளார். மகரிஷி ஸ்ரீ ஓதர் இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்து தம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுள்ளார்.

    Next Story
    ×